Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 8

நடந்து முடிந்திருந்த பெண்கள் தின கொண்டாட்டத்தின் போட்டோக்களை தன் வெப்சைட்டில் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மா.

மதுரா வந்ததில் இருந்து, இது மாதிரி ஏதாவது விழாக்கள் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள் அவள் அலுவலகத்தில்.

ஆயுத பூஜையில் தொடங்கி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் என்று விழாக்கள் நடந்து முடிந்து தற்போது பெண்கள் தின விழா.

ஆர்.ஆர். பாமிலி கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் இவையெல்லாம்.



Advertisement

இப்படிப்பட்ட விழாக்கள் தாம், அதை ஒரு கார்பரேட் ஆபிஸ் என்பதை தாண்டி ஒரு குடும்பம் போல செயல்பட வைத்துக் கொண்டிருந்தது.

ரேஷ்மாவுக்கும் இந்த மாதிரி பண்டிகைகள் கொண்டாடவென்று வீட்டில் யாருமில்லை, அவளின் பெற்றோர் மறைவுக்குப் பிறகு!

ராம் அங்கிள் வீட்டுக்கு போய்க் கொண்டு தான் இருந்தார்கள் ஆரம்பத்தில்.

Advertisement

ஆனால் பார்வதியின் பேச்சுக்கள், அந்த நாட்களை ஏண்டா அவர்கள் வீட்டுக்கு போனோம் என்று எண்ண வைத்ததால், தற்போதெல்லாம் அங்கு போவதை தவிர்த்து விடுவாள் ரேஷ்மா.

Advertisement

அதனால், அவளும் முதலாளி என்ற பேதம் காண்பிக்காது, குடும்ப விழா போல கலந்து கொள்வாள் இந்த விழாக்களில் எல்லாம்!

அதே சமயம், இதையே சாக்கிட்டு, அதற்கு மேல் யாரும் ரேஷ்மாவிடம் அதிகப்படியான சலுகைகள், அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ள மதுரா அனுமதிக்க மாட்டாள்.

அவர்களுக்கும் ரேஷ்மாவுக்கும் உண்டான ஆரோக்கியமான எல்லையையும் சரியாக வகுத்து இருந்தாள் அவள்!

Advertisement

பெண்கள் தின கொண்டாட்டத்திற்கு இந்த முறை எப்போதும் போல இல்லாமல் ஒரு டிவி பிரபலம் ஒரு பெண் தொகுப்பாளினியை அழைத்து இருந்தார்கள்!

எல்லாம் யுவியின் அறிவுரை!

அந்த தொகுப்பாளினி, கண்ணியமான நேர்த்தியான உடையணிபவர்,

இதனாலேயே நிறைய பேரின் அபிமானத்தையும் பெற்றவர்.

அவர் ரேஷ்மாவின் பிராண்ட் உடைகளைத் தான் தேர்வு செய்கிறார், அவளது பொட்டிக்கில் தான் புடவை வாங்கி அணிகிறார் என்று ரேஷ்மாவின் மூலம் அறிந்து கொண்டவன் செய்த ஏற்பாடு இது!

அந்த பெண்ணும் மகிழ்ச்சியாகவே ஒப்புக் கொண்டார்.

விழாவில் சில வேடிக்கை விளையாட்டுகள், ஆட்டம் பாட்டமும் இடம்பெற்று இருந்தன.

வேலை செய்பவர்களின் வீட்டுப் பெண்களையும் அழைத்து வர சொல்லியிருக்க, மாதேஷின் அம்மா, ரிசப்சனிஸ்ட் ரேவதியின் அம்மா உட்பட மற்ற ஆண் ஊழியர்களின் மனைவிகள், அம்மாக்கள் எல்லோரும் வந்திருந்தனர் விழாவுக்கு!

லக்கியையும் கூப்பிட்டாள் மதுரா.

“போக்கா.. உங்க ஆபீஸ் இவன்ட் எல்லாம் ரொம்ப க்ரின்ஜா இருக்கும் நான் வரல” என்று சொல்லி போய் விட்டது லக்கி!

அதே போல ரேவந்த்தையும் கூட கூப்பிட்டு இருந்தாள் ரேஷ்மா.

“விமன்ஸ் டே செலிப்ரேசன்.. நான் வந்து என்ன பண்ண போறேன்.

நீ பாரு..

