Skip to content
Post Views: 4,336
நிறம் பாராத காதல்
அத்தியாயம் – 24(2)
வைதேகி ரணதீரனின் வீட்டிலிருந்து செல்லமாட்டேன் என்று சட்டமாக அமர்ந்து கொண்டாள்.
“நீ போ மா ப்ளீஸ்…” என்று ரணதீரன் கெஞ்சினான்.
Advertisement
“சரி சரி நான் வீட்டுக்குப் போறேன். ஆங்! நாளைக்கு பொம்மி அக்காவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகணும்ன்னு அண்ணன் சொல்லிருக்காரு. நீங்களும் என்கூட வாங்க” என்றாள்.
“நான் எதுக்கு வரணும்?அதான் மாமா இருப்பாரே அவரை அழைச்சிட்டு போ” என்றான்.
“தீரா…ஆயிரம் பேர் இருந்தாலும் நீங்க என்கூட இருக்கும்போது மட்டும் தான் எனக்குத் தைரியமா இருக்கும். அதுவும் நான் வெளிய போனால் அந்த விக்ரம் என்னை எதாவது பண்ணிடுவாருனு எனக்குப் பயமா இருக்கு”என்று வேண்டுமென்றே வைதேகி விக்ரமின் பெயரைச் சொன்னாள்.
Advertisement
“ஏன் உனக்கு விக்ரமை பிடிக்கலையா?” என்ற ரணதீரனின் கரங்களைக் காதலாகப் பற்றினாள்.
Advertisement
“இன்னும் எத்தனை முறை சொல்லுறது தீரா… எனக்கு உங்களைத் தான் பிடிச்சி இருக்கு, உங்களை மட்டும் தான் பிடிச்சி இருக்கு”என்றவள் அவன் சட்டை காலரை பிடித்தாள்.
அவனைத் தன் உயரத்துக்கு இழுத்து, அவன் இரு பக்க கன்னத்திலும் இதழ் பதித்தாள்.
அந்தச் செயலில் ரணதீரனுக்கு ஹார்மோன்ஸ் எல்லாம் காதல் கீதம்
பாட தொடங்கின.
Advertisement
அவன் கற்பனைகளை எல்லாம் ஓரம் தள்ளி, வைதேகி மீது அவனுக்கு இருந்த காதலை உணர்ந்தபடி நின்றிருந்தவனை பார்த்து,”நாளைக்கு நீங்களும் வாங்க தீரா ப்ளீஸ்…” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
இதுவரை அவன் நிறத்தைக் காரணம் காட்டி அவன் கையைக் கூடத் தொட வெறுத்த பெண்களின் நடுவே தன் தாய்க்கு பிறகு வைதேகி கொடுத்த முத்தத்தில் அவள் காதலை உணர்ந்தவன், “சரி…நான் வரேன்” என்றான்.
“ம்… இது நல்ல பிள்ளைக்கு அழகு. வாங்க போய்ச் சாப்பிடலாம்” என்ற வைதேகி, கையோடு ரணதீரனை அவன் பங்களாவிலிருந்து வேதநாயகியின் பங்களாவிற்கு அழைத்துச் சென்றவளின் கையைப் பிடித்துக்கொண்டு நடைப்பழகும் பிள்ளையைப் போல நடந்து சென்றான் ரணதீரன்.
இதுவரை கோவமாக இருந்த ரணதீரன் இப்போது மகிழ்ச்சியான மனநிலையில் வைதேகியுடன் வீட்டுக்குத் திரும்பியணை பார்த்து வேதநாயகியில் தொடங்கி அங்குள்ள அனைவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள்.
“வாங்க எல்லோரும் சாப்பிடலாம்”என்ற வைதேகி,”உக்காருங்க இன்னைக்கு நான் தான் எல்லோருக்கும் பரிமாறுவேன்” என்றவள், அனைவர்க்கும் உணவைப் பரிமாறினாள்.
அன்றைய தினம் இரவு நேரம் முழுதும் வேதநாயகியின் வீட்டில் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது.
