‘உன் குடும்பம் அனாதையா போன மாதிரி…’ என்ற வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது… எப்போதும் போல கண்களைச் சூழ்ந்த நீரை அடக்கிக் கொண்டவள் தன் அப்பா, அம்மாவின் அறைக்குள் நுழைந்தாள்.
உண்மையில் அசோக்கின் தாய் பேச்சிற்கு அத்தனைக் கோபம் வந்தது. இருந்தும் பொறுமையாக தான் பதில் அளிக்க நினைத்தாள். அதற்கு காரணம் ஆரிக்கும், அசோக்கிற்கும் இடையேயான நட்பு.
ஆம் சிறு வயதிலிருந்தே இருவரும் நண்பர்கள்.நண்பர்கள் மட்டுமல்லாது அசோக்கின் தாய் வெங்கட்ராமனின் சொந்தமும் கூட அதன் மூலம் தான் இவர்களின் நட்பும் உருவானது. வெறும் நட்பாக இருந்தவர்களை உறவில் இணைக்க முன் வந்தார் அசோக்கின் தாய்.
வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக வெங்கட்ராமனின் சொந்தங்களும் சரி பத்மாவின் சொந்தங்களும் சரி அவர்களை ஒதுக்கி தான் வைத்திருந்தனர்.
என்னதான் சிலர் வெங்கட்ராமனை ஒதுக்கி வைத்தாலும் அவரின் சொத்துக்காக உறவுக் கொண்டாடும் கூட்டம் இருந்தது. அதில் அசோக்கின் தாயும் ஒருவர். வெங்கட்டின் சொத்தை கணக்கில் வைத்து தான் திருமணத்தை நடத்த முன் வந்தார்.
திருமண பேச்சில் சம்பந்தப்பட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தாலும் திருமணத்தை மறுக்க பலமான காரணம் இல்லை என்பதால் இருவருமே திருமணத்திற்கு சரியென்றனர்…
அதற்கு பின் திருமண வேலை துரிதமாக நடந்தது அச்சமயம் தான் கார் விபத்து நேரிட்டது…
எதிர்ப்பாரா விபத்தில் ஆரியை தவிர மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிஞ்சி இருப்பவள் ஆரி மட்டுமே அவளும் இப்போதோ அப்போதோ என்றிருந்தாள். அவளின் நிலையை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் அவளை கருணைக் கொலை செய்தால் மொத்த சொத்தும் ஆரியின் கணவனாக போகிற அசோக்கிற்கு கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அவரின் எண்ணத்தில் ஒரு லாரி மண்ணை கொட்டியிருந்தார் வெங்கட் ராமன். ஆம் ஒருவேளை என் இரத்த பந்தம் இல்லாத பட்சத்தில் என் சொத்துகள் அனைத்தும் ஆசிரமத்திற்கு சேர வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.
ஆரியும் பிழைக்க வாய்ப்பில்லை, அதே சமயம் சொத்தும் தங்களுக்கு இல்லை என்ற நிதர்சனம் புரிந்ததும் அன்றே ஆரியை தலை மூழ்கியிருந்தார் அவர். அச்சமயம் அசோக்கையும் ஆரியின் திசையிருக்கும் பக்கம் கூட விடவில்லை. அதே போல்
குறித்த அதே நாளில் மகனின் திருமணத்தையும் முடிந்திருந்தார். .
உண்மையில் அசோக்கின் திருமணத்தில் எவ்வித வருத்தமும் இல்லை ஆரிக்கு. அதே கணம் அவனின் தாய் பேசிய பேச்சும், செய்த காரியங்களும் தங்களின் குடும்ப மருத்துவர் மூலம் தெரிய வர அவர்கள் மருத்துவமனையில் கட்டிய பணத்தைக் கூட வேலின் மூலம் கொடுத்திருந்தாள். அதற்கு பிறகு சொந்தம், பந்தம், நண்பன் என்று அனைவருடமிருந்தும் விலகி நின்று கொண்டாள்.
ஆனால் அசோக் எளிதில் ஆரியை விலகி செல்ல விடவில்லை. ஆரம்பத்தில் தாயின் மிரட்டிலுக்கு பயந்து பின் வாங்கினாலும் திருமணத்திற்கு பின் மனைவியின் துணையோடு தோழிக்கு உதவியாக தான் வந்தான். தேவையில்லா சமயத்தில் கிடைக்கும் உதவி போல….
