இந்த நிலையில் மகிழின் பிறந்த நாளும் வந்தது.. அதற்கு முந்தைய நாளே ராகவன், தனம் மற்றும் முகிலனோடு தங்கள் சொந்தத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தார்.
மகிழ் தாத்தா அவ்வாவோடு இருக்க.. ஏதோ யோசனையில் அன்று மாலை கை தவறி காஃபியைக் கொட்டிவிட அவ்வா “நினைப்பெல்லாம் எங்கே தான் இருக்கு.. கண்ணு பொடனில இருக்கா.. உங்க ஆயாவும் இல்லை.. நீயே இதை சுத்தம் பண்ணு” என திட்டிவிட
முகத்தைத் தூக்கிக் கொண்ட மகிழ் “ஒரு நாள் எங்க நைனா இல்லைனதும் நீ என்னைக் கொடுமை பண்ற.. நீ ஒன்னும் என்னைப் பாத்துக் கிழிக்க வேண்டாம் போ” என அவளும் தன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள்.
மீண்டும் அவர் வந்து உணவுண்ண அழைக்க ‘நீயும் உன் புருஷனும் கொட்டிக்கோங்க’ என முகத்தைத் திருப்பிக் கொள்ள.. அவரும் அதைப் போலவே செய்துவிட்டு வந்துவிட்டார்.
சிறிது நேரத்தில் பசிக்க ஆரம்பிக்க.. ‘கோவத்தை சோத்துல காட்டக்கூடாது’ என அவசரகால முடிவு எடுத்தவள்.. அறைக்குள்ளேயே என்ன செய்வது என யோசிக்க.. வெளியே பேச்சுக்குரல் கேட்டது.
பின்பக்க வீதியில் இருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலி கண்டு இருக்க.. வயிறு இறங்கிவிட்டதா என கணிக்க அவ்வாவை ஒரு பெண்மணி அழைக்க அவர் சென்றுவிட்டார்.
ஆனால் தாத்தா ஹாலில் அமர்ந்திருக்க.. இவள் இருமுறை எட்டிப் பார்ப்பதைக் கண்டு அவரும் சிரித்தவாறே கட்டுத்தாரைக்கு மாட்டுத்தீவனம் போடச் செல்வது போல செல்ல.. மகிழ் சமையலறைக்கு ஓடினாள்.
ஒரே புறம் அன்னக் கரண்டியில் எடுத்தால் தெரியுமோ என பயந்து ஸ்பூன் மூலம் சுற்றிச் சுற்றி எடுத்து அவசரமாக விழுங்கிவிட்டு டிவி பார்ப்பது போல அமர்ந்திருக்க.. தாத்தாவும் அவளோடு இணைந்து கொண்டார்.
அவ்வா வீடு திரும்ப முகத்தை கெத்தாக வைத்துக் கொள்ள முயற்சிக்க அவள் சமையலறையில் இருந்து வெளியே வந்து “ஏன் கொஞ்சமா சாப்டிருக்க.. நாளைக்கு பழைய சோறாகிடும்” என்க.. தாத்தா அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.
மகிழும் அசடு வழிய சிரித்தபடியே சரண்டர் ஆகிவிட்டாள்.. அவ்வாவும் இவர்களோடு இணைந்து அவள் தலையை நீவியபடியே டிவி பார்க்க.. மகிழுக்கு இத்தனை நேரம் இருந்த தனிமையுணர்வு நீங்க மனநிறைவாக படுக்கையில் சாய்ந்தாள்.
அரை உறக்கத்தில் யாரோ அவள் காதருகில் ‘மயிலு’ என அழைக்க.. அவளும் விழி திறக்காமலேயே புன்னகை செய்தாள்.. மீண்டும் மயிலு என காதில் விழ மூளை ‘அடியேய் எந்திரி’ என காறித்துப்ப.. படக்கென கண்விழித்தவள்.. எதிரில் நிழலாய் இருந்தவனைக் கண்டு மிரண்டவள் கத்தப் போக.. அதற்குள் அவள் வாயை தன் கைகளால் அடைத்தவன் “கத்தித் தொலைஞ்சுடாதே.. நான் தான்டி” என தன்னை அடையாளப் படுத்திக் கொண்டான் நந்தா.
