வாசல் கதவைத் திறந்த மல்லி ஒரு நொடிக்கும் குறைவாக தான் தடுமாறினாள் என்று சொல்ல வேண்டும். சுந்தர் அதை கவனிக்கும் முன்னே முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு தெரியாதவரை பார்ப்பது போல “சொல்லுங்க..! உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?” என்று கேட்டாள்.
சுந்தர் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. மல்லி அவனைப் பார்த்தால் கோபம் கொள்ளுவாள்; சண்டை பிடிப்பாள் அல்லது ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று அழுவாள் என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு திடமான மல்லி அதிர்ச்சியை கொடுத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
மல்லியின் பேச்சு மட்டும் அல்ல தோற்றமுமே சுந்தருக்கு புதிதாக இருந்தது. புருவத்தை சுளித்தபடி அவளை உற்றுப் பார்த்தான். மற்ற வித்தியாசங்களும் ஒவ்வொன்றாக அவன் பார்வையில் பட்டது. திருமணத்திற்கு முன் பாவாடை தாவணி, திருமணத்திற்கு பிறகு புடவை,நைட்டி தவிர வேறு எந்த உடையிலும் அவன் அவளைப் பார்த்ததில்லை.
சுந்தர் தந்திருந்த அதிர்ச்சியால் அவள் அடைந்த சுகவீனம் மற்றும் மூன்று மாதங்களாக செய்த கடின உழைப்பு சற்றே பூசிய உடல்வாகில் இருந்த மல்லியை நன்றாகவே இளைக்க வைத்து ஒல்லியாக கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு அவன் விரும்பி மணந்த சின்னப் பெண்ணாக காட்டியது.
அதோடு சாவித்திரி சொல்லி சொல்லி மல்லி நிறைய நடை உடை பாவனைகளை மாற்றியிருந்தாள்.
முன்பு சாட்டையாக நீண்டிருந்த கூந்தல் இப்போது தோள் அளவுக்கு மட்டுமே நாகரீகமாக வெட்டப்பட்டு இருந்தது. சந்தன நிறத்தில் காட்டன் பேண்டும் மேலே பிரவுன் நிறத்தில் வெள்ளை நிற குர்தியும் அணிந்து முடியை போனிடைல் போட்டிருந்தாள். அவளின் வேலைக்கும் இலகுவான உடை என்பதால் மல்லிக்கும் இந்த உடை பழகி விட்டிருந்தது.
சுந்தர் வீட்டில் இருந்து துரத்திய போது எதுவும் இல்லாமல் வந்தவளுக்கு சாவித்திரி தான் வேண்டியதை எல்லாம் பார்த்துப்பார்த்து வாங்கிக் கொடுத்தாள்.
இப்போது கையில் வருமானம் வர ஆரம்பித்த பிறகு சாவித்திரியை ஒரு பைசா கூட மல்லி செலவழிக்க விடுவதில்லை என்பதோடு தன் நன்றியை சாவித்திரிக்கு பார்த்து பார்த்து சமைப்பதில் காட்டினாள்.
காலையில் இருவருக்கும் காபி, காலை உணவு செய்யும்போதே தங்கள் இருவருக்கும் மதிய உணவை செய்து விடுவாள். சாவித்திரி வேலைக்கு போன பிறகு மல்லி குளித்துவிட்டு அவள் சமையலறைக்கு கிளம்பி விடுவாள். சாவித்திரிக்கும் ராஜனுக்கும் மதிய உணவு மல்லியின் கிச்சனில் இருந்து சுடச்சுட போகும்.
இந்த மூன்று மாதங்களில் வந்த வருமானத்தில் ஒரு பழைய ஸ்கூட்டியும் வாங்கியிருக்க அவள் வேலைக்கு மிகவும் உதவியாக இருந்தது.அதை ஓட்டக்கற்றுக் கொடுத்ததும் சாவித்திரி தான்.
ராஜன் அவளுக்கு கோயம்பேடில் மொத்த வியாபார காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளை அறிமுகப்படுத்தி விட அங்கே கணக்கு வைத்துக்கொண்டு வாரத்திற்கு ஒரு முறை பணம் கொடுத்து விடுவாள்.
