அவள் தடுமாற்றத்தை அவனும் உணர்ந்தானோ என்னவோ? சட்டென்று அவள் கரத்தைப் பற்றினான். அவள் உருவிக் கொள்ள முயல அவள் கரங்களை இறுக்கிப் பிடித்து தன்னுடைய கரத்துக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
அவனுடைய தொடுகையால் கைகளின் வழியே ஒரு இதமும் பாதுகாப்பு உணர்வும் தனக்குள் வருவதை உணர்ந்தாள். ஆனால் தான் சொன்னதை செய்ய வில்லையே என்று கோபம் வர அவனுடைய கைகளை உதறினாள். அவனும் அவளை விட்டு விட்டான்.
“கோபத்துல எதுவுமே சரியா தெரியாது கொடி. பொறுமையா யோசிச்சு பாரு. அட்லீஸ்ட் உண்மை எல்லாம் தெரிஞ்ச பிறகாவது நீ என்னை புரிஞ்சுக்குவன்னு நம்புறேன். என்னைப் பாக்கணும்னு நினைச்சா, நம்ம வீட்டுக்கு வரணும்னு நினைச்சா ஒரே ஒரு கால் பண்ணு போதும். நான் கூப்பிட வரேன்”
“நான் ஒண்ணும் வர மாட்டேன்”
“தேவகி அத்தை உன்னை தேடுவாங்க டி”
“அவங்களும் தானே உங்களுக்கு சப்போர்ட் பண்ணினாங்க. எனக்கு யாரும் வேண்டாம். நீங்க முதல்ல போங்க பிளீஸ்”
“சரி, டேக் கேர்”, என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். அறைக்குள் வந்ததும் அவளுக்கு அழுகையாக வந்தது. திருமணம் ஆனதில் இருந்து அவளுக்கு தனி அறை தான் என்பதால் அவளுக்கு இந்த தனிமை வசதியாக இருந்தது.
அவனுடனே சென்று விட வேண்டும் போல தோன்றி வைத்ததில் தான் அவளுக்கு கவலையாக இருந்தது. அவன் ஏன் நல்லவனாக இல்லாமல் போனான் என்று கலங்கிப் போனாள்.
பிள்ளைகள் அவளுடன் விளையாட வர அவள் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டு அவர்களே அவளை தனியே விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
இரவு உணவு உண்ண அவளை அழைத்தார் மணியம்மை. “எனக்கு பசிக்கலை மா”, என்று சொல்லி மறுத்தாள். “மாப்பிள்ளையை பிரிந்ததால் இப்படி இருக்கிறாள் போல?”, என்று எண்ணிக் கொண்டு அவரும் சென்று விட்டார்.
அன்றைய இரவு முழுவதும் அவள் தூங்க வில்லை. அவளுடைய தூக்கத்தை மணிமாறனின் நினைவு தின்று கொண்டிருந்தது. அங்கே மணிமாறனுக்கும் அதே நிலை தான். அவளுடைய வீட்டில் நடந்ததைச் சொல்லி விட்டு அவனுடைய அறைக்குச் சென்றான்.
அவள் இல்லாத தனிமையை அவனால் சகிக்க முடியவில்லை. அவளுடைய வாசனை வேண்டும் போல இருந்தது. அவள் காலையில் சொன்ன விஷயம் நினைவு வர அவள் சொன்ன நோட்டைத் தேடினான்.
ஒவ்வொரு பக்கமாக திருப்பிக் கொண்டு வந்தான். அதில் எதுவுமே எழுதி இருக்க வில்லை. பின் கடைசி பக்கம் பார்த்தான். அந்த பக்கம் முழுவதும் மணிமாறன், மணிமாறன் என்று எழுதி வைத்திருந்தாள். அதற்கு முந்தைய பக்கத்தில் ஒரு ஹார்ட் வரைந்து அதனுள் மணிமாறன் பூங்கொடி என்று எழுதி இருந்தாள். அதைச் சுற்றி அந்த பக்கம் முழுவதும் ஹார்ட் ஹார்ட்டாக வரைந்து வைத்திருந்தாள்.