“எனக்கு இயர் என்ட் ஆடிட்டிங் ஒர்க்ஸ் நிறைய இருக்கு. நான்உன்னை ஹெல்ப் பண்ண கூப்பிடாம இருக்கேன்னு சந்தோசப்படு”. என்று சொல்லி விட்டான் அவனும்.

ஆனால் விழா மிகவும் நல்லபடியாகவே நடந்து முடிந்திருந்தது.

ஆபீஸ் கூட்டி துப்பரவு செய்யும் கவிதா, இவ்வளவு நன்றாக பாடுவாள் என்று அன்று தான் தெரிந்தது.

பாட்டுப் போட்டியில் அவள் தான் முதல் பரிசு.

சினிமா க்விஸ் போட்டியிலும் அவளே!

ம்யூசிக்கல் சேரில் கடைசி வரை வந்தாள். ஆனால் ரேஷ்மா தான் ஜெயித்தாள் அதில்!

அக்கவுண்ட்ஸ் மேனேஜர் மெர்சி மேடம் இவ்வளவு நன்றாக க்ளாசிக்கல் நடனம் ஆடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை!

இது போன்ற மகிழ்வான கலை நிகழ்ச்சிகளோடு, கூடவே  ரேவதியின் வளர்ப்புத் தாய் சித்ராவின் மற்றும் மாதேசின் அம்மாவின்,  கொஞ்சம் நெஞ்சம் நிறைந்த நெகிழ்ச்சியான பேச்சும் மறக்க முடியாதவை.

ரேவதிக்கு அம்மா இல்லை. மாற்றாந்தாய் கொடுமையில் இருந்த அவளை அழைத்து வந்து வளர்த்து படிக்க வைத்து கல்யாண ஏற்பாடுகள் செய்தது எல்லாமே, கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் இருந்து விட்ட அவளது அத்தை சித்ரா தான்!

தாய்க்கு தாய், தந்தைக்கு தந்தை அவர்.

ரேவதியின் கல்யாணத்திற்கு கடைசி நேரத்தில் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு இருக்க, அதை கேள்விப்பட்ட மதுரா, வலிய வந்து அவளுக்கு உதவினாள்.

ரேஷ்மாவிடமும் உதவிகள் பெற்றுக் கொடுத்தாள்.

ஆனால் அதே சமயம், வேலை நேரத்தில் பர்சனல் கால் பேசிய போது ரேவதியை அறையவும் செய்தாள் தான்!

அதே மாதிரி மாதேஷ் அவன் அன்னையிடம் சண்டைப் போட்டுக் கொண்டு காலையில் உணவு உண்ணாமல் கிளம்பி விட, அவன் அன்னையும் அவன் அப்படி போனதை எண்ணி, வருந்தி சாப்பிடாமல் இருந்து சுகர் குறைந்து மயக்க நிலைக்கு போய் இருந்தார் ஒருமுறை!

மாதேஷ்க்கு அவர் உடம்பு முடியவில்லை என்று போன் செய்ய அவன் கோபித்துக் கொண்டு எடுக்கவே இல்லை!

எனவே அவர் ஆபிஸ் லேண்ட் லைனுக்கு போன் செய்து விட்டார்.

அதை அன்று போனை எடுத்தது மதுரா.

விபரம் அறிந்தவள், அவரிடம் அட்ரஸ் கேட்டுக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்று அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டு, ஆபீஸ் வந்தவள், ஆபிஸ் வேலையாக வெளியே போய் விட்டு வந்த மாதேசை விட்டாள் ஒரு அறை!

இப்படி தான் மதுராவின் நடவடிக்கைகள் இருக்கும்!

அதை தான் குறிப்பிட்டு பேசினார்கள் இரு அன்னையரும்!

“கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்னு சொல்லுவாங்க,

இந்த மதுரா பெண்ணைப் பொறுத்தவரை அது ரொம்ப சரியா இருக்கு.

நீ இப்படி டக்குன்னு எல்லோரையும் கை நீட்டி அடிப்பது வெளியே இருந்து பார்த்தால் கோபமாக தான் வரும்!

ஆனா அருகே வந்து உணர்ந்தா தான் அதில் இருக்கும் அக்கறை தெரியும்.

இந்த ஆபிஸே ஒரு குடும்பம் மாதிரி தான் இருக்கீங்க.

அதே மாதிரி, ரேஷ்மா அம்மா ஒரு முதலாளி கெத்து காட்டாம, ரொம்ப பிரியமா இருக்காங்க. இது எல்லாம் ரொம்ப அபூர்வம்!

