மண்டபத்தில் இருந்து நேராக வீட்டிற்கு சென்ற வர்ணிகாவின் நிலையை யாரும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. ஆங்காரமாக அனைத்தையும் கழற்றி எறிந்தாள்.
“இப்ப என்ன நடந்திடுச்சுன்னு இப்படி பண்ற வர்ணி. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். மாப்பிள்ளையைப் பார்த்தா ரொம்ப நல்லவராத்தான் தெரியுது..” என்றார் வினிதா.
“அம்மா..! ப்ளீஸ்..! இதுக்குமேல அவன் கிட்ட போய் யாரும் பேசக் கூடாது. என்ன தைரியம் இருந்தா அப்படி பேசுவான்..? அவனை, நீங்க எல்லாரும் தான் பெரிய தியாகி ரேஞ்சுக்கு பேசுனிங்க. இப்ப பார்த்திங்கல்ல..கழுத்துல தாலியைக் கட்டுன அடுத்த நிமிஷம், அவன் இஷ்ட்டப்படி ஆடணும்ன்னு நினைக்கிறான். அவன் என்ன,எனக்கு வாழ்க்கை குடுக்குறது? இப்போ சொல்றேன், எனக்கு அவன் தேவையில்லை..!” என்றாள் உறுதியாக.
“ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு வர்ணி. வேணும்ன்னா வச்சிக்கிறதுக்கும், வேண்டாம்ன்னா தூக்கிப் போடுறதுக்கும் வாழ்க்கை ஒன்னும் பொருள் கிடையாது வர்ணி..” என்று வினிதா எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயன்றும் அது எதுவுமே அவள் காதில் விழவில்லை.
“அம்மா, அதுக்காக அவர் அப்படி பேசினப் பிறகும் கூட, எங்கக்காவுக்கு வாழ்க்கை குடுங்கன்னு சொல்லி அவர் கால்ல விழணுமா…?” என்று ஸ்ருதி கடுப்பில் பேச,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் வினிதா. வர்ணி நீ போய் ரெஸ்ட் எடும்மா..” என்றார் ராஜேஷ்.
“என்னங்க பேசுறிங்க நீங்க..! கல்யாணத்துக்கு வந்த நம்ம சொந்த பந்தமெல்லாம் என்ன நினைக்க மாட்டாங்க..இவளை இப்படி பார்க்கத் தான் ஆசைப் பட்டோமா..?” என்று வினிதா ஆதங்கத்தில் கண் கலங்கினார்.
“விஷயத்தை கொஞ்ச நாள் ஆறப் போடுவோம்ன்னு சொல்றேன். நான் நினைச்சா இன்னைக்கே அவனை இங்க வர வைக்க முடியும். வர்ணி சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான் பேசாம இருக்கேன்..” என்று ராஜேஷ் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
தன்னுடைய அறைக்குள் சென்ற வர்ணிகாவிற்கு அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் எல்லாம் அழுகையாய் வெடிக்க, கண்ணீர் ஓயும்மட்டும் அழுது தீர்த்தாள்.
‘எதுக்கு அழற வர்ணி..? நீ எதுக்கு அழனும்.? உன்னை வேண்டாம்ன்னு சொன்ன அவன் தான் அழனும். எனக்கொன்னும் பிறவியில இருந்தே பார்வை இல்லாம இல்லையே. இடைல நடந்த அந்த ஆக்சிடென்ட்டால தான இப்படி ஆச்சு. கூடிய சீக்கிரம் இதுவும் சரியாகிடும். அவனென்ன என்னை வேண்டாம்ன்னு சொல்றது. எனக்கு அவன் வேண்டவே வேண்டாம். உன்னைப் பார்க்க முடியலைன்னு நான் ஏங்கியிருக்கேன்டா. ஆனா, இப்போ உன்னைப் பார்க்காம விட்டதுக்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்…’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
இந்த விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாத வெற்றியோ அங்கே வீட்டில் இன்னமும் குறையாத கோபத்துடன் அமர்ந்திருந்தான்.
“நீங்க என்கிட்டே இந்த விஷயத்தை முன்னாடியே சொல்லியிருந்தா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதும்மா. ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்த குற்ற உணர்ச்சி, என்னைய கொல்லாம கொல்லும்…” என்றான் வெற்றி.
