ஆழி விட்டெழுந்து சோம்பல் முறித்த அழலவன்.. அதன்பின் நிற்க நேரமில்லாமல் தன் ஏழ்பரிகளையும் ‘ஹோய்.. ஹோய்‘ என விரட்டிக் கொண்டு.. அவணியோரை எழுப்ப வந்திருந்தான்.
சித்திரை போய் வைகாசி வந்திருக்க.. பள்ளி திறக்கும் ஜூன் மாதமும் வந்துவிட்டது.. கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் நண்பர்களையும், பள்ளியையும்.. பரிட்சைகளையும் மறந்து.. காலை எழும் நேரமும் மாறியிருக்க.. அங்கங்கு அன்னைகள்.. “அடேய்.. மணி எட்டு.. எந்திரி.. பள்ளிக்கூடத்துக்கு மொத நாளே லேட்டாப் போவியா” என ஆறு மணிக்கே கூவ ஆரம்பித்திருந்தனர்.
மகிழினிக்கு இந்த ஒரு மாதமும் நன்றாகவே சென்றது.. வீட்டிற்குள் தான்.. திருவிழாவிற்குப் பின் அவள் வெளியே செல்லவே விரும்பவில்லை.. இருந்தாலும் அவ்வப்போது ரகுவிற்கு உணவு எடுத்துச் செல்வது.. முத்துவின் வீட்டிற்குச் சென்று அவளையும் அழைத்துக் கொண்டு.. மாங்காய் திருடுவது என பொழுதுகள் உற்சாகமாகவே சென்றது.
இன்று ஜூன் மாதத்தின் முதல் நாள்.. மகிழ் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளும் கூட.. அவள் முதன்முதலாக வேலைக்குச் செல்வதால் வழியனுப்புவதற்காக ராகவன் கூட வெளியே செல்லாமல் வீட்டில் காத்திருக்க.. ஆனால் மகராசி இன்னும் அறையை விட்டு வெளிவரக் காணோம்.
மற்றவர்கள் கண்டும் காணமல் இருக்க.. அமிர்து அவ்வா மட்டும் அவள் அறை வாயிலை நொடிக்கு ஒருமுறை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க.. தாத்தா “நாம நடந்தா மட்டும் ஆயிரம் குத்தம்.. இவ மட்டும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருக்கா” என அருகில் இருந்த முகிலனிடம் கூற
முகிலும் “இவ்வளவு மெதுவாக் கூட உங்களுக்குப் பேச தெரியுமா தாத்தா.. அது ஏன் அவ்வாகிட்ட மட்டும் குரல் உள்ள போகுது” என தன் நெடுநாளைய சந்தேகத்தைக் கேட்க.. “நீ ஏன்டா இப்ப கத்துற.. கிழவி காதுல விழுந்தா பச்சத்தண்ணி குடுக்கக் கூட கிராக்கி பண்ணிக்குவா.. இதெல்லாம் நாளைக்கு உனக்கு கண்ணாலம் ஆகி எம்பேத்தி வந்தாத்தான் புரியும்” என தாத்தனும் பேரனும் தங்கள் ஆராய்ச்சியில் இருக்க.. பாட்டி இந்த முறை மகிழின் அறைக்கே நேராகச் சென்றார்.
[the_ad id=”6605″]
அப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்த மகிழ்.. கண்ணாடி முன் நின்று ஒரு சிகப்பும் கருப்பும் கலந்த புடவையை தன் நைட்டி டிரஸ் மேல் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க “ஓஓ.. எந்திரிச்சுட்டியா” என அவ்வா கேட்க.. திரும்பி அவரை முறைத்தவள்.. “நீ என்னை எழுப்பி விடவா வந்தா.. நான் கிளம்பறேனா இல்லையானு வேவு பாக்கத்தானே வந்த.. இப்ப நான் கேட்கவும்.. மாத்திப் பேசற.. மனசுல சிஐடி சகுந்தலான்னு நினைப்பா” என ஏளனமாகக் கேட்டாள்.