இந்த ரெண்டு தேவதை மாதிரியான பொண்ணுங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்னு இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்திப் பேசினார் அந்த ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியை சித்ரா!

எல்லோருக்கும் புது வருடத்தின் போதே ஒரு இண்டக்சன்  ஸ்டவ் கூடவே அதற்கு உண்டான சில பாத்திரங்கள் அடங்கிய பரிசுப் பெட்டி ஒன்றையும் வாங்கி வைத்திருந்தாள் மதுரா, ரேஷ்மாவின் அனுமதியுடன்!

ஊழியர்கள் எல்லோருக்கும் அது நினைவுப் பரிசாக கொடுக்கப்பட்டது!

எல்லாவற்றையும் தன் போனில் பதிவு செய்து வைத்தான் யுவி!

இத பார்த்த பின்னாடியாவது அந்த ரேவந்த் தடியன் மதுராவைப் பத்தி புரிஞ்சுக்கட்டும்!

“எப்ப பார்த்தாலும் அவங்கள திட்டிக்கிட்டே இருக்கான், அவங்கள பத்தி பேசினாலே” என்று ரேஷ்மாவிடம் சொன்னான் அவன்.

அடுத்து வந்த நாட்கள் நிற்க நேரமில்லாமல் போய்க் கொண்டிருந்தன.

ரேவந்த் திருப்பூர் போய் விட்டான்.

ரேஷ்மாவுக்கும் அடுத்தடுத்த வேலைகள்!

அடுத்து வந்த நாட்கள் பரபரப்பாகவே கழிந்தன.

ரேவந்த் திருப்பூர் சென்று விட்டதால், பிக்கில் பால் விளையாட ஸ்போர்ட்ஸ் க்ளப் போக வில்லை.

அதனால் லக்கியும் அவனைப் பற்றி எதுவும் வீட்டில் பேச வில்லை!

மதுராவே கூட கேட்டே விட்டாள்!

“எங்க உன் ரேவ் சாரைப் பத்தின பேச்சையே காணோம்?”

“அவர் கொஞ்சம் பிஸிக்கா. விளையாட நேரம் இல்லை இப்போ எல்லாம்! என்னக்கா, என்னை விட என் பிரண்டை நீ மிஸ் பண்ற போல?” கிண்டலடித்தாள் லக்கி.

“ஆமா.. அந்த மூஞ்சி எப்படி இருக்கும்னு கூட எனக்கு தெரியாது! நான் தான் அவர மிஸ் பண்றேன்!

நீ தான் அடிக்கடி ரேவந்த் ரேவந்த்ன்னு அந்த பேரை சொல்லிட்டே இருப்ப? அதான் கேட்டேன்!”

ஏன்.. நீ சொல்றதே இல்ல உன்னோட ஊட்டி ரேவந்த் பேர?

என்ன.. நீ மனசுக்குள்ள சொல்லிட்டு இருப்ப! லக்கி வெளிப்படையா சொல்லிட்டு இருந்தா! என்று மதுராவின் மனசாட்சியும்  அவளை கிண்டல் செய்தது!

அச்சோ.. இந்த டாபிக்கே வேண்டாம் என்று வாயை மூடிக் கொண்டு விட்டாள் மதுரா.

அப்படியே நாட்கள் செல்ல, மாதக் கடைசி வந்தது.

அடுத்து ஏப்ரல் மாத வருடாந்திர புதுக் கணக்கு தொடங்க வேண்டிய நாள்!

அதற்கும் அவர்கள் ஆபிசில் ஒரு சிறிய அளவில் பூஜை போட்டே துவங்குவாள் மதுரா.

ஸ்ரீரங்கத்தில் ஆடிட்டர் ஆத்மநாதன் ஆபிஸில் பின் பற்றிய பழக்கம்!

இங்கும் ரேஷ்மாவின் அனுமதியுடன் நடந்து கொண்டிருக்கிறது, மதுரா இங்கே வந்த சில வருடங்களாய்.

இந்த வருடமும் எல்லா ஏற்பாடுகளும் மதுரா செய்திருக்க, ரேஷ்மாவுக்கு தான் ஒரு சொன்ன அசவுகர்யம்!

ரொம்ப சரியாக அப்போது தான் அவள் வீட்டு விலக்காகும் நாள்.

அவள் அப்படி இருக்கும் போது எப்படி பூஜையில் கலந்து கொள்வது?

அவள் ஆசை ஆசையாக ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் கம்பெனியின் பூஜைக்கு அவள் இல்லாமல் எப்படி?

