“அப்புறம் தமிழ் உங்களுக்கு இன்னொரு இன்பர்மேசன். அன்னைக்கு நான் அவ கையை எல்லார் முன்னாடியும் பிடிச்சப்ப படக்குன்னு தட்டி விட்டுட்டா. ஆனா நான் அப்ப சுத்தி ஆள் இருக்குறதுனாலன்னு நினைச்சேன். ஆனா இப்ப தான் தெரியுது. உண்மைலே அது அவளுக்கு பிடிக்கலைன்னு”, என்று ரிஷி சொன்னதும் தமிழ் முகம் மலர்ந்து போனது. அவன் தொட்டால் அவன் மனைவி எந்த பிடித்தமின்மையையும் இது வரை காட்டியதில்லை என்று எண்ணி அவன் மனது எல்லையில்லா நிம்மதி அடைந்தது.
“ரிஷி, எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா? ஒரே ஒரு தடவை இந்தியா வர முடியுமா? ஏன்னா அவ உங்களை பாத்து பேசிட்டான்னா அவ மனசுல இருக்குற குற்ற உணர்ச்சி எல்லாம் அவளை விட்டு போயிரும். அங்க இருந்து வரது கஷ்டம் தான். ஆனா எனக்காக…. நான் டிக்கட் போடுறேன்”
“புரியுது தமிழ். நான் உங்களுக்காகவோ பாரதிக்காகவோ இந்தியா வரலை. ஆனா நாளான்னைக்கு என் தங்கைக்காக அங்க வரேன்”, என்று சொன்னதும் இருவர் முகமும் மலர்ந்து போனது.
“நிஜமாவாண்ணா சொல்ற?”, என்று சந்தோஷமாக கேட்டாள் சஹானா.
“ஆமா பேபி, உனக்கு என் ஃபிரண்ட் வருண் கூட அடுத்த வாரம் எங்கேஜ்மெண்ட். உன் கல்யாணத்தையும் முடிச்சிட்டு தான் நான் திரும்பி கிளம்புவேன்”, என்று ரிஷி சொல்ல சஹானா அதிர்ந்து போனாள்.
“நீ என்ன சொல்ற?”, என்று அவள் அதிர்ந்து கேட்க “ஏன் நான் உனக்கு மாப்பிள்ளை பாத்தா நீ வேண்டாம்னு சொல்லிருவியா?”, என்று கேட்டான் ரிஷி.
“அதெல்லாம் ஓகே தான் சொல்லுவேன். ஆனா யாரும் என் கிட்ட இது வரை சொல்லவே இல்லையே?”
“சர்பிரைஸ் கொடுக்க தான் உன் கிட்ட சொல்லலை. தமிழுக்காக இன்னைக்கு சொல்ல வேண்டியதா போச்சு. அப்ப வரும் போது நானும் நீயும் பாரதியை பாக்க போகலாம்”, என்றான் ரிஷி.
இப்போது சஹானாவுக்கு பாரதி மேல் கோபம் இல்லாமல் போனாலும் அண்ணன் அவளை பார்த்தால் மனது கஷ்டப் படுவான் என்று எண்ணி அமைதியாக இருந்தாள் சஹானா.
“ஆமா சஹானா நீங்களும் ரிஷியும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும். பாரதி உங்க மேல வச்சிருக்குற அன்பு நிஜம் தான்”, என்றான் தமிழ்.
“சரி சார் வரோம்”, என்று சஹானா சொன்னதும் இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு போனை வைத்தான் தமிழ்.
தமிழ் லைன் கட் ஆனதும் “உனக்கு வருத்தமா இல்லையாண்ணா?”, என்று கேட்டாள் சஹானா.
“வருத்தம் இல்லைன்னு சொல்ல முடியாது சஹானா. ஆனா இதுக்கு அப்புறம் அவளைப் பத்தி நினைச்சிட்டே இருந்து என் வாழ்க்கையை கெடுத்துக்க மாட்டேன்”
“அப்படின்னா உனக்கு நான் வேற பொண்ணு பாக்கவா?”, என்று சஹானா கேட்க ரிஷி பதில் எதுவும் சொல்ல வில்லை.
“ஏண்ணா அமைதியா இருக்க? நான் உனக்கு பொண்ணு பாக்க கூடாதா? இல்லை, பாரதியை நினைச்சு…”
“சே சே, இப்ப தானே சொன்னேன் அவளை நினைச்சு என் வாழ்க்கையைக் கெடுத்துக்க மாட்டேன்னு. தாராளமா எனக்கு நீ பொண்ணு பாரு. ஆனா டாக்டர் பொண்ணா பாரு. அப்ப தான் கொஞ்சம் புரிதல் அதிகமா இருக்கும்”, என்றான் ரிஷி.
