அடுத்த நாளே ஜாதகம் பார்த்தார்கள். பாரதி மற்றும் தமிழுக்கு பேர் பொருத்தம் முதல் ஜாதகம் வரை அனைத்தும் நன்றாக பொருந்தி இருக்கிறது என்று ஜோசியர் சொன்னதும் உடனே தரகரை அழைத்து சொல்லி விட்டார் பாண்டியன்.
“சரிங்க ஐயா, அவங்க வீட்ல பேசிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்”, என்று சொல்லி விட்டு போனை வைத்த தரகர் நேராக பாரதி வீட்டுக்கு தான் சென்றார்.
அப்போது தான் மூர்த்தி வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணி வெளியே வந்த பாரதி தரகரைக் கண்டதும் குழப்பமாக யார் நீங்க என்னும் விதமாய் பார்க்க “அப்பா இருக்காரா மா?”, என்று கேட்டார் தரகர்.
“ஆன் இருக்காங்க. உள்ள போங்க”, என்று சொன்ன பாரதி “அவர் யாரா இருந்தா எனக்கென்ன?’, என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
“வாங்க தரகரே”, என்று வரவேற்றார் கேசவன். அமுதா அவருக்கு காப்பி போட்டுக் கொடுத்தாள்.
“என்ன காலைலே இந்த பக்கம் வந்துருக்கீங்க? என்ன விஷயம்?”, என்று கேட்டார் கேசவன்.
“நம்ம பாண்டியன் ஐயா மகன் ஜாதகம் உங்க பொண்ணு ஜாதகத்தோட நல்லா பொருந்திருக்கு. உங்க மக போட்டோவையும் அவங்க வீட்ல பாத்தாங்க. எப்ப முறைப்படி பொண்ணு பாக்க வரட்டும்னு கேக்குறாங்க. நீங்க என்ன சொல்றீங்க?”
“நம்ம மணியக்காரர் பாண்டியன் வீட்லயா பேசினாங்க? என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டார்.
“ஆமா”
கேசவன் என்ன சொல்ல என்று தெரியாமல் ஒரு நொடி மௌனமாக இருக்க “அவ்வளவு பெரிய சம்பந்தம் எல்லாம் வேண்டாம் தரகரே. அந்த அளவுக்கு சீர் செய்ய எல்லாம் எங்களால முடியாது. எங்களுக்கு இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்கு. அதனால மாச சம்பளக்கார சம்பந்தமா பாருங்க”, என்றாள் அமுதா.
“மாச சம்பளக்காரனை பாத்தாலும் நீ சீர் செஞ்சிருவியா என்ன?”, என்று மனதில் நினைத்துக் கொண்டு “சீர் நிறைய செய்யணும்னு எல்லாம் இல்லை கேசவன். அவங்க அதையெல்லாம் எதிர் பாக்க மாட்டாங்க. அவங்க கிட்டயே நிறைய இருக்கு. பொண்ணைக் கட்டின புடவையோட அனுப்புனா போதும். மாப்பிள்ளை பையனையும் பாத்துருப்பீங்களே? புல்லட்ல ஜம்முன்னு போவாறே. நல்லா படிச்சிருக்காப்ல? பையன் கூட பிறந்தது யாரும் இல்லை. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத சம்பந்தம்”, என்றார் தரகர்.
அமுதா எதுவோ சொல்ல வர அதற்கு முன் “சரி வரச் சொல்லுங்க. என்னன்னு பேசிப் பாப்போம்”, என்று சொல்லி விட்டார் கேசவன்.
அதன் பின் தரகர் பாண்டியன் வீட்டுக்கு சென்று கேசவன் சொன்னதைச் சொல்ல வெள்ளிக் கிழமை நாள் நன்றாக இருப்பதால் அன்றே போவதாக முடிவு எடுத்தார்கள் பாண்டியனும் கோகிலாவும். தமிழிடமும் சொல்லி விட்டார்கள். அவன் வேண்டா வெறுப்பாக பெற்றவர்களுக்காக சரி என்று சொன்னான்.