அவள் கையால் தானே பூஜை செய்யப்பட வேண்டும்!

“நோ ஒர்ரிஸ் மேம். நீங்க அரேன்ஜ் பண்ணுங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றாள் ரேஷ்மா மதுராவிடம்.

“என்ன பண்ண போறீங்க? முன்னொரு தரம் செஞ்ச மாதிரி ***லட்  மாத்திரை போட்டுக்க போறீங்களா?” என்றாள் மதுரா  கொஞ்சம் கவலையாக!

“வேற வழி?”

“ஆனா அதுக்கப்புறம் எவ்வளவு கஷ்டப்படனும் நீங்க? எவ்வளவு ஸ்டமக் பெயின்? தாறுமாற போய்டும் உங்க பீரியர்ட் சைக்கிள்! வேண்டாம் போடாதீங்க!”

“வேற என்ன செய்றது?”

“நான் வீட்டு வைத்திய முறையில ஒண்ணு கலந்து கொண்டு வர்றேன். மாத்திரை வேண்டாம்!”

“ஐயோ வேண்டாம் மேம். அதெல்லாம் என்னால குடிக்க முடியாது.

ஒரு வாட்டி ஆலோவீரா ஜூஸ் குடிக்க வச்சீங்க.

ஒரு தரம் வாழைப்பூ ஜூஸ் குடிக்க வச்சீங்க. இப்ப நினைச்சாலும் உவ்வே.. எனக்கு வேண்டாம்!” என்று மறுத்தாள் ரேஷ்மா.

“இல்ல.. இது வெறும் மோர் தான். அவ்வளவு மோசமா எல்லாம் இருக்காது.

நீங்க குடிக்கிறீங்க. நான் கொண்டு வர்றேன் காலையிலேயே உங்க வீட்டுக்கு” தீர்மானமாய் சொல்லி விட்டாள் மதுரா.

அடுத்த நாள் சொன்ன மாதிரியே காலையில் கிச்சனுக்குள் சென்றவள் பிரிட்ஜில் இருந்து மோரை எடுத்து, மருந்தை தயார் செய்து ஒரு டப்பாவில் எடுத்துக் கொண்டாள்.

அன்று பார்த்து மதுராவும் கொஞ்சம் அதிக நேரம் தூங்கி விட்டாள், லக்கி தெரியாமல் மதுராவின் அலாரத்தையும் ஆஃப் செய்து விட்டபடியால்!

எனவே நேரம் ஆகி விட்டது என்று, அவசரம் அவசரமாக இனியாவின் பழைய சுடிதார் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு,

தலையை பின்னிக் கொள்ளாமல் ஒரு உச்சிக் கொண்டை மட்டும் போட்டுக் கொண்டு,

மறக்காமல் கண்ணாடியை மட்டும் அணிந்து கொண்டு தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ரேஷ்மாவின் பிளாட்டிற்கு சென்றாள்.

ரேஷ்மாவிற்கு ஏற்கனவே வந்து கொண்டிருப்பதை சொல்லி விட்டதால், அவள் கதவைத் திறந்தே வைத்திருந்தாள்.

மதுரா உள்ளே வந்து, கொண்டு வந்ததை எடுத்து ரேஷ்மாவிடம் குடிக்க சொல்லிக் கொடுத்தாள்.

“அய்யோ..மேம்.. ப்ளீஸ் விடுங்களேன். இத குடிச்சு தான் ஆகணுமா? நான் மாத்திரையே போட்டுக்கிறேனே?”

“நோ வே! மாத்திரைய போட்டுக்கிட்டு அப்புறம் ஸ்டமக் பெயின்ல அவதிப்பபடறதுக்கு, இது எவ்வளவோ மேல்! அப்படியே கண்ணை மூடிக்கிட்டு ஒரே முழுங்கா முழுங்கிடுங்க சிம்பிள்!”

“அய்யோ வேண்டாமே!”

“ம்ச்.. இது வெறும் மோர் மாதிரி தான் இருக்கும் குடிங்க..” என்று சொல்லி வலுக்கட்டாயமாக ரேஷ்மாவை இழுத்து வைத்து, அவள் வாயில் ஊற்ற போனாள் மதுரா.

“ஹேய்.. ஸ்டாப் இட். என்ன பண்ணிட்டு இருக்க ரேஷ்மாவை” என்று கத்தியபடியே அடுத்த அறையில் இருந்து வேகமாக வெளியே வந்த ரேவந்த்,

பெண்கள் இருவரும் எதிர்பாரா வண்ணம், மதுராவை ஓங்கி அறைந்து கீழே தள்ளியிருந்தான்!

