“என்னது கிளம்ப போறீங்களா? இப்ப போனை பாக்குறது முக்கியம் இல்லை. நீங்க முதல்ல சாப்பிட வாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்”, என்று சொல்லி போனை அங்கேயே வைத்து விட்டு அவனை சாப்பிட அழைத்துச் சென்றாள். மனைவியின் அக்கறை மனதை அன்று அதிகமாக உண்டான்.
அவர்களையே தான் பாராதது போல பார்த்துக் கொண்டிருந்தாள் கோகிலா. அவர்கள் இருவர் முகத்திலும் காதலும் தேடலும் தான் அதிகம் இருந்தது. கூடவே அவர்கள் இருவருக்கும் ஒரு தவிப்பு இருப்பதை உணர்ந்து கொண்டாள்.
தமிழ் சாப்பிட்டு விட்டு பாண்டியனுக்கும் உணவை எடுத்துக் கொண்டு சென்றான். அப்போது கோகிலாவைத் தேடி வந்த பாரதி “அத்தை நாம சாப்பிடுவோமா? மாமாக்கு கொடுத்து விட்டுட்டேன்”, என்று சொன்னாள்.
“சாப்பிடலாம் கண்ணு. உனக்கு ரொம்ப பசிக்குதா? இல்லைன்னா உன் கிட்ட ஒரு விஷயம் பேசணுமே?”, என்று ஆரம்பித்தாள் கோகிலா.
“கொஞ்ச நேரம் கழிச்சே சாப்பிடலாம் அத்தை. எனக்கு பசிக்க எல்லாம் இல்லை. என்ன விஷயம் சொல்லுங்க?”
“இப்படி உக்காரு பாரதி”, என்று கோகிலா சொன்னதும் அவள் அருகில் அமர்ந்தாள் பாரதி.
அதன் பின்னரும் கோகிலா அதைச் சொல்ல முடியாமல் திணறிய படியே அமைதியாக இருக்க “என்ன அத்தை பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க? எதுன்னாலும் சொல்லுங்க. நீங்க எனக்கு அம்மா மாதிரி. என் கிட்ட ஏதாவது தப்பு இருந்தாலும் சொல்லுங்க, நான் கேட்டுக்குவேன்”, என்றாள்.
“உன் மேல தப்பு கண்டு பிடிச்சா அந்த சாமி என் கண்ணை குத்திரும் கண்ணு. நான் இப்ப பேச வந்தது வேற விஷயம். அதான் எப்படி சொல்லனு யோசிக்கிறேன்”
“எதுன்னாலும் சொல்லுங்க அத்தை”
“நீ பண்ணுறது உனக்கே நியாயமா இருக்கா பாரதி?”
“அத்தை என்ன சொல்றீங்க? நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்ட பாரதிக்கு “அப்படி என்ன செஞ்சேன்?”, என்று குழப்பமாக இருந்தது.
“என் மகன் என்ன தப்பு பண்ணிட்டான்னு அவனை நீ தள்ளி வச்சிருக்க பாரதி?”, என்று கோகிலா கேட்டதும் “அத்தை”, என்று அதிர்ந்து போனாள் பாரதி.
“உன்னோட அதிர்ச்சியே அது தான் உண்மைன்னு காட்டிக் கொடுக்குது மா. அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் இன்னும் சேந்து வாழலையா? நீ அவனை விலக்கி வச்சிருக்கியா? இல்லை அவன் உன்னை கண்டுக்காம இருக்கானா? என் மகன் அப்படிங்குறதுக்காக சொல்லலை பாரதி. அவன் ரொம்ப நல்லவன்”
“தெரியும் அத்தை”
“அப்புறம் என்ன மா? வாழ வேண்டிய வயசுல வாழாம ஒதுங்கி இருக்குறது நல்லாவா இருக்கு? அவன் என்ன டான்னா நடு ராத்திரில மொட்டை மாடில நடந்துகிட்டு இருக்கான்”
“என்னது மொட்டை மாடிலயா?”, என்று அவள் திகைக்க “அது கூட உனக்கு தெரியலை பாத்தியா? உனக்கு அவனை பிடிக்கலையாமா?”, என்று கேட்டாள் கோகிலா.
“ஐயோ அத்தை நான் அவரை உயிருக்கு உயிரா விரும்புறேன்”
“அப்புறம் ஏன் மா இப்படி எல்லாம்?”
