கடைகளில் இருந்து வரும் லாபம் தனித் தனியே அவர்களுக்குரியது என்றாலும் விவசாயத்தில் இருந்து வரும் லாபம் அனைவருக்கும் பொது தான். அதே போல அனைவரும் ஒரே வீட்டில் தான் இருக்க வேண்டும். சமையலும் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்பது கேசவன் போடாத கட்டளை.
குடும்பத்தை பொறுப்பாக தாங்கும் கேசவனை அவ்வளவு பிடிக்கும் மணியம்மைக்கு. நான்கு மகன்களும் தனக்கு பின் தன்னுடைய மகளை தவிக்க விட்டு விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை தாய்க்கு கொடுத்தார்கள்.
பூங்கொடிக்கு அவளது குடும்பம் தான் உலகம். அவளுடைய அண்ணன்களும் அண்ணிகளும் தான் கடவுள். மணியம்மை அவளுடைய வழி காட்டி.
சிறு குழந்தை போல என்ன சேட்டை செய்து மாட்டிக் கொண்டாலும் அவள் தினமும் இரவு மணியம்மையை அணைத்த படி தான் தூங்குவாள். “இங்க இப்படி சின்ன பிள்ளை மாதிரி பண்ணுற? ஹாஸ்ட்டல்ல என்ன தான் பண்ணுவியோ?”, என்று மணியம்மை கேட்டால் “அதெல்லாம் அப்பாடி தான். அங்க போய் உன் சேலையைக் கட்டிப் பிடிச்சு தூங்கினா பிள்ளைங்க சிரிச்சிருவாங்க”, என்பாள் பூங்கொடி.
தன்னை அதிகம் தேடும் மகளுக்கு தான் நன்றாக இருக்கும் போதே திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டும் என்று ஆசை கொண்டாள் மணியம்மை. மகன்களையும் மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவர்களும் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
வீட்டுக்கு போகும் வரைக்கும் சிறு பிள்ளை போல வளவளத்துக் கொண்டே வந்த தங்கையை வரதன் கனிவாக பார்த்தான்.
“அண்ணா, நம்ம வீட்ல ஏதாவது விஸேஷம் வராதான்னு இருக்கு? அப்ப தான் எல்லா சொந்தக்காரங்களும் வருவாங்க. ஒரு வாரத்துக்கு கறி விருந்து இருக்கும். பேசாம நீ கல்யாணம் பண்ணிக்கோயேன்”, என்றாள். அண்ணன்களை வாங்க போங்க என்று அழைத்தாலும் அதிக உரிமை வரும் போது வா போ என்றே அழைப்பாள். அதற்கு மணியம்மையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வாள்.
“எப்படி? உனக்கு கறி விருந்துக்கு நான் கல்யாணம் பண்ணனுமா? உனக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் பாப்பா எனக்கு கல்யாணம். அதுல நான் உறுதியா இருக்கேன்”, என்றான் வரதன்.
“அண்ணா இப்ப உனக்கு வயசு இருபத்தி அஞ்சு. ஆனா எனக்கு பத்தொன்பது தான். இப்பவே கல்யாணம் பண்ணினா போலீஸ் பிடிச்சிரும். நீ முதல்ல பண்ணிக்கோ”
“உனக்கு தான் கல்யாண வயசு வந்தாச்சே? அதனால உனக்கு முதல்ல முடியட்டும். அதுக்கப்புறம் நான் பண்ணிக்கிறேன்”
“அண்ணா”, என்று அவள் சிணுங்க “இந்த பேச்சு முடியவே செய்யாது. என்ன செய்யணும்னு பெரியண்ணனும் அம்மாவும் முடிவு பண்ணட்டும். நம்ம வீடு வந்துருச்சு”, என்று சொல்லி காரை நிறுத்தினான்.
அவளுக்கு வீட்டில் உள்ளவர்களால் அமோக வரவேற்பு கிடைத்தது. எப்போதுமே அவளை கண்டிக்கும் மணியம்மை கூட அவளை அணைத்துக் கொண்டாள்.
எப்போதாவது கிடைக்கும் அன்னையின் அன்பில் பூங்கொடியின் கண்களும் கண்ணீரை சொறிந்தது. “ஏய் கிழவி, உன் கூடவே இருந்தா திட்டிட்டே இருக்க? ஹாஸ்டல்ல இருந்தா அழுற என்ன? உன் கண்ணீரைப் பாக்கவே ஆயுசுக்கும் நான் ஹாஸ்டல்ல இருக்கணும் போல?”, என்று வம்பிழுத்து மணியம்மையிடம் இருந்து கொட்டு வாங்கிக் கொண்டாள்.
அண்ணன்கள், அண்ணிகளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தவளை “அத்தை”, என்ற படி குட்டீஸ் அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள்.
“அம்மா வர வருஷம், நான் வீட்ல இருந்து காலேஜ் போகட்டா? ஹாஸ்டல் வேண்டாம். பெரிய அண்ணன் கிட்ட சொல்லு மா”, என்று தாயிடம் தஞ்சம் புகுந்தாள்.
“உன் அண்ணனாவது ஹாஸ்டல்ல தங்க வச்சு படிக்க வைக்கிறான். என்னைக் கேட்டா உன்னைக் கட்டிக் கொடுக்குறது தான் சரின்னு சொல்லுவேன்”, என்று மணியம்மை சொன்னதும் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அவள் ஊருக்கும் கல்லூரிக்கும் ஒரு மணி நேரம் தான் பயண நேரம். ஆனால் வீட்டில் இருந்தால் சேட்டை செய்வதோடு சிறு பிள்ளைகளையும் படிக்க விடமால் செய்கிறாள் என்பதால் தான் அவளை ஹாஸ்டலில் விட்டனர்.