“நான் சொல்ல வந்த நேரமெல்லாம், அப்பா எதையாவது பேசி என் வாயை அடைச்சுட்டார் வெற்றி. அதுமட்டுமில்லாம பொண்ணுக்கு க..” என்று பொன்னி உண்மையை சொல்ல வர,
“பொன்னி..!” என்று ஒரு அதட்டல் போட்டார் மேகநாதன்.
“இப்ப அவங்களை எதுக்கு அதட்டுறிங்க..? செய்யுற எல்லா வேலையும் செஞ்சுட்டு, எப்படி இப்படி உங்களால அமைதியா இருக்க முடியுது…?” என்று வெற்றி கோபத்தில் கத்தினான்.
“நான் என்னடா பெரிசா செஞ்சுட்டேன். நீ நல்லா இருக்கனும்ன்னு நினைச்சேன் அது தப்பா. எங்களுக்குப் பையன் இல்லை. மூத்த மருமகன் எங்களுக்கு பையனா இருந்து எல்லாம் செய்யனும்ன்னு அந்த மனுஷன் கேட்குறப்போ, நான் சரின்னு சொன்னது எனக்கு இப்பவும் தப்பா தோணலை..” என்றார் மேகநாதன்.
“அதை நீங்க என்கிட்டே கேட்டு முடிவு பண்ணியிருக்கனும். வீட்டோட மாப்பிள்ளையா போக நான் சம்மதிப்பேன்னு நீங்க எப்படி நினைச்சிங்க..? இதோ, இன்னைக்கு எல்லார் முன்னாடியும் யார் தலை குனிஞ்சு நின்னது? நான்தான..? பேசிட்டு இருக்கும் போதே யாரையும் மதிக்காம போய்ட்டா..? அந்த வீட்டுக்கு நான் போனா, என்னை எப்படி மதிப்பா..?” என்று கத்த,
“வெற்றி அமைதியா இருப்பா..!”என்று பொன்னி எவ்வளவு சொல்லியும் கேட்காத வெற்றி, அன்று இரவே கிளம்பிவிட்டான்.
“கல்யாணம் முடிஞ்சு எல்லாம் பர்ஸ்ட் நைட்டுக்கு போனா, நான் மட்டும் தான் காட்டுக்குப் போறேன். இனி இந்த வீட்டுப் பக்கம் வந்தா என்னன்னு கேளுங்க…” என்று சொல்லிவிட்டே சென்றான்.
“எல்லாம் உங்களால தான். எல்லா விஷயத்தையும் அவன்கிட்ட சொல்லிட்டே செஞ்சிருக்கலாம். எல்லாத்துலையும் அவசரம். இப்ப பாருங்க எப்படி கோவிச்சுகிட்டு போறான்னு. அந்த பொண்ணுக்குக் கண்ணுத் தெரியாத விஷயம் வேற அவனுக்குத் தெரியாது. தெரிஞ்சா அதுக்கும் என்ன பண்ணுவானோ..?” என்று பொன்னி, மேகநாதனை பழிக்க,
“எவடி இவ..? அந்த பொண்ணுக்கு இடையில தான் இப்படி ஆகியிருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல ஒரு ஆபரேஷன் பண்ணா அதுவும் சரியாகிடும்ன்னு அவங்க சொன்னதுனால தான்டி நானும் தலையை ஆட்டுனேன். நாம தேடித் போனாலும் இப்படி ஒரு பொண்ணு கிடைக்க மாட்டா. அதை முதல்ல புரிஞ்சுக்க. பொண்ணு வீட்ல அவசரப்படவும் தான் நானும் சரின்னேன். கடைசில காரியத்தை கெடுத்ததே, நீயும் உன் தங்கச்சி கோமதியும் தாண்டி..” என்று மேகநாதன், பொன்னியின் பக்கமே திருப்பினார்.
யார் என்ன சொல்லி என்ன பயன்..? தவறான புரிதல், இருவரின் பிரிதலுக்கு காரணமாகிப் போனது.சில நாட்களில் சரியாவிடும் என்று நினைத்த பிரச்சனை இத்தனை நாட்கள் சரியாகாமல் இருப்பது யாரின் குற்றம்..?
