அந்த பெரிய வீடு முழுவதும் மின்மினிப் பூச்சி அளவிலான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த இரவிலும் ஜெகஜோதியாக சொந்தபந்தங்கள் சூழ திரளாக இருந்தது அந்த பெரிய வீடு.
பார்த்ததுமே கல்யாண வீடு என்று சொல்லும் படியாக நடு முற்றதில் அமைக்கப்பட்ட மணமேடையும் அதனை சுற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
நடுகூடத்தில் இருந்து மேல் தளம் செல்வதற்கான படிக்கட்டும் இருந்தது.
மேல் தளத்திற்கு செல்லும் படிகளில் தனது கலடி சத்தம் கேட்க மேலேறி கொண்டிருந்தான் ஏகலைவன்.
அதே சமயம் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு வேகமாக இறங்கி கொண்டிருந்தான் காசிநாதன். காசியின் பார்வை முழுவதும் அவசரமாக வந்து கொண்டிருந்தவன் மீது தான் விழுந்தது.
“இவ்வளவு அவசரமாக எங்க போறே நீ? நல்லநேரம் ஸ்டார்ட் ஆயிட்டா முதல்ல உன்னை தான் கூப்பிடுவாங்க…” திருமண வேலைகளுக்கு நடுவே அவசரக் குரலில் கேட்டான்.
அதே அவசரக் குரலில்”அவங்களை பார்த்திட்டு வந்துடறேனுங் மாமா…” என்று விட்டு வேகமாக மேலேறினான் ஏகலைவன்.
“சரி சரி சீக்கிரமாக வந்துடு…” எனக் காசி கூறியது கூட காற்றோடு காற்றாக தான் கலந்தது..
மூச்சு வாங்க மேலேறியவன் ஆரியின் அறைக்கதவை நோக்கி நடந்தான். அவளது அறையை நெருங்க நெருங்க இதயம் மத்தளம் வாசித்தது. இருவருக்கும் நிச்சியம் முடிந்து இன்றோடு நான்கு வாரங்கள் கடந்திருந்தது. நிச்சியத்தினத்தில் ஆரியை சந்தித்து பேசியவன் அதற்கு பின்னான நாட்கள் பாவையிடம் அண்டவேயில்லை. அலைபேசியில் கூட ஓரிரு வார்த்தைகளைத் தவிர அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
கல்யாண வேலைகள் அனைத்தும் இரு வீட்டாருக்கும் சேர்த்து இவன் பார்க்க வேண்டிய சூழ்நிலை. என்னதான் பெண் வீட்டு சார்பாக வேலுவும்,காசியும் நிற்கிறார்கள் என்றாலும் என் மனைவியாக வருக்கிறவளுக்கு நானே அனைத்தும் செய்கிறேன் என்று விட்டான்.
அதன்படி அனைத்தும் கலையே பார்த்துக் கொண்டான். இதோ நான்கு வாரங்கள் முடிந்து நாளை திருமணத்தில் வந்து நின்றது இவர்களது காதல் பயணம்.. உண்மையில் இன்று தான் ஏகலைவனுக்கும் ஒய்வு என்பதே கிடைத்தது. அதுவும் சடங்கு, சம்பிரதாயங்கள் என்று மாலை வரை இழுத்து விட்டார்கள் அவன் வீட்டார்கள். இரவு ரிசப்ஷனுக்கு தயாராகி வந்தவன் நேராக ஆரியை பார்க்க அவளது அறைக்கே வந்துவிட்டான்.
மணபெண்ணின் அறையில் வேறு யாராவது இருப்பார்களோ என்ற பதட்டம் வேறு வந்தது. இருந்தாலும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் படபடக்கும் இதயத்தோடு அறைக்கதவைத் தட்டினான்.
“ஹான்… உள்ள வாங்க…” என்ற ஆரீயின் குரல் மட்டுமே கேட்டது. அறைக்குள் அவள் மட்டுமே இருக்கிறாள் என்ற நிம்மதி பெருமூச்சுடன் கதவைத் திறந்து கொண்டு அறையினுள் நுழைந்தான்.
ஆள் உயர்க் கண்ணாடியின் முன் நின்ற பெண்ணை கண்டதும் விழிகள் இரண்டும் தன்னிச்சையாக விரிந்து கொண்டது.
கீழிருந்து மேலாக பெண்ணை பார்த்தான். அனிச்சம் பூ பாதமும், அப்பாதத்தை அலங்கரித்த தங்க நிற கொலுசும் அவனது கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
இன்னும் கொஞ்சம் கண்களை மேலேற்றினான் இளம் சிவப்பு நிறத்திலான லெஹங்காவை பிடித்திருந்த வெண்டை விரல்களில் பதிந்தது அவனது பார்வை.
