தன் வேலையில் உள்ள பிரச்சனைகளைச் சொல்லி.. தன் பாரத்தை இறக்கி வைத்துவிட்டுச் செல்லும் மகனையே கண் கொட்டாமல் பார்த்தார் சுப்பிரமணியம்.. இப்போது பாரம் மொத்தமும் அவர் தலையில்.
இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் மனதில் நெருடியது.. அவர் மகிழின் சின்னத்தாத்தா அதாவது ரகுவின் அப்பா தோட்டத்தில் தான் வேலை செய்து வந்தார்.. வயது முதிர்வின் காரணமாக அவர் அடிக்கடி வருவதில்லை.. எல்லாம் மங்கை மற்றும் முத்துக்குமரனின் கட்டுப்பாட்டில் தான்.
அன்றும் சுப்பிரமணியம் வழக்கம் போல தென்னந் தோப்பில் மரங்களுக்கு உரம் வைத்துக் கொண்டிருக்க.. கார் சத்தம் கேட்டது.. இது அவ்வப்போது நிகழ்வது தான்.. அவனது சட்டத்தை மீறிய செயல்களுக்கு இந்த தோப்பு தான் புகலிடம்.. அதனால் அவனை அவர் பெரிதாக கண்டு கொள்ளாமல் தன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.
முத்துக்குமரன் இந்த முறை கூட்டி வந்தது எக்ஸ் எம்.பி அறிவழகனைத் தான்.. அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த உடனே குமரன் “சுப்பிரமணி ரெண்டு இளனி வெட்டுங்க” என உத்தரவு போட.. ‘உரிமைப்பட்டவன் கூட இப்படி வேலை ஏவினது இல்லைடா ராசா‘ பெருமூச்சுடன் மரம் ஏறி காய் பறிக்கச் சென்றார்.
பின் அறிவழகனிடம் திரும்பியவன் “சொல்லுங்க மாமா.. ஏன் அவசரமாப் பாக்கனும்னு வரச் சொன்னிங்க.” எனக் கேட்க.. “தெரியாத மாதிரியே பேசாத மாப்பிள்ளை.. நீ தானே சொன்ன.. மினிஸ்டர் அந்த அனாதைப் பய ஆக்ஸிடென்ட் கேஸை விசாரிக்கச் சொல்றார்ன்னு.. எவன்யா இந்தப் புது தலைவலி” என பொறும
அவரைக் கோவமாகப் பார்த்தவன் “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டு இப்ப வந்து புலம்பினா என்ன மாமா செய்யறது.. உங்ககிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்ல கொஞ்ச நாள் அமைதியா இருங்கன்னு.. அப்புறமும் ஏன் இப்படி ஒரு முட்டாள்த்தனம் பண்ணிங்க” என இவனும் எகிறினான்.
“என்னய்யா செய்யச் சொல்ற.. ஆசை ஆசையா வளர்த்தா எவனோ ஊர் பேர் இல்லாதவன், குலம் கோத்திரம் இல்லாதவனைக் கட்டிக்கிறேன்னு கையைக் காட்றாளுங்க.. நான் நினைச்சபடி நடந்துருந்தா இந்நேரம் நீ என் வீட்டு மாப்பிள்ளை“
‘கொலையைப் பண்ணிட்டு நியாயத்தைப் பாரு‘ என மனதில் திட்டியவன் “அதுக்குத் தான் பொறுமையா பொண்ணு மனசை மாத்திக்கலாம்.. கொஞ்சம் அவளை தனியா இருக்கவிட்டா உங்க நினைப்பு வரும்.. இருக்கவே இருக்கு.. நெஞ்சுவலி, ஆப்பரேஷன்னு எதாவது டிராமா பண்ணி அவளை வரவச்சு.. கொஞ்ச கொஞ்சமா அவனை விட்டு விலக்கியிருக்கலாம்” என்றவனை இடைவெட்டிய அறிவழகன்
“அப்படித்தான்யா நானும் நினைச்சேன்.. ஆனா அந்த ஓடுகாலிக் கழுதை என்ன ஒரு தைரியம் இருந்தா.. எங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு.. போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொல்லி.. இப்ப அவனோட தைரியமா இதே ஊருக்கு.. சாமி கும்பிட வராளாம் சாமி.. அதான் வரம் வச்சு மேல அனுப்பிட்டேன்.. என் ஜாதி என்ன கௌரவம் என்ன.. எவன்னே தெரியாதவன் திங்கவா நான் சொத்து சேர்த்துட்டு இருக்கேன்.. இங்க பாருய்யா.. நீயே கூட என் அத்தை பேரன்னு தான் வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக்க நினைச்சேன்.. எனக்கு புள்ளை பொண்டாட்டி எல்லாத்தையும் விட என் கௌரவம் தான் முக்கியம்.. பதவி போனப்பக் கூட தலையில இருக்கறதேன்னு சும்மா இருந்தேன்யா.. ஆனா இந்தப் புள்ளை ஓடிப்போய் அத்தனையையும் ஒன்னுத்துக்கும் இல்லாம பண்ணிட்டா.. அவளை எப்படி சும்மா விடறது” என ஆக்ரோஷமாகப் பேசியவரை அமைதிப்படுத்தியவன்..
