“நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை.. தயவு செய்து பின்னர் முயற்சிக்கவும்..”
இருபத்தி நான்காவது முறையாய் அவளுக்கு அழைத்தும் இதே பதிலை கேட்க கரிகாலன் நாடி நரம்பெல்லாம் சூடேற முகமோ கன்றி சிவந்து இருந்தது. கணக்கில்லாமல் ஊதி தள்ளிய வெண்சுருட்டு துண்டுகள் அவன் காலை சுற்றி அலங்கோலமாய் கிடக்க அதனை மேலும் அலங்கரிக்க மற்றுமொறு வெண்சுருட்டை பற்ற வைத்த அதே சமயம் சற்றும் குறையாத வேகத்தோடு மீண்டும் அவளை அழைக்கவும் தவறவில்லை.
மனமோ சில நாட்களுக்கு முன் அவர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தில் போய் நின்றது.
“நீ சொல்றது உனக்கே பைத்தியக்கார தனமா தெரியலையா டி.. நான் அப்படி எல்லாம் செய்யறவனா..?? இதைவிட கேவலமா என்னை அசிங்கப்படுத்தவே முடியாது…”
“நானா உங்களை பத்தி அப்படி சொன்னேன்.. அந்த பொண்ணு சொன்னதை தான் உங்ககிட்ட கேட்கிறேன்.. நீங்க அந்த பொண்ணை பழகி ஏமாத்திட்டீங்கன்னும் உங்களால அந்த பொண்ணு எல்லாத்தையும் இழந்துட்டதாகவும் கதறும் போது எனக்கு ஒரு நிமிஷம் எல்லாமே ஆடி போயிடுச்சு.. இன்னும் என்ன எல்லாமோ.. அவ பேசினதை உங்க கிட்ட திருப்பி சொல்ல கூட என் நாக்கு கூசுது.. என் நிலைமையில் இருந்து யோசிச்சு பார்த்தீங்களா..?”
அவளும் அழுகையும் கோபமுமாய் பேச அவனுக்குள் பதற்றமும் சின்ன பயமும்
ஆர்பரித்தாலும் குரலில் அதனை காட்டாமல்,
“என்னை பத்தி யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? எனக்கு என் கரிகாலனை தெரியும்ன்னு உறுதியா பதில் சொல்லி இருந்தால் நான் உன்னை நினைச்சு பெருமைபட்டு இருப்பேன்.. ஆனால் நீ என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்க..? அவ்வளவு தான் என்மேல நீ வைச்சு இருக்க நம்பிக்கை இல்ல..”
என மனம் உடைந்து போனவனாய் வருத்தம் போல் கூறி அவளையும் குழப்பிவிட்டான்.
“நம்பாம இல்ல கேகே.. ஆனா அந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லணும்.. அதனால் என்ன லாபம் அவளுக்கு இருக்க போகுது.. இந்த மாதிரி விஷயத்தில் கூடவா ஒரு பொண்ணு பொய் சொல்ல முடியும்..?? அதுவும் அவ அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்ஸ் எல்லாம்…!!!!
ப்ளீஸ்.. உன்னை என் உயிரே நேசிக்கிறேன்… உண்மையை சொல்லு கே.கே.. நீ என்னை ஏமாத்தல தானே..”
என அழுகையோடு தட்டு தடுமாறி கூறியவள் இறுதி வரியில் உயிர் உருக கெஞ்சலாய் கேட்க அதில் எந்த மனிதனுக்கும் குற்றவுணர்வு கொன்று இருக்கும்..!! ஆனால் மனித உருவில் உலவும் இவ்வகை அற்ப உயிரினங்களுக்கு எந்த வருத்தமும் எழ வாய்ப்பில்லை.
“உன்னை விட அதிகம் உன்னை நேசிக்கிறவன்டி நான்… எவளோ சொல்றான்னு என்னை குற்றவாளி கூண்டில் ஏத்துற…!!! நல்லா கேட்டுக்கோ..
