அன்றைய இரவில் வேலை முடிந்து அனைவருமே அறைக்கு திரும்பி இருக்க கரிகாலன் மட்டும் இன்னும் வந்து இருக்கவில்லை.
உணவை பொருத்தவரை மற்ற வேளைகளில் அவரவர் வசதிக்கு ஏற்ப வெளியே பார்த்துக் கொண்டாலும் இரவில் பெரும்பாலும் வீட்டில் தான் எதையாவது செய்துக் கொள்வர்.
எனவே இட்லி ஊத்தும் முன்பு சந்தோஷ்,
“என்னடா.. காலாவை இன்னும் காணும்.. சாப்பிட வருவானா.. இல்லையானு தெரியல.. அவனுக்கும் சேர்த்து ஊத்திட்டு அப்புறம் வரலைனா கண்டிப்பா வேஸ்ட்டா போயிரும்..”
என கேட்டான். தங்கள் சமையல் இலட்சணம் தான் தெரியுமே..!! எதோ பசிக்கு உள்ளே தள்ளினாலும் அளவுக்கு மீறி எல்லாம் எவனும் தொடவே மாட்டான். அதனாலே அவ்வாறு கேட்க,
“ம்ச்.. இதுக்கு மேலே எங்கயாவது தின்னுட்டு தான் வருவான்.. நீ நமக்கு மட்டும் செய் போதும்..”
என்று ப்ரசாத் சொல்ல அருளும் அமைதியாய் கண்டும் காணாமலும் இருந்தான். சற்று நேரத்தில் கரிகாலனிடம் அழைப்பு வந்தது இன்று இரவு தான் வரப்போவது இல்லை என்ற செய்தியுடன்..
பேசி முடித்ததும் அவன் யோசனையாய் இருக்க,
“என்ன டா..” என்று விக்கி கேட்கவும்,
“இன்னைக்கு நைட் காலா வர மாட்டானாம்.. புதுசா சேர்ந்து இருக்க வேலையில் இன்னைக்கு நைட் டியூட்டி போட்டுடாங்களாம்..”
என்று கூறினான்.
“சரி.. அதுக்கு ஏன் உன் முகம் அப்படி போகுது..”
“அடேய்.. மொச புடிக்கிற நாயை மூஞ்ச பார்த்தால் தெரியாது..?? இவன் பகலில் மட்டும் வேலை பார்க்கவே அலுப்பு படும் சோம்பேறி.. இந்த துரை ஓவர்டைம் வேற பண்றேன்னு சொல்றது நம்புற மாதிரியா இருக்கு..”
“அப்போ எங்க போயிருப்பான்னு நினைக்கிற..
“தெரியல டா..”
இவர்கள் பேச்சை கேட்டு உள்ளிருந்து வந்த சந்தோஷ்,
“நான் நினைக்கிறேன்.. அவன் பின்னால சுத்துன ஏதோ ஒரு பொண்ணை உசார் பண்ணிட்டான் போல.. பெரிய இடத்து புள்ளையா இருக்கும்.. அதான் இவன் கையில் பணம் தண்ணீயா செலவாகுது.. இதோ இப்ப கூட அதை பாக்க தான் போயிருப்பான்.. நமக்கு தெரிஞ்சா எதுவும் சொல்வோம்னு கப்ஸா விட்டுனு அலையுது பக்கி..”
என தன் யூகங்களை சொல்ல மற்றவர்களுக்கும் அவனின் கூற்று ஏற்கும் படி தான் இருந்தது.
அருள் மட்டுமே,
‘அடேய்.. அவன் இதுக்கெல்லாம் மேல டா..’ என மானசீகமாய் சொல்லிக்கொண்டு வெளியே,
“பொண்ணு ஏதோ மாட்டி இருக்கு என்றது நிஜமா இருக்கலாம்..”