“உங்க கோவம் புரியுது மாமா.. ஆனா அதை இப்ப பண்ணியிருக்கக் கூடாது” என்றவனை முறைத்தவர் “எப்ப பண்ணியிருக்கனும்.. அந்த அனாதைப் பய வாரிசு என் வீட்டு வாரிசா வளரும் போதா” என மீசை துடிக்கக் கேட்டார்.
“புரிஞ்சுக்காமயே பேசறிங்களே மாமா.. இந்த ராஜாக்கு நம்ம மேல ஏதோ சந்தேகம் போல.. அதான் மினிஸ்டர்ட்ட பேசியிருக்கான்.. இப்ப என்ன பண்றது அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க” என்றான் நிலைமையை விளக்கி..
தன் இத்தனை வருட அரசியல் வாழ்வில் அவருக்கு இது சோதனைக் காலம் போலும்.. பதவி இம்முறை கிடைக்கவில்லை.. கட்சியிலும் கொஞ்சம் பூசல்.. சில மாதங்களுக்கு முன்பு மணல் மற்றும் கிரானைட் கடத்தலில் ஆதாரத்துடன் சிக்கிக் கொண்டார்.. அதில் எப்படியோ பணம் செல்வாக்கை உபயோகித்து வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்.. ஆனாலும் லைசன்ஸ் கேன்சலாகி பெயர் சற்றே ஆட்டம் கண்டிருக்கிறது.
அவர் இந்த குழப்பங்களில் இருக்கையில் மகள் திடீரென யாரோ உடன் படித்த ஒருவனை விரும்ப.. அது தெரிந்து அவர் சுதாரிப்பதற்குள் அவள் திருமணம் செய்து கொண்டு விட.. அவரைப் போல உயர்ந்த மனம் படைத்த சிலர் புறணி பேச.. அதில் தன் ஜாதி கௌரவம் இறங்கி விட்டதாகக் கருதியவர்.. எதைக் கொண்டு அதை நேர் செய்வது என ஒரு அரக்கத் தனமான மனநிலையில் சுற்றியவர்.. மகள் வந்த செய்தி தெரிந்ததும் யோசிக்காமல் தூக்கச் சொல்லிவிட்டார்.
அத்தனையும் யோசித்தவர் “புள்ளை மனசை மாத்தினாலும் விவாகரத்து வர ஒரு வருஷம் ஆகிடுமே.. செத்தான்னா ஒரே வழியா நாலு நாள் அழுதுட்டுப் போய்டுவா.. நமக்கும் தொல்லை ஒழியட்டும்னு பண்ணிட்டேன்யா.. நான் ஏற்பாடு பண்ண லாரி டிரைவர் ஏதோ வடநாட்டுப் பக்கம் ஓடிட்டான்.. இப்ப என்னய்யா பண்றது” என குழம்பினார்..
“வேற என்ன பண்றது.. ஆக்ஸிடென்ட்னு சொல்லி எவனாவது வந்து சரணடையச் சொல்லுங்க.. மேற்படி ஆளுங்களுக்கு பணம் கொஞ்சம் தாராளமா செலவு ஆகும்.. ஆனா வேற வழியில்லை” என உபாயம் கூறினான்.
