பகுதி – 15
மறுநாள் காலை ரிஷி கண்விழித்த போது சாதனா அங்கே இல்லை… எப்போதும் காலையில் அதிக நேரம் உறங்குபவள், இன்று மட்டும் சீக்கிரமே எழுந்ததன் காரணம் தெரியவில்லை. அதோடு நேற்று வேறு அவளை அதிகம் பேசிவிட்டோம் என மனதும் குறுகுறுக்க… வேகமாகத் தயாராகிக் கீழே சென்றான்.
இன்னும் தீனாவும் சுதாவும் வெளியே வரவில்லை என்பது மூடிக் கிடந்த அவர்களின் அறைக் கதவில் இருந்து தெரிய… ரிஷி வெளி வாயிலை நோக்கி விரைந்தான்.
சாதனா வெளியே செயற்கை நீருற்று முன் நின்று கொண்டிருந்தாள். தலைக்கு ஊற்றியதால்… கூந்தலை விரித்து விட்டுக் கையில் காபி கப்புடன் நின்று, அங்கிருந்த வாத்துகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ரிஷியை பார்த்ததும் பாண்டி வந்து அவனிடம் பேச… ரிஷியின் குரல் கேட்டு கூடச் சாதனா அவன் பக்கம் திரும்பவில்லை. ஆனால் அவனின் இரண்டு நாய்களும் ஓடி வந்தது.
நேற்றே இந்த நாய்களால் தான் சண்டை ஆரம்பித்தது என்று நினைத்த ரிஷி “கந்தா, நாய்களைக் கூடிட்டுப் போய்ப் பின்னாடி கட்டு.” என்றான்.
காபி குடித்து முடித்ததும் சாதனா திரும்பி உள்ளே செல்ல… ரிஷி அவளையே பார்த்திருந்தான். அவள் கண் இமைகள் மிக மெலிதாக வீங்கி இருந்தது. இரவில் அழுதிருக்கிறாள் என்பது பார்த்த உடன் தெரிந்தது.
சாதனா ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க… ரிஷியும் அவள் எதிரில் சென்று உட்கார்ந்து கொண்டு பேப்பர் படித்தான். ராதா அவனுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது தீனாவும், சுதாவும் வெளியே இருந்து வந்தனர்.
இவங்க ரெண்டு பேரும் அப்ப அறையில் இல்லையா என நினைத்த ரிஷி “எங்க டா காலையிலேயே போயிட்டு வரீங்க.” என்றான்.
“சும்மா சுதாவோட அப்படியே தோட்டத்தைச் சுத்திட்டு வந்தேன்.” தீனா சொல்ல…
ஐயோ ! நேத்து இதைத் தான இவ கேட்டா என நினைத்த ரிஷி சாதனாவை பார்க்க… அவள் சுதாவோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
“காபி குடிச்சிட்டியா…” ரிஷி பேச்சை மாற்ற….
“ம்ம்.. குடிச்சிட்டு தான் போனோம்.”
“ரிஷி, நாங்க காலையில சாப்பிட்டதும் கிளம்புறோம் டா… எனக்கு வேலை இருக்கு.”
எப்போதுமே தோட்டத்துக்கு வந்தால்…. காலையில் தீனா கிளம்பி விடுவான் என்பதால் ரிஷி “சரி கிளம்பு.” என்றான்.
“எப்படிப் போவீங்க?” சாதனா கேட்க….
“என்னோட கார் எடுத்திட்டு வர சொல்லி இருக்கேன்.”
[the_ad id=”6605″]
“உங்க வீடு எங்க இருக்கு?”
“இது என்னங்க இப்படிக் கேட்கிறீங்க? மதுரையில தான் இருக்கு.” என்ற தீனா ரிஷியிடம் திரும்பி “நீங்க ரெண்டு பேரும்,எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும் டா…” என அவன் சொல்லிக் கொண்டு இருந்த போதே…
“என்னையும் போற வழியில எங்க வீட்ல ட்ராப் பண்ணிடுரீங்களா…” சாதனா கேட்க… தீனா திகைத்துப் போய்ப் பார்த்தான். சுதாவுக்கும் அதிர்ச்சி தான். பின்னே இருக்காதா… திருமணம் ஆகி நாலு நாட்களே ஆன புதுப் பெண் தன் கணவனை விட்டு மற்றவருடன் செல்ல விரும்புவாளா என்ன?
