“கொஞ்சம் கொஞ்சமா தான் பாதை எல்லாம் போட்டுட்டு இருக்கோம்.” என்றபடி ரிஷி வண்டியை செலுத்த….
அந்தப் பாதையில் செல்லும் போதே… அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. அதற்கான காரணம் ரிஷி வண்டியை நிறுத்தியதும் தெரிந்தது. நந்தவனம் போல் சுற்றிலும் பூ செடிகள் நிறைந்து இருக்க… அதில் கொத்து கொத்தான விதவிதமான மலர்கள். பார்க்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.
சற்றுத் தூரத்தில் நீர் விழும் சத்தம் கேட்க.. சாதனா அங்கு விரைந்து சென்று பார்த்தாள். ஒரு பத்தடி உயரத்தில் இருந்து ஒற்றை அருவி போல் நீர் விழுந்து கொண்டு இருந்தது.
“இது அருவியா ரிஷி…” சாதனா ஆவலாகக் கேட்க….
“இது அருவி இல்லை… ஆனா இன்னும் தள்ளிப் போனா ரெண்டு மூன்னு அருவிங்க இருக்கு. அதுக்குப் போற தண்ணி தான் இப்படி இடை வழியில விழுது.”
“ஓ… சூப்பரா இருக்கே….”
“இன்னும் மழை காலத்தில நிறையத் தண்ணீர் விழும்.”
“இதுல குளிக்கலாமா…”
“குளிக்கலாம். நீ குளிக்கிறதுன்னா குளி.”
“டிரஸ் கொண்டு வரலையே…”
“நாம இங்க இருந்து திரும்பி போகும் போது… உன்னோட டிரஸ் காய்ந்து இருக்கும். அதனால கவலைப்படாம குளி.”
“நீங்க…”
“நான் யாரும் இந்தப் பக்கம் வராம பார்த்துக்கிறேன். நீ மட்டும் குளி.”
“ஏன்? இந்தப் பக்கம் யாரும் வருவாங்களா…”
“வெளி ஆளுங்க வரமாட்டாங்க… ஆனா இங்க வேலை செய்றவங்க வரலாம்.”
அன்று நல்ல வெய்யில் தான். அதனால் சாதனா தன் துப்பட்டாவை மட்டும் கழட்டி வண்டி மீது வைத்து விட்டு, நீருக்கு அடியில் சென்று நின்றாள்.
குளிர்ச்சியான நீர் தலையில் பட்டவுடன் அவள் உடலெங்கும் சிலிர்த்தது. தலையை விரித்து விட்டவள், சிறிது நீரை பிடித்துக் குடித்துப் பார்க்க… நீர் அவ்வளவு சுவையாக இருந்தது.
அங்கே குளிப்பதே அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. ரிஷோயோடு சேர்ந்து குளிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே சாதனாவிற்கு இருந்தது. அவள் அவனைப் பார்க்க… ரிஷி வண்டியின் மீது அமர்ந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
[the_ad id=”6605″]இவ்வளவு தூரம் ரிஷி பொறுமையாகத் தன்னோடு நேரம் செலவழிப்பதே பெரிய விஷயம் என நினைத்தவள், தன் ஆசையைத் தனக்குள்ளே வைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே அவள் வந்து விட… அவளை ஆச்சர்யமாகப் பார்த்த ரிஷி “போதுமா….” என்றான்.
“ம்ம்.. போதும்.”
திரும்ப வரும் வழியில், கொய்யா தோப்பில் வண்டியை நிறுத்திய ரிஷி, அங்கிருந்த ஆட்களிடம் சொல்லி கொய்யா காய்களைப் பறித்துக் கொண்டு வர சொல்ல… அதை இருவரும் அங்கேயே நின்று சாப்பிட்டனர். காயாக இருந்தாலும் சாப்பிட அவ்வளவு சுவையாக இருந்து. அதை அவர்கள் சாப்பிட்டு முடித்த போது… அவள் ஆடையில் இருந்த நீர் எல்லாம் வடிந்து இருந்தது. இருவரும் திரும்ப வீடு வந்து சேர்ந்த போது அவள் ஆடை முழுதும் காய்ந்து விட்டது.