என ஒத்து ஊதியவன்,
“ஆனா இந்த வேலை விஷயம் மட்டும் உண்மை தான் டா.. ரெண்டு பேரும் சேர்ந்து தான் இன்டர்வியூ அட்டென் பண்ணோம்.. எனக்கு கிடைக்கல.. அவனுக்கு கிடைச்சுடுச்சு.. நல்ல சம்பளம்.. அதை தக்க வைச்சுக்க தான் இந்த ஓ.டி எல்லாம் பண்றான்..”
என எல்லோரும் ஏற்கும் படியான ஒரு கதையை அவிழ்த்து விட அதனை நம்பி கரிகாலன் பற்றி மேலே ஆராயும் எண்ணத்தையும் கைவிட்டனர்.
இங்கே ‘ஓவர் டைம்’ என்று சொல்லி இருந்தவனோ அந்த தங்கும் விடுதி அறையின் சொகுசு மெத்தையில் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். அருகில் கைகளில் முகத்தை புதைத்து கதறும் பெண்ணை சிறிதும் சட்டையே செய்யாமல்..!!
அந்த அறையின் இருள் போலவே அவளின் வாழ்வும் இருண்டு போனதாய் தோன்ற தன் நிலைமையை பொறுக்கவே முடியாமல் கேவி கேவி அழுதாள்.
ஒன்று பின் ஒன்றாய் தான் ஏமாற்றபட்ட நிகழ்வு எல்லாம் அணிவகுத்து நிற்க அங்கேயே புதைந்து மண்ணோடு மண்ணாகிவிட்டால் என்னவென்று இருந்தது.
ஆனால் முடியாதே..! தன்னையே நம்பி இருக்கும் தன் ஆறு வயது குழந்தையை நினைக்கும்போது உயிரையும் விட முடியாதே..!!
தன்னை நரகத்தில் தள்ளிவிட்டு நிம்மதியாய் உறங்கும் கரிகாலனை கோபம் தெறிக்கும் விழிகளோடு பார்த்தவள் பொறுக்க முடியாமல் அருகில் இருந்த பூஜாடியை கையில் எடுத்து அவன் தலையில் உடைக்கும் ஆவேசத்தோடு ஓங்க சரியாய் அக்கணம் அவனின் அலைபேசி சத்தம் இடவும் பயந்து ஜாடியை வேகமாய் அதன் இடத்திலே வைத்து விட்டாள்.
‘ஒரு வேளை அவன் பார்த்து இருந்தால்…’ நினைக்கவே உடலில் நடுக்கம் பிறந்தது.
நல்ல உறக்கத்தில் இருந்த காலன் இரண்டு மூன்று ரிங்களுக்கு பிறகே கண் திறந்தான்.
‘Uni_k_princess’ தான் என்பதால் பெரியதாய் அலட்டிக் கொள்ளாமல் தன் அருகே நடுங்கி அமர்ந்திருந்த பெண்ணிடம் திரும்பி,
“நீ போயிருப்பன்னு நினைச்சேன்.. இன்னும் கிளம்பலையா..??”
என்று கேட்டான்.
“இங்க டென்ஷன்ல மறந்துட்டேன் மா.. அம்மாவிற்கு இப்போ பரவாயில்லை.. ஆனால் இனி டயாலைஸிஸ் தான் பண்ணனும்னு சொல்லிட்டாங்க..”
“நீங்க கவலை படாதீங்க கேகே.. ஆப்ரெஷன் பண்ணி சரி பண்ணிடலாம்.. அப்புறம் பணம் பத்தலைன்னு சொன்னீங்கள்ல.. மனசே கேட்கல.. அதான் இப்ப கொஞ்சம் அனுப்பி இருக்கேன்.. “
“ஹே… போதும்டி.. எதுக்கு நீ மறுபடியும் மறுபடியும் அனுப்புற.. ஏற்கெனவே உன்கிட்ட வாங்கினது ரொம்ப கில்ட்டியா இருக்கு.. வேண்டாம் மா..”
“என்ன இப்படி பேசுறீங்க.. நான் வேற.. நீங்க வேறயா.. உங்க அம்மா மேல எனக்கும் அக்கறை இருக்கு..”
