நாட்கள் எப்போதும் போல நகர்ந்தது. முக்கிய திருப்பமாக ரங்கசாமி கேஸ் சி.பி.ஐக்கு மாற்றப் பட்டிருந்தது. தாமரைச் செல்வன் என்ற அதிகாரி சிறப்பாக நியமிக்க பட்டார். இதை மணிமாறன் எதிர் பார்த்தான். ஏனென்றால் கஞ்சா கும்பலை பிடிக்கும் போது இது எல்லாமே செய்வது ரங்கசாமி தான் என்று அவனுக்கு தெரிய வந்தது.
ஆனால் அதற்கு அவனால் ஆதாரம் திரட்ட முடிய வில்லை. அவன் அதற்கு மேலும் விசாரிக்க ஆரம்பிக்கும் போது தான் அவனுக்கு பல தடைகள் வந்தது. தன்னை மேலதிகாரிகள் இதை விசாரிக்க விட மாட்டார்கள் என்று அவனுக்கு புரிந்தது. அதனால் தான் ராமரை அப்ரூவராக மாற்றினான்.
ராமரைக் காப்பாற்ற மட்டும் தான் முடிந்தது அவனால். ரங்கசாமி தான் கஞ்சா கும்பலுக்கு தலைவன் என்று அவனால் நிரூபிக்க முடிய வில்லை. ஆனால் ரங்கசாமி தான் ராமருக்கு பணம் கொடுத்தது என்று நிரூபிக்க பட்டது. ரங்கசாமிக்கும் கஞ்சா வியாபாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்ட ஜட்ஜ் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
தன்னால் போக முடியாத சந்து, இடுக்குகளில் எல்லாம் சி.பி.ஐ நுழையும் என்று அவனுக்கு தெரியும்.
சிறப்பு அதிகாரியான தாமரைச் செல்வன் மணிமாறனைக் காண வந்தார். அவரை வரவேற்றவன் தனக்கு தெரிந்ததையும் சந்தேகமான சில தகவல்களையும் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அவர்கள் தீவிரமாக விசாரித்தார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ரங்கசாமி கஞ்சா மட்டும் அல்ல. இளம் பெண்களை விற்பது, குழந்தைகளை கடத்துவது, கொலை, கொள்ளை, கள்ளச் சந்தையில் உடல் உறுப்புக்கள் வியாபாரம் என அனைத்தும் நடத்துவது தெரிந்தது.
ரங்கசாமி பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை, மருத்துவமனை எல்லாமே பூட்டி சீல் வைக்கப் பட்டது. அவன் சிறையிலிருந்து வெளியே வர முடியாத படி அவனுக்கு தண்டனை கிடைத்தது. கூடவே ரங்கசாமிக்கு சிறையில் உதவிய அதிகாரிகள், மணிமாறனின் மேலதிகாரிகள் உட்பட பத்து பேர் பதவி நீக்கம் செய்யப் பட்டனர்.
அனைத்து உண்மைகளைக் கண்டு பிடித்த தாமரைச் செல்வனுக்கு பாராட்டு கிடைத்தது. அந்த பாராட்டைப் பெற்றுக் கொண்ட தாமரைச் செல்வன் ஒரு இண்டர்வியூவில் மணிமாறனை பாராட்டி அவர் தந்த தகவலால் தான் எல்லாம் கண்டு பிடிக்க முடிந்தது என்று சொன்னார்.
மணிமாறனுக்கும் பாராட்டு கிடைத்தது. அதை தெரிந்து கொண்ட வீட்டினருக்கு சந்தோசமே. இதற்கிடையில் ராமர் மற்றும் பகவதிக்கு ஊட்டியில் வேலை வாங்கித் தந்ததோடு அவர்களுக்கு தங்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தான் மணிமாறன்.
வெளியே எல்லாம் நல்ல படியாக சென்று கொண்டிருந்தாலும் வீட்டில் எப்போதும் போல தான் இருந்தது. அவனுடைய அருகாமை வேண்டும் என்று அவள் எண்ண அவனோ அவளிடம் இருந்து விலகிக் கொண்டிருந்தான்.
கதிரவன் அவளது படிப்புக்கும் கனவுக்கும் எந்த பங்கமும் வரக் கூடாது என்று சொல்லியிருக்க தந்தை பேச்சை மறுப்பானா என்ன?
அவளோ அவனை புரிந்து கொள்ள முடியாமல் தனக்குள் இறுகிப் போய் இருந்தாள். அவள் வாய் விட்டுக் கேட்டும் தன்னால் அதை செய்ய முடிய வில்லையே என்று எண்ணிய மணிமாறன் வேலையில் அதிகம் கவனம் செலுத்தினான்.