“சொல்லிட்டல்ல? நீ படிச்சு முடிக்கிறதுக்குள்ள உனக்கு சூப்பரா ஒரு பொண்ணை நான் பாத்து வைக்கிறேன்”
“அப்படி எல்லாம் இல்லைண்ணா, டாக்டரா இருக்காங்க. உன்னோட ஃபிரண்ட் வேற. ஷோ அவங்களை பத்தி உனக்கு நல்லா தெரியும். பாத்த உடனே அவங்க மேல வெறுப்பு எதுவும் வரலை. எனக்கு ஓகே தான். ஆனா அவங்களுக்கு… என்னைப் பிடிக்குமா?”, என்று சஹானா கேட்டதும் புன்னகைத்த ரிஷி “பாருடா இப்பவே அவனுக்காக… சே சே இனி அவன் இவன்னு சொல்லக் கூடாது. இனி அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளையாச்சே. அப்புறம் அவன் தான் உன்னைப் பிடிச்சிருக்குறதா என் கிட்ட முதல்ல சொன்னான். அப்புறம் தான் அப்பா கிட்ட பேசினேன். இப்ப சந்தோஷமா?”, என்று கேட்டான்.
“கிண்டல் பண்ணாத அண்ணா”, என்று வெட்கப் பட்டாள் சஹானா.
“சரி சஹானா, நான் அப்புறம் உன் கிட்ட பேசுறேன் பை”, என்று சொல்லி போனை வைத்தான் ரிஷி.
வீட்டுக்கு சென்ற தமிழுக்கு பாரதி மேல் கோபமோ சந்தேகமோ எதுவும் இல்லை. ஆனால் உண்மையை சொல்லாமல் அவனிடம் மறைத்து அவளுக்குள்ளே கஷ்டப் பட்டு அவனையும் விலக்கி வைக்கிறாளே என்ற வருத்தம் மட்டும் இருந்தது.
அவனைக் கண்டதும் புன்னகைத்த பாரதி “இவ்வளவு நேரமாவா வெளிய சுத்துறது? அப்ப இருந்து அத்தை நீங்க எப்ப வருவீங்கன்னு தேடிட்டே இருக்காங்க?”, என்றாள்.
அவள் முகத்தில் உண்மையிலே சந்தோஷம் மட்டுமே இருந்தது. அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “ஏன் உன் அத்தை தான் தேடுவாங்களா? நீ என்னைத் தேட மாட்டியா?”, என்று கேட்டான்.
“நான் உங்களைத் தேடி வாசலையே பாத்துட்டு இருந்ததுனால தான் அத்தை இந்த கழுதை எவ்வளவு நேரம் வெளிய சுத்துது பாரு, வீட்ல பொண்டாட்டி இருக்கான்னு அவனுக்கு நினைப்பு இருக்கான்னு திட்டினாங்க”, என்று சொல்லி சிரித்தாள்.
அவள் அவனைத் தேடியது அவனுக்கு சந்தோசத்தைக் கொடுக்க “அந்த கழுதை உன் அத்தை சொன்னதா? இல்லை நீயே போட்டுகிட்டியா?”, என்று கிண்டலாக கேட்டான்.
முதலில் அவனை முறைத்த பாரதி பின் சிரித்து விட்டாள். அவள் சிரிக்கவும் “தேடுறவ எதுக்கு சும்மா இருக்கணும்? ஒரு போனைப் போட்டு எங்க கழுதை இருக்க, நான் உனக்காக வெயிட் பண்ணுறேன் சீக்கிரம் வான்னு சொல்ல வேண்டியது தானே?”, என்று கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தவள் “அத்தை அவங்க தம்பி கிட்ட வீட்டு போன்ல இருந்து பேசிட்டு இருந்தாங்க. அதான்”, என்றாள்.
அப்போது தான் அவளுக்கென்று ஒரு போன் வாங்கிக் கொடுக்காதது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
“அன்னைக்கு வெளிய போனப்ப சொல்லிருக்கலாம்ல பாரதி?”
“என்னன்னு?”
“உனக்கு போன் வேணும்னு?”
“எனக்கு எதுக்கு போன்? யார் கிட்ட பேசப் போறேன்? ஒரே ஒரு ஃபிரண்ட் இருந்தா. இனி அவளும் பேச மாட்டா. உங்களுக்கு பேச வீட்டு போன் இருக்கு. சரி சரி சாப்பிட வாங்க”, என்று சொல்லி அவனை அழைத்து சென்றாள்.
அன்றைய இரவு அவன் அவளை நெருங்கியிருந்தால் கண்டிப்பாக அவள் எந்த மறுப்பும் சொல்லியிருக்க மாட்டாள். ஆனால் அவன் ஏதோ யோசனையில் விலகி இருக்கவும் அவளும் படுத்து தூங்கி விட்டாள்.
ஆனால் அவனுக்கு தான் தூக்கம் வர வில்லை. அவளை நெருங்க அவனுக்கும் ஆசை தான். ஆனால் ரிஷி வரும் வரை அவளை நெருங்க வேண்டாம் என்று நினைத்திருந்தான். ரிஷி பிரச்சனை முடிந்து பாரதி மனதில் இருந்த குற்றணர்ச்சி எல்லாம் போய் முழு மனதுடன் அவள் அவனுடன் வாழ வேண்டும் என்று ஆசையாக அவனுக்கு இருந்தது.
