“யாரது? யாரோட பேசிட்டு இருந்த? வம்பு பண்ணானா? ஏன் உன் முகம் இப்படி இருக்கு? என்ன சொன்னான்? தப்பா பேசுனானா?” என்று கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக வர, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் யாழினி. எதிரே யாழன் அவளை கூர்மையாய் பார்த்தபடி நின்றான்.
“இந்த நேரத்துல இங்க என்ன பண்ற? ஏன் இப்படி அமைதியா இருக்க?”
அவனது கூர்பார்வையை சந்திக்க திராணியின்றி தலை கவிழ்த்தவள், “இல்லை ஒன்னுமில்லை.” என்றபடி யாழனை தாண்டி நடந்தாள்.
“இங்க எதுக்கு நடந்து வந்த? யாரதுனு கேட்டுட்டே இருக்கேன் நீ போயிட்டே இருக்க?” கேள்விகள் மட்டுமே அவனிடம்.
அறையில் அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தவள் யாருக்கோ அழைப்பு விடுத்தபடி வீட்டு வெளிக்கதவை திறந்து கொண்டு வெளியே சென்றதை யாழன் கவனித்திருக்க, பத்து நிமிடமாகியும் அவள் திரும்பி வீட்டிற்கு வரவில்லை என்றதும் அவளை தேடி வந்துவிட்டான்.
“யார் என்னனு கேட்டா சொல்லத் தெரியாதா?” யாழன் அழுத்தம் கொடுத்து மீண்டும் கேட்க, யாழினி அவ்வினாவை தவிர்த்து, நடையில் வேகம் கூட்டி வீட்டை நெருங்குகையில் அவள் கை பிடித்து நிறுத்தினான் அண்ணன்.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு நடந்துக்குற? நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டாங்க. இப்போதான் அடங்காம ஏட்டிக்கு போட்டி பண்ற?”
“நானா தேதி குறிக்க சொன்னேன்?” என்று காட்டமாய் அண்ணனிடம் பாய்ந்தவள், அவன் கையை உதறி தள்ளிவிட்டு வீட்டுக் கதவை திறக்க,
“ம்ச்… இங்க பாரு நீ சொன்ன எல்லா கண்டிஷனுக்கும் அவங்க ஒத்துக்கிட்ட பிறகு தான் ஏற்பாடெல்லாம் நடக்குது.” என்ற யாழனின் பேச்சை துளியும் காதில் வாங்காமல் யாழினி உள்ளே செல்ல, பல்லைக் கடித்தவன் நேரே மைனாவிடம் சென்று நின்றான்.
“ம்மா அவகிட்ட பேசு. அவ சரியா இல்லை.”
“என்ன சரியா இல்லை? அப்பாவோட சேர்ந்துக்கிட்டு இப்போ நீயும் அவளை அடக்க பாக்குறியா?” என்று மைனா பாய, யாழனுக்கு மண்டை காய்ந்தது.
“அவளை சொல்லி குத்தமில்ல… உங்கிட்ட இருந்துதான் அவள் எல்லாம் கத்துக்குறானு இப்போதான் புரியுது. நான் என்ன சொல்றேன்னு காதிலேயே வாங்காம நீயா ஒன்னு முடிவு பண்ணி நீயா ஒன்னு பேசுற? இந்த ராத்திரி நேரத்துல தனியா நடந்து வெளிய போறா. யாரோடவோ பேசுறா யாருனு கேட்டா சொல்ல மாட்டேங்குறா.”
“இதுதான் சொல்றேன்… என்னை மாதிரி அவளும் எந்நேரமும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கணும்னு சொல்றியா நீயும்? யாரோட பேசிட போறா அவ? யாராவது தெரிஞ்சவங்களா இருக்கும். தெரிஞ்சவங்களோட பேசுறது கூட தப்பா? எங்க எப்படி இருக்கணும்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.” மகன் சொல்ல வருவது மைனாவுக்கு விளங்காமல் போக, மகனுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்றுதான் இருந்தது. மைனாவுக்கு மகனின் வார்த்தைகளை விட மகள் மீது நம்பிக்கை அதிகமிருந்தது.
“அப்பாவை சத்தம் போட முடியாம என்னை பேசி மனசை ஆத்திக்குற… நாளைக்கு அவ ஏதோ பெரிய பிரச்னையை இழுத்துவிட போறான்னு எனக்கு நல்லா தெரியுது அப்போ வந்து என்கிட்டே புலம்பாத.” என்று யாழன் கழன்றுகொண்டான்.