அவர்கள் பெண் பார்க்க வரும் நாள் அன்று காலையில் தன்னுடைய மாமா வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பாரதி.
அப்போது “பாரதி”, என்று அழைத்தார் கேசவன்.
“என்னப்பா?”, என்று வேண்டா வெறுப்பாக அவரிடம் கேட்டாள். கூடவே “இவர் என்ன என் கிட்ட பேசுறார்?”, என்று குழப்பமும் வந்தது அவளுக்கு.
“நீ இன்னைக்கு உன் மாமா வீட்டுக்கு போக வேண்டாம்”
“ஏன்?”
“எதுக்கு எடுத்தாலும் பதிலுக்கு கேள்வி கேக்குறதை நிப்பாட்டு. என்ன சொன்னாலும் சரின்னு கேட்டு பழகு. இதுக்கு தான் உன்னை அவ்வளவு படிக்க வைக்க வேண்டாம்னு நினைச்சேன்”, என்று எரிந்து விழுந்த கேசவன் அமுதாவுக்கு பிறந்த மகனிடம் பாசமாக பேச ஆரம்பித்து விட்டார்.
“இவருக்கு என்னைக் கண்டால் மட்டும் தான் பாசமே வராது போல? இப்ப எதுக்கு மாமா வீட்டுக்கு போகக் கூடாதுன்னு தானே கேட்டேன்? என்னமோ கொலைக் குத்தம் செஞ்ச மாதிரி கத்துறார். நான் மட்டும் இவருக்கு மக இல்லையா?”, என்று எண்ணிய பாரதி விதியே என்று எண்ணி வீட்டிலேயே இருந்தாள்.
வீட்டில் இருப்பது அவளுக்கு எரிச்சலாக இருந்தது. சாயங்காலமாக இருந்திருந்தால் மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்திருப்பாள். ஆனால் காலையில் ஆறு மணிக்கே மண்டையை பிளக்கும் வெயிலில் அவளால் அங்கு செல்ல முடியாதே.
அவளுக்கு என்று தனி அறையும் கிடையாது. அதனால் சமையல் அறைக்கு சென்றாள்.
“ஏதாவது செய்யணுமா சித்தி?”, என்று அமுதாவிடம் கேட்டாள்.
அமுதா ஏதோ பலகாரம் எல்லா செய்து கொண்டு இருக்க இவளுக்கும் பல வேலைகள் சொன்னாள். அனைத்தையும் செய்த பாரதி “எதுக்கு சித்தி பலகாரம்? வீட்டுக்கு யாரும் வராங்களா?”, என்று வாய் வரை வந்த கேள்வியை அவளிடம் கேட்க வில்லை.
அவள் கேட்டாலும் பதில் வராது என்பது பாரதிக்கு தெரியும். ஒரு பதினொரு மணி போல் “பாரதி இந்தா இந்த சேலையை கட்டி ரெடி ஆகு”, என்று அவளிடம் அவளது அம்மா புடவையைக் கொடுத்தாள் அமுதா.
“ஐ அம்மா புடவை”, என்று குதுகளித்தவாறு அதை விரலால் வருடியவள் “வெளிய எங்கயும் போறோமா சித்தி?”, என்று கேட்டாள்.
“ஆமா போறோம். நீ சீக்கிரம் கிளம்பு”, என்றதும் அவளும் அம்மாவின் சேலையைக் கட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று எண்ணி சந்தோஸமாக அதை உடுத்தினாள்.
அது மட்டும் அல்ல அவள் சேலை கட்டி முடித்ததும் அவளுடைய அம்மாவின் நகைகளையும் அவளிடம் கொடுத்த அமுதா “இந்தா பாரதி இதையெல்லாம் போட்டுக்கோ”, என்றாள்.
அவளை வியப்பாக பார்த்த பாரதி “எதுக்கு சித்தி நகையெல்லாம்? எனக்கு வேண்டாம்”, என்றாள்.