ஆனாலும் அவளை அருகில் வைத்துக் கொண்டு அதுவும் அவளுடைய மனதில் தன் மேல் இருக்கும் காதலையும் அறிந்து கொண்டு அவளை விட்டு விலகி இருப்பது சிரமமாகவே இருந்தது.
அவனது உடல் அவளுக்காக ஏங்கத் துவங்கியது. அவளை நெருங்கு என்று மூளையும் மனதும் அவனுக்கு கட்டளையிட விலகி இருப்பதை துன்பமாக உணர்ந்தான்.
அங்கே இருக்க முடியாமல் மொட்டை மாடிக்குச் சென்று விட்டான். அவன் அங்கே நடைப் பயிற்சி செய்ய அப்போது மாடியில் காயப் போட்டிருந்த வத்தல் நினைவு வந்தது கோகிலாவுக்கு.
நடுராத்திரியில் மழை எதுவும் வந்து விடக் கூடாதே என்று எண்ணி மாடிக்கு சென்றாள். அங்கே அவளின் செல்ல மகன் ஏதோ ஒரு தவிப்புடன் உலாவிக் கொண்டிருக்க சத்தம் காட்டாமல் வந்த வழியே திரும்பி சென்று விட்டாள். அம்மா வந்ததை தமிழும் அறியவே இல்லை.
ஆனால் அறைக்குள் வந்த கோகிலா அப்படியே அமர்ந்து விட்டாள்.
இந்நேரம் மொட்டை மாடியில் உலாவினால் அவனுக்கு மனதில் குறை இருக்க வேண்டும். ஆனால் தமிழை பொறுத்த வரை வியாபாரத்தில் எந்த குறையும் கிடையாது. அப்படி இருக்க புது மனைவியுடன் இருக்காமல் தனியாக இருக்கவும் இதற்கு காரணம் பாரதி என்று அவளுக்கு புரிந்தது. இது வரை நடந்த நிகழ்வுகளை எல்லாம் எண்ணிப் பார்த்தாள்.
இது வரை பாரதியும் தமிழும் ஹனிமூன் செல்ல வில்லை என்றும் இருவர் முகத்திலும் காதலும் வெட்கமும் வந்ததில்லை என்று புரிந்து அவர்கள் நிலையை அவளுக்கு படம் பிடித்துக் காட்டியது.
மருமகள் மீது அன்பும் அக்கறையும் கோகிலாவுக்கு உண்டு தான். இருந்தாலும் மகனும் மருமகளும் சந்தோஷமாக வாழ வேண்டும் அல்லவா? அவர்கள் இப்படி பிரிந்து இருந்தால் அவர்கள் குலம் எப்படி தழைக்கும். நாளை பாரதியிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டே படுத்தாள்.
அடுத்த நாள் காலையில் சீக்கிரமே கிளம்பிச் சென்று விட்டான் தமிழ். பின் ஒரு பன்னிரெண்டு மணி அளவில் வீட்டுக்கு வந்தவன் பாரதியிடம் ஒரு புது போனைக் கொடுத்தான்.
“எனக்கா?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள்.
“உனக்கே தான். முன்னாடியே வாங்கிக் கொடுத்துருக்கணும்”
“இதுல நான் யார் கிட்ட வேணும்னாலும் பேசலாமா?”
“உனக்கு யார் கிட்ட பேசத் தோணுதோ அவங்க கிட்ட பேசு”
“ஒரு வேளை நான் தப்பான ஆள் கிட்ட பேசினா என்ன பண்ணுவீங்க?”, என்று கேட்ட பாரதிக்கு அவன் என்ன பதில் சொல்வான் என்று எதிர்பார்ப்பு அதிகமானது. அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
“என் பாரதி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு வேளை அவ தப்பான ஆள் கிட்ட பேசினா கூட அதுல ஒரு நியாயம் இருக்கும்”, என்று தமிழ் சொல்ல அடுத்த நொடி பாய்ந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.
அவளுடைய மனது புரிந்த தமிழும் அவளை ஆதரவாக அனைத்துக் கொண்டான். அவனுடைய நம்பிக்கையில் உச்சி குளிர்ந்து போனாள் பாரதி. இப்படி ஒரு கணவன் யாருக்கு கிடைப்பான்? நான் கொடுத்து வைத்தவள் என்று எண்ணி சந்தோஷப் பட்டாள்.
இப்போதாவது மனதில் இருப்பதைச் சொல்வாளா என்று எண்ணிய தமிழ் “என் கிட்ட ஏதாவது சொல்லனுமா பாரதி?”, என்று கேட்டான்.
அவன் அப்படிக் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள் படக்கென்று அவனிடம் இருந்து விலகி “அதெல்லாம் ஒண்ணும் இல்லையே? ஏன் அப்படி கேக்குறீங்க?”, என்று கேட்டாள்.
மனதிலோ ரிஷியைப் பற்றி சொன்னால் இவன் என்னை வெறுத்துடுவான். அதனால கடைசி வரை ரிஷி பற்றி சொல்லவே கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.
“சரி பாரதி, நீ போன்ல என்ன பீச்சர்ஸ் இருக்குனு பாரு. நான் மில்லுக்கு போய்ட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்ப போனான் தமிழ்.