அதில் பூங்கொடி முகம் மலர சுந்தரி மற்றும் மேகலா முகம் சுருங்கியது.
“சரிங்கண்ணி நாங்க வரோம்”, என்று சொன்ன பூங்கொடி மற்ற அண்ணிகளுடன் கிளம்பி விட்டாள்.
அவர்கள் சென்றதும் “ஏன் டி அப்படிச் சொன்ன?”, என்று சுதாவிடம் பாய்ந்தாள் மேகலா.
“அவ சொன்னதுல என்ன தப்பிருக்கு?”, என்று கேட்டார் மகேஸ்வரன்.
“அப்பா அவ நாத்தனாவை இப்பவே தட்டி வைக்கலைன்னா நாளைக்கு இவளை அவ எப்படி மதிப்பா? இவளுக்கு கொஞ்சமாவது கூருவாடு இருக்கா?”
“அவ கூறுவாட்டோட தான் பேசுறா. உனக்கு தான் மூளையே இல்லை. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அவளை அனுசரிச்சு போறது தான் சுதாவுக்கு நல்லது. நீ உன் புகுந்த வீட்ல அப்படி இருந்துருந்தா இப்படி இங்க வந்து நின்னுருக்க மாட்ட. சரி உன் புருஷன் எப்ப வந்து உன்னைக் கூட்டிட்டு போறார்? என்ன ஏதுன்னு கேட்டு அவர் கூட கிளம்பு போ. இந்த கல்யாணம் நல்ல படியா நடக்கணும். அது நொட்டை இது சொட்டைன்னு யாராவது ஏதாவது பேசினீங்க?”, என்றவர் மருமகளையும் முறைக்க மறுக்க வில்லை.
அங்கிருந்து அனைவரும் சென்றதும் “நான் பேசினது தப்பா மா?”, என்று வள்ளியிடம் கேட்டாள் சுதா.
“இல்லை டா, நீ சரியா தான் பேசின. நீ தேவதை மாதிரி. உன்னால யாரையும் கஷ்டப் படுத்த முடியாது. அவளுங்க பேசிட்டு போறாங்க. உண்மையிலே அந்த சட்டை அழகா தான் இருக்கு. அந்த பொண்ணு உனக்கு நாத்தனாரா கிடைச்சதுக்கு நீ புண்ணியம் செஞ்சிருக்கணும். ஒண்ணும் இல்லாமலா அவளை எல்லாரும் அந்த வீட்ல அப்படித் தாங்குறாங்க? நீ எல்லாருக்கும் உண்மையா இரு டா. அந்த உண்மை உன்னைக் காப்பாத்தும். வா, உனக்கு தட்டை சுட சொல்லித் தரேன்”
“அம்மா எனக்கு நாளைக்கு கேசரி செய்ய சொல்லித் தரியா?”
“பூங்கொடிக்கு பிடிக்கும்னு அவர் சொன்னார். அதனால கத்துக்க போறேன்”, என்று அவள் சொல்ல தன் மகள் கட்டாயம் புகுந்த வீட்டில் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை வந்தது அந்த தாய்க்கு.
ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. அதிகாலை மூன்று மணிக்கே பெண்ணழைக்க சென்று விட்டார்கள். பெண்களுக்கு துணைக்கு மணிவாசகம் மட்டும் வேனில் வந்தார்.
அந்த நேரத்திலே குளித்து கிளம்பி பச்சை வண்ணப் பட்டுடுத்தி அமர்ந்திருந்தாள் சுதா. அதன் பின்னர் இவர்கள் கொண்டு வந்த நிச்சய சேலையை அவளுக்கு மாற்றி விட்டார்கள்.
அதன் பின் பெற்றோர் மற்றும் மாமா முறையில் உள்ளவர்களின் காலில் விழுந்து வணங்கிய சுதாவை அழைத்துக் கொண்டு சென்றனர் மாப்பிள்ளை வீட்டினர். சுதாவுக்கு துணைக்கு மேகலா மற்றும் சுந்தரி இருவரும் சென்றார்கள்.
