“இப்ப தான் ஜெயா அண்ணி சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”
“எனக்கும் தான்”
“பாப்பா, இப்ப நீ அக்கா கூட அங்க போய் இருக்கலாம்ல? என்னால தான் அவ கூட போய் இருக்க முடியாது. ஆனா நீ கடைசி வரை அவ கூட இருப்பேன்னு தான் அதே வீட்ல உன்னைக் கட்டிக் கொடுத்தோம். ஆனா அவளுக்கு இந்த மாதிரி நேரத்துல நீ இங்க வந்து உக்காந்துட்ட”, என்று மனத்தாங்களுடன் சொன்னாள் அரசி.
“பாத்தியா, என்னை விரட்டி விடப் பாக்குற”, என்று சிணுங்கினாள் ஜானகி.
“சே சே அப்படி இல்லை டி”
“எனக்கு புரியுது மா. நாளைக்கு காலைல கடைக்கு போயிட்டு அப்படியே அங்கே போயிறேன் போதுமா?”
“சரி டி”, என்று சிரித்தாள் அரசி.
அதன் பின் அவள் அறைக்குச் சென்று ஸ்ரீராம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க அவன் தன்னுடைய மனதை முழுதாக ஆக்ரமித்திருப்பது புரிந்தது.
அப்போது யமுனா அவளிடம் பேசினாள். அவளிடம் பேசி முடித்ததும் மீண்டும் அவனுடைய நினைவு தான் வந்தது.
அன்று இரவு உணவு உண்பதற்கு முன் அவளுடைய நினைவுகளுடன் படுத்திருந்தான் ஸ்ரீராம். இனிமே அவ இங்க வருவாளா? வர மாட்டாளா என்று அவனுக்கு கவலையாக இருந்தது. அந்த அறை முழுவதும் அவள் வாசனை இருப்பது போலவே அவனுக்கு தோன்றி வைத்தது.
அதே நேரம் அவனுடைய போனை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜானகி. அவனே கூட இருப்பது போல இருந்தது.
தவறு செய்பவன் என்றால் இப்படி போனை தன்னிடம் இத்தனை நாட்கள் கொடுத்து வைப்பானா என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவனது போனுக்கு ரம்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. “எல்லாம் இந்த சனியனால தான்”, என்று கோபத்துடன் எண்ணியவள் அதை கட் பண்ணி விட்டாள்.
“சாரி ஸ்ரீ, நான் உண்மைலே உன்னை விரும்பினேன் டா. நீ எனக்கு மட்டும் வேணும்னு தான் அப்படி எல்லாம் பண்ணிட்டேன். நான் வேணும்னா ஜானகி கிட்ட சாரி கேக்குறேன். என் கிட்ட பேசு ஸ்ரீ”, என்று வரிசையாக மெஸ்ஸேஜ் அனுப்பினாள் ரம்யா.
“உன்னோட பிரண்ட்ஷிப் எனக்கு வேணும் டா பிளீஸ், இன்னைக்கு மாதிரி இன்னும் நாலு அரை வேணும்னாலும் அடிச்சிக்கோ. ஆனா என்னை வெறுக்காத ஸ்ரீ”, என்று வந்த அடுத்த மெஸ்ஸேஜைப் படித்து விட்டு “பார் டா, அவளுக்கு அடியும் கொடுத்தானா? இதுக்காகவே என் செல்லத்தை மன்னிக்கணுமே?”, என்று எண்ணி சந்தோசமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்திலும் “இனிமே என் பிரண்ட்ஷிப் மட்டும் இல்லை. ஒரு சின்ன உதவி கூட என் கிட்ட இருந்து உனக்கு கிடைக்காது. இனி டிஸ்டர்ப் பண்ணின நான் சிம்மை மாத்த வேண்டியது இருக்கும்”, என்று ஸ்ரீராம் போல மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்து ரம்யா மற்றும் ஸ்ரீராம் இடையே இருந்த தொடர்பை ஒரெடியாக முறித்தாள் ஜானகி. அதற்கு பின்னே அவளுக்கு நிம்மதி வந்தது. கூடவே அவனைக் காண வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அது மட்டுமில்லாமல் அன்று அவனுடைய கைக்குள் இருந்த நினைவுகளும் மனதில் உலா வந்து அவளை இம்சித்தது. அவனைப் பற்றிய இனிய கற்பனையில் ஆழ்ந்திருந்தாள்.
அதன் பின் அவள் முகத்தில் புன்னகை உறைந்தே இருந்தது. சரவணன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஜானகி கோபத்துடன் வீட்டுக்கு வந்த கதையை சொல்லிக் கொண்டிருக்க அங்கே புன்னகையுடன் வந்து அமர்ந்தாள் ஜானகி.
“மாப்பிள்ளை கூட எதுக்கு சண்டை போட்ட பாப்பா?”, என்று கேட்டார் சரவணன்.
