அவள் அவளுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக் கொண்டிருந்தாள். உள்ளுக்குள் பாறை போல இறுகிக் கொண்டிருந்தாள். பள்ளியில் விளையாடும் போது கீழே விழுந்து ரத்தம் வந்தால் கூட வீட்டில் அவள் சொல்ல வில்லை.
வலி உயிர் போனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கிக் கொள்ள பழகினாள். வலிக்குது என்று சொன்னாலும் அவளுக்கு யாரும் மறுத்து போடப் போவதில்லை. கூடவே அடக்க ஒடுக்கமா இருக்க முடியாதா என்று கேட்டு அடியும் விழும். அதனால் எதற்கு வம்பு என்று எண்ணி உள்ளுக்குள்ளே வலியை வைத்துக் கொள்வாள்.
முதலில் அவள் உள்ளுக்குள் ஒடுங்கிக் கொண்டிருப்பதை கண்டு பிடித்தது அவளது தாய் மாமா மூர்த்தி தான். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது. பாரதியின் மன நிலை ஏற்கனவே அன்புக்காக ஏங்கி ஏங்கி தனக்கு யாருமே இல்லை என்று முடிவு எடுத்து விரக்தி அடைந்திருந்தது.
அவளது அம்மாவின் தம்பி மூர்த்தி அவளைப் பார்க்க வந்த போது அவள் நிலையை முழுதாக அறியாமல் போனாலும் அமுதா அவளை கொடுமைப் படுத்துவதையும் அதிக வேலைகள் கொடுப்பதையும் அறிந்து கொண்டார். அவளுக்கு என்ன செய்யலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு நாள் பாரதி படிக்கும் பள்ளியில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. தன்னுடைய பட்டன் செல்லை எடுத்து பேசினார் மூர்த்தி.
“சார் நீங்க பாரதியோட மாமாவா? நான் பாரதியோட கிளாஸ் மிஸ் பேசுறேன்”
“சொல்லுங்க டீச்சர், நான் பாரதியோட தாய் மாமா தான். என்ன விஷயம்? ஏதாவது சேட்டை பண்ணினாளா?”
“சேட்டை பண்ணினா தான் பரவால்லயே? அவ மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம எப்பவும் அமைதியாவே இருப்பா. நான் இப்ப அதைப் பத்தி சொல்ல போன் பண்ணலை. பாரதி பெரிய பொண்ணா ஆகிட்டா”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா சார், ஆனா அவ என் கிட்ட எதுவுமே சொல்லலை. அவ பக்கத்துல உக்காந்துருக்குற பொண்ணு தான் கண்டு பிடிச்சு சொன்னா. நான் பாரதி கிட்ட கேட்டப்ப நேத்தே இப்படி தான் மிஸ் இருந்துச்சுன்னு அழுறா. எதுக்கு வீட்ல சொல்லலைன்னு கேட்டதுக்கு சொன்னா அடிப்பாங்கன்னு சொல்றா. இப்ப அவங்க அப்பா நம்பரைக் கேட்டதுக்கு தான் அவ உங்க நம்பரை தந்தா. நீங்க கொஞ்சம் வந்து அவளைக் கூட்டிட்டு போறீங்களா?”
“இது பத்து நிமிசத்துல வந்துருவேன்”, என்று சொன்ன மூர்த்தி மனைவியிடம் சொல்லி விட்டு பள்ளிக்குச் சென்றார்.
அங்கே அழுது வடிந்து வீங்கிய முகத்துடன் ஒரு மூலையில் அமர்ந்திருந்த பாரதியைப் பார்க்க அவருக்கு நெஞ்சே வெடித்தது. அவளை அவருடன் அனுப்பிய அவளுடைய வகுப்பாசிரியை “பொம்பளை பிள்ளை சார். இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கான்னா அவங்க வீட்ல அவ எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்கணும்? கொஞ்சம் என்னன்னு பாத்து சரி பண்ணுங்க சார். இல்லைன்னா நல்லா படிக்கிற பொண்ணோட வாழ்க்கையே சிதைஞ்சு போய்ரும்”, என்று மூர்த்தியிடம் சொல்லி தான் அனுப்பினாள்.
