ஆரியின் பேச்சில் உறந்தே விட்டான் ஏகலைவன். நிமிடம் எப்படி எதிர்வினையாற்றுவதென்றே தெரியவில்லை அவனுக்கு. உன்னிடம் என் தாய், தந்தையின் அன்பை எதிர் பார்த்தேன் எனக் கூறியிருந்தால் நிச்சியம் இது காதல் இல்லை என்றிருப்பான். ஆனால் அவளோ உன்னிடம் என் தாய், தந்தையின் அன்பை உணர்ந்தேன் என்றல்லவா கூறுகிறாள். அக்கணம் எதைப்பற்றியும் யோசிக்காது சட்டென வாகனத்தை நிறுத்தியவன் மங்கையை தன் கையணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.
அவன் வாகனத்தை நிறுத்தியதும் “என்னா…ச்சு…” என்ற ஆரியின் கேள்விக் கூட கலையின் அணைப்பில் நின்று தான் போனது.
மங்கையின் பேச்சு காதில் ரீங்காரம் போல் கேட்டுக் கொண்டே இருக்க அவனின் அணைப்பை இன்னும் இறுக்கினான்.நொடிக்கு நொடி கலையின் அணைப்பில் இறுக்கம் கூடிக் கொண்டேப் போனது. உடல் முழுவதும் அதிர்ந்தது ஆடவனுக்கு. கண்கள் இரண்டும் கலங்கி, இதழ்கள் துடித்தன..
ஆரி பேச பேச எத்தனை உணர்வுகளைக் கடந்து வந்தான் என்பது அவன் மட்டுமே அறிவான். முதலில் தவிக்க வைத்து, பின் வலிக்க வைத்த பின் மொத்தமாய் அவளது காதலில் விழ வைத்திருக்கிறாள்.
உண்மையில் அவளை போல் அவனில்லை… முதலில் காரிகையின் அழகைத் தான் ரசித்தான். அந்த இரசிப்பு எப்பொழுது காதலாகி நின்றதோ அப்போதிலிருந்து அவளிடம் காதலை மட்டுமே யாசித்தான்… வெறும் காதலியாக மட்டுமே ஆரியை நினைத்தான். ஆனால் அவளோ என் மொத்தமும் நீ தான் என்றதில் வார்த்தையே வரவில்லை கலைக்கு…
‘நான் உன்னை காதலிக்கிறேன்…’ என்றாலே மொத்த பாசத்தையும் பெண்ணின் மீது கொட்டித் தீர்த்து விடுவான்.
தற்பொழுது ‘நீ தான் எல்லாமும்…’ என்றால் சொல்லவா வேண்டும். பூவையை தனக்குள் பொத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியே வந்தது.
இங்கு ஆரியோ கலையின் பின்னங் கேசத்தைக் கோதி விட்டபடி
“ஏகலைவன்…” என்றழைத்தாள். பதில் இல்லை அவனிடத்தில்…
மெளனமாக தன்னை இறுக்கி அணைத்துக் கொண்டிருப்பவனை பதற வைக்க ஆசை வந்ததோ அவளுக்கும்… “மிஸ்டர் ஏகலைவன் நடு ரோட்டுல வண்டியை நிறுத்தி இருக்கீங்க..” சற்றே பதட்டக் குரலில் கூறினாள்.
ஆரியின் பதட்டக் குரலில் சட்டென அவளை விட்டு பிரிந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவள் கூறியது போல நடு ரோட்டில் எல்லாம் வாகனம் நிற்கவில்லை ஓரமாக தான் நின்றிருந்தது.
“ஹப்பா…” என்று நெஞ்சில் கை வைத்தவன் பக்க வாட்டில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.
அவளோ கலையின் செய்கையில் குபீரென்று கிளம்பிய சிரிப்பை அடக்கியப்படி அமர்ந்திருந்தாள். “சிரிச்சிடுங்க…” என்றவனுக்கும் சிரிப்பு தான் வந்தது.
பின்னந்தலையைக் கேசத்தை கோதிக் கொண்டே குனிந்து சிரித்தவன் மனமே “இருக்கிற கொஞ்ச நஞ்ச மானமும் போச்சா…” என்று கேலி செய்தது.
அதனை தலையில் தட்டி அடக்கியவன் ஆரியிடம்
“போலாமா..” எனக் கேட்டான். “ம்ம்…” என்றாள் அவளும்.