“அப்போ கூடிய சீக்கிரம் இவங்க கல்யாணத்தை நடத்திடலாமா?” என்று வேதநாயகி ஆசையாகக் கேட்டார்.
“அம்மா! வைதேகிக்கு நான் எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவன்.வைதேகி இங்கே இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும். அப்புறம் அவங்க தாத்தா பாட்டி சம்மதத்தோடு அவ அழகுக்கும் நிறத்துக்கும் ஏற்ற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக வேதநாயகியின் வீட்டிலிருந்து வெளியேறினான் ராணதீரன்.
தன் மகனின் செயலில் மனம் உடைந்த வேதநாயகியை பார்த்து, “அத்தை… நீங்கக் கவலைப்படாதீங்க, எனக்கும் உங்க பையனுக்கும் தான் கல்யாணம் நடக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்லும் வைதேகி நெற்றியில் இதழ் பதித்த வேதநாயகிக்கு எப்படியோ இவர்கள் இருவரின் திருமணம் நல்லபடியாக நடந்தால் போதும் என்ற ஆசை இருந்தது.
அன்றைய தினம் இரவு நேரம்
தோட்டத்து வீட்டில் வேலு, பொம்மி, மாறன் மற்றும் வைதேகி ஆகிய நால்வரும் தனிமையில் நின்று இருந்தார்கள்.
“என்ன வைதேகி! என்ன முக்கியமான விஷயம் ?” என்று மாறன் கேட்டதும், “அண்ணா… உங்க மச்சானுக்கு மனதளவில் ஒரு பிரச்சனை இருக்கு! அது உங்களுக்குத் தெரியுமா?” என்று வைதேகி கேட்டாள்.
“என்னம்மா சொல்ற பிரச்சினையா? ” என்று மாறன் புரியாமல் கேட்டதும், “ஆமா அண்ணா! அவர் பிரச்சனையைச் சரிசெய்ய நான் அவரை மருத்துவ ரீதியா அணுகனும், அதுக்கு உங்களோட உதவி வேண்டும்” என்று வைதேகி சொன்னதும்,
“என்ன சொல்ற, எனக்கு ஒன்னும் புரியலையே!?” என்றான் மாறன்.
“அண்ணா நாளைக்கு பொம்மி அக்காவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகும்போது, தீராவையும் நம்ம கூட அழைச்சிட்டு போவோம். அங்க வச்சு அவருக்கு நான் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு உங்களுடைய உதவி தேவை” என்று வைதேகி சொல்ல,
“என்ன பண்ணனும் மட்டும் சொல்லு பண்ணிடலாம்” என்று மாறனும் வாக்குறுதி கொடுத்தான்.
மறுநாள் காலைப் பொழுது இனிதாகவே விடிந்தது. பொம்மி, வேலு, மாயா, வைதேகி மற்றும் ரணதீரன் ஆகிய ஐந்து பேரும் நெல்சன் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.
“தீரா…நீங்களும் வந்து பொம்மி அக்காவுக்கு நான் எப்படி ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன்னு பாருங்க” என்று ரணதீரனை அழைத்துச் சென்ற வைதேகி பொம்மியையும் ரணதீரனையும் ஒன்றாக அமர வைத்தாள்.
பொம்மிக்கு ஊசி செலுத்துவதற்காக அருகில் வந்த வைதேகி சட்டென்று ரணதீரனே எதிர்பார்க்காத சமயம் சோடியம் பென்டோதால் ஊசியை அவனுக்குச் செலுத்தியதும், ரணதீரன் சில நொடிகளில் மிதமான மயக்கத்துக்கு சென்றான்.
இப்போது ரணதீரன் ஓரளவு உணர்வுடன் இருப்பதை உறுதி செய்த வைதேகி, அவன் மனதில் உள்ள எண்ணங்கள் மற்றும் நினைவுகளை எளிதாகத் தெரிந்து கொள்ள நினைத்தவள் அவனைக் கட்டிலில் படுக்க வைத்தாள்.
யாரும் இல்லாத அறையில் ஒற்றை விளக்கின் உதவியோடு மிதமான மயக்கத்தில் இருந்த ரனதீரனிடம் பேச ஆரம்பித்தாள் வைதேகி.