அசோக்கின் வரவு சாதரணமாக இருந்தாலும் மற்றவர்கள் மூலம் அது தவறாக பேசப்பட்டது. அதனை பற்றி ஆரியும் சரி, அசோக்கும் சரி துளியும் கண்டுகொண்டதில்லை…
இத்தனை நாட்கள் தொழில் விடயமாக தோழியுடன் இருந்தவன் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன் மகளின் காதணி விழாவிற்கு அழைத்து இருந்தான். முதலில் வர மாட்டேன் என்று தீவிரமாக மறுத்து விட்டாள். அதற்கு பின் இரண்டு, மூன்று முறை நேரில் சந்தித்து ஒப்புக்கொள்ள வைத்திருந்தான் அசோக். நண்பனின் வற்பறுத்தலில் தான் கோவிலுக்கு வந்திருந்தாள் அனைத்தும் நன்றாக தான் சென்றது… மற்ற சொந்த பந்தங்கள் இவளை சூழும் வரை…
என்னதான் சொந்தமென்று அக்கறையாக பேசினாலும் அதில் உண்மையான அக்கறை இருப்பது போல் தோன்றவில்லை… சிலர் இவளின் முன்னே தூற்றினர். நீங்கள் எல்லாம் எனக்கு பொருட்டேயில்லை என்பதைப் போல் அங்கிருந்து வெளிவந்திருந்தாள். அப்படி வெளி வந்தவளை தான் பிடித்து கொண்டார் அசோக்கின் தாய். அதற்கு பிறகு அவர் பேசிய பேச்சுக்கள் நாம் அறிந்தவை தான்…
அவர் பேசியதோடு மற்றவர் பேசியதும் தற்போது கண்முன்னே நின்றது பெண்ணிற்கு… அவர்கள் பேசியதைக் கேட்க முடியவில்லையே அவர்களுக்குப் பதில் கூற முடியவில்லை என்ற ஆதங்கம் மனதில் எழுந்தது. அந்த ஆதங்கம் மன அழுத்தமாக மாறி அவளை முழுவதும் தாக்குவதற்குள் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ஏகலைவன்.
தரையின் சிறு அதிர்வை கூட உள் வாங்கியவள் நிமிர்ந்து அறை கதவின் முன் நின்ற ஆடவனை அழுத்தமாகப் பார்த்தாள்…
மங்கையின் பார்வை இவனுக்கு கோபத்தை கொடுக்க “இது தான் சாக்குண்ணு உங்களை யூஸ் பண்ண வரல நான். கொஞ்ச நேரம் உங்களோட இருந்துட்டு நானே போயிடுவேன்…” என வெடுக்கென கூறிவிட்டு அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அந்த அறையை சுற்றிலும் பார்வையை படர விட்டான்.
ஒரு பக்க சுவர் முழுவதும் ஆரியின் குடும்ப புகைப்படம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது… ‘எப்படியான குடும்பத்தை இழந்து நிற்கிறாள் பெண்…’ என்ற எண்ணம் தன்னாலேயே எழ தரையில் மடங்கி அமர்ந்திருந்த ஆரியை பார்த்தான்.
கைகள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று கோர்த்தப்படி தன்னைத் தானே தேத்திக் கொண்டிருந்தவளின் தோற்றம் சற்றே ஆடவனை அசைத்துப் பார்த்தது.
அக்கணம் அணங்கியவளை இமைக்காதுப் பார்த்தான். கலையின் பார்வையை உணர்ந்தவள் கண்களை இறுக மூடித் திறந்து கலையை பார்த்தாள்.
“சிரிக்க மாட்டீங்களா? ஏன் எப்பவும் இப்படி இருக்கீங்க? யார் என்ன சொன்னாலும் ஒரு சிரிப்போட கடந்து போக வேண்டியது தானே இப்படியெல்லாம் கேட்டியே!… நான் இப்படியிருக்கும் போதே என்னை பல விதமா பேசறவங்க!.. நான் எல்லார்கிட்டயும் சகஜமா பேசனா இன்னும் எத்தனை சொல்லுவாங்க?…”
“….”