“நல்ல யோசனை தான்யா.. ஆனா இப்ப இருக்கற நிலைமைல எவனை நம்புறதுன்னே தெரியலை.. எவனயாவது உள்ள அனுப்பினாலும்.. நாளைக்கு அதை வச்சு மிரட்டுவான்.. கட்சியில எனக்கு மறுபடி செல்வாக்கு வர வரை நான் எவனையும் நம்பத் தயாரா இல்லை.. எனக்கு இப்பத் தேவை எல்லாம் ஒரு எதிர்த்துப் பேசாத புள்ளைபூச்சி” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. சுப்பிரமணியம் இளனி கொண்டு வந்து இருவரிடமும் நீட்டினார்.
அவரை அளவெடுத்த அறிவழகன் ‘இவனைப் போல‘ என கண்களால் சொல்ல அதைப் புரிந்து கொண்ட குமரனும் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவரை அனுப்பி வைத்தான்.
எத்தனை சொத்துக்கள்.. இன்று கிரானைட் ஃபேக்டரி மூடித்தான் இருக்கிறது.. நாளையே அவர் லைசன்ஸ் மீண்டும் புதுப்பித்து விட்டால் கொள்ளை லாபம் பார்க்கலாம்.. அது போக வீடு, நிலம், எஸ்டேட் என கணக்கில் அடங்காத மற்றும் வராத சொத்துக்கள் என கணக்குப் போட்டுப் பார்த்துத் தான்.. எப்போதோ ஏதோ இருந்த ஒரு பழைய சொந்தத்தைப் புதிப்பித்து அவருடன் உறவு கொண்டாடி வருகிறான்.
அவராகவே வந்து மகளைத் திருமணம் செய்யக் கேட்ட போது தான்.. அந்தப் பெண் காதலனுடன் திருமணம் செய்து கொள்ள.. தண்ணியடித்து இவனிடம் புலம்பியவரிடம் ‘உங்க மரியாதைக் காப்பாத்த உங்க பொண்ணுக்கு என்ன நடந்திருந்தாலும் நான் கட்டிக்கிறேன்‘ என வாக்களித்தான்.
அவரும் போதையில் ‘அவனைக் கொன்னு.. உனக்குக் கட்டித் தரேன்டா‘ என்றவர் நிஜமாகவே இப்போது செய்துவிட்டார்.
வேறுவழியில்லை.. பாதிதூரம் வந்து அவரை மூளைச் சலவை எல்லாம் செய்து வைத்திருக்கிறான்.. இப்போது பின்வாங்க அந்த சொத்து மதிப்பு அவனை விடவில்லை.. இவரை பலி கொடுத்து தான் ஆக வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
உயிரை உயிரென்று மதியாமல் பெற்ற மகள் விதவையானாலும்.. தன் வீணாய்ப்போன ஜாதி பெரிதென எண்ணுபவனும்.. மாற்றான் மனைவியையும், உழைக்காமல் வரும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டவனும் இணைய.. அவர்கள் கையில் பதவியும் செல்வாக்கும் இருக்க.. ஒரு ஏழை கூலித் தொழிலாளி எதிர்த்து நிற்க முடியுமா.
அனைத்தையும் யோசித்தவாறு இருந்த சுப்பிரமணியத்திற்கு.. அவர்கள் பேச்சு முழுமையாகக் கேட்காவிட்டாலும்.. கொஞ்சம் புரிந்தது.. அதுவும் அந்த அரசியல்வாதி கடைசியாக தன்னைப் பார்த்த அந்த கழுகுப் பார்வையை அவர் அனுபவக் கண்கள் உணர்த்திவிட.. தன்னை வைத்து ஏதோ விளையாடப் போகிறார்கள் என அவருக்குப் புரிந்தது.
நந்தாவின் பெயர் அவர்கள் பேச்சில் அடிபட.. அதைத் தான் அவர் நந்தாவிடம் சொல்லி பாதுகாப்பு தேட முயற்சிக்க.. அது நிறைவேறவில்லை.. இப்போது மகனின் வேலையில் பிரச்சனை.. இதெல்லாம் ஏன் தங்களுக்கு நடக்கிறது என நொந்து கொண்டார்.