“உங்க பெயர் என்ன?” என்று அவள் கேக்க,
“ரணதீரன்” என்றான் அவன்.
“உங்களின் 5 வயதில் உங்க வாழ்க்கை எப்படி இருந்துச்சு?” என்று அவள் கேக்க, கண்களை மூடி இருந்தவன், “என் ஐந்து வயதில் என் அப்பாவை நான் இழந்தேன்”என்றவன் தன் சிறு வயது அனுபவங்களைச் சொன்னான்.
“10 வயதில் உங்க வாழ்கை எப்படி இருந்துச்சு?” என்று வைதேகி கேக்க,
“அப்போ எல்லாம் எனக்கு ஸ்கூல் போகவே பிடிக்காது, ஏன்னா என்னை எல்லோரும் காக்கான்னு அழைத்துக் கேலி பண்ணுவாங்க”என்றான்.
“சரி…15 வயதுல உங்க வாழ்கை எப்படி இருந்துச்சு?” என்று வைதேகி கேக்க, “அப்போ கொஞ்சம் முன்னேறி என்னை எல்லோரும் கொரில்லான்னு கூப்பிட்டாங்க”என்றான்.
“ம்…உங்க 18 வயதுல உங்க வாழ்கை எப்படி இருந்துச்சு?” என்று அவள் கேக்க,
அவனிடம் சில நொடிகள் மௌனம்.
“சொல்லுங்க ரணதீரன்! 18 வயதில் உங்க வாழ்க்கையில நீங்க மறக்க முடியாத சம்பவங்கள் எதாவது நடந்துச்சா?” என்று வைதேகி கேட்டாள்.
“ம்… என்னுடைய பதினெட்டு வயதில் தான் அவளை நான் முதன் முதலில் பார்த்தேன்” என்றான்.
“யாரு அவள்?” என்று வைதேகி கேக்க,
என் இதயத்தில் எழுந்த புது வித உணர்வின் கலையரசி அவள்” என்றான்.
“அவங்கள நீங்க எங்க பார்த்தீங்க? அவங்க பெயர் என்ன?” என்று கேட்டாள்.
“என் பதினெட்டு வயதில் நான் பக்கத்து ஊருக்கு ஓவியம் பயில சென்றப்போது அவளும் வந்து இருந்தாள். அவள் வெளிநாட்டில் வசிப்பவள் என்று கேள்வி பட்டேன். அவளைத் தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தவன் அவள் பெயரை அறிந்துகொள்ள முயன்று தோற்று போனதால், நானாக அவளுக்குக் கருப்பு வைரம் என்று பெயர் வைத்தேன்”
என்றான்.
“ஓ…ஏன் அந்தப் பெண் கருப்பா
இருப்பாளா?”என்று கேட்டாள்.
“இல்லை… அவள் சந்தன நிறத்தில் இருப்பாள்.ஆனால் நான் கருப்பு!
அதனால அவள் என் வைரம் என்று நான் எண்ணினேன். அதற்காக அந்தப் பெயரை வைத்தேன்” என்று சொன்னான்.
“அவங்களை பற்றி இன்னும்
சொல்லுங்கள்”என்று வைதேகி
கேட்டாள்.
“அந்த வகுப்பறையில் மூன்று நாள் மட்டும் தான் நான் அவளைப் பார்த்தேன்.
அவள் மீண்டும் ஊருக்குப் போக
போகிறாள் என்று கேள்வி பட்டேன்.
அப்போது என்னுடன் படித்த ராமு அந்தப் பெண்ணை விரும்புவதாகவும்,
அவள் கோவிலுக்கு வரும் வேளையில் சந்திக்க போவதாகவும் சொன்னான்.
அப்போது அவனுக்குத் தெரியாமல் நானும் அவளைப் பார்க்க நினைத்து அவள் சென்ற அம்மன் கோவிலைத் தேடி போனேன்”
என்ற ரணதீரன் சில நொடிகள் அமைதி காத்தான்.
“மேல சொல்லுங்க” என்று வைதேகி கேட்டாள்.
