வந்தாரை வாழ வைக்கும் அழகான சென்னை மாநகரம், அந்த இரவு வேளையிலும் எப்போதும் போல் பரபரப்பாகவே இருந்தது. ஆனால் சென்னை புறநகர் பகுதியில் இருந்த அந்த தெருவே நிசப்தமாக இருந்தது.
அந்த இடத்தில் இருந்த செழிப்பும், பிரம்மாண்டமாக இருந்த வீடுகளுமே அது மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு என்று பறைசாற்றியது. அங்கிருப்பவர்கள் அனைவருமே பணக்காரர்கள். ஒண்டூர் தொழில் அதிபர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் சினிமா துறையில் இருப்பார்கள்.
அதனால் ஒவ்வொரு வீட்டிலும் பணத்தின் செழுமை நன்கு தெரிந்தது. அங்கிருந்த அத்தனை பங்களாவிலும் சற்று பிரம்மாண்டமாக இருந்தது அந்த பங்களா. சுற்றிலும் இருந்த பூச்செடிகளும், பழ மரங்களும் அந்த வீட்டுக்கு மேலும் அழகைச் சேர்த்தது.
மிகப் பிரம்மாண்டமாக இருந்த நுழைவு வாயில், பளபளக்கும் கிரானைட் தரை, தேக்கினால் செய்யப் பட்ட உயரமான கதவுகள், கலைநயமிக்க பொருள்கள் என அனைத்திலும் ஆடம்பரமே.
சுவற்றில் மாட்டப் பட்டிருந்த ஓவியங்களும் புகைப்படங்களும் அந்த வீட்டுக்கு மேலும் அழகு சேர்த்தன. அழகும் பிரம்மாண்டமும் ஆடம்பரமும் ஒருங்கே கொண்டது தான் அந்த வீடு.
அவ்வளவு பெரிய வீடு தனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்பதற்கிணங்க தன்னுடைய அறையில் துவண்டு போய் படுத்திருந்தாள் யுக்தா. இந்த பூர்வீக வீட்டுக்கு சொந்தக்காரி இவள் தான். இந்த வீடு மட்டும் அல்ல. இன்னும் பல தொழில்கள் அவள் பெயரில் உண்டு. இவ்வளவு பணம் இருந்தும் இன்று மட்டும் இல்லை. என்றுமே அவள் பணத் திமிரில் நடந்து கொண்டது கிடையாது.
இப்போதும் சுற்றி இருக்கும் பகட்டும் பணமும் அவள் மனதை சந்தோஷப் படுத்த வில்லை. அவள் முகம் அளவில்லா வேதனையை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அவள் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் அவளுடைய தலையணையை நனைத்தது. கடந்த ஆறு மாதமாக அவள் கண்களில் கண்ணீர் என்பதே வந்த தில்லை.
அவள் கண்களில் கண்ணீரை அவன் வரவிட்டதில்லை. அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். ஆனால் இன்று அனைத்துமே கானல் நீரானது. அனைத்துமே நடிப்பு என்ற போர்வைக்குள் இருந்தது இப்போது தான் அவளுக்கு விளங்கியது. பழைய நிகழ்வுகள் எல்லாம் அவளுக்கு ரணமாக வலித்தது.
மொத்த சந்தோசத்தையும் ஒரெடியாக கொடுத்த கடவுள் அதை அப்படியே பறித்து விடுவார் என்று அவள் கனவா கண்டாள்?
இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் தனக்கு ஏன் எதுவும் ஆக வில்லை என்ற கேள்வி தான் அவளுக்குள் எழுந்தது. ஏனென்றால் உண்மையை கண்டு கொண்டதும் அவளுக்கு மாரடைப்பு அல்லவா வந்திருக்க வேண்டும்?
“அது வரலைன்னா என்ன? நானே என்னோட முடிவைத் தேடிக்கலாமே?”, என்று எண்ணியவளின் மனது அடுத்த நொடி சோர்ந்து போனது.