அடுத்த சில நிமிடங்கள் மெளனமாகவே கழிந்தது. ‘ என்ன அமைதியா வரா…’ எனத் திரும்பி ஆரியை பார்த்தான்.
அவளோ தூங்கி வழிந்தப்படி அமர்ந்திருந்தாள். பின் சிட்டிலிருந்த குஷோனை எடுத்துக் கொடுக்க அவனைப் பார்த்து புன்னகத்தாள். அதேப் புன்னகையோடு உறங்கியும் போனாள். பல நாட்களாக உறங்காதவள் போலிருந்தது அவளது உறக்கம்…
ஒரு வகையில் அதுவும் உண்மை தான்.. தாய், தந்தை, தம்பியென அனைவரையும் இழந்து, கேட்கும் திறனையும் இழந்தவளுக்கு உறக்கம் என்பது எட்டாக் கனி தான்… பகல் பொழுதை சுலபமாக கடந்து விடுபவளுக்கு இரவை கடக்க தான் சிரமமாக இருக்கும். பல நாட்கள் உறங்காமல் விழித்து கிடந்ததும் உண்டு…இதோ கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தின் நினைவில் உறக்கம் இல்லாமல் தவித்தாள். அந்த தவிப்பும், துடிப்பும், அவர்களுக்கான ஏக்கமும் காய்ச்சலைக் கொடுத்திருந்தது.
அதனுடனே தான் அலுவலகத்திற்கும் வந்திருந்தாள். கலையை பார்த்ததாலோ இல்லை அவனது அணைப்பில் இருந்தாலோ என்னவோ அடுத்த அரைமணி நேரத்தில் காய்ச்சல் முற்றிலும் குறைந்திருந்தது. இப்பொழுது கூட கலையின் அருகாமையில் தான் அவளுக்கு உறக்காமே வந்தது.
****
அடுத்த இரண்டு மணி நேரத்தில் கோபியில் இருந்தனர் இருவரும். கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தான்.
எழுப்ப மனமில்லாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். நிமிடங்கள் கடந்தும் அவள் எழாமல் போகவும் மங்கையின் கன்னத்தில் கை வைத்தான். மெத்து மெத்தென்று இருந்தது அவளது கன்னம். விரல்கள் புதைந்த இடத்தில் அவனது இதழ்களை பதிக்க நினைத்தான்.
“அடேய்..” அலறியது அவன் மனம்.
‘இதுக்கு முன்னாடி அவளை நான் கிஸ் பண்ணாத மாதிரி கத்தாத…” பதட்டமான குரலில் மனதை அதட்டியவன் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நின்றான்.
“இப்படி மொத்தமா லவ்வை காட்டுனா என் ஹார்ட் இன்னும் இன்னும் வீக் ஆகும் டி சவுண்டு…” போர்டிகோ வரையிலும் தியாகுவின் குரல் கேட்டது. மெல்லிய புன்னகை அவனது இதழ்களில்.
உறங்கி கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்தவனின் கண்கள் மங்கையின் கன்னத்தில் பதிந்து மீண்டு ரோஜா நிற இதழ்களில் பதிந்தது.
‘கொன்றுவேன்…’ என மிரட்டிய மனதின் தலையிலேயே தட்டி விட்டு வீட்டினுள் நுழைந்தான்.
“ப்பா…” என்றழைத்தபடியே உள்ளே சென்றான். கலையின் குரலில் குடித்துக் கொண்டிருந்த ஜூஸை மனைவியிடம் கொடுத்து விட்டு மகன் வரும் திசையை பார்த்தார் தியாகு.
அவரின் பார்வையில் தெரிந்த கனிவு சௌந்தர்யாவிடம் துளியும் இல்லை… தாயின் முறைப்பில் ‘ என்னாச்சு ப்பா…’ என்பதை போல் தாயை கண் காட்டினான்.
அவனது பார்வை பரிமாற்றத்தை சௌந்தர்யாவும் கண்டுவிட “இப்ப தான் கொஞ்சி, கெஞ்சி ஒரு ஜூஸை குடிக்க வைச்சேன். அப்பான்னு நீ வந்ததும் இதுதான் சாக்குண்ணு ஜூஸை பாதியோட குடுத்துட்டார்…” முறைப்போடுக் கூறினார் சௌந்தர்யா. வந்ததை மறந்து தாயின் இந்த அவதாரத்தில் அப்படியே நின்று விட்டான் கலை.