“அது வந்து அத்தை ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு வாழலாம்னு நினைச்சு தான்…..,”
“வாழ்ந்தா தானே மா புரிதலே வரும்”
“அத்தை…”
“ஆமா பாரதி, சீக்கிரம் நீங்க ஒண்ணு சேந்து இந்த வீட்டுக்கு ஒரு வாரிசு வந்தா தான் மா உங்க திருமணம் முழுமை அடையும். நீ படிச்ச பொண்ணு. புரிஞ்சிக்குவன்னு நினைக்கிறேன். அவன் என்ன தன் மகன்னாலும் என்னால அவன் கிட்ட இதைச் சொல்ல முடியாது. எனக்கு நீ வேற அவன் வேற இல்லை. அவனே ஒதுங்கி போனாலும் நீ தான் அவனை இறுக்கிப் பிடிக்கணும் கண்ணு. இந்த அத்தை சொன்னதுல உனக்கு கோபம் எதுவும் இல்லையே?”
“சே சே நீங்க எங்க நல்லதுக்கு தானே சொன்னீங்க? சீக்கிரம் எல்லாம் சரியாகிரும் அத்தை. உங்க பேரன் சீக்கிரம் வந்துருவான்”, என்று புன்னகையுடன் சொன்னாள் பாரதி.
“ரொம்ப சந்தோஷம் டா. சரி வா சாப்பிடலாம்”, என்று அவளை அழைத்துச் சென்றாள் கோகிலா.
அன்று இரவு அவன் எதுவும் பேசாமல் அவனுடைய இடத்தில் படுக்க “கிட்ட வந்தா நான் என்ன மறுக்கவா போறேன்?”, என்று எண்ணிக் கொண்டு படுத்தாள் பாரதி.
என்ன தான் செய்கிறான் என்று எண்ணி தூங்காமல் படுத்திருக்க அவள் தூங்கி விட்டாள் என்று எண்ணி எழுந்தான் தமிழ்.
“இப்படி வாக்கிங் போய் தான் அத்தைக் கிட்ட என்னை மாட்டி விட்டுட்டார்”, என்று எண்ணிக் கொண்டு “இன்னேரத்துல எங்க போறீங்க?”, என்று கேட்டாள் பாரதி.
அவள் குரல் திடீரென்று கேட்டதும் அதிர்ந்து திரும்பியவன் “நீ இன்னும் தூங்கலையா பாரதி?”, என்று கேட்டான்.
“நான் தூங்காததுனால தான உங்க தப்பைக் கண்டு பிடிக்க முடிஞ்சது”, என்று கண்களை உருட்டிச் சொன்னாள்.
“ஏய் என்ன தப்பு? தூக்கம் வரலைன்னு மொட்டை மாடிக்கு போகலாம்னு கிளம்புனேன் டி”
“உன்னைப் பாத்துட்டு இருக்க முடியாம தானே கிளம்பினேன்”, என்று அவன் முணுமுணுக்க “என்ன சத்தம் அங்க?”, என்று கேட்டாள் பாரதி.
“என்ன டி மிரட்டுற?”
“என் புருஷனை நான் தான் மிரட்டுவேன். அப்புறம் நீங்க எங்கயும் போகக் கூடாது”
“இல்லை பாரதி அது வந்து…”
“எனக்கு அதுக்கான காரணம் தெரியும். ஆனா நான் இப்ப உங்களை விட்டு ஒதுங்கி இருக்கலையே?”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டாள் பாரதி.
“ஆனா உன்னோட விலகளுக்கான காரணம் இப்ப வரைக்கும் எனக்கு தெரியலையே?”
“அது.. அது வந்து… கொஞ்ச நாள் கழிச்சு சரின்னு தானே சொன்னேன்? அந்த கொஞ்ச நாள் இன்னைக்கு தான் முடிஞ்சது”, என்று அவள் வெட்கத்துடன் சொல்ல அவளை சந்தோஸமாக நெருங்கினான் தமிழ்.
அவள் முகம் செம்மையுற “உனக்கு சம்மதமா?”, என்று கேட்டான்.