“ஆமா.. இவளைக் கண்டு எனக்கு கிடுகிடுன்னு நடுங்குது.. போடி இவளே.. அது சரி.. மொத நாளு.. ஏன் கருப்பு கட்டுற.. நல்ல மங்களகரமா மஞ்சக் கலர் கட்டலாம்ல” என அவள் கையிலிருந்த புடவையைப் பார்த்தபடி வினவ.. “புடிக்காத இடத்துக்கு எப்படிப் போனாத்தான் என்ன.. பேசாம போவ்வா.. என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்காம” என அவரை விரட்டினாள்.
ஆனால் அவ்வாவோ அசால்ட்டாக “நாங்காளா வேலைக்குப் போ.. போன்னு தடி எடுத்து முடுக்கினோம்.. நீ தானே போறேன்னு சொன்ன” என அவள் புறம் திருப்ப “உன்னைப் போகச் சொல்லியிருந்தா தெரிஞ்சிருக்கும்” என முகத்தை தூக்கிக் கொண்டவளிடம் “நானும் தான்டி காட்டுல எறங்கி ரெண்டாளு வேலை பாப்பேன்.. சும்மாவா உன் தாத்தன் சோறு போட்டாரு.. இப்ப நீ போறதெல்லாம் என்ன வேலை” என்றார்.
“ஓவரா மட்டம் தட்டாத வ்வா.. நீ பாடுபட்டது உம்பட காட்டுல.. ஆனா என்னைய நீங்க எங்க போகச் சொல்றிங்க” என மகிழ் பல்லைக் கடிக்க.. “எங்கூட உனக்குப் போட்டியா.. உன் வயசுல எனக்கு உங்கப்பன் இந்த ஊட்டில ஓடி விளையாண்டான்.. இப்ப காலம் அப்படியா இருக்கு.. எல்லத்தையும் உங்க இஷ்டத்துக்குப் பண்ணிங்க.. எங்க பேச்சை இந்த ஒரு தடவையாவது கேளுங்க.. மறுபடியும் தேரை இழுத்து தெருவுல விடாதிங்க” என அவள் செய்த தப்பை உணர்த்த.. மகிழினி வாயடைத்துப் போனாள்.
அவள் அமைதி கண்டு சிரித்தவர் “உனக்கு தொண்டை எடுத்ததே நாந்தான்.. எங்கிட்ட உன் டீச்சரு பேச்சை காட்டாத.. சீக்கிரமா புடவையைக் கட்டிட்டு வந்து சேரு” என நகர்ந்தவரை.. நிறுத்தியவள் “எண்ணையைத் தேச்சிட்டுப் பொரண்டாலும் ஒட்றது தான் ஒட்டும்.. போ.. போ.. உம்மருமக இட்லியையும் அதை ஒடைச்சு சாப்பிட சுத்தி, கத்தி எல்லாம் எடுத்து வை.. வரேன்” என புடவை கட்டச் சென்றுவிட.. “பாக்கறன்டி.. எவ்வளவு தான் ஒட்டுதுன்னு” என மனதிற்குள் சிரித்தவர் வெளியே வந்து சமையலறைக்குள் சென்று.. பேத்தி கேட்டதை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
[the_ad id=”6605″]
புடவையின் நிறம் இடித்தாலும்.. அவள் தன் உயரத்திற்கு வாகாய் கட்டியிருந்தமையும்.. முகத்தில் தெரிந்த ஒரு தெளிவும்.. ‘நேத்து வரைக்கும் கன்னுக்குட்டி கூட விளையாண்ட புள்ளையா இது‘ என அவர்களுக்கே ஆச்சரியம் தான்.
