அங்கே நல்லவேளையாக முத்து இவளுக்கு முன்பாகவே வந்திருக்க.. இருவருமாக பிரின்சிபாலை பார்க்கச் சென்றனர்.. அவரும் வாழ்த்துச் சொல்லி.. முத்துவிடம் அவளுக்குப் பள்ளியைப் பற்றிச் சொல்லுமாறு அனுப்பிவைக்க.. இருவரும் பேசியபடியே நடக்க.. எதிரில் வந்த ஒரு பெண்மணியைப் பார்த்ததும் “குட்மார்னிங் மேம்.. இவங்க மகிழினி” என அவள் ஆரம்பிக்கும் போதே..
அந்தப் பெண்ணோ முத்துவுக்கு ஒரு தலையசைப்புடன் “உன்னை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே.. எந்த ஊர் நீ” என அருமையான மரியாதையில் கேட்டார்.. இத்தனை வருடப் பழக்கத்தில் முத்து கூட இவளை பன்மையில் அறிமுகம் செய்ய.. அறைந்தாற் போன்ற அந்தப் பெண்ணின் கேள்வியில் கடுப்பு மேலிட்டாலும்.. வெளியில் பல்லை இளித்தவாறே அவரின் கேள்விக்கு பதில் சொன்னாள்.
அவர் மகிழினியை யோசனையுடன் பார்த்தவாறே நகர.. மகிழ் ‘ஆரம்பமே அமோகமா இருக்கு.. இன்னும் என்ன எல்லாம் பாக்கனுமோ’ என மனதில் எண்ண.. முத்து “நான் கூட அந்தம்மாவுக்கு நீ எதாவது ஏடாகூடமா பதில் சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன் டி.. அவங்க தான் ஹையர் செகன்டரிக்கு இன்சார்ஜ்.. திடீர்னு சில நேரம் காரணம் இல்லாம கத்துவாங்க.. நீ எதுவும் பேசாத சரியா” என அவளை சமாளித்தபடி வர.. மகிழ் “உங்க ஸ்கூலுக்கு வந்த பாவத்துக்கு என்னையும் உன்னை மாதிரி மைன்ட் வாய்ஸ்ல பேச வைக்கறிங்க” என கிண்டல் அடித்தபடியே ஸ்டாஃப் ரூமிற்கு சென்றனர்.
[the_ad id=”6605″]
மகிழினி பழகுவதற்காக ஒரு வாரம் அவளுடன் யாரேனும் ஒரு ஆசிரியர் துணையிருப்பதாய் அந்த இன்சார்ஜ் மேம் வினிதா சொல்ல.. ‘பரவாயில்ல நல்லது எல்லாம் பண்றாங்க’ என எண்ணிக் கொண்டாள்.
வினிதாவின் அதிகாரப் பேச்சும்.. அறிவுப் பேச்சையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் முதல் நாள் மகிழ்வாகவே சென்றது மகிழுக்கு.. நந்தாவின் மீட்டிங்கிற்கான அறிவிப்பு வரும் வரையில்.
முத்து அவளை ஏற்ற இறக்கமாகப் பார்த்தபடியே வர “கண்ணாடியைக் கழட்டி வீசிடுவேன் டி.. ஒழுங்கா நட” என மகிழ் அவளை விரட்டியபடியே ஒரு வழியாக வந்து சேர்ந்தனர்.
அங்கு ஏற்கெனவே பிரின்சிபால் இருக்க.. அனைவரும் வந்த பிறகு உள்ளே நுழைந்தவன்.. எவ்வித செயற்கைப் பூச்சும் இன்றி.. சென்றைய கல்வி ஆண்டின் ரிசல்ட்டிற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி சொன்னவன்.. அடுத்த ஆண்டும் இதை விட நன்றாக இருக்க வேண்டும் என்றவன் “அப்புறம் முக்கியமான விஷயம்” என கேப் விட்டான்.