‘என்ன சொல்றான் இவன்?’ என்று யோசிக்கும் போதே முத்துவின் அழைப்பு கேட்க, ‘இதோ வரேன்.’ என்று அவருக்கு பதில் கொடுத்ததோடு யாழன் சொன்னதை மறந்து போனார்.
மெத்தையில் சாய்ந்தபடி மணி சொல்லிச் சென்றவற்றை மனதில் உருபோட்டவாறு யாழினி அடுத்து என்ன என்ற யோசனையில் இருக்க யாழன் அவளை கூர்மையாய் பார்த்தபடி நின்றான்.
அவனின் ஊசிப்பார்வை குத்த நிமிர்ந்த யாழினி புருவம் உயர்த்தி, “இப்போ நான் யாரோட பேசிட்டு இருந்தேன்னு சொல்ற வரைக்கும் நீ இங்கிருந்து போக மாட்ட. அப்படித்தானே?” என்று கேள்வி எழுப்ப அவன் வாய் திறக்கவில்லை.
“ஒரு வாரம் முன்னாடி வரைக்கும் ஃபிரெண்டா இருந்தான்.” என்று அவன் அப்போது கேட்ட கேள்விக்கு அச்சமயம் பதில் அளித்தாள் யாழினி.
“இப்போ?” என்று யாழன் நெற்றி சுருக்க,
“தெரியல.” என்று உதடு பிதுக்கினாள் தங்கை.
யாழினியின் பதிலில் யாழனுக்கு உள்ளே உதறல் எடுத்தாலும் அதை வெளிக்காட்டாது அவள் அருகில் அமர்ந்தவன் முடிந்தவரை குரலை தாழ்த்தினான், “என்ன பதில் இது?”
“தெளிவான பதில் எனக்கு கிடைச்சதும் சொல்றேன்… உங்ககிட்ட சொல்லாம எங்க போயிட போறேன்?” என்று அவனை நாசூக்காய் கத்தரித்தவள் அலைபேசியில் இன்ஸ்டா செயலியில் மூழ்க,
“நீ பண்றது சரியில்லை யாழி. அப்பா உன்னை கல்யாணத்துக்கு வற்புறுத்துறதால இப்படி நீ வழிமாறி போறதெல்லாம் தப்பு.” என்று பதறிப்போய் கண்டித்தான் அண்ணன்.
“நான் எங்கேயும் மாறி போகல. இங்கதான் இருக்கேன். நீங்க எல்லாம் என்னை போர்ஸ் பண்ணினப்போ என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அப்போ தான் அவர் பிரெண்ட் ஆனாரு. எனக்கு நிறையா ஐடியாஸ் குடுத்து எனக்கு ஹெல்ப் பண்ணாரு.” என்று அகம் திறந்தாள் மங்கை.
“பிரெண்ட் பிரெண்டாவே இருக்குறதுதான் எல்லாருக்கும் நல்லது யாழி. தேவையில்லாம பிரச்சனையை இழுத்துவிடாத.” என்று அஞ்சிய அண்ணனுக்கு தங்கையின் பதில் மென்முறுவலே.
“இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?”
“எதையும் பிளான் பண்ணி செய்யறது இல்லை அதுவா எல்லாம் நடக்குது. இனியும் என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சா கண்டிப்பா வீட்டுக்கு தான் முதல்ல சொல்லுவேன். எதையும் மறைச்சு எனக்கு பழக்கம் கிடையாதுன்னு உனக்கே தெரியும்.” சற்று முன் அதிர்ந்து சாலையில் ஒன்றும் புரியாத பாவனையுடன் நின்ற பெண்ணா இவள் என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு யாழினியின் பேச்சில் தெளிவிருக்க, தன் எண்ணங்களின் பிரதிபலிப்பையே அவளிடம் உணர்ந்தான் யாழன்.
“இதையேதான் நானும் முன்னலேந்து சொல்லிட்டே இருக்கேன். நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம் எது வேணும்னாலும் மாறலாம். அதுக்காக வீம்புக்கு நீ இப்படி பண்றது எல்லாம் நல்லா இல்லை. அடுத்த மாசம் நிச்சயதார்த்தம், இன்னும் பத்து நாள்ல புடவை எடுக்க போறோம். இப்போ வந்து இப்படி பேசிட்டு இருக்க நீ!” என்ற யாழனிடம் பதைபதைப்பு சற்றும் குறையாமல் மேலேறிய வண்ணம் இருந்தது.