அதில் நிம்மதி அடைந்தாலும்.. இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறான் என நினைத்தவள் அறை விளக்கைப் போட்டவள் “இங்க என்ன பண்ற மாமா.. போ முதல்ல” என அவனை விரட்ட
அவனோ சுவாதீனமாக அவள் கட்டிலில் அமர்ந்தவாறே “வந்தவனை வான்னு சொல்லாம போன்னு சொல்ற.. எப்பையும் நான் நினைக்கறதுக்கு நேர் ஆப்போசிட்டா தான் பண்ற.. எத்தனை சிரமப்பட்டு இங்க வந்தேன் தெரியுமா.. உன் ரூம் ரொம்ப கேர்ளியா இருக்கு” என்றான் பிங்க வண்ண அறையையும் அங்கே இருந்த வயலைட் டெடியையும் அளவிட்டபடி.
அதில் அவள் கிஞ்சித்தும் இரங்காமல் “அப்படி இங்க வர வேண்டிய அவசியம் என்ன.. அதுவும் இத்தனை நாளா கண்ணுல படாம இருந்துட்டு” என பல்லைக் கடிக்க
“அவசியம் இருக்கே” என்றவன் அவன் முன்பு நின்று கொண்டிருந்தவள் கை பற்றி இழுக்க.. அவள் கீழே மண்டியிட.. அவனும் குனிந்து அவள் கையை நெஞ்சில் வைத்துக் கொண்டவன் “நான் தெளிவாகிட்டேன்.. அதைச் சொல்லத்தான் வந்தேன்” என வசியப் புன்னகையுடன் கூறினான்.
அதில் ஒருகணம் தன்னை மறந்தாலும்.. அவன் பிடியில் இருந்து தன் கையை உருவிக் கொண்டவள் “வேண்டாம்” என்றாள் ஒற்றைச் சொல்லாக..
[the_ad id=”6605″]
அவள் மறுப்பை எதிர்பார்த்தே வந்திருந்த அவனும் “ஏன்” என்க.. அவனைத் திரும்பியும் பாராமல் “அது எதுக்கு உங்களுக்கு.. எனக்குப் பிடிக்கலை.. அவ்வளவு தான்” என்றாள்.
“ஆஹான்.. என்னை டபுள் மைண்டட்னு சொல்லிட்டு இப்போ மேடம் என்ன பண்றிங்களாம்.. ப்ராப்பரான ஒரு ஆன்சர் சொல்லு” என அவள் முழங்கை பற்றித் திருப்பவும்
இத்தனை நாள் தப்பித்தவளால் இன்று நேரடியான கேள்வியை எதிர் கொள்ள முடியவில்லை.. இதற்கு பயந்து தானே அவள் விலகி விலகி ஓடினாள்.. திணறியவள் “என்ன சொல்லனும்” எனக் கேட்க..
அவள் கை பற்றி மென்மையாகச் சிரித்தவன் “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்றேன்” என்றுவிட்டு.. தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பெட்டியை அவளிடம் கொடுத்தவன் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் மயிலு” என வாழ்த்தியபடி கொடுக்க.. ஆனந்த அதிர்ச்சியானாள்.
அதை திறந்து பார்க்கச் சொல்ல.. உள்ளே ஒற்றை மூக்குத்தி இவளைப் பார்த்து கண் சிமிட்டியது.. இரவு விளக்கின் வெளிச்சத்தில் அது மின்னும் போதே வைரம் என சொல்ல.. அவள் தயங்கியபடியே “ரொம்ப எக்ஸ்பென்சிவ் போல.. நான் தொலைச்சுடுவேன்” என அவனிடம் திருப்பிக் கொடுக்க
அவளை முறைத்தவன் “யாரும் எதுவும் கேட்டுடக் கூடாதுன்னு ஊரெல்லாம் சுத்தி நீ போட்ருக்க அதே டிசைன்ல வாங்கியிருக்கேன்.. ஆனா யோசிக்காம திருப்பிக் கொடுக்கற” என முகம் வாடினான்.
அப்போதும் அவளால் அதை வாங்க முடியவில்லை.. அவள் போட்டிருப்பதும் வைரம் தான்.. ஆனாலும் ஏதோ தயக்கம் தடுக்க மீண்டும் “விலை அதிகம் போல” என முணுமுணுக்க
“ஆமா.. ஆனா உன்னை விட இல்லை” என்றவனிடம் “ஓல்ட் டையலாக்” எனக் கலாய்த்தாள்.
“இது எனக்கு வந்த ஃபர்ஸ்ட் ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ணி அந்த அமௌன்ட்ல வாங்கினது.. இன்னும் க்ளீயரா சொன்னா என்னோட முதல் சம்பளம்” என்றான் இறங்கிய குரலில்.
