கோவையிலுள்ள பிரபல ஈ.என்.டி மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தனர் கலையும், ஆரியும்.
ஆம் ஆரியின் குடும்ப மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக தனது செவிகளைப் பரிசோதிக்க வரும் அதே மருத்துவமனைக்கு தான் இன்று கலையுடன் வந்திருந்தாள் ஆரியா ரெங்கநாயகி.
காத்திருந்த சில நிமிடங்களிலேயே ஆரியையும், கலையும் மருத்துவரின் அறைக்குள் அழைக்க இருவரும் உள்ளே நுழைந்தனர்.
ஆரியைக் கண்டதும் முகம் முழுக்கப் புன்னகையோடு “ஆரியா… வாமா வா… எப்படி இருக்க?…” என்று கேட்டவர் அவருக்கு முன்னிருந்த நாற்காலியைக் கைக் காட்டினார்.
“நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க?…” எனக் கேட்டப்படி அவர் கைக்காட்டிய நாற்காலியில் அமர்ந்தாள். மடவோளைத் தொடர்ந்து கலையும் அமர்ந்தான்.
இருவரையும் மாறி மாறி பார்த்த மருத்துவருக்கு ஏதோ புரிவதுப் போல் இருந்தது.கேள்வியாக ஆரியைப் பார்த்தார்.
அவரின் பார்வைக்கு பதில் பார்வைப் பார்த்தபடி “அவர் தான் சார்…” என்றாள் இதழ்களில் மலர்ந்த சிறு புன்னகையோடு.
ஆரியின் பேச்சில் முகம் முழுக்க புன்னகையோடு “ரொம்ப சந்தோசம் மா…” என்றவர் தனது வாழ்த்தைக் கூறிட, இருவரும் புன்னகையோடு அதனை ஏற்றுக் கொண்டனர்.
“கடைசி வரைக்கும் நீ இப்பிடியே இருந்துடுவீயோன்னு கவலையா இருந்தது மா. இப்ப நீ எடுத்து இருக்கிற முடிவை மகேந்திரன் சார்க்கிட்ட சொன்னா அவரும் சந்தோசப்படுவாரு…” என்றார். அதற்கு பதில் பேசாதுப் புன்னகைத்தவள் கலையைப் பார்த்தாள்.
இங்கு அவனோ இருவரும் பேசுவது புரிந்தும் புரியாமலும் அமர்ந்திருந்தான். ஆரி மருத்துவமனை அழைத்ததும் வந்து விட்டான். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை இவன் கேட்கவுமில்லை. அதை அவளிடம் எதிர்பார்க்கவும் இல்லை.
ஈ.என்.டி மருத்துவமனை என்ற பெயர் பலகையைப் பார்த்தும் கூட வேறு ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்குமென்று நினைத்தானே தவிர மற்ற எதையும் யோசிக்கவில்லை.
தற்பொழுது கலையின் மனம் கேட்கும் ஒரே கேள்வி யார் அந்த மகேந்திரன்? என்று தான்.
அவனது மனதின் கேள்வி ஆரிக்கு புரிந்ததோ என்னவோ அடுத்து அவளே “மகேந்திரன் அங்கிள் எப்ப வருவார் சார்?…” புன்னகையை இதழ்களில் மலர விட்டபடிக் கேட்டாள்.
டாக்டர் மகேந்திரன், ஆரியின் குடும்ப மருத்துவர்,தற்பொழுது வெளிநாட்டில் இருக்கிறார், அவரின் பரிந்துரையின் பெயரில் ஆரியா இங்கு பரிசோதனைக்கு வந்து கொண்டிருக்கிறாள் என்பது வரை மட்டுமே கலைக்குப் புரிந்தது
‘இதுக்கு மேல நீங்க பேசறது எனக்கு புரிய வேண்டாம் போடா…’ என்பதைப் போல் அலைபேசியில் மூழ்கினான்.
அக்கணம் “ஓகே மா, டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் தானே…” என்ற மருத்துவரின் பேச்சில் படக்கென திரும்பி ஆரியைப் பார்த்தான்.
‘என்னாச்சு? எதுக்கு? என்ன டிரீட்மெண்ட்? எதுக்கு டிரீட்மெண்ட்…’ ஆயிரம் கேள்விகளை எழுப்பியது அவனது கண்கள்.
