“தாரணி கல்யாணம் முடியுற வரை ஊர் சுத்தாம… அம்மாவுக்கு உதவியா இரு…. என்னால முடியாது, அதனாலதான் உன்கிட்ட சொல்றேன்.”
“கண்டிப்பா அண்ணா… இனி நான் எவ்வளவு பொறுப்பா இருக்கேன்னு நீங்களே பாருங்க.”
அந்தப் பக்கம் தன் தம்பி பரணி பேசுவதைக் கேட்டுச் சிரிப்பு வந்தாலும், சிரித்தால் அவன் இன்னும் தலையில் ஏறிக்கொள்வான் எனத் தெரியும். அதனால் கண்டிப்பாகவே பேசிவிட்டு வைத்தான். “எனக்கு எந்தப் புகாரும் உன்னைப் பத்தி வரக் கூடாது சொல்லிட்டேன்.”
தாரணியும், பரணியும் இரட்டையர்கள்…. நந்தா பிறந்து பிறகு ஆறு வருடங்கள் கழித்துப் பிறந்தவர்கள். அவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது… அவர்களின் தந்தை காலமாகி விட… அப்போது தான் நந்தா சிவில் செர்விஸ் பரிட்சைக்குத் தயார் செய்து கொண்டு இருந்தான்.
திடிரென்று தந்தை இறந்தது அவனுக்கும் அதிர்ச்சிதான். இருந்தாலும், தாயையும், உடன்பிறந்தவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவன் துக்கத்தை மறைத்து அவர்களுக்குத் தைரியம் சொன்னான்.
குழலியும் கல்லூரியில் விரிவுரையாளராக வேலைப் பார்த்துக் கொண்டு இருந்ததால்…. சீக்கிரமே தேறி விட்டார். ஆனால் தாரணி தேற வெகு நாட்கள் ஆகியது. அவள் அப்பா செல்லம்.
தன்னால் பத்தாவது பரிட்சை எழுத முடியாது. எழுதினாலும் பாஸ் செய்ய மாட்டேன் என அழுதவளை…. சமாதானம் செய்து, அவள் உடனே இருந்து படிக்க வைத்து, தினமும் பரிட்சைக்கும் அழைத்துச் சென்று, அவளைப் பாஸ் செய்ய வைத்தது நந்தாதான்.
பரீட்சை விடுமுறையிலும் அவளை வேறு வகுப்புகளுக்கு அனுப்பி, அவளைத் தந்தை நினைவுகளில் இருந்து வெளி கொண்டு வந்தான்.
தாரணியும் அதன் பிறகு நிதர்சனத்தை ஏற்று வாழ பழகிக் கொண்டாள். பரணி தாரணிக்கு அப்படியே நேரெதிர்… சரியான வாலு. அவன் இருந்த தைரியத்தில்தான் நந்தா வெளிமாநிலத்தில் வந்த போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்தான்.
தாரணியையும் பரணியும் அடிக்கடி அடித்துக் கொள்வார்கள், குழலி சொன்னால் எல்லாம் கேட்க மாட்டார்கள்….. “இருங்க உங்க அண்ணன்கிட்ட சொல்றேன்.” என்றால்…. இருவரும் சண்டையை விட்டு அமைதியாகி விடுவார்கள்.
நந்தா என்றால் பயம் என்பதை விட… மரியாதை. தாங்கள் இருவரும் சண்டை போட்டது அண்ணனுக்குத் தெரிந்தால்… அவன் வருந்துவான் என்று தெரியும், வெளியூரில் இருக்கும் அண்ணனை கவலைப்பட வைக்கக் கூடாது என்றே இருவரும் அவன் பேரை கேட்டால் அடங்கி விடுவார்கள்.
நந்தா அவர்களுக்கு அண்ணன் என்பதை விட இன்னொரு தந்தை என்றே சொல்ல வேண்டும்.
நந்தா தனது வேலையில் கவனம் செலுத்தினான். அங்கே அந்தச் சமயம் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு பலர் உயிர் இழந்தனர். அவன் அதைப் பற்றித் தோண்டி துருவ ஆரம்பித்தான்.