“அது எங்க ரெண்டு பேருக்கும் உள்ள சீக்ரட். இப்ப அவன் மேல….. சாரி சாரி முறைக்காத. அவங்க மேல கோபமே இல்லை போதுமா? நாளைக்கு எங்க வீட்டுக்கு போய்ருவேன் பா”, என்று சொல்லி சிரித்தாள் அவள்.
“சரி நாளைக்கு சாயங்காலம் நீ கடைலே இரு. நான் வந்து உன்னைக் கூட்டிட்டு போறேன்”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நானே போய்க்குவேன்”
“நானும் அம்மாவும் யமுனாவைப் பாக்க உங்க வீட்டுக்கு தான் வருவோம். அதான் உன்னையும் கூட்டிட்டு போகலாம்னு சொல்றேன். சாயங்காலம் வெயிட் பண்ணு”, என்று சரவணன் சொல்ல அவளும் சரி என்று சொன்னாள். பின் தந்தையிடம் பழைய படி வம்பிழுத்தாள். திருமண பேச்சு வார்த்தை ஆரம்பித்ததில் இருந்து சரியாக பேசாதவள் இன்று சந்தோஷமாக பேசினாள். பழைய ஜானகியைக் கண்ட சந்தோசத்தில் அரசியும் சரவணனும் நிம்மதியானார்கள். வெகு நாட்கள் கழித்து அங்கே கலகலப்பு மீண்டிருந்தது போல இருந்தது.
இரவு உணவு முடிந்து அறைக்கு வந்ததும் அவளுக்கு அவன் நினைவே தொடர்ந்தது. “என்ன டா பண்ணுவ? என்னை நினைச்சு பாப்பியா? என்னை மன்னிச்சிரு ராம். இப்ப உன் மேல எந்த தப்பும் இல்லைன்னு புரியுது. கூடவே கொஞ்சம் பயமாவும் இருக்கு ராம்”, என்று வாய் விட்டே புலம்பினாள். அவனும் அவள் நினைவில் தான் இருந்தான். எப்படியாவது அவள் மீண்டும் இங்கே வந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருந்தான். அன்றைய இரவில் ஸ்ரீராமும் சரி ஜானகியும் சரி மற்றவர் நினைவில் தூக்கத்தை தொலைத்தார்கள்.
அடுத்த நாள் அரசி, சரவணன், ஜானகி மூவரும் யமுனாவைக் காணச் சென்றார்கள். யமுனா அரசியைக் கட்டிக் கொண்டு தன்னுடைய சந்தோசத்தைக் காட்டினாள். அப்பா ஆக போவதற்கு ஆள் ஆளுக்கு வாழ்த்துச் சொல்ல கிரி சிறிது வெட்கத்துடன் அங்கே அமர்ந்திருந்தான்.
அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அறைக்குள் இருந்த ஸ்ரீராம் சத்தம் கேட்கவும் வெளியே வந்தான். அங்கே அமர்ந்திருந்த ஜானகியைக் கண்டதும் ஸ்ரீராம் கண்கள் மின்னியது.
“வாங்க அத்தை, வாங்க மாமா”, என்று சந்தோஷமாக வரவேற்றவன் கிரி அருகில் சென்று அமர்ந்து கொண்டு ஜானகியைத் தான் பார்த்தான். அவளும் அதே நேரம் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் இருந்த ஏக்கம், அவன் கண்களில் வழிந்த காதலில் ஒரு நொடிக்கு மேல் அவன் முகத்தைக் காண முடியாமல் தலை குனிந்து கொண்டாள்.
“ஐயோ இவன் என்ன இப்படி பாத்துட்டு இருக்கான்? ஒரு மாதிரி படபடப்பா இருக்கே”, என்று எண்ணி தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அதற்கு பிறகும் அவன் பார்வை அவள் மீதே தான் இருந்தது. அதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள். அதனால் அவனை நிமிர்ந்து பார்க்காமல் இருந்தாள். அவள் தன்னைப் பார்க்க வில்லை என்றதும் அவள் இன்னும் தன்னை நம்ப வில்லை போல என்று எண்ணி அவனுக்கு வேதனையாக இருந்தது.
“கோபத்தில் என் முகத்தைக் கூட பாக்க மாட்டிக்காளே? அப்படின்னா இவ அண்ணியைப் பாக்க தான் வந்தாளா? இந்த வீட்ல என் கூட இருக்க வரலையா? அத்தை மாமா கூடவே போயிருவாளா?”, என்று கலங்கிப் போனான்.
சிறிது நேரம் கழித்து “சரி சம்பந்தி நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி எழுந்து கொண்டார் சரவணன்.