பழைய நினைவுகளில் இருந்து மீண்டவனுக்கு, தூக்கம் தூரம் போனது.
“இன்னும் எத்தனை நாளைக்கு வெற்றி இப்படி இருக்கப் போற..?” என்று மனசாட்சி கேட்க,
“அவளே எந்த நினைப்பும் இல்லாம இருக்கும் போது, நான் மட்டும் ஏன் அவளை நினைச்சுகிட்டு இருக்கணும்..?”என்றான் மனதிடம்.
“நீ அவளை நினைக்காமத்தான், அவளை உருகி உருகிப் பார்க்குறியா..?” என்றது மனம்.
“என்ன பண்றது…? நான்தான் நல்லவனாப் போயிட்டேனே. எதையும் அவ்வளவு சீக்கிரம் கடந்து போக முடியலையே..?” என்று பெருமூச்சு விட்டவன், விடியற்காலையில் கண் அசந்தான்.
இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்திருக்க, அந்த அதிகாலை வேளையில், உடலை ஊடுருவும் அளவிற்கு குளிர் வாட்டி வதைத்தது.மற்றவர்கள் எழுந்துவிட, வர்ணிகா மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
“எப்படி சார் இந்த காட்டுக்குள்ள தனியா இருக்கீங்க..?” என்றாள் ஜெர்சி.
“வேலைன்னு வந்துட்டா இருந்து தான ஆகணும். அதுமட்டுமில்லாம எனக்கு எப்பவும் இப்படி இடங்கள் பிடிக்கும்..” என்றான் வெற்றி.
“எங்க நிகாவுக்கும் இப்படி காடு மலைன்னா ரொம்ப இஷ்ட்டம் சார். அவளுக்காகத் தான் நாங்க இந்த ட்ரிப்பையே அரேஞ்ச் பண்ணினோம்..” என்றாள் ஜெர்சி.
“உங்க இஷ்ட்டம். ஆனா, இதுக்குமேல நீங்க போறது உங்களுக்கு கண்டிப்பா சேப் கிடையாது. இன்னும் மூணு நாளைக்கு மழை இருக்கு. மத்த இடங்கள் மாதிரி நீங்க நினைக்கிற இடத்துல எல்லாம் டெண்ட் போட முடியாது. தடை செய்யப் பட்ட பகுதிகள் நிறைய இருக்கு. வானிலை அறிக்கை உங்களுக்கு சாதகமா இல்லை..” என்றான் உறுதியாக.
“என்ன சார் இப்படி சொல்றிங்க..? நாங்க எவ்வளவு ஆசையா இங்க வந்தோம்..” என்றவர்களின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது.
“எஸ்..! நீங்க திரும்பிப் போறதைத் தவிர வேற வழியில்லை…” என்றான் வெற்றி.
“இதெல்லாம் சும்மா…! நாங்க எத்தனை ட்ரெக்கிங் போயிருக்கோம். எல்லாத்தையும் எப்படி பேஸ் பண்ணனும்ன்னு எங்களுக்குத் தெரியும்..” என்றாள் வர்ணிகா பின்னால் இருந்து.
அப்பொழுதான் எழுந்திருப்பாள் போல. இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு வந்தவளுக்கு, கேட்ட விஷயம் தான் உவப்பானதாக இல்லை.
“இதுக்குமேல உங்க பிரியம். ஆபத்தை வலிய தேடிப் போய் சிக்கினா, அதுக்கு யாரும் பொறுப்பாக முடியாது..” என்றான் வெற்றி.
“யாரும் பொறுப்பாக வேண்டாம்..” என்றாள் வர்ணிகா.
“சந்தோசம்..” என்றவன், வாக்கி டாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
“உனக்கு ஆரம்பத்துல இருந்தே அவர்மேல ஏதோ ஒரு கோபம் நிகா. அது என்னன்னு தான் எங்களுக்குப் புரியலை. அவர் நமக்கு இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ணியிருக்கார். அந்த நன்றிகாகவாவது நீ கொஞ்சம் பார்த்து பேசலாம்..” என்றனர் ஆண்கள் அனைவரும்.