“ம்ம், எனக்கு எப்பவோ உங்களை பிடிச்சிருச்சு. ஆனா எப்படி சொல்லன்னு தான் தயக்கம். அப்புறம் நீங்க என்னை நினைச்சு மொட்டை மாடில தவிக்கிரதை அத்தை பாத்துட்டு நமக்குள்ள உள்ளதை கண்டு பிடிச்சிட்டாங்க. இனி உங்களை மொட்டை மாடிக்கு அனுப்பக் கூடாதாம். என் முந்தானைலே முடிஞ்சு வச்சிக்கனுமாம்”, என்று புன்னகையுடன் சொன்னாள் பாரதி.
“இந்த இடத்துலயா என்னை முடிஞ்சு வச்சிக்குவ பாரதி?”, என்று கேட்டுக் கொண்டே அவள் இடையில் கை வைத்தவன் அவள் இடுப்பில் சொருகியிருந்த சேலை முந்தானையை வெளியே எடுத்தான். அந்த தொடுகையை தாங்க முடியாமல் அவன் தோள் சாய்ந்தாள் பாரதி.
அவளது அருகாமை அவன் உணர்வுகளை தீண்ட அவளை இழுத்து அணைத்த தமிழ் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு இறுதியில் அவள் இதழ்களில் இளைப்பாறினான். அவன் முத்தத்தில் மயங்கிப் போனாள் பாரதி.
பின் அவளை கட்டிலில் சரித்து அவள் அருகில் படுத்தவன் அடுத்த நொடி அவள் மேல் கவிழ்ந்து முத்த வேட்டையை துவங்கினான். முழு மனதாக அவன் தொடுகையை ரசித்தாள் பாரதி.
வெற்றிடையில் பதிந்த அவனுடைய கரத்தின் மாயாஜாலத்தால் அவள் கண்கள் இறுக மூடிக் கொண்டது. அவள் உடலில் அவன் கரம் பயணிக்க அவள் உடல் எல்லாம் தீப்பிடித்த உணர்வு வந்தது.
அவள் கைகள் அவன் முதுகில் படர்ந்து பரவ அவன் தொடுகையில் கரைந்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் மேலும் முன்னேறாமல் அவளிடம் இருந்து விலகி அவள் அருகே படுத்தான்.
அவள் குழப்பமாக அவனைப் பார்க்க அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டவன் “எதையும் யோசிக்காத. நல்லா தூங்கு”, என்று சொல்லி அவளைக் கட்டிக் கொண்டான்.
அவன் ஏன் அடுத்த கட்டத்துக்கு செல்ல வில்லை என்று குழப்பமாக இருந்தாலும் அதை அவனிடம் கேட்காமல் “இனி மாடிக்கு போகாதீங்க?”, என்று சொல்லி விட்டு அவன் முடி படர்ந்த மார்பில் முகத்தை புதைத்து விட்டு தூங்க ஆரம்பித்தாள்.
இப்போது அவள் மனது அவனுக்கு தெளிவாக புரிந்தது தான். அவளை அவனால் ஒரு நொடியில் வசப் படுத்தி விட முடியும்? ஆனால் அரை மனதாக அவள் அவனுக்கு தேவையில்லை. மேலும் இரண்டு நாள் காத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் தமிழ். அவளுடன் கூடிக் கழிக்க வில்லை என்றாலும் தன்னுடைய நெஞ்சில் சாய்ந்து உறங்கும் மனைவியின் அருகாமை அவனுக்கு எல்லையில்லா நிம்மதியைக் கொடுத்தது. இத்தனை நாள் போல அல்லாமல் நன்றாக உறங்கினான் தமிழ்.
அடுத்த நாள் காலை கண் விழித்த பாரதி அவன் நெஞ்சில் முகம் புதைத்திருப்பதை எண்ணி சிரிப்புடன் விலகினாள்.
“இப்ப எதுக்கு டி எந்திக்கிற? இன்னும் கொஞ்ச நேரம் கைக்குள்ளே இரேன்”, என்று சொன்ன தமிழ் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
“நீங்க முழிச்சிட்டு தான் இருக்கீங்களா?”, என்று கேட்ட பாரதியும் அவனை அனைத்துக் கொண்டாள். “ஹிம்ம், அப்பவே முழிச்சிட்டேன். ஆனா உன்னை விட்டு நகரவே விருப்பம் இல்லை. அதான் படுத்திருந்தேன்”, என்று சொன்னவனின் உதடுகள் அவளுடைய தோள் வளைவில் இருந்து அவளுடைய கழுத்துக்கு இறங்க அவள் பேச்சு அப்படியே அடங்கிப் போனது. அவனை மேலும் இறுக்கி அணைத்தாள்.