நான் பெரிய செலிப்ரிட்டி இல்லைனாலும்.. என்னை பிடித்தும் ஒரு கூட்டம் இருக்காங்க.. அதில் பொண்ணுங்களும் அடக்கம்.. இது உனக்கும் தெரியும் தானே..!! அவங்கள்ல சில பேர் என் மேல கொண்ட அதீத அன்பில் லவ் பண்ண சொல்லி நிறைய டார்ச்சர் சந்திச்சு இருக்கேன்… உன்கிட்ட சொன்னால் கவலை படுவேன்னு தான் இதை எல்லாம் குறிப்பிட்டது இல்ல..
அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தான் புரியுது…
எத்தனையோ பொண்ணுங்க சுத்தி வந்தும் என் மனசு உன்னை மட்டும் தான் நேசிக்குதுடி.. ரொம்ப தொல்லை குடுக்கும் சில பொண்ணுங்க கிட்டயும் அதை சொல்லி கூட இருக்கேன்…
அவங்கள்ல யாரோ தான் உன்கிட்ட இந்த மாதிரி பேசி நம்மை பிரிக்க நினைச்சு இருக்காங்க… நீயும் அதுக்கு இரையாகிட்டேல.. ஸ்க்ரீன்ஷார்ட் எல்லாம் எடிட் பண்றது ஒரு விஷயமா.. ம்ச் போடி..”
என அவன் போட்டபோடில்,
“ஹே.. எனக்கு உன்னை தெரியும் டா.. ஆனாலும் இதை எல்லாம் கேட்டதும் நான் ஒரு மாதிரி ஆகிட்டேன்.. ஸாரி..”
என இறங்கி வர கோணலாய் ஓர் சிரிப்பு அவன் இதழில் குடிகொண்டது.
” மறுபடியும் யாரும் எதுவும் சொன்னாங்கன்னு என்னை சந்தேகப்படாதே..”
என கண்டிப்பாய் சொல்லி,
“எப்படி உன்னை கான்டக் பண்ணாங்க.. ஃபோன்லையா.. இன்ஸ்டாலயா… சொல்லு.. உன்னையே தப்பா யோசிக்க வைச்ச அவளை நான் உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்..”
வன்மத்தோடு வினவ,
“வேண்டாம் கேகே.. இனி நான் உறுதியா இருப்பேன்.. யார் என்ன சொன்னா என்ன.. விடு.. அந்த பொண்ணுகிட்ட மறுபடியும் நமக்கு எந்த தொடர்பும் வேண்டாம்..”
என்று அதனை முடித்துவிட்டாள். ஆனால் இப்போது வரை அவனால் அப்படி விட முடியவில்லை. யார் யார் என்று அவன் மூளை கொதித்து நின்றது.
அதுவும் இப்போது எல்லாம்
Uni_k_princess முன்பு போல் பேசாததாய் தோன்றியது.. இதுவரை எந்த பெண்ணிடமும் அவனாக வெளியிடாத வரை மாட்டியது இல்லை.. ஆனால் முதல்முறை சந்தேகத்திற்கு ஆளானது மிக உளைச்சலை கொடுக்க அந்த அலைபேசி பெண்ணை யுனி நம்புகின்றாளோ..? என சந்தேகம் வந்தது.
இருப்பத்தி ஒன்பதாவது அழைப்பில் ஒருவழியாய் அவள் அழைப்பை ஏற்க இருந்த கடுப்பில் எடுத்த மறுநோடி கொச்சையாய் ஒரு வார்த்தையில் திட்டிவிட,
“கே.கே…”
என அதிர்ந்தாள் அவள்..
“ம்ச்.. எத்தனை தடவை கூப்பிடுறது.. என்ன டி பண்ணிட்டு இருந்த..”
“டென்ஷனில் ஒன்னு ரெண்டு வார்த்தை விடுறது தான்.. அதெல்லாம் ஒரு விஷயமா..?? ஃபோன் அடிக்க அடிக்க எடுக்கலைன்னா எவ்வளவு டென்ஷன் ஆகிட்டேன் தெரியுமா.. கெஸ்ட் இருந்தால் என்ன.. ஒரு வார்த்தை பேசிட்டு போகலாம் ல..”