வீட்டிற்குள் வந்த ரிஷி ராதாவிடம் டீ கொண்ட வர சொல்லி அருந்தியவன் “நீ ரெஸ்ட் எடு சாதனா… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.” எனச் சென்றுவிட….
சாதனா அவர்கள் அறைக்கு வந்து உடை மாற்றி விட்டுக் கையில் புத்தகத்தை எடுத்தவள், அதில் ஒரு எழுத்து கூடப் படிக்கவில்லை… வெயிலில் அலைந்தது மற்றும் அங்கே நந்தவனத்தில் குளித்தது வேறு… அவள் கண்களைச் சொருக செய்ய…. புத்தகத்தை மார்பில் வைத்தபடி உறங்கி விட்டாள்.
மதியம் போல் திரும்பி வந்த ரிஷி சாதனாவை சாப்பிட அழைக்க அறைக்கு வந்தவன், அவள் நன்றாக உறகுவதைப் பார்த்து தானும் சென்று அவள் அருகில் படுத்துக் கொண்டான்.
நன்றாகப் பசி எடுத்ததால்… கண்விழித்த சாதனா அருகில் ரிஷி படுத்திருப்பதைப் பார்த்ததும், அவன் பக்கம் திரும்பி படுத்தாள். அவன் நன்றாக அசந்து உறங்கி கொண்டு இருந்தான்.
அடர்த்தியான மீசைக்கு அடியில் இருந்த அவனின் உதடுகள் அவளை வா என்று அழைக்க…. அவனை முத்தமிட வேண்டும் என்று எழுந்த ஆவலை மிகவும் கஷ்ட்டப்பட்டு அடக்கினாள்.
திருமணம் செய்து கொண்டோமே எனக் கடமைக்காகச் சேர்ந்து வாழ்பவனிடம் அதிகமான உரிமை எடுத்துக்கொள்ள மனம் வரவில்லை. இன்னும் சற்று நேரம் இங்கே இருந்தால்… எதாவது செய்து விட்டு பின்பு அவனிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமே என்ற அச்சத்தில் சட்டென்று எழுந்து கொண்டாள்.
அவளின் உடைகளைத் தான் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தாள். ரிஷி எதுவும் கொண்டு வரவில்லை…. அவன் இங்கே மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ வருவதால்… அவனின் உடைகள் சிலது இங்கேயே இருந்தது.
ரிஷி செல்லில் அலாரம் வைத்துக்கொண்டு படுத்திருப்பான் போல… அவனும் சிறிது நேரத்தில் விழித்து விட… இருவரும் சாப்பிட சென்றனர்.
இன்று எல்லாமே சைவத்தில் இருந்தது. முட்டை மட்டும் செய்து இருந்தனர். சாதனா வியந்து போய்ப் பார்க்க…
“உங்களுக்காகச் சின்ன ஐய்யா தான் மா… சைவமே சமைக்கச் சொன்னாங்க.” என்றாள் ராதா.
தன்னைப் பிடிக்காதே போதே… ரிஷி தன்னை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறான். இதே பிடித்திருந்தால்…இன்னும் எப்படிப் பார்த்துக் கொள்வான் என்று சாதனாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை….
சாப்பிட்ட உடனே மதுரைக்குக் கிளம்பி விட்டனர். அவர்களோடு காரில் இரண்டு பெட்டிகளும் வந்தது. அத்தனையும் பணம். வாழை, கொய்யா மற்றும் நெல் விளைவித்ததில் வந்தது.
மதுரைக்குத் திரும்பிய பின்னர் இரவில் ரிஷி சாதனாவை நெருங்க வில்லை… விலகி தான் இருந்தான். விருப்பம் இல்லாமல் இணைவதற்கு விலகி இருப்பதே பரவாயில்லை என்று சாதனாவிற்கு த் தோன்றியது.
இரண்டு நாட்கள் சென்று வரவேற்புக்காக அனைவரும் சென்னை கிளம்பினர். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடந்தது. ராஜ்மோகன் சந்தானம் இருவருமே அரசியலில் முக்கியப் புள்ளிகள். அதனால் நிறைய அரசியல் பிரமுகர்கள், தொழில் முறை நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அதோடு நிறையத் திரை பிரபலங்களும் வந்தனர்.