மற்றவர்கள் அனைவரும் வேனில் வர சுதா, பூங்கொடி, மணிவாசகம், மைதிலி நால்வரும் காரில் வந்தார்கள்.
நேராக மண்டபத்துக்குச் சென்றதும் மணமகள் அறையில் சுதாவை விட்ட பூங்கொடி உடனே அலங்காரம் செய்யும் பெண்ணை வர வைத்தாள்.
அலங்காரம் செய்யும் பெண் வந்ததும் சுதாவை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்று விட்டாள் பூங்கொடி.
“பாத்தியா நம்ம வீட்டு பிள்ளையை எப்படி விட்டுட்டு போறான்னு?”, என்று மேகலா கேட்க “அதானே அவ மேக்கப் பண்ண போறாளோ என்னவோ? ஆமா அவளுக்கு எதுக்கு மேக்கப்? அவ புருஷன் காரன் என்ன இங்கயா இருக்கான்?”, என்று கேட்டாள் சுந்தரி.
“அவங்க எங்க தனியா என்னை விட்டுட்டு போயிருக்காங்க? அதான் நீங்க இருக்கீங்க? அவங்க சொந்தக்காரங்க இத்தனை பேர் இருக்காங்க தானே?”, என்று சுதா பட்டென்று கேட்க “ரொம்ப ஆடாத சுதா. அப்புறம் அழப் போற”, என்று அவளை அடக்கினாள் மேகலா.
“இந்த சேலையை கழட்டிட்டு கல்யாண சேலையை மாத்திக்கிறீங்களா மேடம்?”, என்று கேட்டாள் அழகு நிலைய பெண். சரி என்று சொல்லி அவள் ஏற்கனவே பூங்கொடி வைத்து விட்டுச் சென்ற கவரை எடுக்க உள்ளே அவளுக்கான அனைத்தும் இருந்தது.
அந்த கல்யாண சட்டையைப் பார்த்து சுதா பிரம்மித்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே அழகாக இருந்ததை மேலும் அழகாக மாற்றி இருந்தாள் பூங்கொடி. மேகலா மற்றும் சுந்தரி கூட அதைப் பார்த்து அதிர்ந்து தான் போனார்கள்.
“மேக்கப் ஆரம்பிச்சா?”, என்று கேட்க வந்த மைதிலி அனைவரும் அந்த சட்டையைப் பார்க்கவும் “அன்னைக்கு உனக்கு அளவு சரியா இருக்கான்னு கேக்க தான் வந்தோம். அதுக்குள்ள இவங்க என்னன்ன பேசுனாங்க? எங்க இப்ப இந்த சட்டை நல்லா இல்லைனு சொல்லச் சொல்லு பாப்போம்”, என்று சுதாவிடம் கேட்டாள்.
“அன்னைக்கு நல்லா இல்லை, அதனால சொன்னோம்”, என்று மேகலா சொல்ல “ஐயாயிரம் கொடுத்தும் கடைக்காரன் அவ்வளவு தான் டிசைன் வச்சிருந்தான். மத்தது எல்லாம் உக்காந்து போட்டது பூங்கொடி தான்”, என்று அவர்களைப் பார்த்துச் சொன்ன மைதிலி “இங்க பாரு சுதா, நீ இன்னைல இருந்து எனக்கு தங்கச்சி தான். அதனால உரிமையா ஒரு விஷயம் சொல்றேன், காதுல போட்டுக்கோ. உன் புருஷன் கூட நீ சந்தோஷமா இருக்கணும்னா பூங்கொடியை எதுவும் சொல்லிறாத. அவ ஒரு தேவதை. அந்த தேவதை மனசு ஓடிஞ்சு போச்சுன்னா நம்ம எல்லாரோட சந்தோஷமும் அந்த நிமிஷம் அழிஞ்சிரும். அதுவும் உன்னால நடந்துச்சுன்னா வரதன் தம்பி உன்னை மன்னிக்காது. சரி கிளம்ப ஆரம்பி”, என்று எச்சரித்து விட்டே சென்றாள்.