“சாதாரண பொம்பளைக்கு கீழே வேலை பாக்குறோன்னு யோசிக்கிற ஆட்கள் இன்னும் நம்ம ஊருல இருந்துட்டு தான் இருக்காங்க… அப்படி நினைக்கற ஆட்கள் பேசிக்கற விசயம் எவ்வளவு பெரிய பாதிப்பை கொடுக்குது தெரியுமா?…”
“…”
“இவங்களோட ஆல்ரெடி நிச்சியம் ஆனா ஆள் தானே இவன்?… ஆனா இவனுக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் ஆயிடுச்சே? மறுபடியும் இவங்களை பார்க்க வராங்கன்னா சும்மாவா வருவான்? இவருக்கு சொத்து அதிகம் டா அதான் கல்யாணம் பண்ணலைன்னாலும் கீ**ப்பா இருந்துக்கலான்னு முடிவு பண்ணிட்டாங்க நம்ம மேடம்… இப்ப புதுசா ஒருத்தன் வந்து இருக்கான் இவளோட அழகுக்கு எல்லா ஆம்பளையும் வளைச்சு போட்ருவா!.. இப்படி புரளி பேசறதுல நம்ம ஊரை பொறுத்த வரைக்கும் ஆம்பளை, பொம்பளைன்னு பாகுபாடே கிடையாது… ஈசியா ஒருத்தரை பிட்ச்சுன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க…”
“…”
“ஆமா எனக்கு யாரும் இல்லை தான். நான் தனியா தான் இருக்கேன். இப்போதைக்கு சொத்துன்னு சொல்லிக்க என் ஸ்கூலும், இந்த கன்ஸ்டிரக்ஷன் தான் இருக்கு. அதுக்காக சொத்து இருக்கிறவன் கூட எல்லாம் போயிடற ஆளா நான்.. என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது. என்னை இப்படியெல்லாம் சொல்ல என்ன ரைட்ஸ் இருக்கு இவங்களுக்கு?… இத்தனைக்கும் எல்லார் கிட்டயும் நான் தள்ளி தான் நிக்கிறேன்…ஆனாலும் என்னை விட்டு வைக்கலயே…”
“….”
“என் முகத்துக்கு முன்னாடி ஒரு மாதிரியும் எனக்கு பின்னாடி ஒரு மாதிரியும் பேசற ஆட்கள் கிட்ட நான் எப்படி நல்லா சிரிச்சு பேச முடியும். நான் இப்படி இருக்கவே சந்தி சிரிக்குது என் நிலைமை… இதுல எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசிட்டா என்ன ஆகும்?…” என்றவளின் பேச்சிற்கு துளி கூட பதில் பேசவில்லை ஏகலைவன். கைகளை கன்னத்தில் வைத்தபடி நுண்ணிடையாளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“அப்படியே அவங்க பேசினாலும் இதெல்லாம் எனக்கு பொருட்டே இல்லைன்னு தட்டிவிட்டு போயிட்டே இருப்பேன். ஆனால் அவங்க பேசற ஒரு விசயம் எந்தளவுக்கு இம்பேக்ட்டை கொடுக்குதுன்னு யாரும் யோசிக்கறது இல்லை. அதுதான் இன்னைக்கு அசோக் அம்மா இப்படி பேசற அளவுக்கு போயிருக்கு. நான் அவங்களை தப்பு சொல்லல… தப்பு சொல்லவும் முடியாது…”
“….”
“ஆனாலும் முப்பது வருசமா அவங்க பையன் கூட தானே இருக்காங்க, அவங்க பையன் மேல நம்பிக்கை இல்லையா? எப்படி ஈசியா அவங்க பையன்னு கூட பார்க்காம என்னையும் அவனையும் சேர்த்து வைச்சு அபத்தமா பேச முடியுது அவங்கனால? இவங்க என்னை பொண்ணு கேட்டு வரதுக்கு முன்னாடியே அசோக் என்னோட ஃப்ரெண்ட்டுன்னு இவங்களுக்கு தெரியும். அப்ப நாங்க பேசனது தப்பா தெரியாத இவங்களுக்கு இப்ப நாங்க பேசறது தப்பா தெரியுதா?…”
“….”
“முதல்ல என் கேரக்டரை ஜட்ஜ் பண்ண இவங்க யாரு? … என்னை பத்தி தப்பா பேச அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு. என்னை பார்த்தா அடுத்தவளோட எச்சிக்கு ஆசை படறது போல இருக்கா?…” எனக் கேட்டவளுக்கு அவளையும் மீறி குரல் கரகரத்தது.