அது சாதாரண கிறுக்கல் தான். ஆனால் அவனைப் பொறுத்த வரைக்கும் அது அவனுடைய மனைவியின் மனதாயிற்றே. அவனை அவள் மனது கணவனாக ஏற்றுக் கொண்டு விட்டது என்று புரிந்து கொண்டான். அவளுக்கு அழைத்து பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் அவள் எந்த சூழ்நிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் அதை செய்யக் கூடாது என்று முடிவு எடுத்தான்.
இங்கேயே இருந்தால் தன்னால் தூங்க கூட முடியாது என்பதால் ஸ்டேஷன் சென்று விட்டான். அவன் நேராக சென்று நின்றது அந்த ராமர் முன்பு தான்.
அவனை அடித்துக் கொல்லும் வேகத்தில் தான் அவன் வந்தான். ஆனால் அவனைத் தானே பூங்கொடி விடச் சொல்லியிருக்கிறாள் என்று எண்ணி அவன் மேல் கை வைக்க வில்லை.
“யார் என்னை லஞ்சம் வாங்கினதுக்கு மாட்டி விடச் சொன்னதுன்னு சொல்ல மாட்ட. உனக்கு கஞ்சா எங்க இருந்து வருதுன்னும் சொல்ல மாட்ட? அப்படித் தானே?”, என்று கேட்டான்.
ராமர் அமைதியாக இருக்க “என்ன நல்லவன் மாதிரி லுக் விடுற? உன் தப்பை எல்லாம் மறைச்சு உன் பொண்டாட்டி கிட்ட வேற கதை விட்டுருக்க போல?”, என்று கேட்டான்.
மனைவியைப் பற்றி பேசியதும் அவன் கண்கள் ஒளிர்ந்தது. அதைப் பார்த்த மணிமாறன் “வீட்ல நல்லவன் வேஷம் போட்டு கொய்யாப் பழம் விக்குற. வெளிய கஞ்சா விக்குற? அதை மறைக்க உன் பொண்டாட்டி கிட்ட நான் பொய்க் கேஸ் போடுறதா சொல்லிருக்க? பயங்கர கிரிமினல் டா நீ. கண்டிப்பா உன்னை விட மாட்டேன். உன்னைக் கையும் களவுமா பிடிச்சிருக்கேன். உன்னால கஞ்சா கேஸ்ல இருந்து தப்பிக்கவே முடியாது. காலம் முழுக்க உனக்கு ஜெயில் தான். ஒரு வேளை அப்ரூவரா மாறினா உன்னை விட்டுட்டு அவனுங்களை பிடிப்பேன். இல்லைன்னா உனக்கு களி தான் டி. உன் பொண்டாட்டி பிள்ளைங்க கடைசி வரை பிச்சை எடுக்கும். உன் பொண்டாட்டியைப் பாத்தா வெகுளியா இருக்கா? என்ன நடக்க போகுதோ? என்ன நடந்தா எனக்கு என்ன?”, என்று சொல்லி விட்டு தனதறைக்குச் சென்று விட்டான். ராமரின் மனதில் அதிர்வு வந்தது. மனைவி பிள்ளைகளை எண்ணி அவன் கண்களில் நீர் கோர்த்தது.
அவனை நம்பி அவளுடைய குடும்பத்தை உதறி விட்டு வந்தவளாயிற்றே. அவன் மீது அவனுடைய பெற்றவர்கள் காட்டாத அன்பைக் காட்டி அவனை காதலால் குளிப்பாட்டியவள் ஆயிற்றே. அவன் அவளுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தாலும் அதை சந்தோஷமாக உண்டு மற்ற நேரங்களில் அவனுக்காக பசி பொறுத்தவள் ஆயிற்றே.
இவ்வளவு கஷ்டத்தில் குழந்தை வேண்டாம் என்று அவன் சொல்லியும் அவனுடைய பிம்பமாக ஒரு மகன் வேண்டும் என்று கேட்டு அவன் கருவைத் தாங்கியவளாயிற்றே. இப்போது இன்னொரு குழந்தை வேறு. அவளுக்காக அவன் இது வரை என்ன செய்திருக்கிறான்?