அதற்கு மேலும் அவனைப் படுத்திவைக்க மனம் வராமல் தான் அணிந்திருந்ததைக் கழட்டியவள்.. ஒரு பெருமூச்சுடன் அவன் வாங்கி வந்ததைப் போட்டுக் கொண்டாள்.
அதில் துள்ளியவன் கண்ணெடுக்காமல் அவளை ரசித்தான்.. ஃபேன் காற்றுக்கு ஆடிய குழல் கற்றைகள் அவள் கன்னம் தீண்ட முயற்சித்துக் கொண்டிருக்க.. அதை பொறாமை கொண்டு பார்த்தவன்.. அவள் முகத்தின் கலக்கம் கண்டு தன்னிலைக்கு வந்து என்னவெனக் கேட்டான்.
கண்களில் லேசாக நீர் திரையிட “இதெல்லாம் சரியா வருமா மாமா.. பயமாயிருக்கு” என மீண்டும் பழைய பல்லவியையே பாட.. அவள் உதட்டில் விரல் வைத்து மறுத்தவன் “நீ ஏன் டென்சன் ஆகற.. நான் பாத்துக்கறேன்.. நம்புடி” என்க.. அவளும் சரி என்பதாய் தலையசைத்தாள்.
“சரி சரி.. கிளம்பிப் போ மாமா.. நேரமாகுது” என விரட்ட.. “அவ்வளவு தானா.. ரிட்டன் கிஃப்ட் எதுவும் இல்லையா” என ஏக்கமாகக் கேட்டவனைக் குழப்பமாகப் பார்த்தாள் மகிழ்.
“பேச்சு தான் பெரிசு.. மத்தபடி பால்வாடிப் பாப்பா.. ஒன்னும் தெரியலை.. நான் ரொம்ப கஷ்டப்படுவேன் போல” என மர்மமாகச் சிரித்தவன் அவளிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
நந்தாவின் காதலோடு பிறந்த அந்தப் பிறந்தநாள் மகிழுக்கு நெகிழ்ச்சியாகவே தொடங்க.. காலையிலேயே திருமணத்திற்குச் சென்றிருந்த மூவரும் வந்திருக்க.. குளித்து வந்தவள் முகத்தில் இருந்த சந்தோஷம் நிலைபெற அனைவரும் வேண்டிக் கொண்டனர்.
தாத்தா அவ்வாவிடம் ஆசியும்.. முகிலிடம் வாழ்த்தும் பெற்றுக் கொண்டவளை ராகவன் “கண்ணா வா கோயிலுக்குப் போயிட்டு வரலாம்” என அழைக்க.. அதுவே அவளுக்கு வித்தியாசமாகப் பட்டது.. எப்போதும் அவள் அம்மாவுடனோ அவ்வாவுடனோ தான் செல்வான்.
அவரிடம் மறுத்துப் பழக்கம் இல்லை.. அதோடு மறுக்கக் காரணமும் இல்லாததால் கிளம்பிச் சென்றாள்.. கோவிலில் நுழைந்து இருவரும் கால்களைக் கழுவிவிட்டு உள்ளே நுழையே அங்கு ஏற்கெனவே கோவில் விஷயம் பேசியபடி இருந்த ஊர் பிரமுகர்களுடன் நந்தாவின் அப்பா நின்றிருந்தார்.
ராகவன் அவர்களிடம் ஒரு தலையசைவைக் கொடுத்துட்டு உள்ளே சென்றார்.. மனம் முழுதும் பாரமாக இருந்தது.. தன் கண் முன்னாலேயே மகள் எதிர்காலம் கண்ணீர் தீண்டக் காத்திருக்க.. மனதை அடக்கி தெய்வத்திடம் தன் குமுறலைக் கொட்டினார்.
[the_ad id=”6605″]
தீபாராதனை முடிய ராகவன் “சாமி ஒரு வரம் வைங்க” எனக் குரல் கொடுத்தார்.
மகிழின் நல்வாழ்விற்காக அவள் விருப்பத்தை அறிந்தும் அது அவளுக்குப் பொருந்தாது என்பதால் அவரே ஒரு முடிவு எடுத்திருக்க.. அதற்கு முதலில் தான் வணங்கும் தெய்வத்திடம் அனுமதி கேட்டார்.
இவர் வெளியே நின்று மனதில் அந்தக் காரியத்தை நினைத்துக் கொள்ள.. அம்மன் சிலை மீது பூ வைத்தவுடன் அது விழும் திசையைப் பொருத்து வாக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.. கிழக்கில் விழுந்தால் ராம வாக்கு நன்மை பயக்கும்.. மேற்கே விழுந்தால் உத்திர வாக்கு.. சற்றே கவனம் வேண்டும்.