மதுரா கையில் இருந்த பாத்திரம் கீழே சத்தமிட்டபடியே உருண்டோடியது.

அவள் கொண்டு வந்திருந்த மருந்து மோர் தரையிலும் மதுராவின் முகத்திலும் முழுவதும் தெளித்து இருந்தது.

அவள் கண்ணாடி தூரமாக போய் விழுந்திருக்க, அவள் அணிந்திருந்த சுடிதார் டாப்ஸ், அங்கு இருந்த டீப்பாயின் முனையில் மாட்டிக் கொண்டு மதுரா வேகமாக எழ முயன்றதில் தோள் பக்கம் கிழிந்தே விட்டது!

வேகமாக எழுந்தவள், கீழே கொட்டியிருந்த மோரில் கால் வழுக்கி மீண்டும் கீழே விழுந்து விட்டாள்.

விழுந்தவள் தன் முகத்தில் வழிந்திருக்கும் மாவை துடைக்க, நெற்றியில் இருந்த பொட்டும் அத்தோடு போய் விட்டிருந்தது!

“ரேவந்த்.. என்ன பண்ணி வச்சுருக்க? அவங்கள ஏன் இப்படி அடிச்சு தள்ளி விட்ட?” அதிர்ச்சியில் இருந்து மீண்ட ரேஷ்மா கோபமாக கத்த,

“இல்ல இவ.. உன்னை முரட்டுத்தனமாக.. என்னமோ ஒண்ணை உன்னை போர்ஸ் பண்ணி குடிக்க வச்சுட்டு இருந்தா..” அதான் என்றபடியே

அப்போது தான் மதுராவை நன்கு கவனித்தவன், அதிர்ந்தான்.

தினமும் அவன் மனதில் ஒரு முறையாவது வந்து போகும் அந்த முகத்தை அவன் எப்படி மறப்பான்?

எனவே அவள் அருகே சென்று, குனிந்து,

“ஸ்வீட்டி.. ஸ்வீட்டி தானே நீ?

நீ இங்க எப்படி?

அப்ப நீ தான் அந்த மதுராவா?” என்றபடி அவள் முகத்தை கையில் ஏந்தினான்.

இப்போது அவள் ஏதும் சொல்லாமலே அவளை நன்றாக அடையாளம் தெரிந்தது!

என்ன.. முகத்தில் அப்போது இருந்த அந்த குழந்தைத் தனம் கொஞ்சம் குறைந்து இருந்தது!

அவ்வளவு தான்!

அவன் ஸ்வீட்டியை அவனுக்கு அடையாளம் தெரியாமல் போகுமா என்ன?

அவளின் பொட்டு இல்லாத அந்த நடு நெற்றியில் அவனால் ஏற்பட்ட, அவன் விளையாடும் போது அவளுக்கு அடிப்பட்டதால் வந்த அந்த சின்ன தழும்பு அவன் கண்ணில் பட்டது!

இப்போது வரை அதை, ஒரு பெரிய திலகம் கொண்டு மறைத்து விடுவாள் மதுரா!

அதே போல அவள் தோளில் இருந்த ஒரு ஊசியை வைத்து நேர் கோடாக இழுத்த மாதிரியான காயத்தின் தழும்பு!

மெல்லியதாக ஆனால் நீளமாக, சற்றே ஆழமாக! தையல் போட்ட அடையாளத்துடன்!

அதுவும் அவனால் ஏற்பட்டது தான்!

இத்தனை வருடங்களில் அதுவும் கூட மறைய வில்லை!

அதுவும் அவன் கண்களில் பட்டது இப்போது!

“ஸ்வீட்டி.. நீ எப்படி இங்க?” என்றான்.

மதுராவும்  அப்போது தான்  அவனை உற்று நோக்கினாள்

“ஊட்டி.. ஊட்டியா இது?” என்று அதிர்ந்தவள், அந்த அதிர்ச்சியுடனேயே, தளர்வாக அவள் எழ முயற்சிக்க,

எது அவனுக்கு அவ்வளவு தைர்யம் கொடுத்து என்றே தெரியவில்லை!

ஆனால் செய்தான்!

எழ முயன்ற அவளைத் தன்னோடு அணைத்தவாறு இரு கைகளால் அப்படியே தூக்கியே விட்டான் அவன் ஸ்வீட்டியை!

