வெளியே இருந்து அழைப்பு வந்ததும் நண்பர்களுடன் மணமேடைக்கு சென்றான் தமிழ். சிறிது நேரத்தில் பாரதியை அழைத்து வந்து அவன் அருகில் அமர வைத்தார்கள்.
என்ன தான் அவளை பிடிக்க வில்லை என்றாலும் அவளது அழகு அவனை திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அவள் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். அதன் பின் நலங்கு முடிந்ததும் அவளை அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தார்கள். தமிழ் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தான். ஐயர் எதை எதையோ செய்ய சொல்லிக் கொண்டிருந்தார்.
அறைக்குள் தயாராகி இருந்த பாரதியைக் காண வந்த கோகிலா “அழகா இருக்க டா ராஜாத்தி. அப்புறம் முகத்தை சாதாரணமா வச்சிக்கோ மா. ரொம்ப பயந்த மாதிரி இருக்கு”, என்று சொன்னதும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள் பாரதி.
அடுத்த நிமிடம் “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ”, என்ற ஐயரின் குரல் கேட்டது.
“வா மா”, என்று அழைத்து சென்றார்கள் அவளை. அவர்களுடன் அடி மேல் அடி வைத்து நடந்தவள் மேடையில் இருந்த அவனை சற்று விழி உயர்த்திப் பார்த்தாள். அவனும் அவளை அந்நேரம் பார்த்தான். இருவர் பார்வையும் ஒரு நொடி பின்னிக் கொண்டது.
அது வரை இருந்த தமிழின் இறுக்கம் அப்போது குறைவது போல உணர்ந்தான் தமிழ். தன்னைக் கண்டதும் அவன் முகம் மலர்வதை பார்த்த பாரதிக்கு என்ன செய்ய என்று கூட தெரியவில்லை. அவன் அருகில் வந்ததும் அவனிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அதன் பின் மறந்தும் கூட அவனை அவள் நிமிர்ந்து பார்க்க வில்லை.
ஏற்கனவே ஒருவனின் காதலை வாங்கிக் கொண்டு இன்னொருவனின் கையால் தாலி வாங்கப் போகிறேனே என்று அவள் மனம் கலங்கித் தவித்தது பாரதிக்கு.
ஐயர் மந்திரம் ஓத, பெரியவர்களின் ஆசியோடு பாரதியின் கழுத்தில் தாலி கட்டினான் தமிழ். அதன் பின் அவர் சொல் படி அவளை தன் பக்கம் சாய்த்து கையை சுற்றி எடுத்துக் கொண்டு வந்து அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்ததும் அந்த உணர்வுகளைத் தாங்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள் பாரதி. அவள் கண்களில் ஒரு துளி கண்ணீர் கூட வந்து விட்டது. இந்த கண்ணீர் சத்தியமாக ரிஷியை நினைத்து இல்லை என்பது மட்டும் உண்மை.
அவள் கண்ணீரை அவன் வியப்பாக பார்த்தான். அதன் பின் அவர்களின் நேரத்தை ஐயர் எடுத்துக் கொண்டார்.
எல்லா சம்பிரதாயமும் முடிந்து மணமக்களை பெரிய வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த பெரிய வீட்டைக் கண்ட பாரதிக்கு பயம் தான் வந்தது. பின் பாண்டியன் மற்றும் கோகிலாவை நினைத்து முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.
அவர்கள் வீட்டின் முன்னால் ஆரத்தி எடுப்பதற்காக பெண்ணும் மாப்பிள்ளையும் காத்திருக்க அங்கே ஊர் கூடி விட்டது. போட்டி போட்டுக் கொண்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் அனைவரும் ரசித்தார்கள். பாரதிக்கு தான் வெட்கமாக இருந்தது.
அதன் பின் அவர்களுக்கு ஆரத்தி சுற்றினார்கள். “தமிழ் காசு போடணும் டா”, என்றாள் தமிழின் பெரியம்மா மகள் மஞ்சு. பாக்கெட்டில் இருந்து பணத்தை போட்டதும் தான் அவர்களை உள்ளே விட்டார்கள். வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றார்கள்.
அதன் பின் வீட்டுக்கு சென்றதும் இருவரும் பூஜை அறைக்குச் சென்றார்கள். விளக்கேற்றி வைத்தாள் பாரதி. அதன் பின் பால் பழம் சாப்பிட்ட பின்னர் கீழே இருந்த ஒரு அறையில் அவளை ஓய்வெடுக்கச் சோனானார்கள். தமிழ் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். அவனுக்கு சற்று நேரம் ஓய்வு தேவையாக இருந்தது. காலையில் சீக்கிரமே எழுந்தது, ஹோம குண்ட புகை அனைத்தும் அவனுக்கு சோர்வைக் கொடுத்தது.
அதன் பின் மறுவீடு, சீர்வரிசை என நேரம் கழிந்தது. பாரதி வீட்டில் செய்த சீர்வரிசையில் பாண்டியன் மட்டும் கோகிலாவும் சந்தோசமானர்கள். ஏனென்றால் உறவினர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டுமே. பாரதிக்குமே அது திகைப்பு தான். கேசவனும் பாரதியும் அவளிடம் அதிகம் பாசமாக பேச வில்லை தான். ஆனால் கண்களால் அவளுக்கு தைரியம் சொன்னார்கள். ஆனால் இத்தனை நாள் உணராத அந்த பாசத்தை இப்போது பாரதியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதனால் அங்கிருந்து கிளம்பும் போது பாரதிக்கு அழுகை என்பது வர வில்லை.