காலை உணவு அவ்வா பாசமாக பறிமாற.. முடித்தவள்.. அனைவரிடமும் விடைபெற்று.. ராகவனோடு வெளியேற.. அப்போதும் அமிர்து அவ்வா சகுனம் பார்ப்பதாகச் சொல்லி மேலும் இவளைக் கடுப்பேற்ற “வ்வாவா…வாவா.. நான் என்ன சந்திர மண்டலத்துக்கா வேலைக்குப் போறேன்.. நீ இங்கேயே நின்று வடக்குப் பாத்த மாதிரி திரும்பி என்னைக் கூப்பிட்டா கூட நான் வருவேன்.. இதுக்கு இவ்வளவு சீனா” என பல்லைக் கடித்தவளைப் பார்த்து அவ்வா சிறுபெண் போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள..
“தாத்தா.. பொறுமைக்கு சிலை வைக்கனும்னா.. அது உனக்குத் தான் வைக்கனும்.. எப்படித்தான் தாங்கிட்டு இருக்கியோ.. சீக்கிரமா நம்மூர் சந்தக்கடை முக்கில உனக்கு நான் சிலை வைக்கறேன்” என தாத்தாவிடம் அவள் பேரம் பேசிக் கொண்டிருந்தவள்.. அவள் தந்தை “போலாம்” என்ற ஒரு வார்த்தையில் அமைதியாகி அவருடன் சென்றாள்.
மகிழுக்கு டூவீலர் ஓட்டத் தெரியும் தான் என்றாலும்.. இடையில் சற்றே உள்ள காட்டுப் பகுதிக்கும்.. பள்ளி இருந்த நகரில் இருக்கும் டிராஃபிக்கிற்கும் பயந்து.. அவள் பேருந்திலேயே செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.. இருபது நிமிடப் பயணம் தானே என மகிழும் அதற்கு சரி என்றுவிட.. அவர்கள் ஊரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அழைத்து வந்து விட்ட ராகவன்.. மகளை வழியனுப்ப அங்கேயே நின்றார்.
ஆனால் அவருக்கு வந்த ஃபோன் அழைப்புகளைக் கண்ட மகிழ் தான் “நான் பாத்து போய்டுவேன் நைனா” என மெல்லிய குரலில் சொல்ல.. அவரும் அவசியம் உணர்ந்து “ஜாக்கிரதை.. எதுன்னாலும் நைனாக்கு ஃபோன் பண்ணு” என்றவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அவள் சிற்றுந்திற்காக காத்துக் கொண்டிருக்க “டீச்சர்.. டீச்சர்.. டீச்சர்” என்று கவுண்டமணி மாடுலேஷனில் பழகிய குரல் ஒன்று அழைக்க.. திரும்பியவள் ஆச்சரியப் புன்னகையுடன் “ஏய்.. ஸ்பாட் அண்ணா.. எப்படி இருக்கிங்க.. எங்க போனிங்க இவ்வளவு நாள்.. ஷெட் வேற பூட்டியிருக்கு” என கேள்வி மேல் கேள்வி கேட்டாள் மகிழ்
அவள் மகிழ்ச்சிக்கு சற்றும் குறைவில்லாமல் எதிரில் நின்றிருந்தான் ‘ஸ்பாட்‘ என அழைக்கப்படும் பாலமுருகன்.. இவன், முகில், நந்தா அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. சாரி.. ஒன்றாக வளர்ந்தவர்கள்.. பிள்ளைத்தமிழின் இருபத்தோரு மாதங்கள் தொடங்கி.. பள்ளிப் பருவம் வரையிலும் நல்ல நண்பர்கள்.. அதன்பின் குடும்பச் சண்டையில் முகிலும் நந்தாவும் பிரிந்து.. இன்று ஒருவரை ஒருவர் நேரில் காண்பதில்லை.
இரு கரைகளையும் இணைக்கும் பாலமாக பாலா தான் உள்ளான்.. குடும்பச் சூழ்நிலை காரணமாக டிப்ளமோ முடித்தவன்.. சொந்த ஊரிலேயே மெக்கானிக் ஷெட் ஒன்று வைத்து நடத்தி வந்தான்.