சாதனா சொன்னதை வேறு யாரும் கேட்டு விட்டார்களோ எனச் சுற்றிலும் ஒருமுறை ரிஷி பார்த்துக்கொண்டான். ராதா மட்டும் இதைக் கேட்டிருந்தால் அவ்வளவு தான். அதை மற்றவர்களுக்கு ஒளிபரப்பி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பாள்.
“வீட்டுக்கு போக உனக்கு இப்ப என்ன அவசரம்?” ரிஷி கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப….
“நீங்க ரொம்பப் பிஸியா இருக்கீங்க இல்ல… நானும் போயிட்டா நீங்க ப்ரீயா வேலை பார்பீங்க…. அதுக்குத்தான்.” சாதனா இலகுவாகச் சொல்ல… அவள் சொன்னதைக் கேட்ட தீனா, இது தான் நீ உன் பொண்டாட்டியை பார்த்துக்கிற லட்சனமா என்பது போல் ரிஷியை பார்த்து முறைத்தான்.
“நான் சொன்னேன்னா நீ இருக்கிறது எனக்கு இடைஞ்சலா இருக்குன்னு.” ரிஷி சாதனாவை பார்த்து கேட்க…
“நீங்க வேலை பார்ப்பீங்க. இவங்களும் போயிட்டா எனக்குப் போர் அடிக்குமே…அதுதான் இவங்களோட போயிடலாம்னு நினைச்சேன்.” என்றாள்.
“ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனால நேத்து ரொம்ப வேலை இருந்தது. இன்னைக்கு இருக்காது. நான் உன் கூட இருக்கேன். நாமும் மதியம் சாப்பிட்டதும் கிளம்பிடலாம்.” என்றான் ரிஷி.
அதற்கு மேல் சாதனா எதுவும் பேசவில்லை. ரிஷி எழுந்து வெளியே செல்ல… “சுதா, நீ குளிச்சுக் கிளம்பு, நான் இதோ வந்துடுறேன்.” என்ற தீனா ரிஷியை தேடி சென்றான்.
ரிஷி தோட்டத்தில் நின்று வேலை செய்பவர்களுடன் பேசிக்கொண்டு இருக்க…. தீனா அவனுக்காகக் காத்திருந்தான். ரிஷி பேசிவிட்டு வந்ததும், இருவரும் தோட்டத்தின் உள்ளே நடந்தனர்.
“என்ன டா ரிஷி இதெல்லாம்?”
தீனா கேட்க ரிஷி அமைதியாக இருந்தான்.
“நேத்து நான் பார்த்த சாதனாவிற்கு ம், இன்னைக்கு நான் பார்க்கிற சாதனாவிற்கு ம் நிறைய வித்தியாசம் இருக்கு. பாவம் ஒரே நாள்ல அந்தப் பொண்ணு வாடிப்போற அளவுக்கு என்ன டா சொன்ன?”
“ரிஷி, உனக்கு இது விருப்பம் இல்லாத கல்யாணம்னு எனக்குத் தெரியும். ஆனா உனக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சு? இனி சாதனா தான் உன் மனைவி. அது உனக்கு நியாபகம் இருக்கட்டும். நீ நேகாவை நினைச்சிட்டு சாதனாவை வதைக்கிறது நியாயமே இல்லை….”
“யாரு நான் நேகாவை நினைச்சிட்டு சாதனாவை வதைக்கிறேனா… அவ தான் டா என்னை வதைக்கிறா.”
“நீயே சொல்லு… திடிர்ன்னு ஒருநாள் நடு ராத்திரி வந்து நின்னா… அதுக்குப்பிறகு என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு.”
“அவங்க அண்ணன் என்னை அடிக்க ஆள் அனுப்பினானாம். இவ என்னைக் காப்பாத்த வந்தாளாம். இந்தக் கதை நம்புற மாதிரி இருக்கா…எதோ சினிமா கதை மாதிரி இல்லை.”
“நான் யாரோ ஒருத்தன் என் மேல இவளுக்கு ஏன் அக்கறை?”
[the_ad id=”6605″]
சாதனா ரிஷியை பள்ளி காலத்தில் இருந்தே தெரியும் என்று சொன்னது ரிஷிக்கு நினைவு இல்லை… அப்படியே நினைவு இருந்தாலும், அவன் அதைப் பெரிதாக நினைக்கப் போவதில்லை.
இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். இதில் என்ன இருக்கு? என்று தான் நினைப்பான். சாதனாவிற்கு அப்போதே தன்னைப் பிடிக்கும் என்பது அவனுக்குத் தெரியாது இல்லையா….
“இவ வெற்றி சொல்லி இப்படிச் செய்தாளா… இல்லை ஆர்வக்கோளாறுல இப்படிச் செய்தாளான்னு தெரியலை… ஆகமொத்தம் பலியானது நான்தான்.”
“இதுல எல்லோரும் என் மேல குறை சொல்றீங்க. கல்யாணம் பண்ணதும் நான் எல்லாத்தையும் மறந்து அவ பின்னால சுத்தனும்னு எதிர்பார்த்தா நான் என்ன செய்றது?”
“நேத்தும் நானா அவளை எதுவும் சொல்லலை…அவதான் முதல்ல வம்பிழுத்தா பிறகு வாங்கிக் கட்டிகிட்டா….”
ரிஷி சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட தீனாவுக்கு அவன் பக்க நியாமும் புரிந்தது. வேறு ஒரு பெண்ணை விரும்பியவனுக்குக் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டு, அவன் திருமணம் ஆன உடனே மாற வேண்டும் என்று எதிர்பார்த்தால் காஷ்ட்டம் தான் இல்லையா…
“எனக்கு உன் நிலைமை புரியுது ரிஷி. ஆனா அந்தப் பொண்ணும் பாவம் தான் டா… நீ அவளை நோகடிக்கிறதுனால மட்டும் எதுவும் மாறப்போகுதா என்ன?”
“ஏன் அவளையும் கஷ்ட்டபடுத்தி உன்னையும் கஷ்ட்டபடுத்திக்கிற. இது தான் லைப்ன்னு ஏத்துக்கப் பாரு.”
ரிஷியும் அப்படித்தான் நினைக்கிறான். ஆனால் அவன் கனவு கண்ட வாழ்க்கை வேறு அல்லவா… சில நேரம் அது நினைவு வரும் போது, சாதனாவிடம் கோபத்தைக் காட்டி விடுகிறான்.
[the_ad id=”6605″]இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாகத் திரும்பி வீட்டை நோக்கி நடந்தனர். ஹாலில் சாதனா மட்டும் தான் இருந்தாள். தீனா சென்று குளித்து விட்டு வந்ததும், எல்லோரும் சேர்ந்து காலை உணவை அருந்தினர்.
“சிஸ்டர், உங்க ரிஷப்ஷன் முடிஞ்சு ப்ரீ ஆனதும், கண்டிப்பா எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும். ரிஷி கூடிட்டு வா டா….” என்ற தீனா சுதாவோடு சென்று அவன் காரில் ஏறினான்.
அவர்கள் சென்றதும் சாதனாவை பார்த்த ரிஷி “வா தோட்டத்தைச் சுத்தி பார்த்திட்டு வரலாம்.” என அழைத்தான்.
முதலில் அவன் கேட்டதும் சாதனா சரி என்று சொல்லத்தான் நினைத்தாள். ஆனால் அவனாக ஒன்றும் விரும்பி அழைக்கவில்லை… காலையில் தான் அப்படிப் பேசியதால் அழைக்கிறான்.
இவன் வேலையைக் கெடுத்த கோபத்தில் பிறகு வெடுக்கென்று பேசி வைப்பான். எதற்கு வம்பு என்று நினைத்தவள் “நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க. நான் கூடப் படிக்கணும்.” என்றாள்.
ரிஷி அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே தான் இருந்தான். அதனால் அவள் எதனால் மறுக்கிறாள் என்று புரிந்தது.
“எனக்குத் தெரியும் எப்ப என் வேலையைப் பார்க்கனும்னு….”
“நீங்க வேலையெல்லாம் முடிச்ச பிறகு போவோமா…”
“அப்ப ரொம்ப வெயில் ஏறிடும். கிளம்புன்னா கிளம்ப வேண்டியது தான… எதுக்கு இவ்வளவு கேள்வி?” ரிஷி கடுகடுக்க…. இதற்கு மேல் அவனின் பொறுமையைச் சோதிக்க விரும்பாத சாதனா அவனுடன் சென்றாள்.