“ஏன் பாப்பா உன் சித்திக் கிட்ட நேத்து சொல்லலை?”, என்று போகும் வழியில் மூர்த்தி கேட்க “அப்பா அடிப்பாங்க மாமா. இப்பவும் வீட்டுக்கு போக பயமா இருக்கு. எங்கயாவது ஓடிப் போகலாமானு இருக்கு”, என்று அழுத படியே சொன்னாள்.
வீட்டுக்கு சென்றதும் மூர்த்தி கேசவன் மற்றும் அமுதாவிடம் விஷயத்தைச் சொல்ல அவர்கள் பெரிதாக எதுவும் செய்து விட வில்லை. “பின் பக்கம் குளிச்சிட்டு அந்த மூலைல போய் உக்காரு”, என்று மட்டும் சொன்னாள் அமுதா.
பாரதியைப் பார்க்க மூர்த்திக்கு பரிதாபமும் கோபமும் ஒருங்கே வந்தது. “மச்சான், நான் பாரதியை இப்ப என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”, என்றார் மூர்த்தி.
கேசவன் அவரை குழப்பமாக பார்க்க “என் அக்கா மக இந்த ஊர்ல படிக்க வேண்டாம். அவளை ஹாஸ்ட்டல்ல சேத்து படிக்க வைக்குறேன்”, என்றார் மூர்த்தி.
கேசவன் எதுவும் சொல்ல வில்லை என்றாலும் “அதுக்கு செலவு யார் செய்ய? எனக்கும் ஒரு மக இருக்கா. எல்லாத்தையும் பாரதிக்கே செலவு பண்ணிட்டா நானும் என் பிள்ளைகளும் எங்க போவோம்?”, என்று கேட்டாள் அமுதா.
கேசவன் அதற்கும் அமைதியாக இருக்க “இவரெல்லாம் ஒரு அப்பாவா? நல்லதா போச்சு. என் அக்கா இந்த சுயநலவாதி கூட வாழாம நிம்மதியா போய் சேந்துட்டா. பாவம் இந்த குழந்தை தான் பாதிக்கப் படுறா”, என்று எண்ணிய மூர்த்தி அமுதா புறம் திரும்பி “இங்க பாருங்க எங்க மச்சான் உங்களை கல்யாணம் பண்ணும் போதே பாரதியை பாத்துக்க மட்டும் தான் உங்களை கல்யாணம் பண்ணுறேன்னு சொன்னதா எனக்கு நினைவு. அதுக்கு அப்புறம் உங்களுக்கும் ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளை வந்துருச்சு. நான் அதை ஒண்ணும் தப்பு சொல்லலை. ஆனா நீங்க எதுக்காக கல்யாணம் பண்ணுனீங்களோ அதுக்கே மதிப்பில்லாம போச்சே. நீங்க என் அக்கா மகளை ஒருநாளும் ஒழுங்கா பாத்தது இல்லை. சரி அதை கூட விடுங்க. ஆனா இப்ப அவளை நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்க கூட கணக்கு பாக்குறது நல்லா இல்லைங்க”, என்று மனதில் பட்டதை நேருக்கு நேராகச் சொல்லி விட்டார்.
“பாத்தீங்களா மாமா, உங்க மச்சினன் என்ன பேசுறார்னு? நான் ஒண்ட வந்தவன்னு சொல்லாம சொல்றார்? உங்க சம்பளம் கம்மி. அதுல தான் நம்ம எல்லாரோட வாழ்க்கையும் ஓடுது. இதுல பாரதிக்கே எல்லாம் செலவு பண்ணிட்டா நாம கடன் தான் வாங்கணும். என் புருஷன் கடன்காரனா ஆகக் கூடாதுன்னு நல்ல எண்ணத்துல தானே சொன்னேன்?”, என்று கண்ணீருடன் அமுதா பேச இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சிலைக்கு உயிர் வந்தது போல கேசவன் பேச ஆரம்பித்தார்.
“மூர்த்தி என் குடும்பத்துல பிரச்சனையை கிளப்ப தான் அங்க இருந்து வந்தியா? எல்லாம் இந்த நாயைச் சொல்லணும். இவ எதுக்கு உன் நம்பரைக் கொடுத்தா?”, என்று பாரதியைப் பார்த்து கத்தினார் கேசவன். ஏற்கனவே பயத்தில் இருந்த பாரதி மேலும் நடுங்கிப் போனாள்.