ஒரு நாள் ஏதோ யோசித்துக் கொண்டிருந்த பூங்கொடியை கிளாசில் வைத்தே கண்டித்து விட்டார் ஒரு ஆசிரியர். “படிக்கிற வயசுலே கல்யாணம் பண்ணினா இப்படி தான் கவனம் இல்லாம போகும்”, என்று அவர் சொல்லியிருக்க பூங்கொடிக்கு அவமானமாக இருந்தது.
“சாரி”, என்று சொல்லி விட்டு அமர்ந்தாள். வகுப்பு இடைவெளியில் “என்ன தான் டி உன் பிரச்சனை?”, என்று கேட்டாள் அவளது தோழி ரேவதி.
அவளிடம் பூங்கொடிக்கு எந்த ஒளிவு மறைவும் கிடையாது என்பதால் அவளிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தாள். ஆனாலும் அவளால் சட்டென்று அதைச் சொல்ல முடிய வில்லை.
“என்னன்னு சொல்லு பூங்கொடி. யார் கிட்டயாவது சொன்னா தீர்வு கிடைக்கும்ல? புதுசா கல்யாணம் ஆனவ இப்படி இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க சொல்லு? இன்னைக்கு மேடம் கேட்ட மாதிரி வேற யாரும் கேக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?”, என்று கேட்டாள் ரேவதி.
“ஒரே ரூம்ல இருந்தாலும் நாங்க இன்னும் எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லை”
“இத்தனை மாசமாவா?”
“முதல் நாள் நெருங்கி வந்தாங்க தான். ஆனா நான் விடலை. அப்ப படிக்க முடியாம போயிருமோன்னு பயத்துல இருந்தேன். ஆனா இப்ப கொஞ்ச நேரம் என் கூட உக்காந்து பேசிற மாட்டாங்களான்னு இருக்கு. ஒரே ஒரு முத்தம் கொடுத்துற மாட்டாங்களான்னு இருக்கு. முன்னாடி அன்பா தான் இருந்தாங்க. இப்ப எல்லாம் விலகி விலகிப் போறாங்க. ஒரு வேளை அந்த கேஸ்ல அவங்களை தப்பா நினைச்சதுல என்னை வெறுத்துட்டாங்களோன்னு தோணுது டி”
“போடி பைத்தியம், அண்ணன் உன்னைப் பாக்குற பார்வையில அவ்வளவு காதல் தெரியுது. அதையும் மீறி அவங்க உன்னை தவிர்க்கிறாங்கன்னா கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்”, என்றாள் ரேவதி.
அவள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று குழம்பினாள் பூங்கொடி. அவளிடம் மீண்டும் எடுத்துக் கூற ஆரம்பித்த ரேவதி “நீ அண்ணாவை உத்துப் பார் டி. அவர் உன் மேல் வச்சிருக்குற அன்பு புரியும்”, என்று முடித்தாள்.
அன்று மாலை அவளை அழைக்க வந்தது அவளது கணவன் தான். அவளைக் கண்டதும் அவன் கண்களில் காதலும் அவனுடைய இதழ்களில் புன்னகையும் விரிந்தது.
அதைக் கண்ட பிறகு தான் ரேவதி சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது அவளுக்கு. “இவ்வளவு ஆசையை வச்சிட்டு எதுக்கு டா கிட்ட கூட வர மாட்டிக்க? அன்னைக்கு மாதிரியே உன் கை அணைப்பில் தூங்கணும்னு ஆசையா இருக்கு தெரியுமா?”, என்று மனதில் எண்ணிய படியே அவன் அருகில் சென்றாள்.
அவனிடம் பேச அவளுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் அவன் கண்களில் வழிந்த காதலைக் கண்ட பிறகு வார்த்தை சட்டென்று வர வில்லை. அவன் நெஞ்சில் சாய வேண்டும் என்ற தவிப்பும் ஆர்வமும் இப்போது அவளுக்கு அதிகமாக இருந்தது. அவனைப் பார்த்த படி நின்று விட்டாள்.
“போகலாமா?”, என்று கேட்க வந்தவன் அவளுடைய கண்களில் இருந்த புரியாத உணர்வில் அப்படியே நின்று விட்டான். அவனும் மனிதன் தானே? அனைத்தையும் துறந்த முனிவன் அல்லவே.
தன்னையே கண்ணெடுக்காமல் காதலுடன் பார்க்கும் மனைவியைக் கண்டு அவனுக்குள்ளும் உணர்வுகள் பெருக்கெடுத்தது. “கொடி”, என்று அவன் மென்மையாக அழைக்க அவளோ அவனைப் பார்த்த படியே தான் இருந்தாள். அவள் பார்வை அவனை சவாலுக்கு அழைப்பது போலவே இருந்தது.
சுற்றி பார்வையைத் திருப்பினான். சில பேரின் கண்கள் அவர்கள் மேலேயே இருப்பது தெரிய “ஏய் கார்ல ஏறுடி. எங்க நின்னு இந்த பார்வை பாக்குற?”, என்று கேட்டான்.