அவளால் அந்த முடிவை எடுக்க முடியாது. அவள் இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டால் அவனை எப்படி அவளால் காண முடியும்? அவன் இருக்கும் உலகில் அவள் இருந்தாக வேண்டும். அது மட்டுமே அவளுக்கு ஆறுதல். அவன் தவறாக போனாலும் அவள் அவன் மேல் வைத்த நேசம் நிஜம் அல்லவா? அதே நேரம் அவன் செய்த துரோகத்தையும் மறக்கவோ மன்னிக்கவோ அவளால் முடிய வில்லை. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தனக்குள்ளே போராடிக் கொண்டிருந்தாள் யுக்தா.
மாடியில் உள்ள தன்னுடைய அறையில் யுக்தா கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க கீழே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அவளது தந்தை செல்வம் “என்ன பராக்கு பாத்துட்டு இருக்க? அந்த பொரிச்ச மீனை கொஞ்சம் வை. அந்த கறியையும் அள்ளி வை”, என்று அதிகாரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்.
வெறுப்பு சுமந்த முகத்துடன் மீனை எடுத்து அவரது தட்டில் வைத்தாள் அவரது மனைவி தாமரை. மகள் வாழ்க்கையே கேள்வி குறியாக இருக்கும் போது இங்கே கணவன் மீனும், கரியும், நண்டும் என வெட்டு வெட்டு என வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு வயிறு எரிந்தது. “இவனுக்கு நல்ல சாவே வராது”, என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். மனதுக்குள் மட்டுமே அவளால் அவள் நினைத்ததை பேச முடியும்.
வெளியே அவளுடைய வெறுப்பையும் கோபத்தையும் அவளால் காட்ட முடியாது. பாசத்தைக் காட்டுவதற்கு எப்படி உரிமையும் காதலும் இருக்க வேண்டுமோ, அதே போல தான் வெறுப்பைக் காட்டுவதற்கும் ஏதாவது ஒரு உணர்வு இருக்க வேண்டும். ஆனால் தாமரை அவரிடம் எந்த உணர்வையும் எந்த உரிமையும் எடுத்துக் கொள்ள மாட்டாள். அவள் ஒரு வாயிருக்கும் பூச்சி அவ்வளவே. மற்ற படி செல்வம் ஆட்டி வைக்கும் பொம்மை தான் அவள். இன்று நேற்று அல்ல. இருபத்தி மூன்று வருடங்களாக அவள் இப்படி தான் அடிமையாக இருக்கிறாள். அதற்கு முன்னான வாழ்க்கை அவள் மனக் கண்ணில் வலம் வந்தது. அப்படி சொர்க வாழ்வைக் கொடுத்த கடவுள் தான் அதன் பின் நரக வாழ்வைக் கொடுத்துருக்கிறார். தன்னைப் போலவே தன்னுடைய மகளுக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று அவளுக்கு பயமாக இருந்தது.
“எவ்வளவு நாள் கழிச்சு நான் சந்தோஷமா சாப்பிட்டுட்டு இருக்கேன்? நீ என்ன டான்னா வேண்டா வெறுப்பா பரிமாறுற? ஒழுங்கா பரிமாறுறதா இருந்தா பரிமாறு. இல்லைன்னா வேலைக்காரியை வரச் சொல்லு. உன் நினைவு எல்லாம் எங்க இருக்கு தாமரை? ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு இருக்க மாட்டேன். என்ன என் மேல உள்ள பயம் போயிருச்சா?”, என்று செல்வம் கத்த அதற்கு மேல் மகளைப் பற்றி எண்ணாமல் அவர் தட்டில் என்ன குறைகிறது என்று பார்த்து பரிமாறினாள் தாமரை.
அவளுக்கென்று இந்த வீட்டில் இருக்கும் உரிமை செல்வத்தின் மனைவி என்ற பேர் மட்டும் தான். இதில் அவருக்கு உணவு பரிமாற வேலைக்காரி வந்தால் தான் ஒன்றும் இல்லாதவளாகி விடுவோம் என்று தெரிந்ததால் மனதை அடக்கிக் கொண்டாள். அவளுடைய மனதையும் உணர்வுகளையும் அடக்குவது அவளுக்கு பழகிய ஒன்றும் கூட.
செல்வம் சாப்பிட்டு முடித்ததும் அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு அடுப்படிக்கு சென்று விளக்கப் போட்டாள். கை கழுவி விட்டு வந்த செல்வம் “நான் ஒரு முக்கியமான விஷயமா வெளிய போறேன். நீ பாப்பாவை போய் கவனி”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் “பேச்சி இங்க வா”, என்று வேலை செய்யும் பெண்மணியை அழைத்தாள் செல்வி.