[the_ad id=”6605″]திரை பிரபலங்கள் அனவைரும் ரிஷிக்கு தெரிந்தவர்களாக இருந்தனர். அதனால் அவனிடம் வந்து வாழ்த்து சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இவனுக்கு எப்படி இவங்களை எல்லாம் தெரியும்? சாதனாவிற்கு வியப்பாக இருந்தது. ரிஷி வேறு யாரோடோ பேசிக்கொண்டிருந்த போது… மேடையில் இருந்த தீனாவிடம் இதைப் பற்றிச் சாதனா கேட்க…
“ரிஷி படமும் தயாரிக்கிறான். இப்ப கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பெரிய ஸ்டார் நடிச்சுப் படம் வந்ததே…. அதுல கூட ரிஷியும் ஒரு தயாரிப்பாளர் தான். ஆனா அவன் பேரு வெளிய வராது.”
“ஏன் பேர் வெளிய வராது?”
“ரிஷிக்கு அதுல விருப்பம் இல்லை.”
[the_ad id=”6605″]
பினாமி பெயரில் சினிமா படம் தயாரிப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல… ஏன் சில நடிகர்களே தங்கள் சொந்த படம் என்று சொல்லாமல் தயாரிப்பாளராக வேறு ஒருவரை தான் காண்பிப்பார்கள்.
சாதனாவும் தீனாவும் பேசிக்கொண்டு இருந்த போதே… ஹாலில் திடீர் பரபரப்பு.. யாரோ முக்கியமானவர்கள் வருகிறார்கள் என்று நினைத்து பார்த்த சாதனா, வருவது நேகா என்று தெரிந்ததும் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கருப்பில் வெள்ளை நிற கற்கள் பதித்த டிஸைனர் புடவைக்குக் கை இல்லாத ரவிக்கை அணிந்து, கழுத்திலும் காதிலும் வைரங்கள் ஜொலிக்க மேடை ஏறினாள் அவள்.
இன்று தான் சாதனா முதல் முறையாக நேகாவை நேரில் பார்க்கிறாள். பால் போல வெள்ளை நிறம். இத்தனை நாள் எதோ மேக்கப் போட்டு தான் அவள் இவ்வளவு வெள்ளையாகத் தெரிகிறாள் என்று நினைத்தவளுக்கு, நேகாவை நேரில் பார்த்ததும், அவள் சொந்த நிறமே அதுதான் என்று புரிந்தது.
தொட்டால் வழுக்கி விடும் போல் மினுமினுப்பான சருமம். லேசான ஒப்பனையில் நெற்றியில் இருந்த சிறிய கருப்பு நிற பொட்டே அவளை அவ்வளவு அழகாகக் காட்டியது.
நேகா பேரழகி என்பதில் சாதனாவிற்கு எந்த வருத்தமும் இல்லை… ஆனால் அவளைத்தான் ரிஷி காதலித்தான் என்பதை நினைக்கும் போது தான் மனம் வலித்தது.
அப்போது தான் ரிஷியின் நினைவு வந்து சாதனா அவனின் பக்கம் பார்த்தாள். அவன் வேறு ஒருவருடன் தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தான். அவனும் நேகா வந்ததைக் கவனித்துத் தான் இருப்பான்.
நேகா அருகில் வந்ததும், ரிஷி அப்போது தான் அவளைப் பார்ப்பது போல் பார்த்து, புன்னகையுன் வரவேற்றான். நேகா எதோ கேட்க ரிஷி எதோ பதில் சொன்னான். இருவரும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டனர். சாதனா அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எல்லாம் கவனிக்கவில்லை.
இருவரும் அருகருகே நிற்கும் போது அவர்கள் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருந்தது. சாதனா மட்டும் இல்லை மற்றவர்களும் அவர்களைத் தான் கவனித்துக் கொண்டு இருந்தனர்.
ரிஷி சாதனாவை நேகாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். சாதனா இன்னும் திகைப்பில் இருந்து வெளி வரவே இல்லை. ரிஷியின் கை அழுத்தத்தில் நேகாவை பார்த்துக் கஷ்ட்டப்பட்டுப் புன்னகைத்தாள்.
நேகா அவளை மதிக்கக் கூட இல்லை… அவள் ரிஷியுடன் பேசுவதில் தான் ஆர்வம் காட்டினாள். தீனாவை அழைத்த ரிஷி, நேகாவை சாப்பிட அழைத்துக்கொண்டு செல்லும் படி கூறிவிட்டு அடுத்து வந்த விருந்தினரை கவனிக்க ஆரம்பித்தான்.