மகனின் திகைத்த பார்வையில் “காலையில எழுந்ததிலிருந்து உங்கம்மாக்கு லவ் ஓவர் ப்லோ ஆயிட்டிருக்கு. இன்னுமொரு நாலு நாளைக்கு இப்படி தான் இருப்பா. அப்பறம் சரியாகிடுவா…” தியாகு கூறியதும் நேரடியாக கணவரை முறைத்தார் சௌந்தர்யா.
மனைவியின் முறைப்பில் “சும்மா மா…” என்றவர் மகனிடம் “இந்த நேரத்தில வீட்டுக்கு வந்திருக்க தம்பி, முக்கியமான ஃபைல் எதாவது விட்டுட்டு போயிட்டியா?…”கேட்கவும் தான் வெளியில் இருப்பவள் நினைவு வந்தாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லைங் ப்பா, அது அவங்க, இல்லை ஆரா, இல்லை உங்க மருமகளை கூட்டிட்டு வந்திருக்கேன்…” என்றதும் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனைவியை பார்த்தார் தியாகு. சௌந்தர்யாவின் பார்வையும் கணவரின் மீதுதான் விழுந்தது.
“வீட்டுக்குள்ள கூட்டிட்டு வர வேண்டியது தானே தம்பி …” எனக் கேட்டவர் மனைவியிடம் திரும்பி “கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான் நினைக்கிறேன் டி… எதுக்கும் ஆராத்தி கரைச்சு எடுத்துட்டு வராயா?..” என தியாகு சொல்ல, பதறியவனாய் தாயை பார்த்தான் கலை. அவரோ ‘அப்படியா..’ என்பதை போல் பார்த்தார்.
“ஐயோ இல்லைங் மா, அவங்க தூங்கிட்டு இருக்காங்க. எழுப்ப மனசில்லை…” என்றவன் மனமோ “பொய் பொய், அவங்கல கிஸ் பண்ண போயி…” கலையின் மனம் பேச பேசவே அதனது தலையிலே தட்டி அடக்கியவன் தாய்,தந்தையை அவஸ்தையாக பார்த்தான்.
மகனது பார்வையில் சிரித்த சௌந்தர்யாவோ “போ.. போயி கூட்டிட்டு வா பிள்ளையை, கார்லையே தூங்கிட்டு இருன்னு வந்திருக்கியா…”என்றார் அதட்டும் குரலில். அவசரமாக சரியென்று தலையாட்டியவன் காரை நோக்கி நடந்தான்.
****
அது ஓர் அழகிய பூஞ்சோலை. ஊதா நிற பூக்களும் வெள்ளை நிற பூக்களும் மட்டுமே நிறைந்தது… மனதிற்கு பிடித்த நிறத்தில் அங்கிருந்த பூக்களைக் கண்டதும் குழந்தை போல் மனம் துள்ள அந்த வயல் வெளியில் ஓடினாள் பெண்…
“குட்டிமா பாத்து போ…” என்ற தந்தையின் குரலும் “ஆரி விழுந்திட போற…” என்ற தாயின் குரலும் அதனுடனே “அம்மா நானும், அக்காவோட போறேன்…” என்ற சகோதரனின் குரலும் கேட்டது அவளுக்கு… மூவரின் குரலும் மாறி மாறிக் கேட்க வெகுதூரம் சென்ற பின்னே திரும்பி பார்த்தாள். வெண்ணிற பூக்களுக்கு நடுவில் மூவரும் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“அப்பா,அம்மா,வாங்க… டேய் எருமை வாடா…” என அங்கிருந்தபடியே கத்த
அவளை பார்த்து சிரித்தவர்கள் பின்னால் திரும்பி பார்த்தனர்…
அவர்களுக்கு பின்னால் ஒருவன் வந்துக் கொண்டிருந்தான். அவன் நெருங்க நெருங்க அவனது முகம் நன்றாகவே தெரிந்தது. அலையலையான கேசத்தை கோதிக் கொண்டே முகம் முழுக்க புன்னகையோடு இவளை நோக்கி வந்து கொண்டிருந்தது வேறு எவருமில்லை அவளின் கலைவாணன் தான். சட்டென உறக்கம் கலைந்தது விழிகளை மலர்த்தினாள். கண்களுக்குள் விழுந்தான் ஏகலைவன்.
