“என்னது நைட் எல்லாம் அங்கேயே தங்கி குளிப்பீங்களா? காட்டுக்குள்ள வெளிச்சம் எப்படி இருக்கும்?”
“அதெல்லாம் லைட் போட்டுருப்பாங்க. குளிக்க வேண்டியது சூடா பஜ்ஜி எல்லாம் சாப்பிட வேண்டியது, திருப்பியும் குளிக்க வேண்டியது. மத்தவனுங்க எல்லாம் தண்ணி அடிப்பாங்க. எனக்கு அந்த பழக்கம் கிடையாது. அதனால நான் மட்டும் தான் அங்க நல்லா எஞ்சாய் பண்ணுவேன்”
“அப்படியா?”
“ஆமா, அங்க ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்சம் நடந்து போனா செண்பகதேவி அருவியும் வரும். எல்லாமே அழகா இருக்கும்”
“நீங்க இத்தனை நாள்ல ஏன் என்னை இங்க கூட்டிட்டு வரலை?”, என்று உரிமையுடன் கேட்டாள் பாரதி.
அவளுடைய உரிமையான கேள்வி அவனை தாலாட்டியது. “நான் தான் கல்யாண முடிஞ்ச அடுத்த நாள்ல இருந்து எங்கயாவது போலாமான்னு கேட்டுட்டு தானே இருந்தேன். நீ தான் வேண்டாம்னு சொன்ன”, என்றான் தமிழ்.
“அது நீங்க ஹனிமூன் போறதை தானே சொன்னீங்க? .அதனால தான் இப்ப வேண்டாம்னு சொன்னேன்”, என்று முகம் சிவந்த படி சொன்னாள் பாரதி.
அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்த தமிழ் “அப்ப மேடம் இப்ப என் கூட வரதுக்கு பேர் என்ன?”, என்று கேட்டான்.
“இது டூர். டூர்னா என்னை எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கூட்டிட்டு போங்க”, என்று அவள் சிறு குழந்தை போல சொல்ல “ஓஹோ அப்ப நாம மட்டும் இப்படி டூரா போயிட்டு இருந்தா நம்ம குழந்தைகளை எப்ப டூர் அழைச்சிட்டு போக?”, என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்க அவள் வாய் கப்பென்று மூடிக் கொண்டது. அமைதியாக வெளியே பார்வையை பதித்த படி வந்தாள். அவளைப் பார்த்து சிரித்து விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
வெளியே பார்வையை பதித்திருந்த பாரதிக்கோ அவனது நியாயமான கேள்வி புரியத் தான் செய்தது. அவன் சொன்ன படி எத்தனை நாள் இப்படி விலகியே இருக்க முடியும்? ஆனால் ரிஷியை பற்றிய நினைவு காலில் சிக்கிய முள் போல உருத்திக் கொண்டிருக்கையில் தமிழுடன் அவளால் எப்படி சந்தோஷமாக வாழ முடியும்?
இதுவே ரிஷிக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னா நானும் தமிழ் கூட சந்தோஷமா வாழ்வேன் என்று எண்ணிய பாரதிக்கு அவள் எண்ணத்தை நினைத்தே அதிர்ச்சி வந்தது.
“நான் என்ன இப்படி யோசிக்கிறேன்? அப்ப தமிழை எனக்கு புடிச்சிருக்கா? அவர் கூட வாழ தயாராகிட்டேனே? அன்பு காட்டியே என்னை மயக்கிட்டான்”, என்று எண்ணிக் கொண்டாள் பாரதி.
அவனுடன் சேர்ந்து வாழ்ந்த பிறகு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனையாக அவள் மனதில் விரிந்தது. அவனைப் போலவே ஒரு மகன் வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி அவள் மனது அலை பாய்ந்தது.
ஆனால் ரிஷியிடம் மன்னிப்பு கேட்காமல் தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியாது என்று அவளுக்கு புரிந்தது. ரிஷி ஜெர்மனியில் இருந்து வர இன்னும் ஒரு வருடம் ஆகும் என்ற நிலையில் அவ்வளவு நாள் தமிழை தவிக்க வைக்கவும் முடியவில்லை.
முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினாள் பாரதி. ஆனால் ரிஷியின் மேல் அவளுக்கு இருந்தது காதல் இல்லை என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது. ஏனென்றால் அதே அன்பை தமிழ் அவள் மேல் காட்டியதும் அவன் பக்கம் அவள் மனது சாய்ந்து விட்டது. இப்போது தமிழ் மேல் இருக்கும் உணர்வும் காதல் என்று அவளால் சொல்ல முடியவில்லை. அவளுக்கு தேவை அவளை அன்பாக பார்த்துக் கொள்ளும் கணவன். அதனால் தமிழுடன் சகஜமாக பேசினாள். ஆனால் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் காதல் அவசியம் வேண்டும் தானே என்று எண்ணியது அவள் மனது.
ஆனால் ரிஷி அவள் கையை பற்றிய போது அதில் விருப்பம் இல்லாத பாரதி அன்று தமிழ் கொடுத்த முத்தத்தை ஏற்றது எப்படி என்று தான் தெரியவில்லை.
என்ன குழப்பம் இருந்தாலும் அவளுக்கு தமிழை பிடித்திருக்கிறது என்று அவள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கும் அவனை எண்ணி அவளுக்கு கர்வமாக இருந்தது. இப்படி ஒரு அன்பான கணவனைக் கொடுக்க தான் கடவுள் இத்தனை நாள் அவளுக்கு தனிமையை பரிசளித்தாரோ என்னவோ?