மேடையில் இருந்து இறங்கிய நேகா திரும்பி ரிஷியை பார்க்க… அவன் வேறு ஒருவருடன் சுவாரசியமாகப் பேசி சிரித்துக் கொண்டு இருந்தான்.
இவனுக்குத் தன்னை இழந்தது பற்றி ஒரு வருத்தமும் இல்லையா… தன்னைப் பார்த்த பிறகும் கூட மகிழ்ச்சியாக இருக்கிறானே… என்ற குழப்பத்தில் இருந்த நேகா தீனாவிடம் உணவை மறுத்து விட்டு, உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
விருந்தினர் வருகை குறைந்து பின்பு நின்றே விட… மேடையில் இருந்து இறங்கிய ஜோடிகள் சாப்பிட சென்றனர்.
சாதனா பேருக்கு கொறித்து விட்டு ஜோதியிடம் தலை வலிக்கிறது என்று சொல்ல… அவர் அதே ஹோட்டலில் இருந்த அவர்கள் அறைக்கு அவளைத் துணையுடன் அனுப்பி வைத்தார்.
சாதனா கதவை அடைத்து விட்டு நேராகச் சென்று கண்ணாடியின் முன்பு தான் அமர்ந்தாள்.
யானைத்தந்தம் நிறத்தில் தங்க ஜரிகையால் நெய்த புடவை. இரவிற்கு இந்த நிறம் எடுக்குமா எனச் சாதனாவிற்கு ச் சந்தேகமாக இருந்தது. ஆனால் ரிஷியின் தேர்வு என்பதால்… அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
புடவை அணிந்து அதற்குப் பொருத்தமான பெரிய வைர நகைகள் போட்ட பிறகு, தான் மிகவும் அழகாக இருப்பதாகவே சாதனாவிற்குத் தோன்றியது. ஆனால் நேகாவை பார்த்த பிறகு தான் எல்லாம் அவள் அழகில் பாதிக் கூட வரமாட்டோம் என்பது புரிந்தது.
அதுவும் ரிஷிக்கு சினிமா உலகம் ஒன்றும் புதிது அல்ல… அவனும் அதே தொழிலில் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு… மனதை இன்னும் அரித்தது.
அவனும் சினிமா தொழிலில் இருக்கும் போது… அவனுக்கு ஒரு நடிகையைத் திருமணம் செய்து கொண்டால்…. அதில் இருக்கும் சாதகம் பாதகம் பற்றித் தெரியாதா என்ன?
தான் அவனுக்கு எதோ நல்லது செய்வது போல் நினைத்து அவனுக்குப் பெரிய தீங்கு இழைத்து விட்டதாகவே அவளுக்குத் தோன்றியது.
தான் மட்டும் நடுவில் வரவில்லை என்றால் அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்திருப்பனே… இப்போது விருப்பம் இல்லாமல் அல்லவா தன்னுடன் வாழ்கிறான். இனி என்ன செய்வது என்பது தெரியாமல் கலங்கி போய் அமர்ந்து இருந்தாள்.
[the_ad id=”6605″]அங்கே ரிஷி பாரில் தனி அறையில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தான். தன்னை விடப் படத்தில் நடிப்பதே முக்கியம் என்ற நேகாவிடம் அவனும், நீ இல்லையென்பதால் நான் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை… சந்தோஷமாகவே இருக்கிறேன் என்பது போல் காட்டிக்கொண்டான். இருந்தாலும், அவளைப் பார்த்ததில் இருந்து மனது ஒரு நிலையில் இல்லை என்பது தான் உண்மை.
இவளைத்தான் திருமணம் செய்யப்போகிறோம் என்று நினைத்துக் கனவுகளுடன் வாழ்ந்த காலமும் உண்டு தானே… அந்த நினைவுகள் அவ்வளவு சுலபத்தில் போகுமா… ஒருவேளை நேகா அவனிடம் எந்த எண்ணத்தில் பழகினாள் என்பது தெரியவந்தால்… அவன் மனதில் இருக்கும் ஏமாற்றம் மறையுமோ என்னவோ… அல்லது சாதனாவின் காதல் அவனை மாற்றவும் செய்யலாம்.