“லவ் யூ யுனி..”
“லவ் யூ டூ கேகே..எல்லாமே நல்லதா தான் நடக்கும்.. ஆப்ரெஷன் பணம் ஏற்பாடு செய்யவும் எனக்கு ஒரு யோசனை தோணுது.. உங்களுக்கு தான் நிறைய ஃபாலோவர்ஸ் இருக்காங்கல்ல.. ஹாஸ்பிடல் ரிப்போர்ட்டோட ஹெல்ப் கேட்போம்.. உங்க மேல அன்பு கொண்டவங்க உங்களோட கஷ்டத்தில் உதவ மாட்டாங்களா என்ன..”
“இல்ல.. இல்ல.. அது சரியா வராது.. என்னோட சிச்வேஷன் எல்லோருக்கும் தெரிய வேண்டாம்.. நான் வேலை பார்க்கிற இடத்தில் அரேன்ஞ் பண்ண பார்க்கிறேன்..”
“சரி கேகே.. அம்மாவை பார்த்துக்கோங்க..”
என்றதோடு அழைப்பை துண்டிக்க முழங்காலை கட்டி அதில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவள் காதில் அந்த உரையாடல் அறையின் அமைதியில் நன்றாகவே கேட்டது..!! கேளாதது போலவே தேம்பலோடு இருக்க பேசி முடித்து அவளை பார்த்தவனும்,
“ம்ச்.. இம்சை..” என்ற முணுமுணுப்போடு மீண்டும் படுத்து விட்டான்.
‘பச்சையாக தெரிந்தது.. அடுத்த பெண்ணை இரையாக்க தூண்டிலை வீசிவிட்டான்..’ என்று..!! விடக்கூடாது.. தன் நிலை மற்றும் ஒரு பெண்ணுக்கு வரவே கூடாது..!!
உடலில் ஒரு பரபரப்பு தோன்றினாலும் என்ன செய்வது என்று யோசித்து அவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல கத்திருந்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்து மெல்ல எழுந்து அருகில் வந்தவள் கரிகாலனின் திறன்பேசியை எடுத்து மெதுவாய் அவனின் விரலை பிடித்து கைரேகை பதிப்பதற்குள் ஏசியையும் மீறி உடல் வியர்த்தது.
‘அவன் முழித்து விட்டால் தன் கதி..’ என்ற பயத்தினில்..!!
கைரேகை உபயத்தில் அது திறந்துக் கொள்ள அவசரமாய் கடைசியாய் அவன் பேசிய எண்ணை குறித்து கொண்டு வேகமாய் அங்கிருந்தே கிளம்பி விட்டாள்.
***
அந்த நீண்ட சாலையில் ஸ்வர்ணாவோடு தன் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தான் தினகரன்.
ஒன்றும் பேசாமல் உர்ரென்று வருபவனை கண்டு,
“டேய்.. முகத்தை அப்படி வைக்காதே தீனா..”
என்று தோளில் தட்டினாள் ஸ்வர்ணா.
லேசாய் திரும்பி முறைத்தவன்,
“பேசாத நீ..! என்னடா இத்தனை நாள் இல்லாம திடிர்னு நீ ஆசைபடுறேன்னு சொல்லி உன்னை இங்க வந்து விட்டு போயிருக்காங்களேன்னு யோசிச்சேன்.. இப்ப தானே புரியுது..”
என்று கடுகடுவென சொன்னாள்.
“நிஜமா தீனா.. நான் கேட்டுட்டே இருந்தேன்னு தான்.. ஒரு வாரம் இருந்துட்டு வான்னு சொல்லி வந்து விட்டுட்டு போனார்..”
“அப்போ.. இந்த பண பிரச்சனை இப்ப திடீர்னு வந்தது அப்படி தானே..”
“ஆமாடா.. நேத்து ஃபோன் பண்ணும் போது சொல்லவும்… நான் தான் என் அக்கவுண்ட்ல இருக்கிற பணத்தை எடுக்கலாம்ன்னு சொன்னேன்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல தீனா..”