தன்மானமும், கோபமும் போட்டி போட்டு நின்றது பெண்ணிற்கு… இந்த மூன்று வருடங்கள் சொந்தம், பந்தம் என்று அனைத்தையும் ஒதுக்கி விட்டு தன்னை தானே செதுக்கி நிமிர்வுடன் நிற்பவளுக்கு இன்றைய நேரடி தாக்குதல் சிறிது தடுமாற்றத்தை கொடுத்தது.
அந்த தடுமாற்றம் இவளை கலங்க செய்ய கீழ் இதழ்களை கடித்துத் தன்னை அடக்கி கொண்டாள். அதன் தாக்கம் தொண்டை அடைத்து ஒருபக்கம் வலியெடுத்தது… இறுகிய கைகளும், மெல்லியதாக நடுங்கும் இதழ்களும் அவளின் நிலையை சொல்லாமல் சொல்லியது.
ஆடவளின் நிலை கலைக்கு நன்றாகவே புரிந்தது… அருகிலிருந்த டேபிளை பார்த்தான் தண்ணீர் குவளை இருந்தது. அதனை எக்கி எடுத்தவன் மங்கையின் அருகில் சென்று அவளிடம் நீட்டினான். அதனை கையில் வாங்காமல் நிமிர்ந்து ஆடவனை பார்த்தாள். அவள் தன்னை பார்க்கவே காத்திருந்தவன் போல இமை மூடித் திறந்தவன் மங்கையின் கேசத்தைக் கோதி விட்டபடி அதில் அழுத்தம் கொடுத்தான்.
அந்த அழுத்தம் அவள் அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரை வெளிக் கொண்டு வந்தது. தாய், தந்தை இறப்பிற்குப் பிறகு வேறு எவரிடமும் தன் கண்ணீரைக் காட்ட விரும்பாதவள் முதன் முதலாக கலையின் முன் கண்ணீரைச் சிந்தினாள்… அழுகை என்றால் அப்படியொரு அழுகை சத்தமிட்டு அழவில்லை என்றாலும் மெளனமாய் கண்ணீர் வடித்தாள். அந்த மெளன கண்ணீர் நேரம் செல்ல செல்ல அதிகமானதே தவிர குறையவில்லை…
மங்கையின் மெளன கதறல் ஆடவனை முற்றிலும் தாக்கியது… சிலரின் அழுகை பார்த்துக் கொண்டிருக்கும் நம் கண்களையும் கலங்க செய்யும் அல்லவா அது தான் தற்போது கலைக்கும் நடந்தது..
அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது. அதனை உணர கூடிய நிலைமையில் தான் அவன் இல்லை… மனம் சொல்ல முடியா வேதனையில் ஆழ்ந்தது. மங்கையின் அழுகையை பார்க்க பார்க்க இவன் மனதளவில் தவித்தான்.
ஆடவனின் கரங்கள் இரண்டும் பெண்ணவளை ஆறுதலாக அணைக்க துடித்தது.அந்த கணம் சற்று முன் வீராப்பாக அவளிடம் கூறிய வார்த்தைகள் கண்முன்னே தோன்றி நக்கலடித்தது. தன் மனதின் கிண்டலுக்கு பதில் சொல்லாமல் தன் அடர்ந்த கேசத்தை அழுத்தி கோதியபடி அமர்ந்திருந்தவளை பார்த்தான்.
தற்போது அவளின் கண்கள் நிலத்தை நோக்கி படிந்திருந்தது… இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.இமைக்காமல் பெண்ணின் அழுகையை பார்த்தபடி நின்றான்.
அதே சமயம் அவன் கண்களில் சூழ்ந்த கண்ணீரும் கண்களை தாண்டி வெளியில் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் அல்ல பல நிமிடங்கள் கடந்து தான் கலை தன் கண்ணீரை உணர்ந்தான். கன்னத்தில் வழிந்த நீரை சுண்டி விட்டபடி
“ஆரி…” என மெல்ல அழைத்தான்.
அதற்கு அவள் நிமிர்ந்தால் தானே… பாவையின் அமைதியும் தன்னை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்த விதமும் ஆடவளின் நிலையை சொல்லாமல் சொல்ல “ஸ்…” என கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே ஆரிக்கு பக்கவாட்டில் நின்றவன் அவளுக்கு முன் நின்றான்.
கலையின் பாதம் தன் முன் நிற்பதை கவனித்தவள் சட்டென நிமிர்ந்து பார்த்தாள். உதடு துடிக்க, முகம் முழுவதும் சிவந்து, கண்களில் தேங்கிய நீருடன் அமர்ந்திருந்தவளை அழுத்தமாக பார்த்தவன் “போகலாமா…” என்றான்.