அதே நேரம் தமிழும் அவளைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தான். ஒரே ஊரில் இருந்தாலும் இது வரை அவன் அவளைப் பார்த்ததில்லை. மற்ற பெண்கள் மேலும் அவனுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் திருமணம் என்ற உறவு அவளை அவனுடன் சேர்க்க இப்போது அவள் தான் அவன் மனதில் நின்றாள். அவள் அருகில் இருந்தாலே அவன் மனது சந்தோசமாகி விடும். அவனை அறியாமலே அவன் கவனம் அனைத்தும் அவள் மேல் சென்று விடும். இப்படி ஒரு உறவை உருவாக்கிய முன்னோர்களை எண்ணி அவனுக்கு வியப்பாக இருந்தது.
திருமணம் என்பது புனிதமான பந்தம் என்று எண்ணிக் கொண்டே அவளை திரும்பி பார்த்தான். அவளும் அப்போது அவனைப் பார்த்தாள். இருவர் பார்வையும் ஒரு நொடி பின்னிக் கொண்டது. அவள் கண்களில் இருந்த ஆர்வத்தில் அவன் மனம் நிம்மதி கொண்டது.
சிறிது நேரத்தில் குற்றாலச் சாரல் காற்று அவர்கள் முகத்தை வருடியது. அந்த சுகத்தில் நன்கு தூங்கி விட்டாள் பாரதி. அவளுடைய நிம்மதியான உறக்கத்தைக் கண்ட தமிழ் அவள் தலை அங்கே இங்கே ஆடுவதைக் கண்டு அவளை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான்.
சாய தோள் கிடைத்த நிம்மதியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் பாரதி.
காரில் இருந்து இறங்கியதும் “அங்க பாரு பாரதி”, என்றான் தமிழ். திரும்பி பார்த்தவள் ஆனந்தமாக அதிர்ந்து போனாள். மலையில் மேல் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது பேரருவி. அதன் அழகில் சொக்கிப் போனாள். அந்த அருவி உணர்த்திய பிரம்மாண்டத்தில் அப்படியே மயங்கிப் போனாள் பாரதி.
“ரொம்ப அழகா இருக்குங்க. நான் இந்த மாதிரி எங்கயும் போனதே இல்லை. ஸ்கூல் படிக்கும் போது காலேஜ் படிக்கும் போது எல்லாரும் டூர் போவாங்க. ஆனா மாமாவுக்கு செலவு வைக்கக் கூடாதுன்னு நான் போகவே மாட்டேன். நீங்க தான் முதல் முறையா என்னை இப்படி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க. தேங்க்ஸ். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”, என்று அவன் கைகளைப் பற்றிய படியே அவள் குதுகளிக்க அவளாக முதல் முறை தன்னை நெருங்கி வந்ததை வியந்து பார்த்துக் கொண்டு நின்றான் தமிழ்.
கூடவே இவளை இன்னும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இவள் அனுபவிக்காத அனைத்தையும் இவளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மனதில் முடிவு எடுத்துக் கொண்டான்.
“அம்மாடியோ எவ்வளவு தண்ணி, அப்படியே வெள்ளிச் சலங்கை மாதிரி இருக்கு”, என்று சொல்லிக் கொண்டே அவன் கையை அவள் விட்டுவிட அப்போது தான் நடப்புக்கு வந்தான் தமிழ்.
“இந்த டைம்ல இப்படி தான் தண்ணீர் வரும் பாரதி. அதுவும் மழை டைம்ல நாம எதிர் பார்க்காத அளவுக்கு வரும். அப்ப எல்லாம் நம்மளை இங்க குளிக்க கூட விட மாட்டாங்க”, என்றான்.
“இதுக்கும் மேல தண்ணியா? இயற்கையே பிரம்மாண்டம் தான் போல?”
“சரி ரசிச்சது போதும் வா”, என்று அவன் அழைக்க அவள் அருவி இருக்கும் பக்கம் நடந்தாள்.
“ஏய் பாரதி எங்க போற?”
“பக்கத்துல போய் அருவி பாக்க தான். அதுக்கு தானே வந்தோம்?”
“உள்ள போய்ட்டோம்னா வெளிய வரவே மனசு வராது பாரதி. அப்புறம் பசிக்கும். அதனால சாப்பிட்டு வரலாம்”, என்று சொல்லி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
சாப்பிட்டு முடித்ததும் அருவிக்கு வந்தார்கள். பின் சிறிது தேங்காய் எண்ணையை எடுத்து தன்னுடைய தலையில் வைத்துக் கொண்ட தமிழ் அவளிடம் நீட்டி “நீயும் உச்சியில் வச்சிக்கோ. இல்லைன்னா தலை வலிக்கும்”, என்று நீட்டினான்.
அவன் சொன்னதை செய்தவள் அவனுடன் குளிக்க ஆயாத்தமானாள். அவள் உள்ளம் முழுவதும் குதூகலமும் எதிர்பார்ப்பும் நிறைந்து இருந்தது.
அருகில் சென்றதும் “நல்லா கூட்டமா இருக்கு பாரதி. அதோ பொம்பளைங்க எல்லாம் குளிக்காங்க பாரு. நீ அங்க போ”, என்றான் தமிழ்.