“ஒன்னுமில்லை…” என்பதைப் போல் இமைகளை மூடித் திறந்தாள்.
“நிஜமா ஒன்னுமில்லையா…” எனக் கேட்டான். அதற்கு ஆரி பதில் கூறும் முன்பே மருத்துவர் அழைக்க, வரேன் என்பதைப் போல் கண் காட்டிவிட்டு அவரோடு சென்றாள்.
அடுத்த சில நிமிடங்களில் ஆரியின் இரண்டு செவியிலும் செவித்திறன் கருவிப் பொருத்தப்பட்டது. கருவி பொருத்தப்பட்ட அடுத்த நிமிடம் கலையை தான் முதலில் தேடினாள் பெண். கண்கள் இரண்டும் அவனைத் தேடினாலும் செவிப்பறையை தீண்டி செல்லும் சத்தம் அவளது மனநிலையை மாற்ற ஏதுவாக இருந்தது.
கண்களை இறுக மூடித் திறந்தவள் “சவுண்ட் தெளிவா கேட்கல சார். முன்னை விட அதிகமா நாய்ஸ் கேட்குது. அது எனக்கு தலைவலியை கொடுக்குது…” என்றாள். காந்தை என்னவோ சாதாரணக் குரலில் தான் கூறினாள் ஆனால் அது சத்தமாக கத்துவது போல் வெளிவந்தது.
அணங்கின் கத்தல் வெளியில் அமர்ந்திருந்த ஏகலைவனுக்கும் கேட்டது. அடுத்த நிமிடம் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தான்.
தன்னை நெருங்கி நின்றவனின் குரலை செவி வழி கேட்க முயன்றாள் ஆரியா. இரச்சல் சத்தம் அதிகமாக இருந்ததே தவிர கலையின் குரல் கேட்கவில்லை அவளுக்கு.
அவனுக்காக, அவனது குரலைக் கேட்க வேண்டும் என்பதற்காக தானே இத்தனை வருடங்களாக தான் எடுத்த முடிவைக் கூட ஒதுக்கி விட்டு பரிசோதனைக்கு சரியென்றால். ஆனால் இப்பொழுது அவனது குரல் கேட்க முடியவில்லை.
ஒரு தொழில் சாம்ராஜ்ஜித்தையே ஒற்றை பார்வையில் அடக்கி ஆழ்ந்து கொண்டிருப்பவளுக்கு நிதர்சனத்தை உள் வாங்க முடியவில்லை. தாய்,தந்தை, தம்பி என்று அனைவரையும் இழந்து, கேட்கும் திறனையும் இழந்து தனியாக நிமிர்ந்து நின்றவளுக்கு தன்னவனின் குரலைக் கேட்க முடியவில்லை என்றதும் சுயபட்சாதாபம் மேலிட்டது. அது அவளுக்கொரு மன அழுத்தத்தைக் கொடுத்தது.
அதற்குள் மருத்துவர் கலையிடம் அனைத்தும் கூறியிருந்தார். “இத்தனை நாள் இல்லாம தீடிருன்னு ஏன் யூஸ் பண்ற? உனக்கு அது வேண்டாம்ன்னா விட வேண்டியது தானே. எதுக்குடி ரிஸ்க் எடுக்கற. ரொம்ப தலைவலிக்குதா?…” என படப்படப்பாக கேட்டவனின் குரலை மீண்டும் மீண்டும் கேட்க முயன்றாள்.
அது இரச்சல் சத்தத்திற்கு மத்தியில் ஒலித்தது. தெளிவாக கேட்க முடியவில்லையே என்ற பதபதப்பும், தவிப்பும் இன்னும் இன்னும் மன அழுத்தத்தைக் கொடுத்தது. அதீத மன அழுத்தம் மயக்கத்தைக் கொடுக்க அப்படியே மயங்கி சரிந்தாள்.
நிமிடம் நுண்ணிடையாள் எழவில்லை என்றதும் அத்தனைப் பயந்து விட்டான் ஏகலைவன். கண்கள் இரண்டும் குளமாகியது “என்னாச்சு சார்? ஏன் மயங்கிட்டா? அவளுக்கு இது செட் ஆகாதுன்னா போடா வேண்டாம் சார். அவளுக்கு இது வேண்டாம்…” என்றான் தவிப்பான குரலில்.