என்று அப்பாவியாய் பதிலளித்த ஸ்வர்ணாவை என்ன செய்தால் தகும் என்று தான் நினைத்து இருந்தான்.
அவர் பேசி ஸ்வர்ணா வாயில் இருந்தே வர வைப்பது என்ன அவ்வளவு கடினமா..?!
தினகரனுக்கு தொழில் தொடங்க பணம் தேவைப்பட்டபோது இவர்களிடம் இருந்த மனை ஒன்றை தான் விற்க நேரிட்டது.
அதில் தமக்கை மற்றும் தம்பிக்கு சேர வேண்டிய பங்கை அவரவர் பெயரில் வங்கியில் டெப்பாஸிட் செய்து வைத்திருக்க இந்த சில வருடங்களில் அவை வட்டியோடு ஒரு கணிசமான தொகையில் உள்ளது.
குரு பிரசாத் தன் நண்பனின் ஆலோசனை பேரில் தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய வேண்டி மனைவியிடம் அந்த பணத்தை எதிர்பார்க்கிறான். அதற்காக தான் ஸ்வர்ணாவை மூளை சலவை செய்து அனுப்பி உள்ளார் என்பது தினகரனுக்கு தெளிவாக புரிந்தது. இந்த யோசனையில் அவனுக்கு சற்றும் விருப்பமில்லை.
குரு முன்பே இதுபோல் ட்ராவல் ஏஜென்சியில் போட்ட பணம் மொத்ததையும் இழந்து இருக்கிறார். அதனை ஈடுகட்ட நிறைய பாடும்பட்டதை நேரடியாய் பார்த்து இருக்கிறான். இப்போது மறுபடியுமா என்று தான் இருந்தது. அத்தோடு ஸ்வர்ணாவின் சேமிப்பு மொத்தமாய் கொடுத்துவிட்டு அனைத்திற்கும் அவரின் கையை மட்டுமே எதிர்பார்த்து இருப்பாளா..? என்ற ஆதங்கமும் கூட..!!
அந்த நிறுவனம் பற்றி நிதானமாக ஆராய்ந்து பின்னர் முதலீடு செய்யலாமே என்று அறிவுரை சொல்வும் முடியாது. ஸ்வர்ணாவே முழு மனதோடு சம்மதிக்க தான் தலையிடுவதும் முறையல்லவே..!!
ஆகையால் அவளோடு வந்து உதவுவதை தவிர தினகரனுக்கு வேறு வழி இருக்கவில்லை.
வங்கி வேலை முடியவே மாலையாகி இருக்க மீண்டும் வீடு திரும்பும் வழியில் சாலை ஓரம் நின்றிருந்த கமலினியை முதலில் கவனித்தது ஸ்வர்ணா தான்..
“தீனா.. அங்க நிக்கிறது கமலி தானே..”
என்று ஆர்வமாய் அவள் கைக்காட்ட அவ்விடம் பார்வையை திருப்பிய தினகரனும்,
“ஆமா..” என்றான் அசுவாரஸ்யமாய்..!!
“ஹே.. வண்டியை அவ கிட்ட நிறுத்தேன்.. பேசி ரொம்ப வருஷம் ஆச்சு..”
என்று ஆசையாய் கூற அவளின் ஆர்வம் எதனால் என்று அறிந்தவனுக்கு கடுப்பாக,
“எதுக்கு.. அதெல்லாம் முடியாது..”
என்றாலும் தன்னை போல் பைக் வேகம் குறைந்தது.
“என்ன இப்ப.. ஹெல்ப் தேவைன்னா நீ போய் சரி பண்ணி கொடுக்க போறீயா..”
“ம்ச்.. எப்படியும் உன்னை செய்ய சொல்ல மாட்டேன்.. நிறுத்தேன் டா..”
என்ற அவளின் நச்சரிப்பு தாங்காமல் பைக்கை ஓரங்கட்டினான்.