புதிதாய் தடுமாறும் தங்கையின் மனதை வீட்டில் அப்பாவிடம் சொன்னாலும் இவள் அஞ்சப்போவது இல்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். யாராய் இருப்பினும் தனக்கு பிடித்ததை பிடிக்காததை வெளிப்படையாய் பேசியே பழகியவள் இதையும் தைரியமாய் சொல்லுவாள். வீட்டில் தேவையில்லாத சச்சரவு முளைக்குமே என்ற ஐயம் கூடிக்கொண்டே போனது அவனிடம்.
“பத்து நாள் போதும்னு நினைக்குறேன். புடவை எடுக்குறதுக்குள்ள முடிவு சொல்லிடுறேன்.” சொல்லில் மட்டுமின்றி உள்ளத்திலும் தீர்க்கம் வந்தது யாழிக்கு.
தங்கையின் மனம் அலைபாய்வதை தடுப்பதா ஆதரிப்பதா என்ற குழப்பம் யாழனிடம் இருந்தாலும் யார் என்று தெரியாமல் எப்படி முடிவெடுப்பது என்று மீண்டும் அதே கேள்வியை எழுப்பினான் தங்கையிடம், “அவன் யாருனு நீ சொல்லவே இல்லையே?”
“பிரெண்டுனு சொன்னேனே… இப்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும். வேற எதுவும் கேக்காத.” என்றாள் யாழினி முடிவாய்.
“அதெப்படி கேக்காம இருக்க முடியும்?” எதார்த்தம் உணர்த்தினான் யாழன்.
“என்னோட எல்லா பிரெண்ட்ஸையும் நான் வீட்ல அறிமுகப்படுத்துனது இல்லையே. இதுவும் அப்படித்தான்.” யாழினியின் பிடிவாதம் பேச்சிலும் வெளிப்பட்டது.
“அவன் யாருனு சொல்லு.” அஞ்சி கெஞ்சி ஒன்றுமாகவில்லை என்றதும் மிரட்டல் தொனியை யாழன் பேச்சில் எடுக்க யாழினி மசியும் எண்ணத்தில் இல்லை.
“இன்னும் பத்து நாள்ல உனக்கே எல்லாம் தெரியும்.”
“நானே கண்டுபிடிக்குறேன்.”
“கண்டுபுடிச்சு அவனை போய் மிரட்டவா? அப்படி ஏதாவது செஞ்சா என் முடிவு வேற மாதிரி இருக்கும் யாழன். நான் ஒன்னும் சின்ன பொண்ணுல்ல, எனக்கும் யோசிச்சு முடிவெடுக்க தெரியும். என் முடிவு இதுவரைக்கும் தப்பா போனது இல்லை, இனியும் போகாதுனு நீ நம்பு அதுபோதும் எனக்கு. குட் நைட்.” இத்தோடு பேச்சு முடிந்தது என்று அவள் படுத்துவிட, யாழன் செய்வதறியாது தவித்து நின்றான்.
மனதில் குழப்பம் மண்டிக்கிடந்தாலும் யாழினி தெளிவாய் அண்ணனிடம் பேசியிருக்க மறுபுறம் எப்போதும் தெளிவாய் இருக்கும் மணிகண்டன் மண்டையை பிடித்து கடற்கரை மண்ணில் பொத்தென்று அமர்ந்தான்.
‘ஏன் நான் உன்னை பாத்தேனோ!’ என்று அவன் மனம் ஓயாமல் ஊளையிட, கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. யாரிடமாவது கொட்டி அழ வேண்டும் போலிருக்க, யாரை அழைப்பது என்றும் தெரியவில்லை.
ஆழியின் ஓசை நானிருக்கிறேன் என்பது போல் ஆர்ப்பரித்து அவன் காலை தொட்டுச் செல்ல,
“எனக்கு ஏன் உன்னை புடிச்சி தொலைச்சிது? உனக்கு ஏன் என்னை புடிச்சிது யாழி? இந்த ஒண்ணுமில்லாதவன் கிட்ட அப்படி என்ன பார்த்தேன்னு இப்படி என்னை துரத்துற?