“மச்சான் அவளை எதுக்கு அரட்டுறீங்க? அவ சின்ன குழந்தை”, என்று மூர்த்தி சொல்ல “பாரதியை அவ்வளவு செலவு பண்ணி எல்லாம் என்னால படிக்க வைக்க முடியாது. நம்ம ஊர் ஸ்கூல்ல பத்து வரை இருக்கு. இவ இங்கயே படிக்கட்டும். அதுக்கு அப்புறம் எவனுக்காவது கட்டி வச்சிறலாம்”, என்றார் கேசவன்.
அவரை புழுவைப் பார்ப்பது போல பார்த்த மூர்த்தி “நீங்க யாரும் பாரதிக்காக ஒத்த ரூபா கூட செலவழிக்க வேண்டாம். அவளை நான் படிக்க வச்சிக்கிறேன். என்ன செலவானாலும் அது என் பொறுப்பு. அவளை என் கூட மட்டும் அனுப்புங்க”, என்று சொன்னார்.
கரும்பு தின்ன கசக்குமா என்ன? அமுதா கேசவனைப் பார்த்து அனுப்புங்க என்று ஜாடை செய்ததும் “சரி கூட்டிட்டு போ”, என்றார்.
“பாரதி வா மா, நம்ம வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி அவளை அழைத்தார் மூர்த்தி. உடனே பாரதியும் எழுந்து வந்து விட்டாள். ஒரு கடமைக்காக “பதினாறு நாள் கழிச்சு சடங்கு செய்யணும்ல? பெருசா செய்ய போறீங்களா மச்சான்?”, என்று கேட்டார் மூர்த்தி.
“அதை எல்லாம் செய்ய இங்க பணம் என்ன கொட்டியா கிடக்கு? சும்மா தலைக்கு மட்டும் தண்ணி ஊத்திக்க சொல்லு”, என்று மனதில் ஈரம் இல்லாமல் கேசவன் பேச அப்பா என்ற உறவு செத்து போனது பாரதியின் மனதில்.
ஏனென்றால் அவளுடன் படிக்கும் பிள்ளைகள் அவர்களுக்கு சடங்கு எப்படி நடந்தது என்று கதை கதையாக சொல்வார்கள். அதை அறிந்த பாரதிக்கு தந்தையின் உதாசீனப் பேச்சு அவள் மனதில் கனலையும் வெறுப்பையும் ஒருங்கே உருவாக்கியது.
மூர்த்திக்கும் இவன் எல்லாம் ஒரு மனுசனா என்ற எண்ணம் தான் வந்தது. அடுத்த நொடி அவளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் மூர்த்தி.
மூர்த்தியின் மனைவி மீனா அவளை பாசமாக வரவேற்று அனைத்துக் கொண்டாள். அது மட்டுமில்லாமல் அவளை பெற்ற அன்னை போல பார்த்துக் கொண்டாள்.
அன்று இரவு பாரதி தூங்கியதும் எதையோ யோசித்த படி அமர்ந்திருந்தார் மூர்த்தி.
“அது சரி வராது மீனா. அவளை டவுன்ல ஹாஸ்டல்ல சேக்கப் போறேன்”, என்று அவர் சொல்ல அவரது மனைவியோ “ஏங்க நான் பாரதியை அம்மா மாதிரி பாத்துக்க மாட்டேனா? அவ குழந்தைங்க. அவளைப் போய் எதுக்கு ஹாஸ்ட்டல்ல சேக்கணும்?”, என்று கேட்டாள்.
“இல்லை மா அது சரி வராது. பாரதிக்கு அம்மா உறவு நிரந்தரமா இல்லாம போச்சு. அப்பா உறவு இருந்தும் இல்லாத மாதிரி தான். நாம தான் இவளுக்கு கடைசி வரைக்கும் உறவு. அப்படி இருக்கும் போது உனக்கும் பாரதிக்கும் இடைல உறவு சுமுகமா இருக்கணும்”
“என்னங்க சொல்றீங்க? எனக்கு புரியலை”
“பாரதி நம்ம வீட்ல இருந்தா என்னைக்காவது நீ அவளை வெறுக்குற மாதிரி சூழ்நிலை வரலாம்…”
“என்னங்க… நான் அப்படி எல்லாம் கிடையாது. என்னைப் பத்தி நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?”, என்று கோபமாக கேட்டாள் மீனா.