“ஜஸ்ட் ரெலக்ஸ் ஏகலைவன். சாதாரண மயக்கம் தான்…” என்றவர் அவளை பரிசோதித்து விட்டு செவித்திறன் கருவியின் அளவீட்டையும் பரிசோதித்தார்.
“கொஞ்சம் நேரத்தில அவங்களே எழுந்துடுவாங்க… பயப்பட வேண்டாம்…” என்றவர் அறையை விட்டு வெளியேறினார்.
அவர் கூறியது போலவே அடுத்த சில நிமிடங்கள் ஆரியா கண் விழித்தாள்.
அடுத்த நிமிடம் ஆரியை இழுத்து அணைத்துக் கொண்டான். “நிமிசம் பயந்துட்டன் டி. இப்ப யாரு இதெல்லாம் பண்ண சொன்னா… இத்தனை நாள் யூஸ் பண்ணாம தானே இருந்த இப்ப மட்டும் என்ன வந்தது உனக்கு… செட் ஆகலைன்னா விட வேண்டியது தானே…” எனக் கேட்டவனிடம்
“உங்களோட குரலை கேட்கணும் தான்…” என்றாள். சட்டென அவளை விட்டு விலகி அமர்ந்தவன் “என்ன…” எனக் கேட்டான்.
“உங்களோட குரலை கேட்கணும் தான்…” என்றவளுக்கு அப்போது தான் அவனது குரலைக்கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றே புரிந்தது. கண்களில் கண்ணீர் சூழ ஏகலைவனைப் பார்த்தாள். அவனும் விழிகள் பனித்திட இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடி…” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை…
‘காது கேட்காம இருந்தா மிஷின் வாங்கி போட வேண்டியது தானே, மொத மாதிரி பெருசா இருந்தா கூட சங்கடமா இருக்கும். இப்ப எல்லாம் காதுக்குள்ளையே ஃபிக்ஸ் பண்ணிக்கிறது போல மிஷின் வந்துடுச்சு. அப்படி இருந்தும் எதுவும் யூஸ் பண்ணாம இப்படியே இருந்தால் நல்லவா இருக்கு… நீங்க சொல்லி பார்க்கலாம் தானே மாமா…’ ஆரம்ப நாட்களில் காசியிடம் மணிமேகலை கேட்டு இருக்கிறாள்.
‘அவங்க அப்பா,அம்மா இறக்க காரணம் இவங்க தான் நினைச்சிட்டு நான் இப்படியே இருந்துக்கிறேன் சொல்லிட்டாங்க டா…’ என்ற காசியின் பதிலும் நினைவு வந்தது.
சட்டென அவளை இழுத்து இறுக அணைத்து கொண்டான். இப்படியே இருந்து விடுகிறேன் என்றவள் தான் தனக்காக செவித்திறன் கருவியை மாட்டிக் கொண்டு நிற்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அதே சமயம் பாவையின் காதல் அவனுக்கு மலைப்பாக இருந்தது. அப்படி என்ன செய்து விட்டேன் நான்….என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அவளை தன்னுள் இன்னும் இன்னும் இறுக்கி கொண்டான். அதனுடனே “உன்னோட இந்த காதலுக்கு நான் தகுதியானவனான்னு கூட தெரியல டி, இதுநாள் வரைக்கும் உனக்குண்ணு நான் எதுவுமே பண்ணது இல்லை. ஆனா நீ உன்னோட லவ்வால மலைக்க வைக்கிற என்னை,…” என்றவன் அவளை தன்னுள் இன்னுமின்னும் புதைத்துக் கொண்டான்.
*****
அந்த வாரக் கடைசியும் முடிந்து திங்கட்கிழமையும் வந்திருந்தது.
அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பெண். அலைபேசியின் சத்தத்தில் டேபிலில் இருந்த தொலைபேசியைப் பார்த்தாள்.
கலை தான் அழைத்திருந்தான். இதழில் மலர்ந்த புன்னகையோடு அழைப்பை ஏற்றாள். மருத்துவமனை சென்று வந்ததிலிருந்து இருவருக்குமான நெருக்கம் சற்றே அதிகமாக இருந்தது.