அவ்வப்போது சென்று வந்து கொண்டிருந்த பார்வையை முழுதாக மகிழ் மேலேயே நிறுத்தி “குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் திட்டாதிங்க.. அடிக்காதிங்க.. முறைச்சுக் கூடப் பாக்காதிங்க.. அன்பா சொல்லுங்க.. எதுவா இருந்தாலும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிக் கொடுங்க.. எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. உங்க வீட்டுக் குழந்தைங்க மாதிரி பாத்துக்கோங்க.. உங்களுக்கு இங்க ஏதாவது பிரச்சனைனா தாராளமா சொல்லலாம்” என்கவும்.. மகிழ் தான் பல்லைக் கடித்தாள்.
அவன் பார்வையில் இருந்து தப்பித்து வந்த பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.. வீட்டிற்கு கிளம்பும் நேரமும் ஆகிவிட.. கேட்டிற்கு வெளியே வந்த உடனே”திட்டாம அடிக்காம.. குணமா வாய்ல சொல்லனும்” என முத்து மகிழைக் கலாய்க்க ஆரம்பிக்க “என்னடி உன் நொண்ணன் இருக்க தைரியத்தில மைன்ட் வாய்ஸ் வெளியே வருதோ.. நான் அடிச்சு எப்படி பாத்திங்க.. ஓவராத்தான் பேசறிங்க” என முத்துவிடம் சண்டைக்குச் செல்ல
“இது உலக நடிப்புடா சாமி.. ஏன்டி டியூசன்ற பேர்ல எத்தனைஅப்பாவிக் குழந்தைங்களை டார்ச்சர் பண்ணியிருக்க.. உன்னைப் பத்தி எங்களுத் தெரியாது” என அவள் சிரிக்க.. “அடிங்க.. கூட இருந்தே குழி பறிக்கிற உன்னைத்தான் முதல்ல அடிக்கனும்” என மகிழ் அவளைத் துரத்தினாள்.
[the_ad id=”6605″]
மணி ஆறை நெருங்கியிருக்க.. மாணவர்கள் அனைவரும் சென்றிருந்தனர்.. ஆள் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருக்கவே.. இருவரும் ரோடு என்பதை மறந்து ஓடத் துவங்கியிருக்க.. திடீரென நின்ற முத்து “அங்க பாருடி.. அது ரகு மாமா மாதிரி இருக்கு” என கை காட்ட.. மகிழினியும் “சித்தப்பா தான்” என அவரிடம் ஓடிப் போனாள்.
மெயின் ரோடை ஒட்டியிருந்த செம்மண் பாதையில்.. வழக்கத்தை விட அழுக்குத் துணியில்.. ஆட்கள் நடமாட்டம், ரோடு எதையும் உணராமல்.. போதையில் குப்புறக் கிடந்தான் ரகு.
மகிழுக்கு அதைக் கண்டதும் கண்ணைக் கரித்துக் கொண்டு வர.. “சித்தப்பா.. சித்தப்பா.. பாரு.. இங்க ஏன் வந்த” என அவரை எழுப்ப முயற்சிக்க.. தன் சொர்க்க யாத்திரையில் குறுக்கீடாக வந்த அந்தக் குரலை வெறுத்த ரகு “அட யார்டா நீ.. போடா” என அவள் கையைத் தட்டிவிட்டான்.
முத்து பக்கத்துப் பெட்டிக் கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி வர.. அதற்குள் அவரின் அலும்புகளை சமாளித்தபடி.. உடலின் மொத்த பலத்தையும் திரட்டி அவனை அமர வைத்தவள்.. தண்ணீரை வாங்கி முகத்தில் தெளித்தாள்.
செம்மண் ரோட்டில் விழுந்த வேகத்தில் நெற்றியிலும், முழங்கையிலும் அடி பட்டிருக்க.. லேசாக தெளிந்த போதையில் “கண்ணா.. வந்துட்டியா.. பாரு.. நான் தான் அத்தனைக்கும் காரணம்.. நீ.. போ.. மவராசியா இருக்கனும்… டேய்.. யார்டா.. முடியை இழுக்கறது.. போடா” என அவளை அடையாளம் கண்டு கொண்டு உளற.. அவரை கஷ்டப்பட்டு ரோட்டுக்கு அழைத்து வந்தவள்.. நிழற்குடையின் கீழ் இருந்த கல் பெஞ்சில் அமர வைத்தாள்.