“கோவிலில் அந்தப் பெண்ணை நான் பார்த்தேன். அவள் வரிசையில் நின்று சாமியை வணங்கிக்கொண்டு இருந்தவள் பின்னே ராமு நின்று இருந்தான்.
ராமுவின் பின்னே நான் நின்று இருந்தேன்.
அந்தப் பெண்ணின் முதுகில் இருந்த சிகப்பு நிற திரிசூல மச்சத்தை ராமு தொட்டு பார்த்தான். சட்டென்று திரும்பிய அந்தப் பெண் ராமுவை அடிப்பதற்காகக் கையை ஓங்க, அவன் அங்கிருந்து ஓடிய வேகத்தில், அந்தப் பெண் என்னை அறைந்த கணம் சுற்றி இருக்கும் அனைவரும் என்னை அடிக்க ஆரம்பித்தார்கள்.
‘காட்டேரி மாதிரி இருக்குற உனக்கு வெள்ளை தோல் பொண்ணு கேக்குதான்னு!’ ரொம்ப கேவலமா கேட்டாங்க.
என் வீட்டுக்கு வந்து ரொம்ப அழுதேன்.
அந்தப் பொண்ணுக்கூட என்னைத் தப்பா நெனச்சு அடிச்சு இருக்கலாம்! ஆனா அந்தக் கோவிலில் இருக்கிற எல்லாரும் என் நிறத்தை வைத்தே நான் அந்த மாதிரி கேவலமான செயலைச் செய்து இருப்பேன் என்று முடிவு செய்தார்கள்” என்று வருத்தத்தோடு சொன்னான் ரணதீரன்.
“ம்… சரி அந்தப் பொண்ணோட பெயர் என்ன?” என்று வைதேகி கேட்டாள்.
“அந்தப் பொண்ணோட பெயரை அழகின்னு ராமு சொல்லிக் கேள்விப்பட்டேன்” என்றான் ரணதீரன்.
அவன் அப்படியாகச் சொன்னதும் வைதேகியின் முகத்தில் திடீர் மாற்றம் தோன்றியது.
“என்ன பெயர் சொன்னிங்க?” என்று மீண்டும் வைதேகி கேட்டாள்.
“அழகி” என்றான் அவன்.
“அழகியை நீங்க மறுபடியும் பார்க்கவே இல்லையா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“நான் எப்படி பார்ப்பேன்!? அழகி என்னை ரொம்ப கேவலமா நினைத்திருப்பாள்.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு நான் யாரிடமும் பழகுறதில்லை.
நான் எனக்கான தனி வீட்டிலேயே தங்கிட்டேன்” என்றான்.
“சரி! உங்க நண்பர்களைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று மேலும் அவன் மனதில் இருக்கும் நினைவுகளை அறிந்து கொள்ளும் விதமாகக் கேட்டாள் வைதேகி.
“எனக்கு எந்த நண்பர்களுமே இல்லை. அதனால் நானே என்னுடைய 18 வயதிலிருந்து என் உருவம் கொண்ட ஓவியத்தை வரைந்து அவங்க கூடப் பேசிப் பழகி எனக்கான நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டேன்.
இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.என்னுடைய நல்லது கெட்டது எல்லாம் அவங்க கிட்ட தான் ஷேர் பண்ணுவேன்.18 வயசுல இருந்து இந்த நொடிவரை நான் மொத்தம் பத்து நண்பர்களை என் ஓவியங்களின் மூலம் உருவாக்கி இருக்கிறேன். எனக்கு வேலு என்று ஒரு நண்பனும் இருக்கிறான்.
ஆனால் அவனிடம் சொல்லாத பல இன்ப துன்பங்களைக் கூட நான் என் ஓவிய நண்பர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வேன்” என்றான் ரணதீரன்.
“18 வயசுல உங்களுக்கு ஒரு பொண்ணு மேல க்ரஷ் வந்துருக்கு, ஆனா அதன் பிறகு நீங்க வேற யாரையும் காதலிக்கலையா?” என்று கேட்டாள்.