ராமநாதபுரத்தின் கீழ் நிறையப் பேரூராட்சிகள் உண்டு. அப்படி ஒரு ஊரட்சியில்தான் நிறையப் பேர் இறந்து இருந்தனர். அந்த ஊர் காவல் நிலையத்தில் இருந்த அதிகாரியை அழைத்து விசாரணை நடத்தினான். அந்தப் பகுதியில் தான் நடக்கிறது. ஆனால் எங்கே, எப்படி என்று அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்த வட்டத்துக்கு உட்பட்ட காவல்துறை துணை அதிகாரி கண்ணப்பன் என்பவரை அவன் விசாரித்த போது… அவனுக்கு நிறைய விவரங்கள் தெரியவந்தது.
அவர் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கி ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஒரு கிராமமே சாராயம் காய்ச்சும் தொழில் இருந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குடும்பம் குடும்பமாகச் சாராயம் காய்ச்சும் தொழிலை செய்து வந்தனர். அந்த வீட்டில் இருந்த பெண்களும் சேர்ந்துதான் செய்தனர்.
ஒரு காவலரின் உறவினர் அந்த ஊரில் இருந்ததால்… எளிதாகத் தகவல் திரட்ட முடிந்தது.
அந்தக் கிராமத்துக்குச் செல்ல சாலை வாசதிகளோ…. வாகன வசதிகளோ இல்லை…. அதனால் உள்ளூர் வாசிகளைத் தவிர வேறு ஆட்கள் அங்கே வருவது என்பது கிடையாது. அதனால் இத்தனை நாட்கள் வெளியே தெரியவில்லை.
அங்கே ஒரு பெரும் போலீஸ் படையோடு நந்தாவே நேரடியாக ரெய்ட் சென்றான். போலீசார் அங்கிருந்த சாராயம் காய்ச்ச உதவும் அத்தனை பொருட்களையும் அடித்து உடைக்க…. நந்தா அவன் போலீஸ் வாகனத்தில் சாய்ந்தபடி நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து அவன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான். சுற்றி நிறையப் பேர் நின்று கொண்டு இருந்தனர். கூட்டத்தில் ஒரு பெண் அவனை மிகவும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நந்தாவும் அதைக் கவனித்து இருந்தான்.
வந்த வேலை முடிந்ததும், நிறையப் பேரை கைது செய்து கொண்டு சென்றனர். கைது செய்தவர்களில் அவளது உறவினர்களும் இருந்தார்கள் போல…. அவள் முகம் பதட்டத்தைக் காட்டியது.
நந்தா அலுவலகத்தில் மீண்டும் இதற்கான குழுவினரோடு ஆலோசனை செய்தான். இப்போதைக்கு இந்தப் பிரச்சனை முடிந்தது. ஆனால் திரும்பக் கண்டிப்பாக ஆரம்பிப்பார்கள். அதனால் இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது என்ன என ஆலோசனை செய்தனர்.
செய்வதற்கு எந்தத் தொழிலும் இல்லாததினால்தான் இந்த மாதிரி சாராயம் காய்ச்சும் வேலையைச் செய்கிறார்கள். இவர்களுக்கு அரசாங்கமே எதாவது தொழில் செய்ய உதவி செய்தால்தான். இவர்கள் திருந்துவார்கள் என்று புரிந்தது.
அதற்குச் சில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி… அவர்களுக்குச் சிறு தொழில் செய்யக் கடன் வழங்குவதோடு…. அவர்கள் பிள்ளைகள் இலவசமாகப் படிக்கவும் வழி செய்தனர்.
அந்தக் கிராம மக்கள் அனைவருமே திருந்தி நல்லபாதையில் செல்ல ஆரம்பித்தனர். அடுத்து இருந்த தலைமுறையினர் கல்வி கற்க சென்றனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் என்பது முற்றிலும் அழிக்கப்பட்டது.
நந்தாவை உயர் அதிகார்கள் பலர் பெரிதும் பாராட்டினர். அதோடு அவனுக்கு அந்தப் பகுதியில் பெண்கள் ஆதரவும் பெருகியது.
சாராயத்தால் பெரிதும் பாதிக்கபடுவது பெண்கள்தான். குடித்துவிட்டு வரும் ஆண்கள் அவர்களைப் படுத்தும் பாடு கொஞ்சமா நஞ்சமா… அதோடு கள்ளச்சாரயத்தைக் குடித்துவிட்டு நிறையப் பேர் கண் பார்வை வேறு போயிருந்தது. இன்னும் சிலருக்கு உயிரே போயிருந்தது.
