??நானும் ??? இப்படி தான் zoom பண்ணி பார்க்குறேன் அப்பவும் எழுத்து பிழை வருது என்ன செய்ய நானும்…?? பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் தங்கங்களே..?
அத்தியாயம் 6
வெளியில் வந்த கலையின் முகம் இறுகியிருந்தது. கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டவன் மேலுதட்டைக் கடித்து கண்களை மூடித் திறக்க கண்களுக்குள் விழுந்தாள் ஆரி. தன் காரின் முன் கைகட்டி நின்றுக் கொண்டிருந்தாள்.
காரிகை நின்றிருந்த விதமே ஏதோ சரியில்லை என்பதைப் போல் தோன்ற என்னவென்று கேட்கலாமா? என நினைத்தவன் மனமோ சற்று முன் காசி பேசியதை நினைவுப் படுத்தியது. நிமிடம் இமைக்காமல் மாயோளைப் பார்த்தவன் பின் என்ன நினைத்தானோ வாகனத்தை உயிர்ப்பித்து ஏறியமர்ந்தான்.
நேராக அவன் வாகனம் சென்று நின்றது என்னவோ ஆரியின் முன் தான். அவனையும் மீறிய செயல் அல்லவா இது “என்னை என்னவோ செய்யறா…” என முனகிக் கொண்டே “என்னாச்சு…” என வாகனத்தைப் பார்த்தபடியே கேட்டான். அவளுக்கு அது புரிந்தால் தானே அவனை அழுத்தமாகப் பார்த்து நின்றாள்.
அவளிடம் பதில் இல்லாமல் போக திரும்பி ஆரியைப் பார்த்தான். அவளோ பார்வை மாறாமல் நின்றிருந்தாள் நுண்ணிடையாளின் பார்வையை நேருக்கு நேர் பார்த்தவன் “என்னாச்சுங்க…” என மீண்டும் கேட்டான். செவி வழி கேட்க தானே நேரம் எடுக்கும் இதழசைவை புரிந்துக் கொள்ள அது தேவையில்லையே சட்டென அவளிடமிருந்து பதில் வந்தது “கார் ப்ரேக் டவுன்…” என்றாள். காலை நேரம் என்பதால் டிரைவரை அழைத்து வராமல் தானே காரை எடுத்து வந்திருந்தாள்.
“ஓ…” என்றவன் சிறிது நேர மெளனதிற்கு பிறகு “கேப் புக் பண்ணிட்டீங்களா…” எனக் கேட்க ஆமெனத் தலையாட்டினாள்.
“தனியா போயிடுவீங்க தானே…” தன் வீட்டு பெண்ணைக் கேட்பது போல் கேட்டான். அதுகூட அவனையும் மீறி வெளிவந்த வார்த்தைகள் தான். அவன் அப்படிக் கேட்டதும் புருவத்தை ஏற்றியிறக்கி ‘என்ன’ என்பதைப் போல் பார்த்தாள்.
இப்போதும் கூட மங்கையின் இந்த பாவனை ஆட்டிட்யுட் காட்டுவது போல் தான் தெரிந்தது கலைக்கு. இருந்தும் அந்த திமிர் கூட அவளுக்கு அழகு தான் என நினைத்தவன் மனமோ மீண்டும் காசியின் வார்த்தைகளை நினைவுப் படுத்த பின்னந்தலைக் கேசத்தைக் கோதிக் கொண்டே ஒன்னுமில்லை என தலையாட்டியப்படி வாகனத்தை உயிர்ப்பித்து அங்கிருந்து நகர்ந்தான்.
செல்லும் அவனையே இமைக்காது பார்த்து நின்றாள் ஆர்யா.
அதே சமயம் கீழ் தளத்தில் நின்றபடி இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த காசிக்கு கலையை நினைத்து கோபம் தான் வந்தது… “அந்த பொண்ணுக்கிட்ட கூட தனியா போயிடுவியான்னு கேட்கறான் பார். இவனை திருத்தவே முடியாது…” என நினைத்தவன் ஆரி செல்லும் வரை நிற்போம் என முடிவெடுத்தவனாய் அங்கேயே நிற்க அதற்கு வேலையே இல்லை என்பதைப் போல் ஆரி புக் செய்த கார் வந்து நின்றது.
ஆரியின் கார் கிளம்பியதும் காசியும் அங்கிருந்து நகர்ந்தான். இங்கு வரும் போது இருந்த மனநிலை தற்போது துளியும் இல்லை காசிக்கு.இரண்டு நாட்களாக மனதிலிருந்த கோபம் அனைத்தும் வார்த்தைகளாக வெளி வந்து விட மனப்பாரம் முற்றிலும் குறைந்தது போல் உணர்ந்தான்.