“இல்லை…என் அம்மாவுக்காக மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தேன். ஆனால் எனக்காக அவங்க பார்த்த எந்தப் பொண்ணுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.
நான் கருப்பா அசிங்கமா இருக்கேன்! முக்கியமா நான் பார்க்கக் காக்கா மாதிரி இருக்கேன்னு அவமானப்படுத்துனாங்க. இது எனக்குப் பழகிட்டாலும், என் அம்மாவுடைய வேதனையைத் தாங்கிக்க முடியாமல் நானாகவே கல்யாணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். அதனால எனக்குக் காதல் எல்லாம் யாரிடமும் வரவில்லை” என்று சொன்னான் ரணதீரன்.
“உங்களை யாரையாவது காதலிக்கிறார்களா!” என்று வைதேகி கேட்க,”ஆமா…என்னையும் ஒரு பெண் காதலிக்கிறாள்” என்றான்.
“யாரு அந்தப் பொண்ணு?அவங்க எப்படி இருப்பாங்க?”என்று கேட்டாள் வைதேகி.
“காதலிப்பது இன்பம் என்றால் காதலிக்கப்படுவது பேரின்பம்.
நான் ஆசைப்பட்ட அழகியைப் போலவே, என்னைக் காதலிக்கும் வைதேகியும் பேரழகி தான்” என்ற ரணதீரனின் இதழ்களில் கீற்று புன்னகை மலர்வதை பார்த்து வைதேகியின் இதழ்களும்
தானாக விரிந்தது.
ரணதீரனை காதலிக்கும் பெண்ணைப் பேரழகி என்று சொன்னதோடு மட்டும் நில்லாமல் அந்தப் பெண்ணின் பெயர் வைதேகி என்று அவன் திருவாய் மலர்ந்து சொன்னதை கேட்டு வைதேகிக்கு வெக்கம் பிடுங்கி தின்றது.
தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவள்,”சரி! அவங்க உங்களைக் காதலிக்கிறாங்க! ஆனா நீங்க அவங்களை லவ் பண்றிங்களா?” என்று வைதேகி கேட்டாள்.
சில நொடி மௌனம் அவனை ஆட்கொண்டது. “சொல்லுங்க ரணதீரா… நீங்க அவங்களை காதலிக்கிறிங்களா?” என்று மீண்டும் வைதேகி கேட்டாள்.
“என் உணர்வுகளை என்னால் வெளிப்படுத்தத் தெரியவில்லை.
வைதேகியைப் பற்றித் தெரிந்த கணத்திலிருந்து அவளை எனக்குப் பிடிக்கும். என்னை வைதேகிக்கு பிடிக்கும் என்று தெரிந்த கணத்தில் இருந்தே அவளை அதிகமாகவே எனக்குப் பிடிக்கும்” என்ற ரணதீரனின் பதிலில் வைதேகியின் பவளவாய் மலர்ந்தது.
“நீங்க உங்க காதலை அவங்கக்கிட்ட சொல்லிட்டீங்களா?”என்று வைதேகி கேட்டதும்,”நான் சொல்லமாட்டேன். அவளுக்கு நான் எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவன்” என்றான் ரணதீரன்.
“உங்களை அவங்களுக்கு பிடித்ததால தானே அவங்க உங்களைக் காதலிக்கிறேன்னு சொன்னாங்க!
பின்ன ஏன் நீங்கப் பயப்புடுறீங்க?” என்று வைதேகி கேட்டாள்.
“எனக்குப் பயமில்லை.
ஆனால் வைதேகிக்கு நான் எந்த விதத்திலும் பொருத்தம் இல்லைனு அவன் தான் என்னைப் பயமுறுத்துகிறான்” என்றான் ரணதீரன்.
“அவனா? யாரு அவன்?” என்று வைதேகி கேட்டாள்.
“தீமா… தீமா தான் சொன்னான். வைதேகி அழகான பொண்ணு. அவளை நீ கல்யாணம் பண்ணா இந்த ஊருல இருக்குற எல்லோரும் உங்கள பார்த்துச் சிரிப்பாங்க. இப்போ உன்னைப் பிடித்துப் போன வைதேகிக்கு, போகப் போக உன்னைப் பிடிக்காமல் போயிடும்னு தீமா தான் சொன்னான்” என்று தெளிவாக உரைத்தான் ரணதீரன்.