அதன் பின் பாரதியை புகுந்த வீட்டில் விட்டு அவளுக்கு பல அறிவுரைகள் சொல்லி விட்டு பாரதியின் பிறந்த வீடும் மூர்த்தி குடும்பமும் கிளம்பியது. மூர்த்தி மற்றும் மீனாவைக் கட்டிக் கொண்டு விடை கொடுத்த போது தான் அவள் கண்கள் கலங்கியது. போகும் அவர்கள் வேனைப் பார்த்த படியே நின்றாள் பாரதி. இனி அந்த குடும்பத்தில் ஒருத்தியாக தமிழ் அருகே நின்றாள் பாரதி. அதன் பின் தமிழ் அவன் அறைக்குள் சென்று முடங்க அவள் கோகிலாவுடனே இருந்தாள்.
அன்று இரவு அவனது அறை முதலிரவுக்கு என ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கையில் பால் சொம்புடன் மாடிக்கு சென்ற பாரதி அவனிடம் இதற்கெல்லாம் கொஞ்சம் டைம் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவனுடைய அறைக்குள் சென்றாள். .
அவள் உள்ளே நுழைந்ததில் இருந்து அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ். கையில் இருந்த பால் சொம்பை அங்கிருந்த செல்ஃபில் வைத்து விட்டுப் அவனைப் பார்த்தாள். அவன் பார்வையில் வேட்கையும் ஆசையும் இருக்க நடுங்கிப் போனாள்.
அவள் அவனையே அதிர்ந்து பார்க்க அவன் சென்று அறைக் கதவை பூட்டி விட்டு வந்தான்.
தன்னை அமர வைத்து அவன் ஏதாவது பேசுவான், அப்போது தன்னுடைய மனதை சொல்லலாம் என்று அவள் எதிர் பார்க்க அவனோ அடுத்த நொடி அவள் அருகில் வந்தான். அவள் என்னவென்று உணரும் போதே அவள் தோள் வளைவில் முகம் புதைத்து அவளை கட்டிக் கொண்டான்.
என்ன நடந்திருந்தாலும் இப்படி ஒரு செய்கையை அவனிடம் இருந்து அவள் எதிர் பார்க்கவே இல்லை. கழுத்து வளைவில் முகம் புதைத்த படி அவள் முதுகைக் கட்டிக் கொண்டு அவன் நிற்க அவளுக்கு தான் இதயம் எம்பி குதித்தது. இந்த நிலையை எப்படிக் கடந்து வர என்று அவளுக்கு தெரியவில்லை.
பின் தன்னை ஒரு நிலைப் படுத்தியவள் தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து அவனை தள்ளி விட்டாள். அவள் தள்ளி விட்டதும் இரண்டு அடி தள்ளிப் போய் நின்றான் தமிழ்.
கூடவே குழப்பமான குரலில் “பாரதி”, என்று அழைத்தான்.
“பிளீஸ் ஸ்டாப் இட். என்ன இதெல்லாம்? நமக்கு இன்னைக்கு தான் அறிமுகம் ஆயிருக்கு. அதுக்குள்ள இப்படி பண்ணனுமா?”, என்று கேட்டாள் பாரதி. அவளுக்கு படபடப்பாக இருந்தது.
”ஏன் பண்ணினா என்ன? காலம் காலமா இது தான் நடக்குது?”, என்று தமிழும் சொன்னான்.
“எனக்கு இதுல விருப்பம் இல்லை. கொஞ்ச நாள் ஆகட்டும்”, என்றாள்.
அவன் ஏதாவது மறுத்தால் அதுக்கு என்ன பதில் சொல்ல என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க “சாரி, கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன். நீயும் தூங்கு. குட் நைட்”, என்று சொல்லி படுத்து விட்டான்.
அவளுக்கு தான் என்னவோ போல ஆனது? கூடவே இவன் என்ன உடனே சரின்னு சொல்லிட்டான் என்று குழப்பமும் வந்தது.
“அதான் நீ நினைச்சது நடந்துட்டுள்ள? போய் படு போ”, என்று அவள் மனசாட்சி குரல் கொடுத்ததும் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்,
புதிதாக அவள் உணர்ந்த அவனது வாசமும் அவன் அருகாமையும் அவளை தூங்க விட வில்லை. ஆனால் அவனோ நன்கு உறங்க ஆரம்பித்தான்.
சிறிது நேரம் கழித்து அவன் பக்கமாக திரும்பி படுத்து அவனைப் பார்த்தாள். “என்ன இவன் அதுக்குள்ள தூங்கிட்டான்?”, என்று எண்ணினாள் பாரதி. அவள் பார்வை அவன் முகத்தில் பதிந்தது.
பேன் காற்றின் வேகத்துக்கு ஏற்ப அவனது முன் தலை முடி அசைந்தாட, இடது கையை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்தான். அவனது அகன்ற தோள்களையும் நீளமான கால்களையும் இப்போது தான் பார்த்தாள்.
ஏனோ அவளை அறியாமலே அவனை ரசிக்கக் ஆரம்பித்தது அவள் மனது. அவனைப் பார்த்த படியே சிறிது நேரத்தில் நன்கு உறங்கி விட்டாள்.
காலையில் கண் விழித்த தமிழ் தன்னருகே உரிமையாக படுத்திருந்த அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து வந்த பின் அவளை தொட்டு எழுப்பியவன் அவள் திடுக்கிட்டு விழிக்கவும் “நேரம் ஆச்சு அதான் எழுப்புனேன். போய் குளிச்சிட்டு வா”, என்றான்.
தர்மசங்கடத்தோடு குளிக்க சென்றாள் பாரதி. அவள் குளித்து முடித்த பின்னர் தான் துண்டு எடுத்து வர வில்லை என்று புரிந்தது. பின் அங்கே கிடந்த அவனுடைய துண்டை எடுத்து இயல்பாக தலையில் சுற்றிக் கொண்டாள்.