திடீரென நின்று போன தன் ஸ்கூட்டியை ஆராய்ந்த கமலினி என்னவென்று புரியாமல் உடனே தந்தைக்கு அழைத்துவிட்டு காத்திருந்தாள். வீடுகள் கூட அதிகம் இல்லாத அந்த சாலையில் நிற்கும் கொடுமையை எண்ணி நொந்தவளாய்,
“என்ன குறை வச்சேன் உனக்கு.. இப்படி அத்துவான காட்டில் காலை வாரீவிடுறியே எருமை..”
என சக்கரத்தில் ஒரு உதையை வைத்து நின்றவள் ஸ்வர்ணா கைகாட்டிய அதே நேரம் அவளும் அவர்களை கவனித்து விட்டாள்.
“இவனா..!!! அச்சோ இவிங்க முன்னாடியா இப்படி ஆகணும்.. அவன் மட்டும்னா கண்டுக்காம போயிடுவான்.. கூட ஸ்வர்ணா அண்ணி வேற இருக்காங்களே… பார்க்காத மாதிரியே இருந்துடு கமலி..”
என்று எதிர் திசையில் பார்த்து நிற்க தினகரன் நேராக வந்து அவளுக்கு சற்று தள்ளி நிறுத்தவும் வேறு வழியின்றி, ‘சுத்தம்..’ என முணுமுணுப்போடு அவர்கள் புறம் திரும்பினாள்.
தான் மட்டுமாக இறங்கி அருகில் வந்து,
“கமலினி..” என்ற ஸ்வர்ணாவின் அழைப்பில் அப்போது தான் அவளை பார்த்தது போல்,
“அண்ணி நீங்களா…!! எப்படி இருக்கீங்க..??”
என்று வலிந்து புன்னகைக்க,
“நான் நல்லா இருக்கேன் மா… என்னாச்சு..? வண்டில எதுவும் பிரச்சனையா..?”
என்று வினவினாள்.
என சுருக்கமாய் கமலினி சொல்ல ஸ்வர்ணாவோ நின்று நிதானமாய் அனைவரையும் விசாரித்தாள். முன்பு கமலினியோடு அதிகம் பழக்கம் இல்லை. இப்போது அவளையே தம்பி மனைவி ஆக்கும் ஆசையில் பேச்சை வளர்த்தாள்.
இத்தனை நடுவிலும் தினகரன் கமலினி இருவருமே மற்றவர் இருப்பை கண்டுக் கொள்ளவே இல்லை.
சில நிமிடங்கள் பொறுத்த தீனா,
“அக்கா… கிளம்பலாமா…? ”
என்று கேட்க,
“இரு டா… மாமா வரும்வரை இங்க இவ தனியா நிற்பாளா..?? மாமா வந்ததுமே போகலாம்..”
என்று ஸ்வர்ணா சொல்ல அவளின் அக்கறையில் கமலினி உள்ளம் குளிர்ந்தது.
“இல்ல அண்ணி.. அப்பா இப்ப வந்திடுவாங்க.. பிரச்சனை இல்ல.. நீங்க போகணும்னா போங்க..”
என்றாள் இம்முறை உள்ளார்ந்த புன்னகையோடு..
“அவசரமா போக எல்லாம் ஒரு வேலையும் இல்ல கமலி.. நான் இருக்கேன்…”
என்று கூறவும் முறைத்த தீனா,
“காலைல இருந்து உன்னால எல்லா வேலையும் விட்டு போட்டு அலையிறேன்ல.. நீ பேசுவ தான்..”
என்று சிடுசிடுக்க, “கொஞ்ச நேரம் டா..” என்பது போல் ஸ்வர்ணா கண்களை சுருக்கி பார்க்கவே வேண்டாவெறுப்பாய் பைக்கை அமர்த்திவிட்டு தன் திறன்பேசியை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
மீண்டும் அவளிடம் திரும்பிய ஸ்வர்ணா,
“அது ஒன்னும் இல்ல.. என் மேல கொஞ்சம் கோபத்தில் இருக்கான்.. அதான்..”