என அப்பவும் தன் பக்கமே தூக்கி நிறுத்தி கோபமாய் கூறினான்.
“பேச முடியாத சிச்வேஷன் கே கே..”
“உண்மையாவே அது தானா.. இல்லை என்னை அவாய்ட் பண்ண நினைக்கிறீயா..?”
“உளறாதீங்க… நான் ஏன் அவாய்ட் பண்ணனும்..”
“அந்த பொண்ணு சொல்றதை நம்பி தானே என்னை அவாய்ட் பண்ற.. அவளை நம்புவதால் தான் அந்த பொண்ணு யார்னு கூட என்கிட்ட மறைக்கிற.. நீயே என்னை நம்பலைன்னா.. நான் செத்துடுவேன்டி..”
“அய்யோ.. நான் அவளை எல்லாம் மறந்தே போயிட்டேன் கேகே.. இன்னுமா அதை நினைச்சுட்டு இருக்கீங்க.. அந்த பொண்ணு கால் பண்ணி இருந்த நம்பரை கூட ப்ளாக் பண்ணி டெலீட் பண்ணிட்டேன் தெரியுமா..??”
என அவள் கொடுத்த விளக்கத்தில் மனம் சற்றே சாந்தி அடைந்தது.
“அந்த கவலை எல்லாம் தேவையில்லாதது கேகே.. விடுங்க.. இப்ப கால் பண்ணி இருந்தீங்களே.. எதுவும் அவசரமா..??”
அவளின் நம்பிக்கையில் சமாதானம் அடைந்து,
“அவசரம்ன்னா தான் உன்னை கூப்பிடனுமா என்ன..? சும்மா பேச தான் கூப்பிட்டேன்..”
என்றான் வழக்கமான செல்ல குரலில்..
“அடப்பாவி..இதுக்கா கால் மணி நேரத்தில் முப்பது தடவை அடிச்சீங்க.. நான் இந்நேரம் வீட்டில் தான் இருப்பேன்னு தெரியும்ல.. அப்புறம் ஏன் இப்படி..? நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்..”
“அந்த அளவுக்கு நான் உன்மேல் பைத்தியமா இருக்கேன் யுனி.. நான் கூப்பிட்டு நீ பேசலைனா என்னவோ ஆகுது.. எந்த சிச்வேஷனா இருந்தாலும் என் கால் வந்தால் உடனே எடுத்திடனும் ஓகே.. இல்லைனா உன் ஆளு தவிச்சு போயிடுவேன்..”
கொஞ்சலாய் அவன் ஏற்றிய ஊசியில் காதல் போதை கொண்டு மயங்கிய பெண்ணவளுக்கு,
காரணமே இல்லாமல் ஒருவருக்கு இத்தனை முறை அழைத்து அவர் உடனே எடுத்தாக வேண்டும் என வெறிக் கொள்ளும் மனப்பான்மை சைக்கோதனமே அன்றி காதலோ பாசமோ இல்லை என எப்படி விளங்க வைப்பது..?
அவளோடு அளவளாவி காதல் (!?) லீலையை முடித்து அமர்ந்தவன் சற்று நிதானமாய் சிந்திக்க சட்டென்று தலையில் பொறித் தட்டியது.
‘யுனி..’யை அவனை தவிர யாருக்கும் தெரியாது அருள் உட்பட..!!! பொதுவாக அவன் பழகும் பெண்களை தன் தோழி என்ற அளவில் கூட பொதுவெளியில் குறிப்பிடாமல் கவனம் காப்பான். அப்படி இருக்க அவளின் அலைபேசி எண் வரை எடுத்து தன்னை பற்றி போட்டு கொடுத்திருக்க வேண்டும் எனில்..’ என்ற பாதையில் சிந்திக்கும் போது தான் அந்த விடுதி பெண் நினைவில் வந்தாள்.