அதற்கு அடுத்து வந்த நாட்கள் அவளுக்கு பொண்ணால் பொரிக்கப் படவேண்டியவை. அண்ணன் பிள்ளைகளுடன் சேர்ந்து அவள் போட்ட ஆட்டத்தை வார்த்தையால் சொல்லி விட முடியாது. அவர்களுக்கு சுற்றிப் பார்க்க என்று மளிகை கடை, பாத்திரக் கடை, மில், செங்கல் சூளை, தோப்பு என்று பல இடங்கள் இருந்தன. தோப்புக்குள் சென்றதும் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நாட்கள் நகர்ந்தது.
சின்ன பிள்ளைகளுடன் சேர்ந்து அவள் போட்ட ஆட்டத்தில் மணியம்மைக்கு தினம் தினம் பி.பி ஜெட் வேகத்தில் எகிறியது என்று தான் சொல்ல வேண்டும். அவள் ஒரு பக்கம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க அவளது திருமணப் பேச்சு வார்த்தை சூடு பிடிக்கத் துவங்கியது.
அவள் வீட்டுக்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. இன்னும் அவளுக்கு பத்து நாட்களில் காலேஜ் திறந்து விடும் என்ற நிலையில் ஒரு நாள் கேசவனுக்கு தெரிந்தவரிடம் இருந்து கேசவன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அழைத்தவரும் கேசவனுக்கு சொந்தம் தான். அவர் சொன்ன விவரங்களை எல்லாம் கேட்டவர் அடுத்த அரை மணி நேரத்தில் மாப்பிள்ளை யார், என்ன என்றெல்லாம் விசாரித்து விட்டார். அதன் பின்பு வீட்டுக்கு வந்து “எல்லாரும் இங்க வாங்க”, என்று அழைத்தார் கேசவன்.
அடுத்த நொடி பூங்கொடி உட்பட அனைவரும் அங்கே ஆஜர் ஆனார்கள். கேசவனின் சொல்லுக்கு அப்படி ஒரு மரியாதை அனைவரிடம் இருக்கும். பிள்ளைகள் கூட கேசு அப்பா சொல்லி விட்டார் என்றால் உடனே கேட்டு விடுவார்கள்.
அனைவரும் அங்கு கூடினாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் கேசவன். சொன்னதும் தங்கை என்ன சொல்வாளோ என்று அவருக்கு கவலையாக இருந்தது.
“என்னப்பா? என்ன விஷயம்? எதுக்கு எங்களைக் கூப்பிட்ட?”, என்று கேட்டாள் மணியம்மை.
“நம்ம பாப்பாவுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு மா. ஒரு வரன் வந்திருக்கு”, என்று கேசவன் சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது. பூங்கொடியோ முகத்தைச் சுருக்கினாள்.
“இப்ப தான் பா எனக்கு நிம்மதியா இருக்கு. உன் தங்கச்சியை யார் கிட்டயாவது பிடிச்சு கொடுத்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”, என்று சொன்ன மணியம்மையை முறைத்த பூங்கொடி “கிழவி கல்யாணம் அது இதுன்னு பேசின உன் மண்டைல கல்லைப் போட்டுருவேன் பாத்துக்கோ”, என்று மிரட்டினாள்.
“பாப்பா, அம்மாவை அப்படி பேசக் கூடாது”, என்று அவளுடைய இரண்டாவது அண்ணன் மணிவாசகம் கூறியதும் வாயை மூடிக் கொண்டாலும் அன்னையை முறைத்த படியே தான் நின்றாள் பூங்கொடி.
“இங்க என்ன டி பாக்குற? உங்க அண்ணனை முறை பாப்போம்”, என்றாள் மணியம்மை.
“மாப்பிள்ளை யாருங்கண்ணா? நம்ம ஊரா? அசுலூரா? மாப்பிள்ளை என்ன செய்றார்?”, என்று கேட்டான் அவளின் மூன்றாவது அண்ணன் தம்பிதுரை.
“மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை”, என்று கழுத்தை நொடித்தாள் பூங்கொடி .
“பையனுக்கு ஊரு பொள்ளாச்சி தான். உன் சின்னத்தாத்தா வகை சொந்தம் தான் மா. பையன் பேர் மணிமாறன். வீட்டுக்கு ஒத்த பிள்ளை. பொள்ளாச்சில தான் இன்ஸ்பெக்ட்டரா இருக்கார். வயசு இருபத்தி ஏழு ஆகுது. நம்ம ரிட்டயர்ட் ஐ.ஜி கதிரவன் இருக்காருள்ள? அவரோட பையன் தான். நல்ல குடும்பம், சொந்தம் வேற. அவங்களா சொந்தக்காரங்க மூலமா கேட்டு விட்டுருக்காங்க”, என்றார் கேசவன்.
“குணம் எப்படிங்க? அது தானே முக்கியம்?”, என்று கேட்டாள் அவரது மனைவி மங்களம்.
“குணத்தை பத்தி விசாரிக்காம இருப்பேனா? நல்லா விசாரிச்சேன். கை சுத்தமாம். அதனால இந்த மூணு வருசத்துல ரெண்டு இடத்துக்கு மாற்றுதல் வாங்கிட்டாராம். நல்ல பையன்னு நான் கேட்ட இடத்துல எல்லாம் சொன்னாங்க”, என்றான் கேசவன்.
“அப்படின்னா எதுக்கு எங்க கிட்ட கேட்டுகிட்டு? சம்மதம்னு சொல்லி அவங்களை வரச் சொல்ல வேண்டியது தானே?”, என்று கேட்டாள் மணியம்மை.