இங்கு நேராக வீட்டிற்கு வந்த கலையோ தனக்கென ஒத்துக்கப்பட்ட அறையில் நுழைந்து கொண்டான். காசியின் வார்த்தைகள் அவனை வெகுவாக காயப்படுத்தி இருந்தது… இத்தனை நாட்கள் தன்னை இப்படி தான் நினைத்து வைத்திருக்கிறானா? என மனம் ஒருபுறம் கத்த ‘ வீட்டுல இருக்கிற ஆட்களே நம்ம சொல்றதை சரியாக புரிஞ்சுக்காத போது
இவன் உன்னை புரிஞ்சுக்க வேணும்னு நினைக்கிறது முட்டாள் தனம் டா கலை…’ மற்றொரு மனம் அறிவுரைக் கூறியது பெருமூச்சுடன் படுக்கையில் விழுந்தான்.
சிறிது நேரத்தில் புல்லட் சத்தம் கேட்டது வந்தது காசி தான் என்று சொல்லாமலேயே தெரிந்தது கலைக்கு. ஆனாலும் வெளியில் செல்லாமல் அறையிலேயே இருந்து கொண்டான். ஏனோ காசியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை… காசியின் மேல் கோபம் என்றெல்லாம் இல்லை அவன் பேசியது சரிதான் ஆனாலும் அதனை முற்றும் முழுதாக ஏற்க முடியவில்லை அதனாலயே காசியை தவிர்த்தான். தன் போக்கில் ஏதோதோ நினைத்தபடி மூழ்கி இருந்தவனை மேலும் யோசிக்க விடாமல் உறக்கம் அவனை ஆட்கொண்டது.
அதே சமயம் வீட்டிற்கு வந்த ஆரிக்கு தலைவலி மண்டையைப் பிளந்தது.. சொல்லபோனால் இந்த தலைவலி கூட இவளே இழுத்துக் கொண்ட ஒன்று தான். யார் பேசினாலும் இதழசைவை வைத்து புரிந்து கொள்ள நினைப்பவள் ஒரு சிலர்(?) பேசும் போது மட்டும் செவி வழியே கேட்க வேண்டும் என்று நினைப்பாள். இன்று அப்படி நினைத்து முயற்சித்ததால் இந்த தலைவலி… தலையை அழுத்தி பிடித்து ஹாலில் இருந்த சோபாவில் அப்படியே அமர்ந்து கொண்டாள்.
‘எப்பவும் சொல்ற பேச்சைக் கேட்கறதே இல்லை… இதை பண்ணாதன்னு சொன்னா தான் அதையே பண்றது… இப்ப பாரு தலைவலின்னு உட்கார்ந்துட்டு இருக்க… இந்தா இந்த கசாயத்தை குடிச்சா சரியா போயிடும்…’ என மழையில் நனைந்து விட்டு மறுநாள் தலைவலி என அமரும் போது தாய் தரும் இதமான டீ நினைவு வந்தது ஆரிக்கு. கண்களை இறுக மூடித் திறந்தவள் சட்டென இருக்கையிலிருந்து எழுந்து குளியலறை நோக்கி நடந்தாள்.
குளித்து முடித்து வெளிவரவும் டிரைவர் வேலு காலை உணவுடன் வரவும் சரியாக இருந்தது.ஆம் சமைப்பது எல்லாமே அந்த வீட்டில் தான். ஏனோ இங்கு தனியாக சமைக்கத் தோன்றவில்லை. எப்பவாவது இவளே செய்வதுண்டு மற்றபடி அனைத்து வேளை உணவையும் வேலுவின் மனைவி ரத்னா செய்து அனுப்பி விடுவார். வீட்டை சுத்தம் செய்வதும் கூட இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவரே செய்து விட்டு அங்கு சென்றுவிடுவார்.
அறக்க பறக்க வேலைக்கு செல்லும் ரகமில்லை என்பதால் உண்டு முடித்ததும் அலுவலகத்தை நோக்கி பயணித்தாள் அதே தலைவலியோடு.
*****
இங்கு உறங்கிக் கொண்டிருந்தவனை காசி எழுப்பி எழுப்பி பார்த்து சோர்ந்து போய் தன் அறைக்கே சென்று விட்டான். காசி சென்ற சில நிமிடங்கள் கழித்தே எழுந்தவன் மணியைப் பார்க்க அதுவோ ஒன்பது மணியைக் காட்டியது. “ஐயோ…” என்று தலைமேல் கைவைத்து பதறியவன் அறக்க பறக்க படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக்குள் ஓடினான். காக்கா குளியல் போட்டுவிட்டு தயாரானவன் அறையிலிருந்து வெளிவர காசி முறைத்தப்படி நின்றிருந்தான். அவனது முறைப்பைப் பொருட்படுத்தாமல் ஈரக் கேசத்தை கோதிக் கொண்டே டிவி யூனிட்டின் மேலிருந்த அவனது பைக் கீயை எடுத்தவன் உண்காமல் கூட வெளியில் சென்றான்.