உன்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா என்கிட்ட ஒன்னும் இல்லையே. உன் பக்கத்துல நிக்க கூட தகுதி இல்லாதவன் நான். என் அம்மா சொல்லிட்டே இருக்கும் நான் எதுக்கும் லாயக்கு இல்லைனு, அது சரிதான்.
நான் விரும்புற பொண்ணு என்னை பிடிச்சிருக்குனு சொல்லும் போது எனக்கும் உன்னை பிடிச்சிருக்குனு சொல்லக்கூட லாயக்கு இல்லாதவனா இருக்கேனே!
என்னால ஒரு வேளை கஞ்சி கூட ஊத்தமுடியுமானு தெரியல யாழி. நான் என்ன செய்வேன்?
எல்லா அவமானத்தையும் தாங்கி தாங்கி உணர்ச்சியெல்லாம் மரத்து போச்சுன்னு நினைச்சிட்டு இருக்கும் போது சாரல் மாறி அப்பப்போ தூறி என்னை முழுசா நனைச்சிட்டியே! இப்போல்லாம் எப்போதும் உன் நினைப்புதான் யாழி.
இதுதான் காதலா?
காதல் இனிக்குமாமே?
எனக்கு காதல் இனிக்கலை…
வலிக்குதே…”
என்று வாய் விட்டு கதறும் வேளையில் உப்பு தண்ணீர் காலிலும் கண்ணிலும் ஒருசேர தோன்றி அவனை அரவணைத்தது.
எவ்வளவு நேரம் கதறினானோ அருகில் நாய் ஒன்று இவனை நுகரும் வரை சமனின்றி துடித்துத் தெளிந்தான்.
தேம்பித் தேம்பி மேல் வயிறு ஏறி இறங்கி தொண்டை இழுத்து விக்கல் எடுக்க தலையில் கொட்டிப்பார்த்தான். நிற்கவில்லை. சுற்றிப் பார்த்தால் தண்ணீர் வாங்க கடை எதுவும் இல்லை. ஆள் அரவமும் இல்லை. விக்கலும் விடாது தொடர, வேறு வழியின்றி ஓடிச் சென்று கடல் நீரை எடுத்து பருகினான். உப்பு மூக்கில் ஏறி மூச்சு முட்ட உடனே அதை துப்பியவன் மூச்சு வாங்கினான். பறந்து விரிந்த கடற்பரப்பு காற்றை பஞ்சமில்லாமல் வீச மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினான்.
மூச்சும் சீராக, தேம்பல் மெல்ல மட்டுப்பட்டது. எச்சில் கூட்டி விழுங்கியவன் கண்களை துடைத்துக்கொண்டு அலைபேசி எடுத்து நேரம் பார்த்தான். நேரம் நள்ளிரவு இரண்டை தாண்டிச் செல்ல, அங்கேயே கடல் மண்ணில் படுத்து கைக்கு எட்டா தூரத்தில் இருக்கும் விண்ணை வெறித்தான்.
“இந்த ஆகாயம் மாதிரி நீயும் எனக்கு எட்டாத தூரத்துல இருக்க யாழி. என்னோட எட்டாக்கனி நீ.
இந்த மணிகண்டன் வாழ்க்கை அவன் நினைச்ச மாதிரி என்னைக்குமே அமைஞ்சது இல்லை.
எனக்கு என்ன வேணும்னு இன்னுமே தெரியாது. எனக்கு எதுவுமே செட் ஆகாது. என்னோட சொந்தங்களே என்னை கீழாதான் நடத்துறாங்க. வீட்டுல வேலை செய்யுற வேலைக்காரனை கூட மதிப்பாங்க ஆனா என்னை மதிக்க மாட்டாங்க. ஏன்னா எனக்குதான் வேலை இல்லையே!”
அருகில் ஆள் இருப்பது போலவே தனக்குத்தானே பேசிக்கொண்டவன் இதழில் வறட்சி புன்னகை தவறாது வந்து ஒட்டிக்கொண்டது.
“இந்த வேலையில்லாத வெட்டிப்பையன் உதவாக்கரை உனக்கு வேணாம் யாழினி. இந்த MK உனக்கு வேண்டாம். இந்த பாரத்தை நீ சுமக்க வேண்டாம். இந்த நட்சத்திரம் மாதிரி நீ எப்போதும் ஜொலிக்கனும். அதை நான் எட்ட நின்னு பாக்கணும் அது போதும் எனக்கு. அது போதும்.” என்று முடிவெடுக்கையில் கண்கள் சொக்கியது மணிகண்டனுக்கு.