“ரேவந்த்.. விடு அவங்களை.. மேல மேல தப்பு பண்ணிட்டு இருக்க நீ! அவங்கள பத்தி உனக்கு தெரியாது!

அவங்க நீ நினைக்கிற மாதிரி இல்ல. ரொம்ப நல்லவங்க.. அவங்க என்னோட பி ஏ மட்டுமில்ல..

அவங்க என்னை அவங்க சிஸ்டர் மாதிரி கேரிங்கா பாத்துக்கிறவங்க.

சிஸ்டர் மாதிரி கூட இல்ல..

ஷி மதர்ஸ் மீ..

ஒரு அம்மா மாதிரி அவங்க..

ரேவந்த் ப்ளீஸ் அவங்கள விடு.

என்ன இப்படி எல்லாம் மிஸ் பிஹேவ் பண்ணிட்டு இருக்க?

நான் உன்கிட்ட இத எதிர்பார்க்கல” ரேஷ்மா கத்த,

“ஏய்.. ரேஷ்மா.. நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். ஸ்வீட்டிய பத்தி எனக்கு தெரியும்!

அப்பவே அந்த சின்ன வயசுலேயே அவ கிட்ட ஒரு மதர்லிநெஸ் இருக்கும்! இப்ப கேக்கவே வேண்டாம்!

நீ சொல்றது எனக்கு புரியுது” என்றவன் மதுராவை கீழே இறக்கி விட்டுவிட்டு,

மீண்டும் அவளை தன் தோளோடு அணைத்துக்  கொண்டான்!

மதுராவும் சில நிமிஷங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தவள்,

பின் தான் சூழ்நிலையை உணர்ந்து அவனிடம் இருந்து விலகினாள்.

அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது!

அவள்.. அவளோட ஊட்டி.. கடைசியில் ரேஷ்மாவின் அண்ணன் ரேவந்த் தானா?

ஊரில் எத்தனையோ ரேவந்த் சித்தார்த் இருக்க கூடும் என்றே அல்லவா நினைத்து இருந்தாள்!

கடைசியில் அவன்  தானா?

அது சரி.. கோபமாக வந்தவன், பின் ஏன் அணைத்து தூக்கினான்?

அவன் தூக்கியது சரி.. நீ என்ன வெட்கம் கேட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டு நின்னுட்டு இருந்திருக்க!

உன் கண்ணே உன்னைக் காட்டிக் கொடுத்துருக்கும் அவனுக்கு!

அப்ப தான் சின்னப் பொண்ணு, அவனைக் கண்டா ஆசையா பார்த்து வைப்ப.. இப்ப ஏழு கழுதை வயசிலும் கூடவா அவனை அப்படிப் பார்த்து வைப்ப?

அதான் தைரியமாய் உன்னைத் தொட்டு தூக்கி, ஹக் பண்ணிட்டு நிக்கிறான்!

அவன் என்ன நினைச்சுருப்பான் உன்னைப் பத்தி?

அவ்வளவு வீக்காடி நீ?

உன்னை போய் எல்லோரும் சிங்கப் பெண் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்காங்க?

என்ன தான் அவனையே நீ மனசில் நினைத்துக் கொண்டிருந்தாலும், அதை அவன் முன்னே இப்படி தான் அது கேவலமாக வெளியே தெரியும்படி நடந்துப்ப?

ரேஷ்மா உன்னைப் பத்தி என்ன நினைப்பா?

ச்சே.. இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருந்தா அவமானத்திலேயே செத்துடுவேன்!

லக்கி இருக்கா எனக்கு!

இன்னும் கடமைகள் இருக்கு!

கிளம்பு.. சீக்கிரம் என்று அவள் மனது அவளை விரட்ட,

டேபிளில் இருந்த அவள் போனையும் ஸ்கூட்டி சாவியையும் எடுத்துக் கொண்டு

வீட்டை வீட்டு வேகமாக கிளம்பினாள் மதுரா.

ரேவந்த்.. சீக்கிரம் கார் கீயை எடுத்துட்டு வா. அவங்க இந்த மூட்ல வண்டி ஓட்டிட்டுப் போறது நல்லதா படல!

இந்த கோலத்தில் அவங்க எப்படி வீட்டுக்கு போவாங்க! என்று ரேஷ்மா கத்த,

ரேவந்த்  வேகமாக சென்று கார் சாவியை எடுத்துக் கொண்டு கீழே விரைந்தான்.

அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து ரேஷ்மாவும் உடன் சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!