“உத்திர வாக்கு ஆகியிருக்குதுங்க” என பூசாரியின் குரல் வர.. மகிழ் திரும்பி தந்தையைப் பார்த்தாள்.. அவரோ அதற்குள் தன்னை சமாளித்தபடி புன்னகைத்து ‘இன்னொரு வரம்’ என வாயைத் திறப்பதற்குள்.. “இன்னொரு வரம் வைங்க” என்றபடி வந்து நின்றான் நந்தா.
மகிழ் ஆச்சரியமாக அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் சாமியைப் பார்க்க.. அதே நேரம் “ராம வாக்கு ஆகியிருக்குதுங்க” என கர்ப்பகிரகத்தின் உள்ளிருந்து குரல் வந்தது.
ஒரு வெற்றிச் சிரிப்புடன் ராகவனைப் பார்த்த நந்தா வேண்டுமென்றே மகிழை பார்வையால் வருட கொதித்துப் போனார்.. பூசாரியிடம் தீர்த்தம், திருநீர் வாங்கிவிட்டு மகிழ் “சந்தனம் குங்குமம் வச்சிட்டு வரேன்” என விலகிச் சென்றாள்.
ராகவன் ‘என் மகளை விட்டு விடு’ என்பது போல பார்க்க.. நந்தாவோ அவரை கண்டு கொள்ளவே இல்லை.. இருவரின் கவனமும் இப்போது மகிழ் மேல் இருக்க.. அவள் தன் கையில் இருந்த திருநீரை சுற்றும் முற்றும் பார்த்தபடி வாயில் போட்டுக் கொள்ள.. அதைக் கண்ணாடி வழியே பார்த்த இருவரிடமும் இறுக்கத்தை மீறிய ஒரு புன்னகை.
நந்தாவிற்கு ரகு மேல் எவ்வளவு கோவம் இருந்ததோ அதே அளவு ராகவனிடம் இருந்தது.. நடந்து முடிந்த பிரச்சனையில்.. அவர் நியாயம் தவறி உறவின் புறம் நின்று.. நட்பின் இழப்பை கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்பது நந்தாவின் வாதம்.
[the_ad id=”6605″]
மகிழ் வரவும்.. அதற்குள் ராகவனை கோவில் விஷயம் பேச மற்றவர்கள் நெருங்க “சுத்தி கும்பிட்டு வரேன்ங்” என முணுமுணுத்துவிட்டு நகர்ந்தாள் மகிழ்.
கோபுரத்தின் பின்புறம் நின்றிருந்த நந்தாவிடம் சென்றவளிடம் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினான்.. அவள் முறைத்துவிட்டு “அறிவே இல்லையா.. நடுராத்திரியில வர.. மனசுல ரோமியோன்னு நினைப்பா.. கை கால் உடைஞ்சாத் தெரியும் சேதி” என திட்ட ஆரம்பித்தாள்
காதைப் பொத்தியவன் “ஏன்டி.. நடுராத்திரியில தூக்கத்தை கெடுத்துகிட்டு ஒருத்தன் வந்தானே.. நம்ம மேல எவ்வளவு பிரியம்னு நீ யோசிச்சியா.. அதை விட்டுட்டு திட்டுற.. சரி விடு.. கிஃப்ட் பிடிச்சிருக்கா.. யாரும் எதுவும் கேட்கலை தானே” என பேச்சை மாற்றினான்.
அவனை முறைத்தவள் “கிஃப்ட் ஓகே தான்.. ஆனா எனக்கு ரெண்டு விஷ் வேணும் தருவியா மாமா” என்க.. அவள் பேச்சில் தான் நன்றாக மாட்டிக் கொள்ளப் போவதை அவன் உணர்ந்தாலும் அவள் கேட்டு மறுக்க மனமில்லாமல் “கோவிலுக்கு வந்து கடவுள்கிட்ட கேட்காம எங்கிட்ட என்ன வரம்” என்றான் சிரிப்புடனே.
“தருவியா.. மாட்டியா.. அது மட்டும் சொல்லு” என ஒற்றைப் புருவத்தை மேலேற்றிக் கேட்க.. முதலில் அந்த மச்சத்திற்கு விசிறியாக இருந்தவன்.. இப்போது மூக்குத்தியிடமும் வீழ்ந்தான்.
தலை அவன் போக்கில் சம்மதமாக ஆட “என்ன விஷ் வேணும்” என்றான்.
நாயகன் வருவான்…