கனவில் வந்தது போலவே அவனது அடர்ந்த கேஷத்தை க்கோதியப்படி முகம் முழுக்க புன்னகையோடு வந்து கொண்டிருந்தான். அவனது புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது.
“அது நீங்க தூங்கிட்டு இருந்தீங்களா, எழுப்ப மனசில்லை, அண்ட் அப்பா பேசற சத்தம் கேட்கவும் உள்ள போயி ஒரு அட்டானஸ் போட்டுட்டு வந்தேன்…” தயங்கியப்படி கூறியவனிடம் சரியென்று தலையாட்டினாள்.
அக்கணம் ‘ உன் கன்னத்துல கிஸ் பண்ண வந்தேன். என் மனசாட்சி திட்டவும் இறங்கி ஓடிட்டேன்னு உண்மையை சொல்லேன் டா…’ மீண்டும் என்ட்ரி கொடுத்த மனதிடம்
‘இப்ப நீ அமைதியா இருக்கலன்னு வையேன்…” என்று அதட்டினான். ‘உண்மை தானே டா சொன்னேன்..’ என்றுவிட்டு அப்போதைக்கு அங்கிருந்து கிளம்பியது அவனது மனம்.
“ஏகலைவன்…” என்றவளின் குரலில் தன்னிலைக்கு வந்தவன்
“போலாமா…”என்று கேட்டது மட்டுமல்லாமல் ஆரியின் கைப்பிடித்தே வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
உள்ளே நுழைந்த இளையவர்களை கண்டதும் பெரியவர்கள் இருவரும் எழுந்து நின்றனர்…
“நம்மளை விடவா…” மனைவியின் உயரத்திற்கு குனிந்து கேட்டார்.
பக்கவாட்டில் நின்றிருந்தவரை நிமிர்ந்து பார்த்தவர் இதழ்களை சுழித்து “விட்டுட்டு போனவரெல்லாம் இதை சொல்லவே கூடாது…” என்றார்.
“விட்டுட்டு போனாலும் ஆறு மாசத்துல திரும்பி வந்துட்டேன் டி, அப்படி வந்தவனை வேண்டாம்னு சொன்னது நீ தான்…” நியாயம் பேசியவரை முறைத்தார் சௌந்தர்யா.
“திரும்பி வந்தாலும் விட்டுட்டு போனது போனது தானே, அதான் நீயும் வேண்டாம் உன் அக்கறையும் வேண்டாம் போயான்னு சொல்லிட்டேன்…” என்றார் விடாமல். அதற்கு தியாகு பதில் சொல்லும் முன்பே ஆரியும், கலையும் வந்திருந்தனர்.
ஆரியை வரவேற்கும் விதமாக அணைத்து விடுவித்தார் சௌந்தர்யா… தியாகுவும் ஆரியின் தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தார்..
அவரைப் பார்த்து புன்னகை பூத்தவள் “எப்படி இருக்கீங்க அங்கிள்… சாரி அங்கிள் என்னால ஹாஸ்பிடல் வந்து பார்க்க முடியாம போயிடுச்சு…” வருத்தமாக கூறினாள்.
“பரவாயில்ல மா… அங்க ஏதோ பிராப்ளம் போகுதுன்னு மாப்பிள்ளை சொன்னாரு, எல்லாம் ஓகேயா மா…” எனக் கேட்டார் தியாகு…
“ம்மா, ஜுஸ் எல்லாம் அவங்களுக்கு வேண்டாம்… வரும் போது செம்ம காய்ச்சல் அவங்களுக்கு…” பதட்டமாக கூறியது மட்டுமல்லாமல் சௌந்தர்யா கொண்டு வந்த ஜூஸை அவசரமாக வாங்கிக் கொண்டான் ஏகலைவன்.
“காய்ச்சலா இருக்கிற பிள்ளையை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தியா…” பிரின்ஸ்பல் டோனில் அதட்டியவர் ஆரியிடம்
“காய்ச்சல் பரவாயில்லயா மா…” எனக் கேட்டார். “ம்ம்…” என்றவளின் பார்வை ஏகலைவனிடத்தில்
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறீங்களா…” எனக் கேட்டான். வேண்டாம் என்று மறுத்தவள் பெரியவர்களிடமே அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க சென்றிருந்த மேகலையும் இவர்களோடு இணைந்து கொண்டாள்.