“ஹோ.. உங்களுக்கு இப்போ அந்த ஆளு சொல்றதெல்லாம் சரி. நான் சொல்றதெல்லாம் தப்பு. அப்படித்தான..?” என்றாள் கோபமாக.
“நாங்க அப்படி சொல்ல வரலை. ஆனா, அவர் சொல்ற வார்த்தையில இருக்குற உண்மையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நாங்க எல்லாரும் வந்ததே உன்னோட ஆசைக்காகத்தான். நீயே புரிஞ்சுக்காம பேசினா எப்படி..?” என்றனர் அனைவரும்.
“இப்ப என்னதான் பண்றது..?” என்றார் நிகா கடுப்பாக.
“நமக்கு ரெண்டு ஆப்ஷன் தான். நிலைமை சரியானதும் மேல போகலாம். இல்லைன்னா, இப்படியே திரும்பி போகலாம்..இது மட்டும் தான் இப்போதைக்கு வழி…” என்றனர் ஆண்கள்.
“எனக்கும் இவங்க சொல்றது தான் சரின்னு படுது நிகா..” என்றாள் ஜெர்சி.
“நாம வெயிட் பண்ணி, நிலைமை சரியானதும் மேல போகலாம்..” என்றாள் இன்னொருத்தி. அவள் பெயர் லோகா.
“என்ன லோகா..? எதுக்காக இப்படி சொல்ற..?” என்றாள் ஜெர்சி.
“எல்லாம் காரணமாத்தான்..! மூணு நாள் இந்த ஹேண்ட்சம் ஆபிசரை சைட் அடிக்கலாமே. அதுக்காகத் தான்..” என்றாள் லோகா.
சரியாக அவள் அந்த வார்த்தைகளை பேசும் போது உள்ளே வந்தான் வெற்றி.
“இவளுக்கு கண்டிப்பா என்னைத் தெரியாம இல்லை. தெரியாத மாதிரி நடிச்சுகிட்டே, என்னமா ஆக்ட் குடுக்குறா..?” என்று எரிச்சல் பட்டவனுக்கு,
“நாட்ல இருக்குற மனுஷங்களை விட, காட்ல இருக்குற மிருகங்கள் யாருக்கும் எந்த கஷ்ட்டமும் குடுக்குறது இல்லை. மிருகங்கள் இருக்குற காட்டுக்குள்ள மனுஷங்க வந்துட்டு, நாங்க போற வழியில யானை வந்தது, கரடி வந்ததுன்னு சொல்ல வேண்டியது. மிருகங்கள் போற வழியில தான் நாங்க போனோம்ன்னு எந்த மனுஷனாவது சொல்லியிருக்கானா..?” என்றான் வெற்றியும் நக்கலாய்.
“சார், அவ எதார்த்தமா தான் சொன்னா..” என்றாள் ஜெர்சி.
“எது..? ஒருத்தரை குறி வைச்சுப் பேசுறது உங்க ஊர்ல எதார்த்தமா..?” என்றான் வெற்றி கோபமாய்.
“ஆமா, உன்னைத்தான் அப்படி சொன்னேன். இப்ப அதுக்கு என்னாங்குற…?” என்றாள் வர்ணிகா தைரியமாக.
“ஏய்..!!!” என்று அவன் கோபத்தில் அவள் அருகில் செல்ல,
“சார்..சார்..!” என்று அவனைத் தடுத்தனர் ஆண்கள் அனைவரும்.
“நிகா..பிளீஸ்..! கொஞ்ச நேரம் வாயை வச்சுகிட்டு சும்மா இரு..” என்று அதட்டல் போட, கோபத்தில் வெளியே சென்று விட்டாள் நிகா. அவள் சிட்டவுட்டில் நிற்பாள் என்று அனைவரும் நினைத்திருக்க, கோபத்தில் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்துவிட்டாள். அதிகமான மழையால் மழைநீரும், சேறுமாக இருந்தது.
அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டே வந்த பிகாரி…
“என்ன சார்.. அவங்க மறுபடியும் காட்டுக்குள்ள போறாங்க..” என்றான் நடந்தது தெரியாமல்.
“யாரு..?” என்றாள் ஜெர்சி புரியாமல்.