என்று பரிந்து சொல்ல அதற்கு கமலினி எதுவும் சொல்லவில்லை.
பதில் சொல்ல வேண்டும் என்று ஸ்வரணாவும் எதிர்பார்க்காமல் தான் வந்தது சென்றது என எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள,
“இவ கிட்ட ஏன் இதை எல்லாம் சொல்றா..”
என்ற அதிருப்தியை காட்ட முடியாமல் தன் தமக்கையை மனதில் வறுத்தெடுத்தான் அவன்.
“எங்களுக்கு குழந்தை இல்லாதது என் அத்தை மாமாக்கு ரொம்ப வருத்தம்.. அதை அவங்க சொல்லி காட்டாத நாளே இல்ல.. ஆனா என் வீட்டுகாரர் என்னை விட்டே கொடுக்க மாட்டார்..!! அவ்வளவு பாசம் என் மேல..!! நான் தான் அவருக்கு எதுவுமே செய்யல.. ஒரு குழந்தை கூட கொடுக்க முடியல.. அதான் அவருக்கு ஏதோ என்னால முடிஞ்சது செய்யணும்னு நினைக்கிறேன்.. அது இவனுக்கு புரியவே மாட்டேங்குது..”
என மென்குரலில் ஸ்வர்ணா கூற கமலினிக்கு இருவரின் மனநிலையுமே புரிந்தது.
“நான் ஒன்னு சொல்லவா..?? உங்க தனிப்பட்ட விஷயத்தில் நான் கருத்து சொல்ல கூடாது தான்.. ஆனா ஒரு சின்ன யோசனை…”
“என்னது கமலி.. சொல்லு..”
“நீங்க சொல்றது மன்த்லீ இன்ரெஸ்ட் வர மாதிரி தானே அண்ணி… அதை உங்க பெயரிலே இன்வெஸ்ட் செய்யலாமே…”
“என் பேர்லயா..?”
“ஆமா அண்ணி.. அண்ணாவிற்கு அந்த நிறுவனத்தில் இன்வெஸ்ட் செய்ய ரொம்ப ஆர்வம்னு சொன்னீங்க.. அண்ணனும் நீங்களும் வேற வேற இல்லையே..!! அவங்களுக்கு பதில் உங்க பெயரிலே இன்வெஸ்ட் செய்யலாம்..!!!
அந்த வரவு மூலம் நீங்க உங்களுக்காக அண்ணனுக்காக.. உங்க குடும்பத்திற்காக என்ன செய்ய விருப்ப பட்டாலும் தாராளமா செய்யலாம்.. உங்களால எதுவும் செய்ய முடியல என்ற எண்ணம் இருக்காது இல்லையா..?”
என்று கமலினி எடுத்து சொல்ல தினகரன் கவனமும் அவளிடம் பதிந்தது. அவனுமே இதனை யோசிக்கவில்லை..!!
“நானே எப்படி கேட்பேன் கமலி..”
என்ற ஸ்வர்ணாவின் குரலில் தயக்கமே விரவியிருந்தது.
தன் திறன்பேசியில் பார்வை வைத்து இருந்தாலும் தினகரனுமே அவள் பதில் என்னவாக இருக்கும் என்று தன்னையும் அறியாமல் செவி சாய்த்தான். முதன்முறையாய் சுந்தரமூர்த்தியின் மகள் என்ற அடையாளம் மறந்து கமலினி என்ற தனி மனுஷியாக கவனிக்க வைத்தது.
அவளின் கையை பற்றிக் கொண்ட கமலினி,
“கேட்கிறதில் தப்பென்ன இருக்கு..? கேட்கலாம்..!! உங்களுக்காக நீங்க சொன்னால் கண்டிப்பா கேட்பாங்க..!! அத்தோட நீங்க பேசுறதை வைச்சே என்னால புரிஞ்சுக்க முடியுது உங்களுக்கும் அவங்களை எவ்வளவு பிடிக்கும்னு… இந்த அன்பைவிட வேற என்ன பெருசா திருப்பி செஞ்சுட முடியும்..!!