“ஆமாங்க அண்ணா, கிளம்புறோம், இன்னொரு நாள் வரோம்”, என்று ரகுவிடம் சொன்ன அரசி யமுனாவிடம் “பாத்து கவனமா இரு என்ன?”, என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஜானகியும் எழுந்து நின்றதும் ஸ்ரீராமின் இதயத் துடிப்பு எகிறியது. “ஐயோ போகப் போறாளோ? நம்ம வீட்டு பெருசுகளாவது அவளை இங்க இருக்கச் சொல்லுவாங்களா?”, என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை அவளுடைய உயிரையே ஊடுருவியது போல இருந்தது. அவன் பார்வையில் முதன்முதலாக சலனப் பட்டு நின்று கொண்டிருந்தாள் ஜானகி.
அவளுக்கு இன்னொரு விஷயமும் புரிந்தது. அது ஸ்ரீராமின் பதட்டம். எங்கே அவள் சென்று விடுவாளோ என்று அவன் தவித்துப் போய் பார்க்க அவனுடைய தேடல் அவளுடைய காயம் பட்ட மனதுக்கு இதத்தைக் கொடுத்தது.
கணவனின் தேடலில் எந்த மனைவிக்கு தான் கர்வம் வராது?
“அக்காவைப் பாத்துக்கோ ஜானகி. இனி நீ தான் இங்க எல்லா வேலையையும் செய்யணும். பாத்து நடந்துக்கோ. நாங்க வரோம்”, என்று சொல்லி விட்டு அரசியும் சரவணனும் மட்டும் வெளியே செல்ல அப்போது தான் இழுத்து வைத்த மூச்சை வெளியிட்டான் ஸ்ரீராம். சில நாட்கள் முன்பு ஒரு பெண் மீது இந்த அளவுக்கு பைத்தியமாவோம் என்று யாராவது சொன்னால் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டான். இன்றோ அவளது கடைக்கண் பார்வைக்காக தவம் இருந்தான்.
அவள் செல்ல வில்லை என்றதும் கண்கள் மின்ன அவன் அவளைப் பார்க்க அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. பார்க்க முடியவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும். கண் பார்வையாலே அவளை மயக்கிக் கொண்டிருந்தவனை அவளுக்கு நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லை.
அவள் அதன் பின் வந்த நேரங்களில் ஜெயாவுடனும் யமுனாவுடனுமே சுற்றிக் கொண்டிருக்க அவள் தனிமையில் சிக்க மாட்டாளா என்று காத்திருந்தான்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற ஆசை வர அம்பிகா அருகில் வந்து அமர்ந்தவன் “அன்பு”, என்று அழைத்தான்.
“என்ன டா?”
“நான் இப்ப என் ரூமுக்கு போறேன். நீ உன் பேத்தியை எப்படியாவது அங்க அனுப்பி வையேன்”
“ஏண்டா, அது உங்க ரூம் தானே? நீ கூப்பிட்டா அவளே வரப் போறா”
“கண்டிப்பா வர மாட்டா. ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன சண்டை. என் மேல ரொம்ப கோபமா இருக்கா. அவளை இங்க இருந்து கடத்திட்டு போனா தான் அவளை சமாதானப் படுத்த முடியும். நான் கூப்பிட்டா கூட வர மாட்டா”
“நான் போய் சொன்னா மட்டும் கேப்பாளா? ஏதாவது வெறுப்பேத்துவா டா”, என்றாள் அம்பிகா.
“இதெல்லாம் நமக்கு புதுசா? எனக்காக அவ என்ன சொன்னாலும் தாங்கிக்கோ அன்பு. உன் செல்லப் பேரனுக்காக இதைக் கூட செய்ய மாட்டியா?”
“உனக்கு என்னைப் பாத்தா பாவமா இல்லையா? ஏற்கனவே என்னை தூது புறான்னு சொன்னா டா அவ. இப்ப அவளை உன் கூட கோத்து விட்டேன்னு வை என்னல்லாம் சொல்வாளோ? பயமா இருக்கு டா”
“பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் பயப்படுற? போ அன்பு”
“அவ்வளவு தைரியம் இருந்தா நீ போய் கூப்பிட வேண்டியது தானே டா?”
“எனக்கும் பயம் தான் பாட்டி. என் மேல கொலை வெறில இருந்தாலும் இருப்பா”
“அந்த பயம் இருக்குல்ல? எனக்கும் அப்படி தான் டா இருக்கு”
“போ அன்பு. இப்ப எல்லாம் உனக்கு என் மேல பாசமே இல்லை. நான் கேக்குறது எதையும் செய்ய மாட்டிக்க. நீ ஒண்ணும் செய்ய வேண்டாம் போ”, என்று கோபித்துக் கொண்டான்.
“கோப படாத டா பேராண்டி. சரி நீ போ. நான் அவளை அனுப்பி வைக்கிறேன்”
“பாட்டின்னா பாட்டி தான்”, என்று அவளது கன்னத்தை கிள்ளி கொஞ்சி விட்டு ஓடினான் ஸ்ரீராம். அதை ஜானகி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.