இதெல்லாம் நடந்து முடிவதற்கு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நந்தா தன் தங்கையின் திருமணத்திற்காக நான்கு நாட்கள் விடுமுறையில் சென்னை சென்றான். அவனைப் பார்த்ததும் தாரணியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
திருமணத்திற்காக ஊரில் இருந்து உறவினர்கள் வந்து தங்கி இருந்தனர். நந்தா அவர்களோடு பேசிவிட்டு அவன் அறைக்குச் செல்ல…. அங்கே அவன் அறையின் கதவை திறக்க முடியவில்லை.
நந்தாவின் அறை மட்டும்தான் மாடியில் இருக்கும். அதை வேறு யாரும் உபயோகிக்க மாட்டார்கள். கதவை தட்டித்தட்டி பார்த்தவன், “அம்மா…” எனக் குரல் கொடுக்க…. குழலி மாடிக்கு விரைந்து வந்தார்.
“என்ன நந்தா?”
“கதவை திறக்க முடியலை…யாராவது உள்ள இருக்காங்களா?”
“உன்னோட அத்தையும் மாமாவையும் கீழ பார்க்கலையா….”
“ஓ… இது அவளோட வேலையா….” என்றவன், “லூசு ராதிகா கொஞ்சம் கதவை திற…” எனச் சத்தமாகச் சொல்ல….
கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ராதிகாவோ சுடிதாரில் இருந்தாள். ஆள் மிகவும் அழகு.
“ஹப்பா நிம்மதியா குளிக்கக் கூட முடியலையே…. ஏன் கதவை போட்டு உடைக்கிறீங்க?”
“யாரை கேட்டு நீ என் ரூமுக்கு வந்த?”
“யாரை கேட்கணும்? என்னைக்கா இருந்தாலும் இது என் ரூம்மும் தானே….”
ராதிகா உரிமையாகச் சொல்ல…. நந்தா திரும்பி தன் தாயை முறைத்தான்.
“அம்மா என்ன மா இது? இவளா எதோ பேசிட்டு இருக்கா, நீங்க ஒன்னும் சொல்ல மாட்டீங்களா?”
நந்தா பொறுமை இழக்க….அதை உணர்ந்த குழலி, ”உங்க அம்மா உன்னைத் தேடினாங்க ராதிகா…. நீ கீழ போ….” என்றவர், அவள் கீழே சென்றதும்,
“அவ உன் அத்தை பொண்ணு…. நான் எதாவது சொன்னா… உன் அத்தை, என் அண்ணனோட என் உறவை முறிக்கப் பார்க்குறீங்களா அண்ணின்னு என்கிட்டே சண்டைக்கு வர்றாங்க.”
“எதா இருந்தாலும் நீயே பேசிக்கோ…. என்னை ஆள விடு. ஆனா என்னைக் கேட்டா ராதிகா உனக்குப் பொருத்தமுன்னு தான் சொல்வேன். உன் வேலைக்கு இந்த மாதிரி தைரியமான பொண்ணு உனக்குப் பொண்டாட்டியா வந்தா நல்லது. நல்லா யோசிச்சிகோ…” என்றவர் கீழே இறங்கி சென்றார்.
அவன் அம்மா சொன்னதை யோசித்தபடி நந்தா அறைக்குள் சென்றான். ராதிகா அவனின் முறைப்பெண். அவளை அவனுக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்பது அவன் அத்தையின் விருப்பம். ராதிகாவுக்கும் ஆசைதான். ஆனால் நந்தாதான் இதுவரை பிடி கொடுக்கவில்லை.
ராதிகா கொஞ்சம் வாயாடிதான். ஆனால் நல்ல பெண். நந்தாவுக்கு அவளைப் பிடிக்கும். ஆனால் திருமணம் செய்யும் அளவுக்குப் பிடிக்குமா என இன்னமும் அவனுக்குத் தெரியவில்லை.
அறைக்குள் சென்றவன், ராதிகாவின் உடமைகளை எடுத்துக் கொண்டு வந்து வெளியே வைத்துவிட்டு, அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டான்.
சிறிது நேரம் சென்று தன்னுடைய பொருள் ஒன்றை எடுப்பது போல், அவனைப் பார்க்க வந்த ராதிகாவுக்கு, அவளுடைய பை வெளியே இருப்பதைப் பார்த்ததும் ஏமாற்றமாகப் போய்விட்டது.
“நானே வந்து எடுத்துக்க மாட்டேனா…” என நினைத்தவள்,
“இரு உனக்கு அப்புறம் வச்சுகிறேன்.” என நினைத்தபடி சென்றாள்.