“என்னைக்கு இருந்தாலும் இதெல்லாம் உனக்கு சேர வேண்டியது தான். உங்க அம்மா நகை உனக்கு தான் வரணும். எடுத்து போடு”, என்று அமுதா சொன்னதும் பாரதியின் கண்கள் வியப்பில் மேலும் விரிந்தன.
தனக்காக கேசவனை ஒரு ரூபாய் கூட செலவு செய்ய விடாத அமுதாவா இவ்வளவு நகைகளை தனக்கு தருகிறாள் என்று எண்ணிய பாரதி “இன்னைக்கு எதுக்கு இவ்வளவும் போடணும்? நீங்க எல்லாம் வெளிய போகலாம்னு சொல்லிட்டு இன்னும் கிளம்பாம இருக்கீங்களே?”, என்று கேட்டாள்.
“நாம வெளிய போகலை பாரதி. இன்னைக்கு உன்னை பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க”, என்று அமுதா சொன்னதும் தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போய் அசையாமல் நின்றாள் பாரதி.
அவளால் தன்னுடைய காதில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. அப்படியே தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டாள். அவள் அசையாமல் இருக்கவும் அமுதாவே அவளுக்கு நகைகளை மாட்டி விட்டாள்.
அவள் மனது என்ன யோசித்தாலும் சமன் படவே இல்லை. அவள் மனம் முழுவதும் ரிஷியைப் பற்றி தான் எண்ணியது. தான் காத்திருப்பேன் என்று சொன்னதால் தானே அவன் ஜெர்மனி கிளம்பி போனான். ஆனால் இப்போது நான் வேறு ஒருவனை திருமணம் செய்தால் இது அவனுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?
மனதில் ரிஷி இருக்கும் போது அவளால் வேறு ஒருவரை எப்படி திருமணம் செய்ய முடியும்?
தன்னை நிலைப் படுத்தியவள் “சித்தி, இந்த பொண்ணு பாக்குறது எல்லாம் வேண்டாம் சித்தி. எனக்கு கல்யாணமே வேண்டாம்”, என்றாள்.
“என்னங்க, இங்க வாங்க. உங்க மக என்ன சொல்றான்னு கேளுங்க. இதுக்கு தான் இவளைப் படிக்க வைக்காதீங்கன்னு சொன்னேன்? கேட்டீங்களா? உங்க மச்சினன் பேச்சைக் கேட்டு காலேஜுக்கு அனுப்புனீங்க. அதான் இவ்வளவு தைரியமா பேசுறா”, என்றாள் அமுதா.
அங்கு வந்த கேசவன் “என்ன பாரதி இதெல்லாம்?”, என்று கோபமாக கேட்டார்.
“அவ கிட்ட என்ன கேக்குறீங்க? எவன் கிட்டயாவது கெட்டு சீரழிஞ்சு வந்துருக்காளோ என்னவோ?”, என்று அமுதா சொன்னதும் “சித்தி”, என்று கத்தினாள் பாரதி.
“அவ கேக்குறதுல என்ன தப்பிருக்கு பாரதி? எதுக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?”
“நான் மேல படிக்கணும் பா. என் தம்பியையும், பிரவீனையும் நல்லா படிக்க வைக்கணும் பா. அதுக்கு நான் நல்ல வேலைக்கு போகணும்”
“இங்க பாரு எங்க மகனைப் பாத்துக்க எங்களுக்கு தெரியும்? அதே மாதிரி மூர்த்தி அவன் மகனைப் பாத்துக்குவான். இதுக்கு மேல உன்னை வீட்ல வச்சிருக்க முடியாது. அப்படியும் படிக்கணும்னா உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போற உன் புருஷன் கிட்ட போய் கேளு. இப்ப கிளம்பி ரெடியா இரு”, என்று கேசவன் சொன்னதும் பாரதிக்கு ஒன்றுமே பேச முடியவில்லை.