அப்போது தான் எல்லை மீறுகிறோம் என்றே தமிழுக்கு புரிந்தது. உடனே அவளை விட்டு விலகிய தமிழ் “நான் முதல்ல குளிக்கிகிறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
அவனுக்குள் கரைந்து கொண்டிருந்த பாரதிக்கு அவனுடைய உதாசீனத்தில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அவள் முகத்தைப் பார்த்தவன் “என்ன ஆச்சு மா?”, என்று கேட்டான்.
“உங்களுக்கு என்னை பிடிக்கலைல்ல?”, என்று அழுது கொண்டே கேட்டாள் பாரதி.
“என்ன உளறல் இது? எனக்கு என்னை விட உன்னை தான் டி பிடிக்கும்”
“அப்படின்னா என்னை பழி வாங்குறீங்களா?”
“என்ன பழி, என்ன சொல்ற பாரதி?”
“முத்ல் ராத்திரி அன்னைக்கு நீங்க கிட்ட வந்தப்ப நான் உங்களை விலக்கினேன்ல? அதான் நீங்க இப்ப இப்படி பண்ணுறீங்க?”
“அப்படி எல்லாம் இல்லை மா”
“அப்படி தான் எனக்கு தெரியும். முதல் நாள் மட்டும் தான் நான் விலகுனேன். அப்புறம் புல்லா நீங்க தான் என்னை விட்டு விலகி போனீங்க? நான் வெட்கத்தை விட்டு என் மனசுல இருக்குறதைச் சொல்லியும் நேத்தும் இப்படி தான் பண்ணுநீங்க? இன்னைக்கும் அப்படி தான் பண்ணுறீங்க? போங்க உங்க கூட சண்டை”, என்று சொல்லி விட்டு பாத்ரூமுக்குள் சென்று விட்டாள்.
புன்னகையுடன் அமர்ந்திருந்த தமிழ் “ஒரு ரெண்டு நாள் பொறு டி பட்டு. அப்புறம் உன்னை என்ன செய்றேன் பாரு”, என்று எண்ணிக் கொண்டு அவள் வரவுக்காக காத்திருந்தான்.
குளித்து முடித்த பாரதி மாற்று உடை எடுத்து வராததை எண்ணி தலையில் அடித்தவள் ஈரப் பாவாடையை பிழிந்து கட்டிக் கொண்டு வந்தாள்.
அவன் அங்கே இருப்பான் என்று கூச்சமாக இருந்தாலும் அவன் என் புருஷன் தானே என்று எண்ணிக் கொண்டாள்.
அவளை அப்படி ஒரு கோலத்தில் எதிர் பார்க்காத தமிழ் விசிலடித்த படியே அவள் அருகில் வந்து அவளை கட்டிப் பிடிக்க “பிளீஸ் என்னோட உணர்வுகளோட விளையாடாதீங்க, விடுங்க”, என்று முகத்தில் அடித்தது போல சொன்னதும் அவளிடம் இருந்து விலகிக் கொண்டான்.
அவன் எதுவோ சொல்ல வரவும் “நான் டிரஸ் மாத்தணும், பிளீஸ் இங்க இருந்து போங்க”, என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.
“சரி விட்டுப் பிடிப்போம்”, என்று எண்ணிக் கொண்டு குளிக்க சென்றான் தமிழ்.
அன்றைய நாளில் மகன் மற்றும் மருமகள் முகம் கொஞ்சம் தெளிவில்லாததைக் கண்ட கோகிலா அதற்கு மேல் அவர்கள் விஷயத்தில் தன்னால் தலையிட முடியாது என்று உணர்ந்து “கடவுளே என் பிள்ளைக சந்தோஷமா வாழ நீ தான் மனசு வைக்கணும்”, என்று கடவுளை தஞ்சம் அடைந்தாள்.
தங்களின் முகத்தை வைத்தே அத்தை ஏதாவது கண்டு பிடித்து விடுவார்களோ என்று பயந்த பாரதி அறைக்குள்ளே முடங்கிக் கிடந்தாள்.