நான்கு வாரங்களுக்கு முன்பு அவன் அணிவித்த மோதிரம் அரசியாய் வீற்றிருந்தது. மோதிரத்தை பார்த்ததுமே மெல்லிய புன்னகை அவனிடத்தில். இருவரின் கைவிரல் ரேகையை இணைத்து இதய வடிவ டிசைன் வைத்து மோதிரத்தை வடிவமைத்து இருந்தனர்…
நிமிடம் மோதிரத்தில் பார்வையை நிலைக்க விட்டவன் மேலும் முன்னேறினான். தற்பொழுது தரிசனமாயிற்று அவளது சிற்றிடை…
” ஓய்…” மனம் பலமாய் அதட்டல் போட்டது, சட்டென பார்வையை மேலேற்றினான். மூச்சே நின்று போனது அவனுக்கு “அடேய்…” மனம் பெரியதாக அதட்டிய போதும் அவன் மூச்சை உள்ளிழுத்து நிற்பது போல் நின்றான்.
மெல்லிய நூலாடை போன்ற முந்தானை அவளது அங்கலாவன்யாங்களை மறைத்திருந்தது. இருந்தும்?… இருந்தும்??
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி…
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி…
வைரமுத்துவின் வரிகள் வேறு நினைவில் வந்து இம்சை செய்ய சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான். பின்னந்தலை கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே கீழ் இதழ்களை கடித்தப்படி பெண்ணின் முகத்தை பார்த்தான்.
அஞ்சனம் தீட்டிய அவளது விழிகள் இவனை தான் எரித்துக் கொண்டிருந்தது. காந்தையின் தீ பார்வையில் அவன் உள்ளிழுத்த மூச்சு காற்று தன்னாலேயே வெளி வந்தது. தன் விழிகள் பயணித்த பாதையை அவளும் கண்டு கொண்டாள் என்பது பெண்ணின் பார்வையே கூறியது.
கீழ் இதழ்களை கடித்து, கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவனால் அவனது உணர்வுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை… காரிகையின் பார்வைக்கு பதில் மொழி பேசாமல் ஆரியை நெருங்கினான்.
மங்கையின் செவியோரத்தில் இதழ்கள் உரச “அழகு மின்னுதுங்க, மொத்தமா கொல்றீங்க…” ரசனையாய் ரகசிய குரலில் கூறினான்.
சாதாரண குரலில் கூறியிருந்தாலே அவன் மீதிருந்த கோபம் மொத்தமாக காணாது போயிருக்கும். இதில் ரகசிய குரலில் பேசினால் சொல்லவா வேண்டும்? சில்லு சில்லாக சிதறி தான் போனது இத்தனை நாட்களாக அவன் மீதிருந்த கோபம்.
சொல்லப்போனால் திருமண வேலைகளில் அதிகம் அவள் ஈடுபடவே இல்லை… முக்கிய நிகழ்கவுகளுக்கு மட்டுமே ஆரியா சென்றாள் மற்ற அனைத்துமே கலை தான் பார்த்து கொண்டான். அவனது வேலைப் பளு தெரிந்தும் கோபமாக இருப்பது அவளுக்கே சிறு பிள்ளை தனமாக தான் தெரிய, அதிகம் அவனிடம் கோபப்பட முடியவில்லை.
அவனது சூடானா மூச்சுக் காற்றின் தீண்டலில் தன் நினைவிலிருந்து வெளிவந்தவள் அவனை சீண்ட நினைத்தாலோ என்னவோ “சந்தூர் (sandoor) சோப் தான்…” என்றாள்.
இத்தனை நேரம் உணர்ச்சி தத்தளிப்பில் மிதந்து கொண்டிருந்தவன் சட்டென கேட்ட அவளது குரலில் அனைத்தும் அறுபட திருத்திருவென விழித்தான். முதலில் பாவை என்னக் கூறினாள் என்றே தெரியா நிலை அவனுக்கு… அது புரிந்ததும் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே பெண்ணை ஓரப் பார்வையில் பார்த்தான்.
அவனது பார்வையில் சிரிக்க துடித்த இதழ்களை அழுத்தி கடித்தப்படி ‘என்ன’என்பதை போல் புருவத்தை உயர்த்தி கேட்டாள்.