ஆம்..!! அன்று அவளோடு இருந்தபோது யுனி உடன் பேச நேர்ந்தது. அதனை அவளும் கேட்டு இருப்பாள் அல்லவா..??
ஒன்றும் ஒன்றும் இரண்டு என எல்லாம் விளங்க சத்தமாய் கெட்ட வார்த்தைகளில் விளித்து,
‘எவ்வளவு கொழுப்பு அவளுக்கு.. இத்தனை நடந்த அப்புறமும் என்னை சீண்ட நினைச்ச இல்ல.. இனி கரிகாலன் யார்ன்னு புரிய வைக்கிறேன்..’
என குரோதமாய் எண்ணிக் கொண்டது. திரை மறைவில் ஒழிந்து பெண்களின் அந்தரங்கத்தில் மட்டுமே தன் வீரத்தையும் காட்டும் அந்த ஈன பிறவி..!!
***
மறுநாள் அக்கா தங்கை இருவரும் ஆதவன் வீட்டிற்குச் சென்றபோது ஆறுதல் சொல்கிறேன் என பாக்கியமோ முகிலனோ சந்தியாவோ நடந்தவையை கிளராமல் இயல்பாய் பேசியதே பெரிய ஆறுதலாய் இருந்தது அவளுக்கு..!! ஆதவனின் நல்ல நேரம் அப்போது அவன் வீட்டில் இல்லை.
சிறிது நேரத்தில் முகிலனும் அலுவலகம் கிளம்பிவிட தாத்தாவுடன் பேத்திகள் மட்டுமே அமர்ந்து இருந்தனர். கமலினி பொதுவாகவே பேசிக் கொண்டிருக்க அனன்யா தான்,
“அங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு.. இங்க ஹாயா உட்கார்ந்து புக் படிச்சுட்டு இருக்கீங்க நீங்க…”
என ஆதங்கமாய் கேட்டு வைத்தாள். அதற்கு மெல்லிய புன்னகையை சிந்திய சுப்ரமணியம்,
“நான் சொல்லாம கொள்ளாம கண்காணாத தூரம் போயிட்டேனா என்ன..?? இங்க தான் இருப்பேன்னு தெரியும் தானே.. அப்புறம் ஏன் தவிக்கணும்..?!”
என கேலியாய் கேட்க,
“ஈஸியா சொல்லிட்டீங்க தாத்தா.. ஆனா எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..? இந்த கமலு எப்பவும் அழுதுட்டே இருக்கா..!! சரியா சாப்பிடுறது கூட இல்ல… எல்லாம் உங்களால தான்…”
என அனன்யா சொல்லவும் முகம் வாடி அமர்ந்திருந்த பெரிய பேத்தியை கனிவுடன் பார்த்தார்.
“என்ன கமலி.. என் மேல ரொம்ப கோபமா இருக்கீயோ..”
” கோபம் இல்லாம எப்படி இருக்கும்..? இவ்வளவு பிரச்சனை பண்ணும் முன்னாடி என்னை நீங்க யோசிக்கவே இல்லல..”
அப்போதும் புன்னகை மாறாது,
“யோசிக்காம எதுவும் செய்யிற ஆளா உன் தாத்தன்.. உன்னோட நலனுக்காக யோசிச்சு தான் நான் இந்த முடிவு எடுத்ததே..”
என்று வாஞ்சையாய் சொல்ல,
“எது.. அந்த தினகரனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது தான் என் நல்லதா..?? சும்மா சொல்லாதீங்க தாத்தா.. அப்பா அவங்க கல்யாணத்தை நிறுத்திட்டார்ன்னு கில்டில தானே இந்த முடிவு எடுத்தீங்க.. ஆனா இதில் எனக்கு விருப்பம் இருக்குமா நீங்க கேட்கவே இல்லை..”
என தன் மனதின் வேதனையை வார்த்தையில் கொட்ட,
“ம்ம்… உன் அப்பன் தான் இப்படி கிறுக்குதனமா யோசிப்பான்… நான் இல்ல..”