“உலகத்துல இந்த வீட்ல மட்டும் தான் நாத்தனாரை இந்தா தாங்கு தாங்குறாங்க”, என்று கழுத்தை நொடித்தாள் மேகலா.
சுதாவுக்கு அலங்காரம் ஆரம்பமானது. அவள் சேலை கட்டி முடிக்கவுமே அங்கு வந்தாள் பூங்கொடி. சுதாவைக் பொறுமையாக தயார் செய்வதற்காக அவசரம் அவசரமாக அவள் கிளம்பி தயாராக வந்திருந்தாள். ஆனாலும் தேவதை போலவே இருந்தாள்.
“அண்ணி கிளம்பிட்டீங்களா?”, என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்த பூங்கொடியைக் கண்டு மேகலா மற்றும் தாரணி கண்களில் அப்பட்டமான பொறாமை வந்தது. அவளுடைய அழகும் சந்தோஷமும் அவர்கள் கண்ணை உறுத்தியது.
“ஏமா இங்க மணப் பெண் என் தங்கச்சியா? இல்லை நீயா? அவளை அலங்கரிக்கிறதை விட்டுவிட்டு நீ சீவி சிங்காரிச்சு மினுக்கிட்டு வந்திருக்க?”, என்று கேட்டாள் மேகலா.
“அக்கா, சும்மா இரேன்”, என்று சுதா சொல்ல பூங்கொடி யாரையுமே கவனிக்க வில்லை. “அண்ணி, நீங்க இங்க உக்காருங்க. இவங்க மேக்கப் பண்ணுவாங்க”, என்று சொல்லி அழகு நிலைய பெண்ணிடம் பேச ஆரம்பித்தாள்.
பூங்கொடி ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க அது எல்லாம் சுதாவுக்கு அணிவிக்கப் பட்டது. “இவளுக்கு எவ்வளவு திமிர் பாத்தியா? நம்ம சொல்றதுக்கு அசரவே இல்லையே”, என்று சுந்தரியின் காதைக் கடித்தாள் மேகலா. “விடுங்க அண்ணி, போறதுக்குள்ள வாலை ஓட்ட நறுக்கிறுவோம்”, என்றாள் சுந்தரி.
திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் மணிவாசகமும் அவன் மனைவி மைதிலியும். மங்களமும் கேசவனும் சாப்பாடு அறையில் எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். தம்பிதுரையும் தாரணியும் ஐயர் கேட்பவற்றை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கதிரவனும் தேவகியும் அப்போது மண்டபத்துக்கு வர “வாங்க மாமா, வாங்க சித்தி. மாப்பிள்ளை வரலைங்களா?”, என்று கேட்டான் மணிவாசகம். மைதிலியும் அவர்கள் மீது பன்னீர் தெளித்து வரவேற்றாள். “லீவ் இல்லைன்னு சொல்லிட்டான் மணி”, என்று கதிரவன் சொன்னதும் “நீங்க வாங்க மாமா உக்காருங்க”, என்று சொல்லி அவர்களை அமர வைத்தான்.
கேசவன் அவர்களை மகேஸ்வரனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். மேக்கப் அறையில் இருந்த பூங்கொடியைத் தேடி வந்த மணியம்மை “ஏட்டி என்ன இங்க நிக்குற? அங்க கதிரவன் அண்ணனும் தேவகியும் வந்துருக்காங்க பாரு. போய் என்னன்னு கேளு. வாங்கன்னு சொல்லிட்டு வா. நியாயமா பாத்தா நீ அவங்க கூட இன்னைக்கு தான் வந்துருக்கணும். நான் தான் மூணு நாள் முன்னாடியே உன்னை இங்க வர வச்சிட்டேன்”, என்றதும் சிட்டாக பறந்து போனாள்.
“மாமா, அம்மா வாங்க வாங்க”, என்று சொன்ன பூங்கொடி தேவகி அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இருந்த கவலையை கண்டு கொண்டார்கள் கதிரவனும் தேவகியும்.