கடைசி பாடவேளை மகிழுக்கு ஓய்வு இருக்க.. சென்ற வாரத்தில் வைத்த சைக்ளிக் டெஸ்டிற்கான பேப்பர்களை திருத்தி அதை என்ட்ரி செய்து கொண்டிருக்க.. முத்து வகுப்பிற்குச் சென்றிருந்தாள்.
அவள் புதிதாக வந்திருப்பதால் அனைவரிடமும் சற்று தள்ளியே பழக அதில் ஒரு ஆசிரியர் “என்ன மகிழினி எப்பவும் எதாவது ஒன்னு செஞ்சுட்டே இருக்கிங்க.. எங்க கூட எல்லாம் பேச மாட்டிங்களா” என சிரித்தவாறே வினவ..
அவளும் “அப்படி எல்லாம் இல்லை மிஸ்” என சமாளிக்கப் பார்க்க.. இன்னொருவர் “அவங்க நியூ ஜாய்னி.. தயக்கம் இருக்கும் நாம தான பேசனும்” என்றவாறே ஆரம்பித்து தன் வீட்டில் பல்லாங்குழி ஆடியதில் இருந்து இப்போது மாமியாரோடு ஆடும் ஆடுபுலி ஆட்டம் வரை சொல்ல.. அவர்கள் கதையை சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த இரு ஆசிரியைகளும் தங்களைப் பற்றிச் சொல்லி முடித்ததும் இவளும் தன்னைப் பற்றிச் சொல்ல.. இப்படியாக நீண்ட பேச்சு மகிழின் திருமணத்தில் வந்து நிற்க.. ஒரு ஆசிரியை “உனக்கு வீட்ல பாக்கறாங்களா மகிழ்.. எப்பக் கல்யாணம்” எனக் கேட்க
இவை அனைத்தையும் உதட்டில் உறைந்த ஏளனப் புன்னகையுடன் தன் கையில் இருந்த புத்தகத்தில் முகத்தை புதைத்தவாறே கேட்டுக் கொண்டிருந்த வினிதா இப்போது நிமிர்ந்து “மிஸ் எப்ப அடுத்த கல்யாணம்னு கேளுங்க.. ஆல்ரெடி அவங்க மேரிட்” என்க.. மகிழ் சற்றே அதிர்ந்தவாளாய் அவரைப் பார்த்தார்.
மற்றவர்களும் அவளைப் போலவே பார்க்க “ஏன் ஷாக் ஆகறிங்க.. மகிழ் ரொம்ப போல்டான மார்டன் பொண்ணு.. முதல் கல்யாணம் தோல்வியில முடிஞ்சாலும்.. அடுத்துப் பண்ணிப்பாங்க.. இல்லையா மகிழ்” என வஞ்சப் புகழ்ச்சி அணியில் கேட்க.. அவருக்கு பேச்சில் பதிலடி கொடுக்கக் கூடத் தோணாமல் அமர்ந்து இருந்தாள் மகிழ்.
அவர்கள் ஊர்த் திருவிழாவில் மங்கைப் பாட்டி மகிழைப் பற்றிச் சொன்னது வினிதாவின் மாமியாரிடம் தான்.. அவளை தூரத்தில் இருந்து இவர்கள் பேச்சைக் கேட்டபடி கவனித்துத் தான் இருந்தாள் வினிதா.. அதனால் தான் எப்போதும் ஒரு ஏளனப் பார்வையே மகிழிடம்.. இப்போதும் அவளை அப்படியே பார்க்க.. கண்களில் திரண்ட நீரை உள்ளிழுத்து “நிச்சயமா மேம்.. ஊர் வாய்க்கு பயந்து பிடிக்காத வாழ்க்கை வாழ முடியாதே” என்றவள் ஆசிரியர் அறையில் இருந்து வெளியேற
“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித்தான்.. கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் முடிச்சுகிட்டு.. ஏனோ தானோன்னு கல்யாணம் பண்ணிகிட்டு.. பிடிக்கலைன்னா தாலியை கழட்டி அவன் கையில கொடுத்துட்டு வந்துடறாங்க.. என்ன செய்ய வளர்ப்பு அப்புடி” என அவள் பின்னாலேயே துரத்தியது வினிதாவின் குரல்.