“டீச்சர்.. ஓவர் குஷியில இருக்கிங்க போல.. நாங்க நல்லாருக்கோம்.. நீங்க எப்படி இருக்கிங்க” என வினவியவனிடம்.. “சூப்பர் ண்ணா.. ஆமா.. இவ்வளவு நாள் எங்க காணோம்.. நான் கோவில்ல கூட உங்களைப் பாக்கலையே” என அவனிடம் கேட்க
சிரித்தவன் “நான் உன்னைப் பாத்தேன்.. ஆனா கூப்பிட்டு பேசறதுக்குள்ள நீ பலூன் வாங்கப் போயிட்ட” என நக்கலாகக் கூற.. விழித்தவள் “ஆமா.. ஷெட் ஏன் ஓபன் பண்ணலை” என பேச்சை மாற்றினாள்.
அவள் முயற்சி புரிந்தவனும் சிரித்துவிட்டு “அந்தக் கொடுமையை ஏன் கேட்கற மகிழ்.. நிம்மதியா கை நிறைய சம்பாதிச்சிட்டு இருந்தேன்.. இப்ப.. இப்படி அலையறேன்.. எல்லாத்துக்கும் காரணம் என் மாமன் போண்டா மூக்கன் தான்” என்றான் ஆத்திரமாக.
[the_ad id=”6605″]
“நிம்மி அக்கா அப்பாவா அண்ணா.. அப்ப உங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையா” என விழுந்து விழுந்து சிரிக்க.. “அந்தக் கொடுமையை ஏன் கேட்கற.. என் மாமன் இருக்கானே.. அவனுக்கு கவர்மெண்ட் வேலையில இருக்க மாப்பிள்ளை தான் வேணுமாம்.. இதெல்லாம் சரிப்படாது வாடின்னு சொன்னேன் நிம்மிகிட்ட” என புலம்ப..
மகிழும் கதை கேட்கும் ஆர்வத்தில் “அதுக்கு நிம்மி அக்கா என்ன சொன்னாங்க” என்றவளை பாவமாகப் பார்த்தவன் “நிம்மிக்கு மம்மியும்.. அவ டம்மி டாடியும் முக்கியம்னு சொல்லி.. என்னை பரிட்சைக்குப் படிக்கச் சொல்லிட்டா..அதான் நம்ம ஊருல இருக்க.. கூட்டுரவு சொசைட்டியில வேலைக்கு போறேன்.. அப்படியே அந்த பரிட்சைக்கும் படிக்கறேன்.. எப்ப படிச்சு வேலை வாங்கி.. கல்யாணம் பண்ணி.. இதெல்லாம் நடக்கற காரியமா” என மூச்சு வாங்கி நிறுத்த..
கண்களில் நீர்வரச் சிரித்த மகிழ் “பேசாம அன்மேரிட் அசோஷியேசன் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி.. இந்த மரம் வளர்க்கறது.. பூச்செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்தறது.. வயசான பாட்டி தாத்தாக்கு கடைக்குப் போய் வெத்தலை வாங்கித் தரதுன்னு.. ஏதாவது பண்ணுங்க.. கூட துணைக்கு எங்க வீட்டு சாமியாரையும் கூப்டுக்கோங்க” என்றவளிடம் “ஆம்பளைங்க கஷ்டம் உங்களுக்கு எல்லாம் சிரிப்பாத்தான் இருக்கும்.. பஸ் வருது பாரு” என்றான்.
அவனிடம் விடைபெற்று அந்த மினிபஸ்ஸில் ஏறியவளுக்கு அவ்வளவு நேரம் வாயடித்துக் கொண்டு இருந்ததால் பயம் தெரியவில்லை.. இப்போது தான் லேசாக அது தோன்ற ஆரம்பிக்க.. ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள்.. ‘என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்‘ என தனக்குத் தானே சொல்லியவாறே பள்ளிக்குள் நுழைந்தாள்.