மரியாதையாக அவள் முன் வந்து நின்ற பேச்சி “என்னங்கமா?”, என்று கேட்டாள்.
“டைனிங் டேபிளை ஒதுங்க வை”
“அம்மா நீங்களும் சின்னம்மாவும் இன்னும் சாப்பிடலையே?”
“நானும் பாப்பாவும் அப்புறம் சாப்பிட்டுக்குறோம். நீ எல்லாம் எடுத்து வச்சிட்டு உனக்கு வேணுங்குறதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. பிள்ளைங்க பசியோட இருப்பாங்க. இருக்குற நான்வெஜ் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ரு. நாங்க தோசை ஊத்தி சாப்பிட்டுக்குவோம்”
“அம்மா இவ்வளத்தையுமா? நீங்க சாப்பிடவே இல்லையே?”
“சொன்னதை செய் பேச்சி, எதுத்து பேசிட்டு இருக்காத. பிள்ளைங்க பசியோட இருப்பாங்க. பாத்திரம் எல்லாம் நாளைக்கு கழுவிக்கலாம். நீ கிளம்பு”
“சரிங்கம்மா”, என்று சொல்லி விட்டு அவள் சென்றதும் மகளைக் காண அவளுடைய அறைக்குச் சென்றாள் தாமரை. மகளை எண்ணி ஒரு பெருமூச்சு வந்தது அந்த தாயிடத்தில். கிடைத்த சொர்கத்தை கை நழுவி விட்டு வந்த மகளை எண்ணி அவளுக்கு ஆற்றாமையாக வந்தது. ஆனாலும் அவளால் மனது விட்டு எதையும் பேச முடியாது. அப்படி அவள் பேசினால் விளைவுகள் வேறு மாதிரி திரும்பும். அதனால் பல ரகசியங்கள் அவள் மனதுக்குள் புதைந்து கிடக்கிறது. அதை எல்லாம் மகளிடம் சொன்னால் அவள் வாழ்வு காப்பாற்ற பட்டு விடும் தான். ஆனால் அதற்கு பின்…?
லேசாக சாற்றியிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற தாமரை கண்களில் விழுந்தாள் சோகச் சித்திரம் போல இருந்த யுக்தா. அறைக்குள் ஒரு ஆள் வருவதைக் கூட உணராமல் விட்டத்தை வெறித்துப் பார்த்து படுத்திருந்தாள் யுக்தா.
வாடிய மலர்க் கோடி போல் இருந்த மகளைக் காணும் பொது தாமரையின் பெற்ற மனம் பாடு பட்டது. ஆனால் என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறிப் போனாள்.
மகளின் அருகே சென்று கட்டிலில் அமர்ந்ததும் தான் அன்னையைத் திரும்பிப் பார்த்தாள் யுக்தா.
“அம்மா”, என்று சொல்லும் போதே யுக்தாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
மகளின் கண்ணீர் மனதைச் சுட்டாலும் அதற்கு இரங்காமல் “எந்திச்சு சாப்பிட வா யுக்தா. நேரம் ஆச்சு”, என்று சொன்னாள் தாமரை.
“எனக்கு வேண்டாம் மா”
“ப்ச் பண்ணுறதையும் பண்ணிட்டு இப்ப சாப்பிடாம இருந்தா எல்லாம் ஆச்சா? எழுந்து வா. சாப்பிட்டு வந்து நிறுத்தி நிதானமா தெம்பா உக்காந்து அழு”
“அம்மா”
“என்ன டி அம்மா? தேவையில்லாம என் வாயைக் கிளறாத. எந்திச்சு சாப்பிட வா”
“நிஜமாவே எனக்கு பசிக்கலை மா. மனசெல்லாம் வலிக்குது”
“மனசா உனக்கா? அது எங்க உனக்கு இருக்கு? அப்படி மனசுன்னு ஒண்ணு இருந்தா புகுந்த வீட்ல இருந்து கிளம்பி வந்து பிறந்த வீட்ல வந்து உக்காந்துருப்பியா?”