என்னையே எடுத்துக்கோங்க.. உடம்பை குறைச்சால் என்ன..?? ஏன் இவ்வளவு குண்டா இருக்கன்னு எக்கசக்கமா கேட்டு இருக்காங்க..
உருவ வேறுபாடு, குழந்தை எல்லாம் நேச்சுரல் ப்ராஸஸ் அண்ணி.. அதில் யாரையும் குற்றம் சொல்ல இங்க உரிமை யாருக்கும் இல்ல.. அதற்காக எல்லாம் நாம குறைஞ்சு போயிட மாட்டோம்.. அப்படி குறை சொல்றவங்க கிட்ட தான் பிரச்சனை..!! அவங்களை எல்லாம் தூசியா ஊதி தள்ளிடனும்…”
என உற்சாகமாய் சொல்ல அவனின் உதடுகளும் மில்லிமீட்டர் வளைந்து புன்னகை சிந்தியதோ..??
அவளின் வார்த்தைகள் கொடுத்த இதம் ஸ்வர்ணாவின் நெஞ்சந்தனை நிறைக்க,
“ஆச்சரியமா இருக்கு கமலி.. நீ பேசுறதை கேட்கவே ஒரு தெம்பா இருக்கு..!! நீ கிடைக்கணும்னு தான் இத்தனை முறையும் என் தம்பிக்கு எல்லா இடமும் தட்டி போச்சு போல.. இப்ப அதற்காக அத்தனை சந்தோஷம் எனக்கு…”
என அகம் நெகிழ தன்னை மறந்து கூறிவிட்டாள்.
ஆனால் அதில் அதுவரை இருந்த புன்னகை மறைய அதிர்ச்சியில் முகம் மாறிய கமலினியையும்,
“அக்கா..” என்று சத்தமாய் அதட்டிய தினகரனையும் கண்டபோது தான் தன் செயலின் வீரியம் புரிந்தது.
உளறிவிட்டோமே என படபடப்பில் ஸ்வர்ணாவின் வாய் குழற,
“அது வந்து கமலி.. தாத்தா தான் அப்படி கேட்டாராம்.. உன்னை தீனாவுக்கு கேட்கனும்னு… எங்க வீட்டிலும் அதில் விருப்பம் தான்.. நானும் அதை நினைச்சு தான் ஏதோ சொல்ல போய்..”
என விளக்கம் அளிப்பதாய் எண்ணி மேலும் பிட்டு பிட்டாய் சொல்லி கமலினியின் இரத்த அழுத்ததை எகிற வைத்தாள்.
கமலினி நின்ற தோரணையிலே ஒரு இறுக்கம் தெரிய அதற்கும் மேல் அவளிடம் பேசவே தயக்கம் எழுந்தது.
அதே சமயம் தினகரனும்,
“அக்கா.. நீ பேசுனது போதும் வா…”
என கடினமேறிய குரலில் கூப்பிட பதட்டத்தோடே அவன் அருகில் சென்று,
“இல்ல டா.. மாமா வரவரை…” என மென்று விழுங்க,
“ஏறு..”
என்ற கட்டளையை மீற முடியாமல்,
“போயிட்டு வரேன் கமலி..” என விடைப்பெற்று அவன் பின்னே ஏறி அமர்ந்தாள்.
கமலினியிடம் மெளனம்.. மௌனம் மட்டுமே..!! கோபம் கொள்ளவோ கேள்வி கேட்கவோ முனையவில்லை. கிளம்புகிறேன் என்று அவள் சொன்னதற்கும் பதில் இல்லை.
பைக்கை இயக்கி நகர்ந்தவன் விழிகள் முதல் முறையாய் அவளின் விழியோடு சந்திக்க கணப் பொழுதில் அங்கே பரிமாறப்பட்ட உணர்வின் தாக்கம் இரு நெஞ்சங்களிலும் சின்ன அதிர்வை கொடுத்தது என்னவோ உணமை தான்.