என்று நக்கலாய் சுப்ரமணியம் கூறவும், “தாத்தா..” என கமலினி, அனன்யா இருவரும் முறைத்தனர்.
“பின்ன..?? நான் நினைச்சா உங்க அப்பன்காரன் எதனால் இப்படி எல்லாம் பேசினான்னு அந்த பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு எடுத்து சொல்லி.. அதே பொண்ணையே பேசி முடிக்க வைச்சு இருப்பேன்.. அந்த எண்ணத்தில் தான் நான் அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போனதே..!! ஆனா அங்க போன பின்னாடி என் எண்ணமே மாறி போயிடுச்சு..”
என விளக்கமாய் சொல்லி வந்தவர்,
“என் கல்யாணம் எல்லாம் உங்க விருப்பம் தாத்தான்னு முன்ன நீ சொன்னதை தான் நான் எடுத்துக்கிட்டேன்.. இப்ப அந்த மனநிலை மாறிடுச்சோ..?”
என கேட்க,
“சொன்னேன் தான் தாத்தா.. அதுக்குன்னு நீங்களும் அப்பாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தால் நான் என்ன செய்வேன்.. அத்தோட எனக்கு.. எனக்கு அந்த தினகரனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல..”
என்று இயலாமையோடு தன் நிலையை வெளிப்படுத்த அவளை கூர்மையாய் பார்த்தவர்,
“ஏன் மா.. தீனாவை உனக்கு பிடிக்கலையா..?” என்று கேட்டார்.
“அப்பாவுக்கு அவரை கண்டாலே ஆகாது..!! அப்புறம் எனக்கு மட்டும் எப்படி பிடிக்கும்..”
“இங்க பார் கமலி.. எப்பவுமே இன்னொருத்தர் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு மனுஷனை எடை போடவே கூடாது..!! அதுவும் சுந்தரம்,
தீனா சாதாரணமா தும்மினால் கூட அதில் குற்றம் கண்டு பிடிப்பான்.. அதனால உங்க அப்பாவை தள்ளி வைச்சுட்டு தனிப்பட்டு அவனை பிடிக்காம இருக்க ஏதாவது ஒரு காரணம் சொல்லு.. நான் ஒத்துக்கிறேன்…”
என அழுத்தமாய் சொல்ல கமலினியும்
காரணம் சொல்லவேண்டி வேக வேகமாய் யோசித்தாள். ஆனால் தந்தை தவிர்த்து அவனை குறித்து குறை என்று சொல்ல அவளுக்கு எதுவும் வரவில்லை. சுற்றி சுற்றி அப்பாவை வெறுப்பவன், அப்பாவிடம் திமிராக நடப்பவன் என்பதில் வந்தே நிற்க இவற்றை தள்ளி வைத்து மண்டையை பிழிந்து யோசித்தால் சட்டென்று சாலையில் கடந்து சென்றபோது அவன் வீசிய ஆழ்ந்த பார்வை மனக் கண்ணில் விருட்சமாய் விரிய திடுக்கிட்டு விழித்தாள். அப்பார்வை அவளில் ஆழ பந்திந்து இருப்பதை அக்கணம் வரையில் அவள் உணரவே இல்லை.
“அம்மாடி… என்ன அமைதியாகிட்ட..?”
என சுப்ரமணியம் அவளை அசைக்க இமைக் கொட்டி தன்னிலை வந்தவள்,
“என்ன சொல்றதுன்னு தெரியலை தாத்தா..!! தனிப்பட்டு அவரை பத்தி யோசிக்க எனக்கு ஒன்னும் இல்ல.. ஆனா எனக்கு அப்பா தானே எல்லாம்.. அவருக்கு பிடிக்காத ஒருத்தரோட கல்யாணம் முடிஞ்சு காலம் பூரா என்னை இரண்டு பக்கமும் அல்லாட சொல்றீங்களா..? அதுக்கு நான் கல்யாணம் பண்ணாமலே நிம்மதியா இருப்பேன்..”
என இந்த திருமணத்தால் எழும் நடைமுறை சிக்கலை கேட்டாள்.