“என் புருஷன் நான் பாக்குறேன்? இதுல என்ன தப்பிருக்காம்?”, என்று அவள் சரசமாக கேட்க “படுத்தாத டி. வா போகலாம்”, என்றான்.
“முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்களாம்?”, என்று கேட்டாள் அவள்.
பூங்கொடியும் மணிமாறனும் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ரேவதி அவசரமாக அங்கே வந்தாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டியது இருந்தது. அதனால் வேகமாக அவர்களை நெருங்கியவள் “ஹாய் அண்ணா”, என்றாள்.
“வா மா ரேவதி, எப்படி இருக்க?”, என்று கேட்டான் மணிமாறன்.
“நல்லா இருக்கேண்ணா”, என்றவள் பூங்கொடி புறம் திரும்பி “பூவு, நம்ம லேப் ரூம் சாவியை ஆஃபிஸ்ல கொடுத்துறியா? எனக்கு இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும்”, என்றாள்.
“சரி டி”, என்றவள் அதை வாங்கி விட்டு அவனிடம் திரும்பி “கொடுத்துட்டு வந்துறேன்”, என்று சொல்லிச் சென்றாள்.
அவள் போனதும் அங்கிருந்து செல்லாமல் ரேவதி அங்கேயே நிற்கவும் “என் கிட்ட ஏதாவது சொல்லனுமா மா?”, என்று கேட்டான் மணிமாறன்.
“ஐயோ போலீஸ்னா சும்மாவா? எப்படி கண்டு பிடிச்சீங்க? சரி நான் சொல்ல வேண்டியதை உங்க பொண்டாட்டி வரதுக்குள்ள சொல்லிறேன்”
“என்ன மா? ஏதாவது சொன்னாளா?”
“அவ உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறான்னா. நீங்க எதுக்காக அவ கிட்ட இருந்து விலகி இருக்கீங்கன்னு தெரியாம குழம்புறா. அவளால படிப்புல மட்டும் இல்லை கிளாஸ்லயும் கவனம் செலுத்த முடியலை. ரெண்டு மேம் என்ன ஆச்சுன்னு கேட்டுட்டாங்க. இன்னைக்கு ஒரு மேம் படிக்கும் போதே கல்யாணம் முடிச்சா இப்படி தான்னு திட்டிட்டாங்க. இதுக்கு மேல போச்சுன்னா ஏதாவது பசங்க கிண்டல் அடிப்பாங்க. உங்களுக்கு அவளை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும். நீங்க அவ கிட்ட பேசுங்கண்ணா”
“ரொம்ப தேங்க்ஸ் மா, நான் பாத்துக்குறேன்”
“சரிண்ணா, நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
பூங்கொடி வந்ததும் காரை எடுத்தான் மணிமாறன். வீடு போகும் வரைக்கும் அமைதியே நிலவியது. “போச்சா, இனி நாளைக்கு வரைக்கும் பேசவே மாட்டான்”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக வந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் எப்போதும் அவளை விட்டுவிட்டுச் சென்று விடுவான். ஆனால் இன்றோ அவள் பின்னேயே உள்ளே வந்தான். ஏதோ எடுக்க வருகிறான் போல என்று எண்ணிக் கொண்டாள் பூங்கொடி.
தேவகியிடம் கதை பேசி விட்டு அவள் உடை மாற்றச் செல்ல அவனும் பின்னேயே வந்து அறைக் கதவை அடைத்தான்.
“இவன் என்ன இந்த நேரம் கதவை அடைக்கிறான்?”, என்று அவள் குழப்பத்துடன் அவனைப் பார்க்க அவள் அருகில் வந்தவன் அவளை இழுத்து தன்னருகே நிறுத்தினான்.
அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி. “ஏன் இப்படி பண்ணுறீங்க?”, என்று கூட அவளால் கேட்க முடிய வில்லை.
அவள் அவனை திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளை இழுத்து அணைத்தான் மணிமாறன்.
“ஐயோ என்ன பண்ணுறீங்க விடுங்க. நான் டிரஸ் மாத்திட்டு போகணும். இல்லைன்னா அம்மா மேல வந்துருவாங்க”, என்றாள். தேவகிக்கு அவள் வந்ததும் அவளைக் கவனிப்பது தான் வேலை. பூங்கொடி படிக்க அமரும் வரைக்கும் அவளையே தான் சுற்றி வருவாள். அதனால் அப்படிச் சொன்னாள்.
“உன் அம்மா உன்னைத் தேடி வந்தாலும் ரூம் கதவு பூட்டி இருக்குன்னு பாத்துட்டு திரும்பிப் போயிருவாங்க”, என்றவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.