சரி நந்தாவைப் பார்த்து தனக்குத் தெரிந்தவரை சொல்லி விடலாம் என முயற்சித்துக் கிளம்பும் போது.. பண்ணையில் இருந்து ஒரு ஆள் வந்து அவரை முத்துக்குமரன் அழைப்பதாகக் கூற.. அவருக்கு பயத்தில் உதறல் எடுத்தது.. என்ன வரப் போகிறதோ என.
பயந்து கொண்டே அவனைப் பார்க்கத் தோட்டத்திற்குச் செல்ல.. அவனோ அவரது ரத்த அழுத்தத்தை சோதித்தபடி.. எதுவும் பேசாமல் யோசனை செய்தபடி இருந்தான்.
நேரம் ஆக ஆக அவருக்கு பயத்தில் கண்களை இருட்டிவிடும் போல வர.. அவரே தைரியத்தை வரவழைத்து “தம்பி” என முத்துக்குமரனை அழைக்க..
அவரைப் பார்த்தவன் “உங்க பையன் வேலையெல்லாம் நல்லாப் போகுதா” என சம்பந்தம் இல்லாத இல்லாத கேள்வி போலக் கேட்டாலும்.. அதில் இருந்த விஷத்தின் நெடி அவருக்குப் புரிய..
தடுமாறியவர் “ஆமா.. தம்பி.. ஏதோ விஷயம்னு கூப்பிட்டு விட்டதா சொன்னாங்களே” என அவரே எடுத்துக் கொடுக்க..
ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தவன் இவரைப் படுத்தியது போதும் என்ற முடிவுக்கு வந்தவன் “உங்களால ஒரு காரியம் ஆகனும்.. அன்னைக்குப் பாத்திங்களே எக்ஸ் எம்.பி.. அவர் கோவத்துல.. அவர் பொண்ணு கல்யாணம் பண்ணிகிட்ட பையனை லாரி ஏத்தி கொன்னுட்டார்.. நான் அதை ஆக்ஸிடென்ட்னு முடிக்கலாம்னு பாத்தா அதுக்குள்ள ஒரு வீணாப் போனவன் அதை விசாரிக்கச் சொல்லி கம்ப்ளெய்ன்ட் கொடுத்துருக்கான்” என கொலை பண்ணியதை ஏதோ குளிர்பானம் அருந்தியது போலச் சொல்ல.. சுப்பிரமணியம் அரண்டு விட்டார்.
அவரது பயந்த முகத்தைக் கண்டு இவரை ஈஸியாக பணிய வைத்து விடலாம் எனக் கணித்தவன் “அதான் நீங்க அந்த கேஸ்ல சரண்டர் ஆகிடுங்க.. ஃபைன் எவ்வளவு வருதே அதை அவரே கட்டி உங்களை வெளியே எடுத்திடுவார்.. இல்லைனாலும் ஒரு ரெண்டு வருஷம் தான்.. அந்தப் பையனோ அநாதை.. யாரும் கேள்வி கேட்க இல்லை.. நான் இருக்கேன்ல.. நான் உங்களை வெளியே கூட்டிட்டு வரேன்” என பாரிஸ் சுற்றுப்பயணம் போ என்பது போல ஜெயிலுக்குப் போகச் சொன்னான்.
அவருக்கு தொண்டை வறண்டு விட்டது.. குடித்துவிட்டு ஏதோ வீட்டில் மனைவியிடம் சண்டையிடுவார்.. மற்றபடி மான ரோசத்துக்கு பயந்த மனிதர்.. முன்பு குடிப்பழக்கம் இருந்த போது இதைக் கூறி இருந்தால் கேட்டிருப்பாரா என்பதே கேள்விக்குறி தான்.. இந்தக் கொஞ்ச நாட்களாக குடியும் இல்லாமல் ஏதோ தன் பாட்டில் வேலை செய்து.. அமைதியாக வாழ்ந்து வருகின்றார்.. அதற்கும் ஒரு சோதனையா.. என உள்ளுக்குள் பயந்து போனார்.
அவரது தள்ளாட்டத்தைக் கண்ட குமரன் “அட நீங்க இதை சும்மா செய்ய வேண்டாம் சுப்பிரமணி.. அதெல்லாம் மாமா நல்லாவே செய்வார்.. அதையெல்லாம் நினைச்சு குழம்பிடாதிங்க” என முடிந்தவரை அவரை யோசிக்க விடாமல்.. மூளைச் சலவை செய்தான்.