அவசரமாக முகிலுக்கு ஃபோன் செய்ய.. அவன் மறுபுறம் எடுத்ததும அவளால் பேசவே முடியவில்லை.. அழுகை தொண்டையை அடைக்க.. முத்துவிடம் கைப்பேசியை நீட்டினாள்.
அவனோ பதற்றமாக “ஹலோ.. மகிழு.. மகிழு” என கத்திக் கொண்டிருக்க.. முத்து லேசாக தயங்கி “ஹலோ” என்க.. அவன் அப்போது தான் உயிர் வந்தாற் போன்று “தமிழ்.. அவ எங்க.. ஏன் பேசலை” என அவளிடம் கேள்விகளை வீச.. முத்து தான் திணறிப் போனாள்.
“அது.. உங்க சித்தப்பாக்கு அடி பட்ருக்கு.. ஸ்கூல் பக்கத்துல தான்.. நீங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க மா..” என பாதியோடே அவள் நிறுத்த.. முகிலனும் “நா பக்கத்துல தான் இருக்கேன் தமிழ்.. பத்து நிமிஷத்தில வரேன்.. அதுவரை கொஞ்சம் அவளைப் பாத்துக்கோ” என்றவன் கட்பண்ணி விட்டான்.
ரோட்டில் போவோர் வருவோரின் பார்வை இவர்கள் மேல் படிந்தாலும்.. மகிழ் எதையும் உணராமல் அழகையுடனே இருக்க “இன்னும் சாகலையா” என்ற நந்தாவின் குரலில்.. முத்து, மகிழ் இருவருமே அவனைத் திரும்பிப் பார்த்தனர்.
காரை நிறுத்தி அதன் மேல் ஒய்யாரமாகச் சாய்ந்தவாறே ரகுவின் மேல் கொலைவெறிப் பார்வையுடன் நின்றிருந்தான் நந்தா.. மகிழ் அழுகையும் ஆத்திரமுமாக அவனைப் பார்க்க அதை அசட்டை செய்தவன் “நானும் இப்ப போவான்.. அப்ப போவான்னு பாக்கறேன்.. ஒவ்வொரு தடவையும் தப்பிச்சுகிட்டே இருக்கான்.. அதுவும் நல்லதுக்குத்தான்.. என் கையால சாவுன்னு எழுதியிருக்கோ என்னவோ” என ஆத்திரமாகச் சொன்னான் அவன்.
மகிழ் ‘நீ எல்லாம் இன்னும் திருந்தலையா’ என்ற ரீதியில் அவனைப் பார்த்தவள்.. அவனுக்கு பதில் சொல்ல வாயைத் திறப்பதற்குள்.. முகிலன் வந்திருந்தான்.
“அதான் துணைக்கு ஆள் வந்தாச்சே.. இனியும் ஏன் நீ தேவுடு காக்கனும்.. வா முத்து” என நந்தா அவளை அழைக்க.. முத்துவின் நிலை தான் ஒன்றும் சொல்லும்படி இல்லை.
அவளுக்கு முதலில் நந்தா இப்படிப் பேசுவானா என்பதே அதிசயம் தான்.. மகிழின் அழுகை அவளைப் போக விடாமல் செய்ய “ப்ச்.. அவங்களா இழுத்துக்கிட்ட வினை இதெல்லாம்.. அறுத்துதான் ஆகனும்.. நீ வா.. வீட்ல புள்ளைத்தாச்சி பொண்ணை வச்சிட்டு.. உன்னையும் இன்னும் காணோம்னு சித்தி புலம்புனுமா” என நந்தா மேலும் குத்த.. முகில் முதல்முறையாக முத்துவை நிமிர்ந்து பார்த்தான்.