“அட.. அந்த சண்டை போட்டுகிட்டே இருக்குமே அந்த பொண்ணு தாங்க..” என்றான் பிகாரி.
“அதை நீ வேடிக்கை பார்த்துட்டு வந்தியா..? தடுத்து நிறுத்துறத்துக்கு என்ன..?” என்று அவனிடம் கோபத்தைக் காட்டிய வெற்றி,
“நீங்க இருங்க..! நான் போய் கூட்டிட்டு வரேன்..” என்றான்.
“சார் நாங்களும் வர்றோம் சார்..!” என்றனர்.
“நான் தான் கூட்டிட்டு வர்றேன்னு சொல்றேன்ல. என் உயிரை வாங்குறதுக்குன்னே வந்திருக்கிங்க எல்லாரும். இங்க எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அதுக்கு நான் தான் பொறுப்பு…அதனால இங்கயே இருங்க..” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றான் வெற்றி.
‘என்னை நிம்மதியா இருக்க விடக் கூடாதுன்ற ஒரே காரணத்துக்காகவே பிறந்து வந்திருப்பா போல..’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டே சென்றான்.
முந்தைய நாள் சென்ற அதே வழித்தடத்தில் சென்றிருந்தாள் வர்ணிகா. ஆந்த அருவியின் அருகில் செல்ல செல்லத் தான் வெற்றி சொன்னது புத்திக்கு உரைத்தது. முதல் நாள் அவர்கள் பார்த்த போது, சாந்தமாய் அழகாய் விழுந்து கொண்டிருந்த அருவி, இன்று அருகில் போனால், காது ஜவ்வைக் கிழித்துவிடும் சத்தத்துடன் ஆரவாரமாய் கொட்டிக் கொண்டிருந்தது. அருவிக்கு அருகில் சென்றவுடன், அவள் உடல் குளிரில் நடுங்க, பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்தது.தூரத்திலேயே அவளைப் பார்த்து விட்டவன், கத்திக் கொண்டே வந்தான். அந்த அருவியின் சத்தத்தில் அவளுக்குக் கேட்கவில்லை.
அதீத குளிரினால் அவளால் அதற்குமேல ஒரு எட்டுகூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே நின்ற இடத்தில் நின்றிருக்க, கால்கள் வெடவெடக்கத் தொடங்கியது.
வெற்றிக்கு இதெல்லாம் பழக்கமான ஒன்று என்பதால், அனாயசமாக வந்து சேர்ந்தான் அவள் நின்றிருந்த இடத்திற்கு.
அவள் நின்று கொண்டிருந்த விதத்திலேயே, அவளின் நிலைமையை ஊகித்தவன், வேகமாய் அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.
அவள் அவனைத் தள்ளிவிட முயற்சி செய்ய,
“கட்டிப் பிடிக்கிறதால கற்பு ஒன்னும் போயிடாது. இப்படி நடுங்கிகிட்டே இன்னும் அரைமணி நேரம் நீ நின்னா, ஜன்னி வந்து உன்னோட ஜோலி முடிஞ்சுடும் பரவாயில்லையா..?” என்றவன் அவளை இழுத்து தனக்குள் புதைத்துக் கொண்டான்.
அவனின் அணைப்பு இதமாக இருந்தாலும், ஏனோ அவனிடம் ஒன்ற அவள் மனம் கொஞ்சம் கூட இடம் கொடுக்க வில்லை. கஷ்ட்டப்பட்டு அவனிடமிருந்து விலகியவளுக்கு, நடக்கவும் முடியவில்லை. அவளின் எண்ணமும், நிலையும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது.
‘இவளுக்கு வாய்ல சொல்றதெல்லாம் வேலைக்காகாது போல..’ என்று நினைத்தவன், அவளை அப்படியே அல்லாக்காக தூக்கிக் கொண்டான்.
அவள், அவனிடமிருந்து திமிர,
“ஏய்..! பேசாம வாடி. இதுல இருக்குற வேகத்தை நடக்குறதுல காட்ட வேண்டியது தான…?நான் தூக்கனும்ன்னு தான இப்படி பண்ண..கள்ளி..” என்று அவன் நக்கலடிக்க, அவனை முறைத்து வைத்தாள் வர்ணிகா.