அவளது பாவனையில் சொக்கி போனவனாய் “இப்படியெல்லாம் பண்ணாதீங்க, கிஸ் பண்ண தோணுது…” என்றவன் பற்களுக்கு இடையே சிக்கி தவித்த இதழ்களை விடுவித்தது மட்டுமல்லாமல் பெண்ணின் செம்பருத்தி இதழ்களை தன் இதழ்களுக்கு அதக்கி கொண்டான் வேகமாக. ஒரு மாத இடைவெளியை இன்றே குறைத்து விடுபவன் போலிருந்தது அவனது வேகமும், செயலும்…
அவனது மீசை சூழ்ந்த அதரங்கள் பெண்ணின் அதரங்களை ஆக்கிரமித்து கொண்டதில் சர்வமும் அடங்கியது ஆரியாவிற்கு. மொத்தமாக துவண்டு விடுவது போலிருந்தது அவளுக்கு.
மாயோளது நிலை அவனுக்கு புரிந்ததோ என்னவோ மங்கையின் சிற்றிடையை அழுத்தி பிடித்தப்படி அவளது அதரங்களை இன்னும் இன்னும் தன் இதழ்களுக்குள் இழுத்துக் கொண்டான்.
கொஞ்சம் விட்டு, கொஞ்சம் சுவைத்து, கொஞ்சம் விட்டு, கொஞ்சம் சுவைத்து என்று திகட்ட திகட்ட இதழ் தேனைப் பருகி கொண்டிருந்தான் ஆரியின் காதல் கள்வன்.
ஆடவன் இதழ் சுவை அவளுக்கும் பிடித்தது போல கண்களை மூடி அவனுள் கிறங்கி நின்ற வேலை… மெல்ல அவளை நடப்பிற்கு கொண்டு வந்தது வெளியில் கேட்ட காசியின் குரல்.
“ம்ம்…” சிணுங்கி அவனை விட்டு விலக முயற்சித்தவளை இடையோடு அழுத்தி பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளது கழுத்தில் முகம் புதைத்தான். அவளது வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தவன் இதழ்கள் என்னவோ அங்கேயும் தன் பணியை செய்வன செய்ய விதிர்விதிர்த்து போனாள் பெண்.
“ஏங்க, காசி கூப்பிடற சத்தம் கேட்குது…” நாலே நாலு வார்த்தைகளை சேர்த்து சொல்லவே போதும் பொதுமென்றாகி விட்டது நுண்ணிடையாளுக்கு.
கழுத்து வளைவில் குட்டி குட்டி முத்தங்களால் காந்தையை கிறங்க வைத்துக் கொண்டிருந்தவனை மீண்டுமொருமுறை சத்தமாக அழைக்க நினைத்தாள். ஆனால் அது சிணுங்களாக தான் ஒலித்தது…இது சரி வராது என நினைத்தவள் ஓங்கி அவனது காலை மிதித்தாள்.
“அவுச்… ராட்சசி என்னடி…” என்றான் நுண்ணிடையாளை விலக்கி விட்டபடி கதவை கண் காட்டினாள். மீண்டுமொருமுறை காசியின் குரல் கேட்டது.
“கரடி…” என்று பல்லைக் கடித்தவன் பெண்ணைப் பார்த்தான். ஆரியோ சிரிப்பை அடக்கியப்படி நின்றாள்.
அவளது சிரிப்பை பார்த்தபடி நின்றவனின் கண்களுக்கு அப்போது தான் காந்தையின் கழுத்து வளைவில் கீற்று போலிருந்த திருநீர் கண்ணில் பட்டது. கூச்சம் நெட்டித் தள்ள பின்னங்கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே பூவையை நெருங்கினான். அவளோ ஈரெட்டு பின்னால் எடுத்து வைத்தபடி கலையை முறைத்தாள்.
அவளது முறைப்பில் “இல்லை அங்க…” கழுத்தை காட்டினான்.
“என்ன அங்க…” என்றவள் சட்டென திரும்பி கண்ணாடியை பார்த்தாள். கழுத்து வளைவில் அவனது திருநீர் பந்தமாய் வீற்று இருந்தது…
நெஞ்சம் பலமாய் அடித்துக் கொள்ள ஆடவனைப் பார்க்காது அதை கைகளால் துடைக்க போனவளிடம் தனது கைக்குட்டயை நீட்டிட, அதனை வாங்கியவள் திருநீரை துடைத்தப்படி கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்தாள்.
அவனுமே கண்ணடி வழியே ஆரியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் விழிகளும் முட்டி மோதி முத்தமிட்டு கொண்டிருந்த வேளை மீண்டும் காசியின் அழைப்பு கேட்டது. அதற்கு மேல் நின்றால் அறைக்குள் வந்தாலும் வந்து விடுவான் என நினைத்
தவன் அவளிடம் வாங்க என்பதைப் போல் கண் காட்டிவிட்டு அறையில் இருந்து வெளியேறினான்.