பின் பக்கமாகத் தோட்டத்திற்கு வந்ததும், ரிஷி சென்று அவனின் புல்லட்டை எடுக்க….
“எதுக்கு வண்டி? நடந்தே போகலாமே…நேத்து நாங்க நடந்து தான் போனோம்.”
சாதனா சொன்னதற்கு ரிஷி கிண்டலாகப் பார்த்தானே தவிர… எதுவும் சொல்லவில்லை…
சாதனா வண்டியில் ஏற சென்றபோது… “ரெண்டு பக்கம் கால் போட்டு உட்காரு.” என்றான் ரிஷி. அவளும் அவன் சொன்னபடியே செய்தாள்.
நேற்று அவர்கள் சென்ற பக்கமாகத்தான் வண்டி சென்றது. சாதனா அமைதியாக வந்தாள். ரிஷிக்கே ஆச்சர்யமாக இருந்தது. வாயைத் திறந்தா மூட மாட்டா… இன்னைக்கு என்ன ஆச்சு? என நினைத்தவன் அவனாகவே பேச்சுக் கொடுத்தான்.
“மொத்தம் முன்னூறு ஏக்கர் இடம். இன்னும் பின்னாடி நிறைய இடம் வாங்கிச் சேர்த்திட்டே இருக்கேன். தென்னை தான் அதிகமா இருக்கு. நெல்லும் போடுறோம்.”
ரிஷி சொன்னதற்குச் சாதனா உம் கொட்டியபடி வந்தாள். நேற்று அவர்கள் பார்த்த பகுதியை தாண்டிய பிறகும் நிறையத் தென்னை மரங்கள் இருந்தது.
ரிஷி ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு “இறங்கு…” என்றான்.
சாதனா இறங்கியதும் ரிஷியும் இறங்கி நின்றான். “இந்தப் பக்கம் தண்ணி நல்லா இருக்கும். அதனால தென்னையும் நெல்லும் போட்டா நல்ல விளைச்சல் தரும்.”
“மதுரையிலேயே நமக்கு ஒரு தோட்டம் இருக்கு. அங்க முழுசும் மல்லிகை பூ செடிங்க தான். வச்சு இரண்டு வருஷம் ஆகுது. அடுத்த வருஷம் பூக்க ஆரம்பிச்சிடும். மதுரை மல்லி பேர் போனது இல்லையா… அதனால அதையும் ஏற்றுமதி தான் செய்யப்போறேன்.”
“இங்க தான் இவ்வளவு இடம் இருக்கே… இங்கயும் மல்லிகை பூ வைக்கலாமே….”
“மல்லிகை பூவுக்கு நல்ல வெயில் வேணும். அதோட இங்க பூ பறிக்க ஆள் கிடைக்கிறதும் கஷ்ட்டம். அதே அங்க இந்தப் பிரச்சனை இல்லை…. அதோட ஆளும் கிடைப்பாங்க.” என்ற ரிஷி “வந்து வண்டியில ஏறு…” என்றான்.
சற்று தள்ளி வந்ததும் தென்னங்கன்றுகள் இருந்தது.
[the_ad id=”6605″]“இதெல்லாம் இப்ப வச்சது.” என்றான்.
இன்னும் சற்று தள்ளி சென்றதும்,இன்னொரு வாயில் வந்தது. அதை அங்கிருந்த காவலாளி திருந்து விட…. அங்கே வாழை, கொய்யா மரங்கள் இருந்தது.
“ஏன் இப்படித் தனித்தனியா கேட் வச்சிருக்கீங்க?”
“ஒரு பாதுகாப்புக்கு தான். வாழை எடுக்க… கொய்யா பறிக்க வர்ற ஆளுங்களுக்குத் தனியா அந்தப் பக்கமா ஒரு வழி இருக்கு… எல்லோரும் முன் பக்கமா வந்தா ரொம்பத் தூரமும், அதோட யாரு வராங்க போறங்கன்னு தெரியாது இல்லையா…”
ரிஷி பேசியபடி வண்டியை ஒரு ஒற்றையடி பாதையில் செலுத்தினான். பாதை சரியாக இல்லாததால் வண்டி கடகடவென்று ஆடியது.