“ம்… சரி, இதுவரைக்கும் வேற என்னவெல்லாம் உங்ககிட்ட தீமா சொல்லிருக்கான்?” என்று வைதேகி
கேட்டாள்.
“தீமா என்னிடம் ரொம்ப பேசுவதில்லை. என்னை அம்மா பெண் பார்க்க அழைச்சிட்டு போகும்பொழுதோ, இல்லை என்னிடம் எந்தப் பெண்ணாவது பேசும் பொழுதோ, அவங்க யாரிடமும் நான் பேசக்கூடாதுன்னு என் காதுல எச்சரித்துக்கிட்டே இருப்பான்” என்றான் ரணதீரன்.
“என்னன்னு சொல்லி எச்சரிப்பாரு?” என்று வைதேகி கேட்டாள்.
“நீ கல்யாணம் பண்ணிக்காதே, நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கும் உன் நிறத்திலேயே குழந்தை பிறக்கும்.
அப்புறம் நீ பட்ட அசிங்கத்தை அந்தக் குழந்தையும் அனுபவிக்கும். அதனால உன் வாழ்க்கையில் இனி கல்யாணமே வேண்டாம்ன்னு தீமா சொல்லுவான்” என்றான் ரணதீரன்.
“அந்த ஒரு நண்பர் மட்டும் தான் உங்களுக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவாரா?” என்று வைதேகி கேட்டாள்
“தீமாவை தவிர மற்ற எல்லோருக்கும் எனக்குக் கல்யாணம் நடந்து குழந்தை குட்டியோட நான் சந்தோஷமா வாழனும்னு தான் ஆசைப்படுவாங்க” என்றான் ரணதீரன்.
“அப்போ நீங்கத் தீமா சொல்லுற மாதிரி கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்களா?” என்ற வைதேகியின் கேள்விக்கு,
“என் அம்மாவுக்காக நான் கல்யாணம் பண்ணி தான் ஆகணும்” என்றான்.
“அப்போ உங்க தீமா உங்களை ஒன்னும் சொல்லமாட்டாரா?” என்ற வைதேகியின் கேள்விக்கு ரணதீரனின் பதில் மௌனமாகத் தான் இருந்தது.
“ரணதீரன்… நான் பேசுறது உங்களுக்குக் கேக்குதா?” என்று வைதேகி மீண்டும் அவனிடம் கேள்வி எழுப்ப, அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான்.
அமைதியாக உறங்கும் ரணதீரனை பார்த்துப் பெருமுச்சுடன், “உங்க மனசுல இவ்வளவு பிரச்சனைகளை வைத்திருப்பதால் தான் பொம்மியை காயப்படுத்திய ஷங்கரையும் நீங்கள் மன்னிக்க மனம் இல்லாமல் தண்டித்து இருக்கிறீர்கள்”என்று தனக்குள் எண்ணிய வைதேகி அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.
இதுவரை அந்த அறையில் ரணதீரனும் வைதேகியும் பேசுவதை கணினிமூலம் பார்த்துக் கொண்டிருந்த மாறன், மாயா, வேலு, பொம்மி ஆகிய நால்வருக்கும் ரணதீரனின் பிரச்சனை என்னவென்று புரியவில்லை.
“வைதேகி…என் தம்பிக்கு என்ன ஆச்சு?” என்று பதற்றத்துடன் கேட்ட மாயாவை, சமாதானமாக அவள் தோளில் தட்டிக் கொடுத்தாள் வைதேகி.
“என்னமா வைதேகி! ஏன் ரணதீரன் என்னென்னமோ பேசுறான்?”என்று மாறனும் கேட்க,”அண்ணா…இதை மருத்துவ ரீதியா பார்த்தால் இந்த
நோய்க்குப் பெயர்
ஸ்கிஸோஃப்ரெனியா.