அதே போல ஆடு கோழி எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு ரெட்டேரி சந்தையில் இருந்து சமையல் அறைக்கே வந்து விடும். மீன் வகைகள் மட்டும் அவள் வேண்டிய அளவு சொல்லி விட்டால் காசிமேட்டில் இருந்து அனுப்பி விடுவார்கள். முட்டைகள் வாரம் இரு முறை சேலத்தில் இருந்து லாரியில் வரும் போதே இங்கே இறங்கி விடும்..
எல்லாமே ராஜனின் ஏற்பாடு தான். ஆரம்பத்தில் அவனிடம் பேசாமல் மல்லி ஒதுங்கிப் போனாலும் இப்போது சாவித்திரி போல அவனும் அவளுக்கு ஒரு நல்ல நட்பாக இருந்தான்.
இருவருமே அவளிடம் எதுவும் எதிர்பார்க்காமல் பார்த்து பார்த்து செய்ய தான் கொடுக்க என்ன இருக்கிறது என்று மல்லி யோசித்து இருவருக்கும் அன்று புதிதாக வரும் அசைவ பதார்த்தங்களை பொறுத்து வித விதமாக சமைத்துக் கொடுப்பாள்.
ராஜனின் வீடு அவர்கள் இருந்த ப்ளேட்டில் இருந்து இருபது நிமிட தூரம். உணவை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க கல்லூரி மாணவர்கள் இருவரை வேலைக்கு சேர்த்திருந்தாள் மல்லி. அவர்கள் வீட்டுக்கு மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலேயே நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்திருந்தனர்.
ஆரம்பத்தில் சாவித்திரி அல்லது ராஜனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த மல்லிக்கு இப்போது மெல்ல மெல்ல தைரியம் வந்திருந்தது. அது அவளுக்கு தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது. முன்பெல்லாம் எதற்கும் பயமும் அழுகையும் ஆக இருந்தவள் இப்போது பிரச்சனைகளை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
மல்லியின் வெளிப்புற மாற்றங்கள் மட்டுமே சுந்தருக்கு தெரிய இனி தானே மல்லியின் அகம் தெரிய வேண்டும். அப்போதும் புரிந்து கொள்வானா?
“மல்லி ! “ என்று ஆரம்பித்தவனுக்கு மேலே எப்படி பேசுவதென்று தெரியவில்லை. அவனைப் பார்த்ததும் மல்லி அழுவாள். அவளை சமாதானம் செய்வது போல பேசி வீட்டுக்கு அழைத்துப்போய் விடலாம் என்று நினைத்து வந்திருந்தான்.
என்ன இருந்தாலும் அவன் ஆண் அல்லவா? அவன் செய்தது தப்பென்று மனசாட்சி உறுத்தினாலும் மனைவியிடம் இறங்கிப்போய் மன்னிப்பு கேட்க அவன் ஆணவம் இடம் கொடுக்கவில்லை. அதனால் தானே பெருந்தன்மையுடன் அவளை ஏற்றுக்கொண்டது போல காட்டிக்கொள்ள திட்டமிட்டு வந்திருந்தான்.
மல்லி வீட்டை விட்டு சென்ற மறுநாள் காலையில் தான் போதையில் இருந்தவனுக்கு விழிப்பே வந்தது. மண்டைக்குள் யாரோ உட்கார்ந்து சம்மட்டியால் பிளக்க கண்ணைத் திறப்பதே கஷ்டமாக இருந்தது.
“இனி இந்த சனியனை கையில் தொடவே கூடாது..” என்று முனகிக்கொண்டே “மல்லி ! ஏ மல்லி! காப்பி கொண்டு வா…” என்று கத்தி குரல் கொடுக்க வந்தது என்னவோ அவன் அம்மா தான்.
அவர் முகமோ கடுகடுவென இருக்க “ அவ தான் வீட்டை விட்டு ஓடிட்டாளே? இப்ப நீ கூப்பிட்டா வரவா போறா? நீயும் உன் பொண்ணும் தான் அவளைத் தேடுறீங்க! அவளுக்கு உங்க நினைப்பு இருக்கா என்ன? ” என்று நொடித்தார்.