“சாப்பிடாலயா…” என்ற காசியின் கேள்விக்கு நின்றவன் பின்னால் திரும்பி
“இல்லைங் மாமா வேண்டாம் நான் வெளியில சாப்பிட்டுக்கறனுங்…” என பன்மையில் பேசிவிட்டு அங்கிருந்து நகர பல்லைக் கடித்துக்கொண்டு “எப்படியோ போ… நல்லது சொன்னா நோப்பாளம் வர தான் செய்யும். அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது…” என முனகிக் கொண்டே வீட்டைப் பூட்டியவன் தன் பைக்கை உயிர்ப்பித்தான்.
கோவையில் காலை நேர ட்ராஃபிக்கை சொல்லவா வேண்டும் சற்றே அதிகமாக தான் இருந்தது.. ஓவ்வொரு சிக்னலில் நிற்கும் போதும் தன்னாலேயே கலையின் கண்கள் சைடு மிரரைப் பார்த்தது. நேற்று போல இன்றும் அவளைக் காண்போமா என்ற நப்பாசையோ? ‘டேய் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே டா பார்த்துட்டு வந்த…’ மனதின் கேள்விக்கு பதில் அளிக்க முற்படவில்லை அவன்…
நினைத்த நேரத்தை விட முன்னமே இருவரும் அலுவலகத்திற்கு வந்துவிட காசி வழக்கம் போலவே தன் முகத்தைக் கடுமையாகவே மாற்றி கொண்டான். காசியை ஒரு பார்வைப் பார்த்தவன் அலுவகத்தில் நுழைய அவளின் குரல் வெயிட்டிங் ஹால் வரையிலும் கேட்டதும்…
‘மொத்தமா முடிஞ்சுட்டானுங்க போல…’ என நினைத்தபடியே உள்ளே நுழையவும் ‘காசிநாதன்…’ என்று ஆரி அழைக்கவும் சரியாக இருந்தது…
நிலநடுக்கம் வந்துவிட்டது என்றால் கூட அத்தனை வேகமாக வெளியில் சென்றிருக்க மாட்டான் இப்போது ஆரி அழைத்ததும் அறக்க பறக்க எம். டி.யின் அறைக்குள் ஓடினான் . காசியின் இந்த செய்கையை தலையாட்டி சிரித்தவன் வெயிட்டிங் ஹாலை நோக்கி நடக்க அடுத்தது கலையையும் அழைத்தாள்.
காசியை போல் அத்தனை அவசரமாக எல்லாம் செல்லவில்லை மெதுவாகவே நடந்து தான் சென்றான். அதற்கும் காசி இவனை தான் முறைத்தான் ‘இதுல கூடவா டா…’ என்பதைப் போல் பார்த்தவன் தன் எண்ணத்தை முகத்திலும் காட்டினான். காசியின் முகப் பாவனையை துளியும் கண்டுகொள்ளவில்லை ஏகலைவன்.
தன் முன் நின்றவனை நிமிடம் அழுத்தமாக பார்த்தவள் அனைவரிடமும் திரும்பி கலையை அறிமுகம் செய்துவிட்டு மீண்டும் அவனிடமே திரும்பி வேலைகளை கூறினாள்.
“இப்ப ரிசன்ட்டா இருபது புராஜெக்ட் போயிட்டிருக்கு…அதோட ஸ்டார்ட்டிங் டூ எண்ட் வரைக்கும் எத்தனை மெட்டீரியல் லோட் போயிருக்குன்னு பார்க்கணும். அண்ட் வேஸ்ட் மெட்டீரியல் எவ்வளவு இருக்குன்னு பார்த்திட்டு அதோட டீடைல்ஷும் எனக்கு வேணும்…” எனக் கலையைப் பார்த்துக் கூறியவள் அடுத்த நிமிடம் சைட் என்ஜினீயர்களிடம் திரும்பி
“இனிமே சைட்டுக்கு என்ன மெட்டியரில்ஸ் வேணும்னாலும் மார்கெட்டிங் ஹெட் மிஸ்டர் கலையை அண்ட் அவங்க டீமை தான் கேட்கணும்… இனிமே நீங்க மெட்டியரில் பேமெண்ட் பார்க்க வேணும்னு அவசியமில்லை, மெட்டியரில்ஸ் கேட்க வேணும்னு தேவையில்லை எல்லாத்துக்கும் மேனேஜிங் டீம் அண்ட் ஹெட் இருக்கார். என்னத் தேவைப்படுதோ அதை வாட்சப் குரூப்பில் சொல்லுங்க அவங்க டீம் பாத்துப்பாங்க…” என அதிகார குரலில் அழுத்தமாக கூறினான்.