அவள் காரணமாய் மகேஷை ஒப்பிட்டு எதுவும் கூறுவாளோ என்று சிவசுப்ரமணியம் நினைத்து இருந்தாள். ஆனால் வந்ததில் இருந்து அவர்களை குறித்து அவள் ஒன்றுமே சொல்லாததையும் அவர் மனம் குறித்துக் கொண்டது..!!
உண்மையில் மகேஷை பற்றி எல்லாம் அவள் நினைக்கவே இல்லை. அவளை பொறுத்தவரை நேற்று சிவசுப்ரமணியம் மறுத்து சொன்னதோடு அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. மீண்டும் அந்த விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை என உறுதியாய் நம்பினாள். ஆனால் அதே நம்பிக்கையோடு தினகரன் விஷயத்திலும் அப்படி எளிதாக விட முடியவில்லை. நடந்துவிடுமா என உள்ளூரும் படபடப்பு பல கோணலில் சிந்திக்க வைக்க அதன் விளைவே இப்படி கேட்க வைத்தது.
“இது தான் உன் பயம்ன்னா நான் சத்தியம் பண்ணி சொல்லுவேன்.. தீனா உன்னை அப்படி ஒரு நிலையில் நிறுத்தவே மாட்டான்..
உனக்கு தெரியுமா இப்ப வரை உங்க அப்பா பண்ணின எதுவுமே அவன் வீட்டில் தெரியாது.. அவன் மறைச்சுட்டான்.. ஏன்னு கேட்டால்,
‘பிரச்சனை பெருசாகும்.. இவர் உறவும் இல்லாம போயிட்டால் அப்பா வருத்தபடுவாங்கன்னு..’ சொல்றான்..!! அப்பாவோட சொந்தம்ன்னு யோசிக்கிறவன் பொண்டாட்டிகாக யோசிக்காமல் இருக்க மாட்டான்..
சுந்தரமும் இப்ப அகந்தை புடிச்சு பண்றான்.. நாளைக்கே தீனாவை மருமகனா ஏத்துக்கிட்ட அப்புறம் அவனோட உள்ளார்ந்த குணம் புரியும்.. அப்ப உணர்வான் தன் அப்பன் பண்ணினது சரி தான்னு..”
என்று மிக உறுதியாய் கூறி அவளுக்கு மூளை சலவை செய்யும் பணியை செவ்வனே செய்து முடிக்க கமலினி முகத்தில் குழப்பம் விரையோடியது..!!
கமலினி அமைதியானதும்,
“சரி… நீங்க என்ன செய்யிறதா இருந்தாலும் அங்க இருந்தே பேசுங்களேன்.. ப்ளீஸ் தாத்தா.. நீங்க இல்லாம நல்லாவே இல்ல.. திரும்பி வந்துடுங்க..”
என்று அனன்யா மீண்டும் தொடங்க அதுவரை மௌனமாய் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்த அபூர்வா,
“அடிங்.. என்ன சும்மா தாத்தாவை கூட்டிட்டு போறதிலே குறியா இருக்க.. தாத்தாவே இப்ப தான் மனசு வந்து தங்கி இருக்கார்.. அப்படி எல்லாம் விட மாட்டேன்.. இங்க எங்க கூட தான் இருப்பாங்க.. உனக்கு பார்க்கணும்னு ஆசையா இருந்தால் இங்க வா மேன்..”
என அலட்டலாய் கூற அவளை முறைத்து, “பாருங்க தாத்தா…” என சிணுங்கிய அனன்யாவிடம்,
“வரேன் ராஜாத்தி.. சீக்கிரமே வரேன்..”
என்று சிரிப்போடு சொல்லி ,
“கமலி.. நீ அதிகமாக மனசை போட்டு குழப்பிக்காத.. நடப்பது எல்லாம் நன்மைக்கு தான்.. சரியா..”
என அவளையும் ஆறுதல் படுத்திவிட்டு மீண்டும் தன் புத்தகத்தை விரித்து அதில் கவனமாகிவிட இங்கே இளசுகளின் பேச்சு மேலும் தொடர்ந்தது.