அவர் கேட்கவும் தான் சுந்தருக்கு முதல் நாள் மாலை நடந்ததே நினைவுக்கு வந்தது. தான் அவளை அடித்ததும் வெளியே தள்ளி கதவை சாத்தியதும் ஞாபகம் வர இப்போது அவள் இல்லை என்றது நினைவுக்கு வர அடிவயிறு ஜில்லிட்டது.
மல்லியின் குணம் தெரிந்தவனால் அவள் தைரியமாக வெளியே போயிருப்பாள் என்று நம்பத் தோணவில்லை.
அதில் சர்ரென்று போதை இறங்க எழுந்தவன் பாத்ரூம் போய் முகம் கழுவி சட்டையை எடுத்து மாட்டியபடி அம்மா இன்னும் ஏதேதோ மல்லியை பற்றி சொல்வதை காதில் வாங்காமல் வெளியே வந்தான்.
கூடத்தில் பிரியா இன்னும் ஷிம்மியில் கூடத்தில் உட்கார்ந்து கொண்டு பக்கத்தில் பக்கெட் சிப்ஸ், ஐஸ்க்ரீம் இன்னும் பல நொறுக்குத்தீனிகளை வைத்து கொறித்துக்கொண்டே கார்ட்டூன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
நிமிர்ந்து மணி என்ன என்று பார்க்க அது ஒன்பது என்று சொன்னது.
மகள் அருகில் போனவன் “பாப்பா! ஸ்கூலுக்கு போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று அதட்டிக் கேட்டவன் அவள் உதடு பிதுக்கலில் திரும்பி எரிச்சலோடு அம்மாவைப் பார்த்தான்.
“அம்மா! ஏன்மா இவளை ஸ்கூலுக்கு அனுப்பல? ஏன் இத்தனை ஸ்நாக்சும் மொத்தமா கொடுத்திருக்கே? அவளுக்கு இதெல்லாம் ஒத்துக்காதே? வாந்தி எடுப்பா..” என்று சொல்லிக்கொண்டே போய் அவள் கையில் இருந்த சிப்ஸ் பக்கெட்டை பிடுங்க ப்ரியாவின் அழுகை உச்சஸ்தாயியில் கிளம்பியது.
அந்த அழுகையையும் தாண்டி காமாட்சியின் குரல் மல்லியை பற்றி குற்றம் படித்தது.
“சின்ன பிள்ளை இருக்கு என்ற பொறுப்பு கூட இல்லாம வீட்டுக்காரன் ரெண்டு அடி அடிச்சான்னு வீட்டை விட்டு இவ அம்மா போய்ட்டா. எந்த வீட்டுல தான் புருஷன் பொண்டாட்டி சண்டை நடக்கல?
உலகத்தில இல்லாத அதிசயமா என்ன? ப்ரியா காலையில எழுந்ததுமே அம்மா வேணும்னு கேட்டு அழுதுச்சு. நானே பேஷன்ட். எனக்கு அவளை இந்த வயசுல எங்கப்பா சமாளிக்க முடியுது? அதான் அவ அழுகைய சமாளிக்க அவ கேட்டதெல்லாம் உங்க அப்பா கிட்ட வாங்கிட்டு வர சொல்லி டிவி போட்டு விட்டு உக்கார வெச்சிருக்கேன்…”
எப்போதும் அமைதியாக இருக்கும் வீடு இப்போது ஒரே அழுகையும் சத்தமும் ஆக இதை சமாளிக்க முடியாமல் முந்தைய நாள் குடியில் மண்டைக்குள் வேறு மத்தளம் வாசிக்க சுந்தர் தலையைப் பிடித்துக் கொண்டான்.
என்ன செய்வது என்று புரியாமல் யோசிக்க அதற்கு இடம் தராமல் இதோ அடுத்த பிரச்சனை என்று அவன் போன் அடித்தது. செல்லில் வந்த அழைப்பை எடுத்தவனுக்கு செல்லில் வந்த செய்தி அவனின் மற்ற எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளியது.
அவன் சிறு கம்பெனியில் தீ விபத்து. எல்லாம் போச்சு என்று பதறியபடி வெளியே ஓடியவனுக்கு ப்ரியாவின் அழுகையும் அம்மாவின் கூப்பாடும் கேட்கவே இல்லை.