அங்கிருந்த பொறியாளர்களின் முகத்தில் ஈயாடவில்லை… பின்னே அதை வைத்து தானே காசு பார்த்துக் கொண்டிருந்தனர் தற்பொழுது அதற்கு இப்படியொரு வில்லங்கத்தை கொண்டு வருவாள் என்று எவரும் எதிர்ப் பார்த்திருக்கவில்லை. அனைவரின் பார்வையும் இப்போது கலையிடம் மட்டுமே. அவனை பற்றிக் கூறியதுமே நீங்க போகலாம் என்பதை போல் தலையாட்டி காசியிடம் “அவர் டீமை இன்டரோ கொடுத்துட்டு வாங்க…” என்றவள் இன்ஜினியர்ஸிடம் திரும்பி மீண்டுமொரு முறை எச்சரித்து விட்டு தான் ஓய்ந்தாள்.
கலை அவன் டீமை சந்தித்து பேசிய அடுத்து இரண்டு மணி நேரத்தில் அவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து தகவல்களும் கலையின் டேபிளுக்கு வந்திருந்தது …அதற்கு பின் ஓட்டம் தான் கலைக்கு. அந்த ஓட்டம் மூன்று மாதங்களாகியும் தொடர்ந்தது…
இந்த மூன்று மாதத்தில் கலையும், ஆர்யாவும் சந்தித்துக் கொள்ளவே இல்லை சொல்லபோனால் கலை தான் அலுவலகத்தில் இல்லை அவனின் வேலை முழுவதும் வெளியில் மட்டுமே இருந்தது. வாரவாரம் ரிப்போர்ட் மட்டும் இவனது மெயிலிலிருந்து ஆரியின் மெயிலுக்கு செல்லும் அதை தவிர இருவருக்கும் பேச்சு வார்த்தை என்பது இதுநாள் வரையிலும் இல்லை.
அதே போல் காசி, கலையின் உறவுகளில் விழுந்த கண்ணுக்கு புலப்படாத சிறிய கோடு இப்போதும் அப்படியே தான் இருந்தது. அதை அழிக்க நண்பர்கள் இருவருமே முயலவில்லை… தொழில் ரீதியான பேச்சுக்கள் மட்டுமே இருவரிடமும் இருந்தது. மற்றபடி வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்பதை விட கலை அதிகம் பேச்சுக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. தன்னை மட்டுமல்லாமல் தன் தந்தையும் சேர்த்து வெகுவாக மட்டம் தட்டியது கலையின் மனதில் அழுந்த பதிந்து போயிருந்தது… அதனாலயே காசிடம் அதிகம் ஒதுக்கத்தைக் காட்டினான்.
கலையின் இந்த ஒதுக்கம் காசியை நன்றாகவே பாதித்தது. எப்போதும் கலகலவென இருக்கும் நண்பன் மூன்று மாதங்களாக ஒதுங்கி செல்வது வருத்தத்தை கொடுத்தது…
‘இனிமே உன்னை எதுவும் சொல்ல மாட்டேன் டா சாமி.. எப்பவும் போல இரு…’ என பலமுறை அவனிடம் கூற நினைத்தான் ஆனால் மனம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. நான் பேசியது சரிதான் அதற்கு நீ கோபித்து கொண்டு பேசாமல் இருந்தால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது என்பதை போல் காசியும் இருந்து கொண்டான்.
உண்மையை சொல்லப்போனால் இப்போது வரை நண்பனைக் கடுமையாக பேசிவிட்டோம் தன் வார்த்தைகள் அவனை பாதித்திருக்கும் என்று துளியும் வருந்தவில்லை. மாறாக தான் பேசியது சரியென்று தான் நினைத்தான். பாவம் காசிக்கு தெரியவில்லை தான் பார்க்கும் பார்வையிலிருந்து மட்டுமே கலை என்பவன் ஓர் ஆணாதிக்கவாதியாக தெரிகிறான் என்று…
நாயணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே பார்த்து அதன் மதிப்பைக் கணித்து கொண்டிருக்கிறோம் என்று காசி புரிந்து கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
??படிச்சுட்டு விமர்சனம் சொல்லாம போனால் நாளைக்கு உப்மா தான் சாப்பிடுவீங்க சொல்லிட்டேன்???