“இந்தா ஜிமிக்கி கம்மல்.. நீ இம்புட்டு யோசிக்க எங்க தீனா மாமா என்ன உனக்கு இளப்பமா போயிட்டாங்களா..??”
அபூர்வா சண்டையிடும் தொனியில் வரிந்துக் கொண்டு கிளம்ப,
“நீயும் ஆதி மாதிரி அவங்களையே தலையில் தூக்கி வச்சுக்கோ.. எல்லாம் அவன் ஆரம்பிச்சு வைச்சது.. என் கையில் மட்டும் சிக்கட்டும்..”
என்று பல்லை கடித்து கமலி உரைக்க அவள் எதற்கு சொல்கிறாள் என புரியாது,
“ஆதி அண்ணாவை ஏன் குறை சொல்ற.. இந்த விசயத்தில் நான் அவன் பக்கம் தான்.. தினகரன் மாமா ஜாக் ஃப்ரூட்
மாதிரி.. வெளியே முரடா இருந்தாலும் உள்ள அவ்வளவு ஸ்வீட்..!! தெரிஞ்சுக்கோ..”
“ஒன்னும் தெரிஞ்சுக்க வேண்டாம்.. அவ தான் பிடிக்கலை ன்னு சொல்றா இல்ல.. விடுங்களேன்..”
என்று அனன்யா தன் தமக்கைகாக பரிந்துவர
“அவளுக்கு பிடிக்கலைன்னு எப்ப சொன்னா..? சித்தப்பாக்கு பிடிக்கலைன்னு தானே சொன்னா..”
என அபூர்வா சொல்லவும்,
“அடேய்.. இருக்கிற பிரச்சனையில் இந்த கொசு தொல்லை வேற.. முதல்ல அடுத்த மாசம் வர்ற செமஸ்டர் பத்தி கவலைபடு.. அப்புறம் அக்கா கல்யாணம் பத்தி கவலை படலாம்..”
என்றாள் அதட்டலாய்.. ஆனால் அபூர்வாவோ அதற்கும் அடங்காமல்,
“கவலைப்படாம இருக்க முடியாதே கம்மல்.. இன்னும் எத்தனை நாள் தான் நீயும் முரட்டு சிங்கிளா இருப்ப.. உனக்கு கல்யாணம் காட்சி எல்லாம் நடந்தா தானே நாங்க ஜாலியா என்ஜாய் பண்ண முடியும்..”
என கண்சிமிட்டி சொல்ல அதே நேரம் அவளின் கையில் இருந்த அலைபேசி இசைத்தது. திரையை பார்த்தவள் அப்படியே சைலன்டில் போட்டுவிட்டு நிமிர அவளை கிண்டலாய் நோக்கிய அனன்யாவை கண்டதும் அடங்கி அசடு வழிந்தாள்.
அதில் அனன்யாவின் சிரிப்பு அதிகமாக,
“இவ எப்படி என்ஜாய் பண்ணுவான்னு எனக்கு தெரியுமே..”
என்றுவிட்டு கண்ணாலே சொல்லவா என்பது போல் மிரட்டவும்,
என்று சந்தேகமாய் இருவரையும் பார்த்து கேட்கவும் அபூர்வாவே முந்திக் கொண்டு,
“நம்ம வீட்டு கல்யாணம் என்றாலே என்ஜாய்மண்ட் தானே.. இது ஒரு விஷயமா..?? ம்ம்.. அம்மா கூப்பிடுறா மாதிரி இல்ல.. அனேகமா ஸ்நாக்ஸ் செஞ்சு வைச்சு இருப்பாங்க… அனு வா.. போய் எடுத்துட்டு வந்திடலாம்..”
என படபடப்பாய் பொரிந்துவிட்டு அனன்யாவையும் இழுத்துக் கொண்டு உள்ளே ஓடிவிட தனக்கு இருக்கும் தலைவலியிலில் இவற்றை கமலினியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.