மனைவியின் நினைவு அவனைத் தூங்க விட வில்லை. ஒவ்வொருவருக்கும் அன்றைய இரவு ஒவ்வொரு விதமாக கடக்க அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது .
வீட்டில் இருந்தால் பைத்தியம் பிடிக்கும் என்று எண்ணி காலேஜ்க்கு கிளம்பினாள் பூங்கொடி.
வரதன் தான் அவளை அழைத்துக் கொண்டு போனான். கிளாசுக்கு சென்றாலும் அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அவள் வரதனுடன் வரவும் “இன்னைக்கு என்ன பூங்கொடி உங்க அண்ணன் கூட வந்திருக்க? எங்க டி உன் ஹீரோ? நாங்க எல்லாம் அவரை சைட் அடிக்க தானே காத்துட்டு இருக்கோம்?”, என்று கேட்டாள் பூங்கொடியின் தோழி.
அவள் அப்படிச் சொன்னதும் பூங்கொடி அவளைத் தீப்பார்வை பார்க்க அவள் வாயை கப்பென்று மூடிக் கொண்டாள்.
“என்ன டி ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டாள் ரேவதி.
“ஒன்னும் இல்லை”
“வீட்டு நினைவா? வீட்டுக்கு போயிட்டு வர வேண்டியது தானே? அண்ணன் கிட்ட சொன்னா கூட்டிட்டு போகப் போறாங்க”
“எங்க வீட்ல இருந்து தான் இன்னைக்கு காலேஜ்க்கு வரேன்”
“அப்ப அண்ணா நினைவு தான். ஒரு நாள் அவரைப் பிரிஞ்சதுல கஷ்டமா ஆகிருச்சா”
“ஹிம்”, என்று உண்மையை ஒத்துக் கொண்டாள்.
“கால் பண்ணி பேசு, இதெல்லாம் பெரிய விஷயமா?”, என்று கேட்டாள் ரேவதி.
“ஒரு சின்ன கோபம். ரெண்டு பேருக்கும் சண்டை. கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்”
“என்ன சண்டைன்னு நான் கேக்க மாட்டேன். ஏன்னா அது உங்க பெர்சனல். என்ன கோபமா வேணும்னாலும் இருக்கட்டும். நீ அண்ணா கிட்ட பேசுடி. பேசினா சரியாகிரும். அவங்களும் உன்னைத் தான் நினைச்சிட்டு இருப்பாங்க”
“அப்புறம் பேசுறேன்”, என்று சொன்ன பூங்கொடிக்கு அவனிடம் பேச வேண்டும் போல தான் இருந்தது. ஆனால் போன் செய்ய தைரியம் வரவில்லை.
பகல் முழுவதும் நிம்மதியில்லாமல் தான் இருந்தான் மணிமாறன். அவனால் அவளுடைய நினைவில் இருந்து வெளியே வர முடியவில்லை. அவளைப் பார்த்தால் தான் மனது ஆறும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் என்ன காரணம் சொல்லி அவளைப் பார்க்க என்று அவனுக்குத் தெரிய வில்லை.
அவன் வீட்டுக்கு வரும் போது தேவகி வீட்டில் இல்லை.
“அத்தை எங்க பா?”, என்று கதிரவனிடம் கேட்டான்.
“தேவகி பத்மா வீட்டுக்கு போயிருக்கா டா. அப்புறம் மாறா, நாளைக்கு பத்மா பேரனுக்கு பிறந்தநாளாம். பெருசா கொண்டாடுறாளாம். நம்மளை எல்லாம் வரச் சொன்னா. நீ எப்படியாவது மருமகளை கூட்டிட்டு போயிட்டு வந்துரு. நீங்க போகலைன்னா நல்லா இருக்காது”
“சரிப்பா அவ கிட்ட பேசுறேன்”
“சரி டா, அப்புறம் ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு போ”, என்று அவர் சொன்னதும் அவன் கண்கள் ஒளிர்ந்தது. அன்று மாலை மனைவியைக் காண கிளம்பி விட்டான்.