அவளைப் பெற்ற அப்பாவே இப்படிச் சொன்ன பிறகு அவளால் என்ன சொல்ல முடியும்? “அவங்க வந்துட்டு போகட்டும். மாமா கிட்ட பேசி இதை நிறுத்தச் சொல்லணும்”, என்று எண்ணிக் கொண்டாள் பாரதி.
எப்போதும் இந்நேரம் தங்களின் வீட்டுக்கு வந்து விடும் பாரதி இன்று இவ்வளவு நேரம் வராததால் அவளை தேடி அவளின் வீட்டுக்கே வந்தார் மூர்த்தி.
அவரைக் கண்டதும் “வா மூர்த்தி”, என்றார் கேசவன்.
“பாரதியை காணும்னு தேடி வந்தேன் மச்சான். பாரதி எங்க?
“நானே உனக்கு சொல்லி விடணும்னு நினைச்சேன் மூர்த்தி”
“என்ன மச்சான்?”
“இன்னைக்கு பெரிய வீட்ல இருந்து நம்ம பாரதியை பொண்ணு பாக்க வாராங்க”
“என்னது? தமிழ் தம்பிக்கா?”
“ஆமா, ஆனா உன் மருமக இது வேண்டாம். படிக்க போறேன்னு சொல்லிட்டு இருக்கா”
“அவ விவரம் தெரியாம பேசுவா மாமா. நான் அவ கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி விட்டு பாரதி இருந்த அறைக்குள் சென்றார்.
அவரைக் கண்டதும் “மாமா”, என்று கதறிய படியே அவர் தோளில் சாய்ந்தாள் பாரதி.
“இப்ப எதுக்கு கழுதை இப்படி அழுற? உனக்கு நல்லது நடக்க போகுது மா. என் அக்கா உனக்கு நல்ல வாழ்க்கையை தான் ஏற்படுத்திக் கொடுப்பா. எவ்வளவு பெரிய சம்பந்தம் தெரியுமா? இந்த கல்யாணம் முடிஞ்சா நீ ராணி மாதிரி இருக்கலாம். அதை விட்டுட்டு இன்னும் உன் சித்திக் கிட்ட இடி சோறு திங்கப் போறியா? இந்த மாமாவுக்காக ஏதாவது செய்யணும்னு ஆசைப் பட்டா இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கணும். தமிழ் தம்பி ரொம்ப நல்ல மாதிரி மா”, என்று மூர்த்தி சொன்னதும் பாரதியால் எதுவுமே சொல்ல முடியவில்லை.
இதற்கு மறுத்துப் பேசினால் அவள் மூர்த்தியை அவமதிப்பது போல அல்லவா ஆகி விடும். அவளுக்கு இன்னொரு தாயாக இருந்தவரை அவளால் எப்படி அவமானப் படுத்த முடியும்?
அவள் அமைதியாக இருக்கவும் “அப்படியே எங்க அக்காவைப் பாக்குற மாதிரியே இருக்கு டா. நீ அழுகையை நிறுத்திட்டு முகம் கழுவி தயாரா இரு. நான் உன் அத்தையையும் பொடியனையும் அழைச்சிட்டு வந்துறேன். அவங்க கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவாங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சந்தோஷமாக சென்றார்.
அக்கா மகள் என்று நினைக்காமல் தன்னுடைய மகளுக்கே திருமணம் என்பது போல சந்தோஷமாக சென்றவரைக் கண்டு, அவரது அன்பை எண்ணி பாரதி மனம் கனத்து போனது.
ஆனால் ரிஷி… அவனை எப்படி ஏமாற்ற முடியும்? ஒரு வேளை கடவுள் இது தான் எனக்கு விதிச்சதா? ரிஷியோட அழகுக்கும் பணத்துக்கும் அவனுக்கு ஏத்த பொண்ணு கிடைப்பாளோ? அவன் வாழ்க்கையை கெடுக்க கூடாதுன்னு தான் கடவுள் அவன் கிட்ட இருந்து என்னைப் பிரிக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டாள்.