அதில் இன்னும் இன்னும் மனம் அடிபட்டுப் போக.. கிரௌண்டில் கண்மண் தெரியாமல் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.. எதிரில் நந்தாவின் அப்பா சரவணன் நிற்க.. அவளை நிறுத்தியவர் “வேலை எல்லாம் பிடிச்சிருக்கா கண்ணா” என ஆதூரமாகக் கேட்க.. அவளுக்கு அவள் அப்பாவின் நினைவு வர.. கட்டுப்பாட்டையும் மீறி சற்றே கேவலுடன் “மாமா” என்றழைக்க.. அவர் பதறிப் போனார்.
“என்னடா கண்ணா ஆச்சு.. யார் என்ன சொன்னாங்க.. மாமாட்ட சொல்லுடா” எனக் கேட்க.. “மாமா” என தேம்பியவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவள் கண்ணீர் தடை செய்ய..
[the_ad id=”6605″]
சரியாக அந்த நேரம் மொபைலைப் பார்த்தபடியே வந்த நந்தா மகிழை குழப்பமாகப் பார்த்தபடி “என்னங்கப்பா.. ஃபோன் பண்ணி வர சொன்னிங்க” என வினவ.. அதுவரை தலை குனிந்து இருந்தவள்.. நந்தாவை தீப்பார்வை பார்த்தபடி அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் அழுகையில் குழம்பிய நந்தா தன் அப்பாவிடம் கேட்கும் முன்னே அவர் “இதான் நீ புள்ளையப் பாத்துக்கற லட்சணமா.. உங்கிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேன்ல.. என்ன பண்ண” என அவனை அதட்டிக் கொண்டிருக்க
ஆசிரியர்கள் பேசியதை அப்போது தான் கேட்ட முத்துவும் மகிழைத் தேடி ஓடி வந்தாள்.. அவள் சற்று தூரத்தில் இவர்களோடு நின்ற மகிழைக் கவனிக்கவும்.. மகிழ் அங்கிருந்து செல்ல.. தன் பெரியப்பாவையும் அண்ணனையும் நெருங்கிய முத்து விஷயத்தைச் சொல்ல.. சரவணன் முறைப்பாக மகனைப் பார்க்க.. அவனோ தன் மனைவி சென்ற திசையை முகம் இறுகப் பார்த்தவாறு நின்றிருந்தான்.
ஆம்.. மனைவி தான்.. நந்தா காதல் கொண்டு மணந்த அவன் மனைவி மகிழினி.. அவன் வாழ்வில் காதலின் அரிச்சுவடி.. நான்கு வருடங்களாக அவன் சுமக்கும் ஏக்கங்களின் முகவரி.
“நல்லாக் கேட்டுச்சா உன் பொறந்தவ சொல்றது.. குளுகுளுன்னு இருக்கோ.. இதைத்தான் அந்தப் புள்ளை அன்னைக்கே சொல்லுச்சு.. நீ பண்ணது எத்தனை வருஷம் கழிச்சும் இன்னும் காலைச் சுத்துன பாம்பாக் கிடக்குதுன்னு பாரு.. உனக்கு நீ புடிச்ச முயலுக்கு மூணு கால் தானே.. எப்படி இதெல்லாம் சரி பண்ணப் போற” என பொது இடம் என்பதையும் மறந்து அவர் தனையனைத் திட்டித் தீர்த்தவர் “நீ போய் கண்ணாளைப் பாரு சாமி” என முத்துவிடம் சொன்னவர்.. நந்தாவை முறைத்தபடி நகர்ந்தார்.