நிமிடம் ஆடவனின் இதழ் அசைவுகள் புரியாது விழித்தவள் அது புரிந்ததும்
“எங்க…” என்பதை போல் பார்த்தாள்.
மங்கையின் பார்வைக்கு பதில் கூறாமல் தன் வலது கரத்தை அவளின் முன் நீட்டினான். கலையின் கையை பற்றிக் கொள்ளாமல் அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் பார்த்தாள் ஆர்யா.
ஆரியின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தானே தவிர நீட்டிய கரத்தை மடக்கவில்லை… ‘கோவில்ல இருந்தவளை எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். இப்ப எதுக்கு மறுபடியும் அவளை எழுப்பனும்…’ என கேலி செய்த மனதிற்கு பதில் சொல்ல தயாராக இல்லை ஏகலைவன்.
நிமிடம் மறவோனை இமைக்காது பார்த்தவள் இமைகளை இறுக மூடித் திறந்து தன் முன் மிதந்த கையின் மேல் தன் கை வைத்தாள். அந்த கணம் மங்கையின் கையை இறுக பற்றி கொண்டான் இனி விட மாட்டேன் என்பது போல…
கலையின் கைகள் கொடுத்த அழுத்தத்தில் விழிகளை விரித்து ஆடவனை பார்த்தாள். பெண்ணின் விழி விரிப்பில் தன் விழிகளை பொருத்திக் கொண்டான் ஆடவன். நிமிடம் இருவரின் பார்வையும் ஒன்றையொன்று முட்டி மோதித் தழுவிக் கொண்டது இறுக்கமாக…
கலையின் கைகள் கொடுத்த அழுத்தமா? இல்லை அவன் விழிகளின் மொழியா? ஏதோ ஒன்று அந்த நிமிடம் அவளின் அழுகையை குறைத்திருந்தது. ஆரி எழ உதவி செய்தவன் “போலாம்…” என்றான் அறைகதவை பார்த்து..
ஆரி ஒன்றும் பேசாமல் கலையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பாவையின் அமைதியில் திரும்பிப் பார்த்தவன் “என்ன…” என்பதை போல் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
அவனை போலவே புருவத்தை உயர்த்தி இறுக்கமாக அவன் கைகளுக்குள் புதைத்திருந்த கையை காட்டினாள் ஆரி. ‘இதுக்கென்ன இப்ப…’ என்பதை போல் பார்த்தான்.
ஆர்யா நினைத்திருந்தால் ஆடவனின் கையை உதறி தள்ளியிருக்க முடியும் தான் ஏனோ அதை செய்ய மனம் வராமல் ‘ஒன்றுமில்லை…’ என்று தலையாட்டினாள்.
“ம்ம்…” என்றபடி மங்கையின் முகத்தை பார்த்தான். காலையில் பார்த்ததை விட சோர்ந்து இருந்தது.
“ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க…”என கூறினான். ஆடவனையே இமைக்காது பார்த்திருந்ததாலோ என்னவோ கலை கூறியது உடனே புரிந்தது… ஆனால் என்ன கலையை விட்டு நகராமல் அப்படியே நின்றாள்.
“என்னங்க, போங்க ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க…” மீண்டும் கூறினான். அவளிடம் அசைவில்லை சிவந்த கண்களுடன் கலையை தான் பார்த்தாள்.
பாவையின் பார்வையில் ஏனோ வெட்கம் வந்து தொலைத்தது கலைக்கு… கீழ் இதழ்களை கடித்து கேசத்தை கோதிக் கொடுக்க கைகள் பரபரக்க தூக்கும் சமயம் தான் அவளின் கைகளை தன் கைகளுக்குள் வைத்திருப்பது புரிந்தது.
அவளின் பார்வைக்கு அர்த்தம் தற்போது புரிய ‘அடேய் அவ உன்னை ஆசையா பார்க்கல டா!… கை விடு டா பரதேசி ரேஞ்சுக்கு பார்த்து இருக்கா…’ எனக் கூறி மனம் சத்தமிட்டு சிரித்தது. அதனை மானசீகமாக அடக்
கிவிட்டு ஆரியிடம் அசட்டு சிரிப்பை உதிர்த்தவன் பட்டென கைகளை விட்டான். அவனை அழுத்தமாக பார்த்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.