அதை எதிர் கொள்ள முடியாமல் அவள் திணறிப் போக.. மகிழ் தான் “போடி.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. நான் ஃபோன் பண்றேன்” என அவளை அனுப்ப.. திரும்பவும் முகிலைப் பார்த்தவள் “இப்ப வரப்போறியா இல்லையா” என்ற நந்தாவின் அதட்டலில் அமைதியாக அவன்பின் சென்றாள்.
[the_ad id=”6605″]
நெற்றியில் கல் ஏறியிருக்க.. போதையில் வலி தெரியவில்லை போலும்.. ஏதோ உளறிக் கொண்டு இருந்தான்.. இப்படியே மருத்துவமனை கூட அழைத்துச் செல்ல முடியாது என்பதால் வழக்கம் போல தோட்டத்து வீட்டிற்கே அழைத்துச் சென்று உறங்க வைத்தனர்.
அடுத்த நாள் காலை.. ரகு கண் விழிக்கையில்.. மகிழ் கன்னத்தில் கை வைத்தபடி அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க.. அவள் பள்ளிக்கு கிளம்பி இங்கே வந்தபடியால்.. அவள் புடவையில் இருக்க “டேய் கண்ணா.. பெரிய பொண்ணு ஆகிட்ட” என நேற்றைய நிகழ்வின் எவ்வித பாதிப்பும் இன்றி கூற.. அவள் தான் நொந்து போனாள்.
அவள் பதில் ஏதும் கூறாமல் முறைத்தபடியே இருக்க “ஆமா.. நான் எப்படி இங்க வந்தேன்” என அவள் கோவம் உணராமல் மீண்டும் கேட்க
“அறிவே இல்லையா சித்தப்பா உனக்கு.. நேத்து நான் பாக்கும் போது நீ எப்படிக் கிடந்த தெரியுமா.. ரோட்ல எல்லாரும் பாத்துட்டுப் போனாங்க.. ஒரு படிச்சவன் செய்ற காரியமா இது.. உன்னை நீயே ஒரு தடவை பாரு.. எப்படித்தான் இருக்கன்னு” என கோவமாக கத்தினாள்.
அவனோ அமைதியாக “நீ புதுசா பாக்கற.. அதான்.. இன்னும் ரெண்டு தடவை அப்படி நான் விழுந்து கிடக்கறதப் பாத்தா உனக்கும் பழகிடும்” என்றவனை என்ன சொல்வது எனப் புரியாமல் மகிழ் இருக்கவும்.. முகிலன் மருத்துவரை அழைத்து வந்தான்.
அவனின் காயத்தைப் பரிசோதித்து மருந்திட்டவர்.. மாத்திரைகளைக் கொடுத்துட்டுச் செல்ல.. முகிலன் இப்போது கோவமாக “உனக்கு என்ன தான் சித்து வேணும்.. ஏன் இப்படி திரியற” என்றான்.. இருவருக்கும் ஐந்தாறு வயதே வித்தியாசம்.
“துரைக்கு ஒன்னும் வேணாம்.. இத்தனை வயசாகுது.. அஞ்சு பைசா சம்பாத்தியம் கிடையாது.. வீட்டுக்குப் பத்துப் பைசாக்கு உபயோகம் இல்லை.. ஆனா உன் கைக்கு காசு மட்டும் எப்படி வருது.. அவங்க உன்னை காசைக் கொடுத்து கொஞ்ச கொஞ்சமா கொல்லப் பாக்கறாங்க.. நீயும் அவங்க தாளத்துக்கு தப்பாம ஆடற” முகிலுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை.
அவன் அப்பாவும் இவனை ரோட்டில் பார்த்த போது இப்படித்தானே துடித்திருப்பார்.. எதற்கு இப்படி எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்துக் கொண்டு.. என தன் சித்தப்பா மீது கோவம் கோவமாக வந்தது.
நாயகன் வருவான்..