“சரிங்க பெரியப்பா” என்றவள் மகிழிடம் செல்ல.. அவளோ எப்போதும் அமரும் வேப்பமரத்தின் அடியில் இருந்த கல் பென்ச்சில்.. கண்ணீர் தடம் காய்ந்திருக்க எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
முத்து அருகில் சென்று தோள் தொடவும்.. சிரிக்க முயள.. அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது நன்றாகத் தெரிந்தது முத்துவிற்கு.. அவளும் அருகில் அமர்ந்து “அவங்களை சும்மாவாடி விட்டா.. அவங்க பேசினதைக் கேட்ட எனக்கே அத்தனை ஆத்திரம் வருது” என முத்து அவளிடம் கேட்க
பெருமூச்சு விட்டவள் “நியாயப்படி உங்க அண்ணனைத் தான் வெளுக்கனும்.. அவன் பண்ணது தானே இத்தனையும்.. மத்தவங்களைச் சொல்லி என்ன செய்ய” என்றாள் விரக்தியாக
“அதுக்கு.. பாக்கறவங்க எல்லாருக்கும் உன்னைப் பேச லைசன்ஸ் கிடைச்சதா அர்த்தமா.. நீ வா போய் அந்தம்மாவை என்னனு கேட்கலாம்.. வாய் இருந்தா என்ன வேணா பேசுவாளா அவ” என்றபடி முத்து அவள் கையைப் பிடித்து இழுக்க..
“எதுவும் கேட்க வேணாம்டி.. நீயும் சரி.. உங்கண்ணனும் சரி.. இதுதானே முதல் தடவை.. இனி என்னைப் பத்திப் பேச அவங்களுக்கு ஒன்னும் இல்லையே.. விடு .. பாத்துக்கலாம்” என்றவள் முகத்தைக் கழுவியபடி அடுத்து இருக்கும் சிறப்பு வகுப்புக்குத் தயாரானாள்.
அங்கு நந்தாவும் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் செங்கல்லையும் மணலையும் வெறித்தபடி.. மாலை வெயில் உறைப்பதையும் பொருட்படுத்தாமல் நின்றிருந்தான்.
[the_ad id=”6605″]
“இன்னைக்கு வயசு இருக்கு மாமா.. நீ பண்ணது தப்பாத் தெரியலை.. ஆனா இதை நீ உணரும் போது என்னை விட நீ ரொம்ப வருத்தப்படுவ.. இன்னும் சொல்லனும்னா நீ வருத்தம் மட்டும் தான் படுவ” என்ற தன்னவளின் வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் இப்போதும் அவன் காதுகளில் ஒலித்தது.
அப்படியே நின்றிருந்தவன் முத்துவின் “அண்ணா” என்ற அழைப்பில் மீண்டு அவளைப் பார்க்க.. அவள் தயங்கியபடியே “மகிழ்.. உங்களை” என இழுக்க.. புருவம் சுருக்கியவன் “பரவால்ல சொல்லு.. என்ன சொன்னா” என வினவினான்.
“அது.. ஆத்திரத்தில எதுவும் பண்ண வேண்டாமாம்.. அவங்க ஏதோ பாதி கேட்டுட்டு உளறிட்டு இருக்காங்க.. உங்கண்ணன் போய் எதையாவது பண்ணி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லுன்னு சொன்னா” என பயந்து பயந்து பேச.. அதில் நந்தாவின் முகமும் சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகை போல ஏதோ கீற்றாக வந்து சென்றது.
இத்தனை நேரம் அவன் அய்யனார் லுக்கையும்.. மகிழின் வார்த்தைகளில் இப்போதையே புன்னகை மன்னன் லுக்கையும் கண்டு முத்து ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.
அதில் மேலும் சிரித்தவன் “நாலு வருஷத்துல வாய் அதிகம் தான் உங்கண்ணிக்கு.. முயற்சி பண்றேன்னு சொல்லு” என அவளை அனுப்பியவன் அடுத்து தான் செய்ய வேண்டியவற்றை மனதில் திட்டமிட்டபடியே வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானான்.
நாயகன் வருவான்..