நந்தா தன் தங்கையின் திருமணத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான். வீட்டில் நடக்கும் முதல் பெரிய விசேஷம். தந்தை இருந்திருந்தால்… இன்னும் சிறப்பாகச் செய்து இருப்பாரோ என்ற எண்ணமே தாரணிக்கு வந்துவிடக்கூடாது என்று மிகவும் விமர்சையாகச் செய்தான்.
வருண் நந்தாவின் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பன். அடிக்கடி வீட்டிற்கு வந்து போனதில், அவனுக்குத் தாரணியைப் பிடித்து விட…. அவன் அதை முதலில் தன் நண்பனிடம்தான் சொன்னான்.
தாரணியிடம் சொன்னாலும் அவள் அண்ணனுக்குத் தெரியாமல் எதையும் செய்யப் போவது இல்லை…. அவள் அவளின் அண்ணனின் பேச்சைத்தான் கேட்பாள் என்று தெரியும்.
வருணின் விருப்பத்தை நந்தா குழலியிடம் சொல்ல…. இவர்களும் அவர்களும் வேறு வேறு பிரிவு என்பதால்…. அவர் தயங்க….
“நல்ல பையன் மா…. தாரணியை நல்லா பார்த்துப்பான். நம்ம ஆளுங்க இல்லைன்னு வேண்டாம்ன்னு சொல்வீங்களா…” என்றதும், குழலியும் ஒத்துக் கொண்டார். வருண் வீட்டில் மகன் பேச்சிற்கு மறுப்பு சொல்லவில்லை. அதனால் எல்லோரின் சம்மதம் பெற்று, காதலித்து இப்போது கல்யாணத்திலும் வந்து முடிந்தது.
“எல்லாரும் கல்யானதுக்குத்தான் சம்மதம் கேட்பாங்க. நான் ஒருத்தன் தான் லவ் பண்ணவே பெர்மிஷன் வாங்கி இருக்கேன். உன்னைக் காதலிச்சா வேற என்ன பண்றது?” வருண் சொல்ல… தாரணி அவனை முறைத்தாள்.
“என்னைப் பத்தி தெரிஞ்சுதான லவ் பண்ணீங்க. அப்புறம் என்ன எப்ப பாரு இதே சொல்றீங்க?”
“அச்சச்சோ என் செல்லத்துக்குக் கோபம் வந்துடுச்சா….உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க என்ன வேணா பண்ணலாம்.” என அவன் ஐஸ் வைக்க.. அதில் தாரணி குளிர்ந்துவிட்டாள்.
“எனக்கு உன்கிட்ட என்ன பிடிக்கும் தெரியுமா…. என்ன சொன்னாலும் நீ நம்பிடுவ…” என வருண் சொல்லிவிட்டு, அவள் கோபித்துக் கொண்டாளா என்று பார்க்க….
கல்யாணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் போது தாரணி அழ…. “கொஞ்ச நாள் கழிச்சு அண்ணாவோட வந்து இருப்பியாம், இப்ப அழாம போ டா…” எனத் தங்கையை நந்தா வழியனுப்ப…. அவளும் அழுகையை நிறுத்திவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றாள்.
பரணியிடம் அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள்ளச் சொன்னவன், அவனுக்கு ஆயிரம் புத்திமதி சொல்லி… ஊர் திரும்பினான்.
மறுநாள் அலுவலகத்தில இருந்த நந்தாவை பார்க்க வந்த ஒருவன், “உங்களை அய்யா பார்க்கனும்ன்னு சொன்னாங்க.” என்றதும்,
“எந்த அய்யா?” என நந்தா கேட்க….
“அய்யான்னு சொன்னா இந்த ஊருக்கே தெரியுமேங்க…”
“எனக்குத் தெரியாது.”
“அன்பரசு அய்யா.”
“எந்த அய்யாவையும் பார்க்க நான் வர முடியாது. வேணா அவரை வந்து என்னைப் பார்க்க சொல்லு….” என நந்தா சொல்லி அனுப்ப….
அந்த ஆள் சென்று நந்தா சொன்னதை அப்படியே சொல்ல… அன்பரசுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
“ஓ…. அவனுக்கு அவ்வளவு திமிரா… அவனையே இங்க வரவைச்சு காட்றேன்.” என்றார் பேரில் மட்டுமே அன்பை வைத்திருக்கும் அன்பரசு.