ஸ்கிஸோஃப்ரெனியாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் யதார்த்தத்தை உணரும் திறன் இழந்து, கற்பனைக் குரல்கள் கேட்பது போல, அதாவது ஆடிட்டோரி ஹால்லுசீனேஷன் மாதிரி யாரோ அவங்கங்கிட்ட பேசுவதைப் போல உணருவாங்க.
தீரா அவருடைய சின்ன வயசுல இருந்து நண்பர்கள் இல்லாமல் வளந்து இருக்காரு, அப்படியே அவரிடம் யாராவது பேசினாலும் அவர் நிறத்தையும் அழகையும் வைத்து இவரைக் கேலி செய்திருக்கிறார்கள். அதனால் இவர் யாரிடமும் ஒட்டாமல் தனித்தே இருந்திருக்கிறார்.
சின்ன வயசுல அவருடைய தனிமை அவரைப் பாதிக்காமல் இருக்க அம்மா அக்கான்னு உங்க கூட அவரு சகஜமா பேசியிருக்கலாம்! ஆனால் பள்ளிப்பருவத்தில் அவருடைய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதற்கு அவருக்கு நண்பன் இல்லாமல் போனதால் தனக்குன்னு அவர் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி இருக்காரு.
அதுமட்டுமில்லாம பக்கத்து ஊர் கோவில்ல ஒரு பொண்ணு இவரை அடிச்சதும், அங்க இருக்கிறவங்க நிறைய பேர் அவருடைய நிறத்தை வைத்துக் கேலி செய்ததையும் அழுது புலம்பக் கூட ஆள் இல்லாமல் அவர் தன்னுடைய 18 வயதில் முதன் முதலில் தன்னையே ஓவியமாக வரைந்து அந்த ஓவியத்திற்கு தீமா என்று பெயர் வைத்து, அந்த ஓவியத்திடம் இவர் நண்பனாகப் பேசித் தன்னுடைய கவலைகளையும் மனக்குமுறல்களையும் பகிர ஆரம்பித்திருக்கின்றார்.
அந்தச் சமயத்தில் இவருடைய மூளை சொன்ன பதில்களை எல்லாம் அந்த ஓவியம் தன்னிடம் பேசுவதாக இவர் நினைத்ததால் அந்த ஓவியத்தைத் தன்னுடைய நண்பனாகவே நினைத்து அந்த ஓவியங்களுடன் வாழ ஆரம்பிச்சி இருக்காரு.
அவருடைய சோகமான மனநிலையில் ஒரு ஓவியம். சந்தோஷமான மனநிலையில் ஒரு ஓவியம். கவலையான மனநிலையில் ஒரு ஓவியம். என்று அவர் உருவத்தையே அவர்கிட்ட தட்ட 10 ஓவியங்களாக வரைந்து அவருடைய அறையில் பத்திரப்படுத்தி, அந்த ஓவியங்களைத் தன்னுடைய நண்பர்களாக அவர்
அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
இப்போ பொதுவா நம்ம ஒரு கண்ணாடி பொருள்மேல் ஆசைப்படும்போது அந்தப் பொருளை வாங்காதே, அது கீழே விழுந்தால் உடைந்துவிடுமுன்னு நம்ம மூளை நமக்கு வலியுறுத்தும்.
அப்படி தான் தீரனுக்கும், அவரே என்னைத் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தாலும், அவரின் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாட்டால்,
நான் அவரைத் திருமணத்திற்குப் பிறகு அழகையும் நிறத்தையும் சுட்டிக்காட்டி அவரிடமிருந்து பிரிந்து விடுவேன் என்று அவர் எண்ணுகிறார்.
அப்படி அவருக்குத் தோன்றும் எண்ணத்தை, தன் நண்பன் தீமா சொல்கிறான் என்று அவரே நினைத்தும் கொள்கின்றார்”என்று வைதேகி சொல்ல, ரணதீரனுக்கு இப்படியொரு பிரச்சனை இருப்பதே தங்களுக்கு தெரியவில்லை என்ற கவலை அனைவருக்கும்
எழுந்தது.
error: Content is protected !!