“பாத்தியா மா, நீ வர வரைக்கும் கப்பல் கவுந்த மாதிரி சோகத்துல இருந்தான். ஆனா இப்ப எப்படி துள்ளிட்டு போறான் பாரு. அவன் உன்னைத் தேடுறான்னு நான் சொன்னதை இப்ப நம்புறியா?”, என்று ஜானகியிடம் கேட்டார் ரகு.
“ஆமா மாமா”, என்று வெட்கத்துடன் சிரித்தாள்.
“எங்க அம்மா நம்மளைப் பாத்து தான் பம்மிக்கிட்டு வருது. பேரனும் பாட்டியும் சேந்து ஏதோ பிளான் போட்டுட்டாங்க. என்னன்னு பாத்து கவனி மா. நீ தான் அவங்களை சமாளிக்கணும்”, என்று சொல்லி விட்டு கழண்டு கொண்டார் ரகு.
அவர் சொன்னதையும் தன்னை நோக்கி புன்னகையுடன் வரும் அம்பிகாவையும் கண்டு குழப்பமாக நின்றிருந்தாள் ஜானகி. “அப்படி என்ன சொல்லிட்டு போயிருப்பான்?”, என்று அவளுக்கும் குழப்பமாக இருந்தது.
“ஹி ஹி ஜானகி”, என்று சிரித்த படி அவள் அருகில் வந்து நின்றாள் அம்பிகா.
அம்பிகாவின் சிரிப்பைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிய படி “என்ன பாட்டி?”, என்று கேட்டாள்.
“அது… அது வந்து எனக்காக ஒரு விஷயம் செய்றியா? என்னோட புடவை ஒண்ணு உங்க ரூம்ல இருக்கு. அதை போய் எடுத்துட்டு வரியா?”, என்று தயங்கிய படியே அம்பிகா கேட்க அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டாள் ஜானகி.
“பாட்டி…. பாட்டி…. உனக்கு நடிக்க கூட தெரியலை. எப்படி எப்படி? உன் புடவை எங்க ரூம்ல இருக்குதா? உன் புடவை எப்படி அங்க வந்துச்சு? உன் பேரனுக்கு தொட்டில் கட்ட கொடுத்தியா?”, என்று சிரித்த படி கேட்டாள்.
“அச்சச்சோ கண்டு பிடிச்சிட்டியா?”, என்று அசடு வழிந்தாள் அம்பிகா.
“என் பேரனுக்காக எத்தனை தடவைன்னாலும் தூது போவேன்”, என்று அம்பிகா சொன்னதும் பாட்டிக்கு அவன் மேல் ஈஊர்க்கும் அன்பைக் கண்டு “இந்த பாட்டி அவனை அந்த அளவுக்கு நம்புறாங்க. அவனை எப்பவும் திட்டிட்டு இருக்குற மாமா கூட அவனை எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டிக்கார். அப்படி இருக்க நான் மட்டும் ஏன் அந்த ரம்யா பேச்சைக் கேட்டு அவனை சந்தேகப் பட்டேன்?”, என்ற எண்ணம் வந்தது ஜானகிக்கு.
அவள் முகம் ஒரு மாதிரி ஆகவும் “என்ன ஆச்சு ஜானகி? என் பேரன் மேல உள்ள கோபம் நிஜமாவே போகலையா?”, என்று கேட்டாள் அம்பிகா.
“அதெல்லாம் இல்லை பாட்டி. உன் பேரன் மேல எனக்கு அளவுக்கு அதிகமா அன்பு தான் இருக்கு”
“ம்ஹூம், அதை என் கிட்ட சொன்னா எப்படி? அவன் கிட்ட தானே சொல்லணும்? போ”
“நான் அங்க போக மாட்டேன் பாட்டி”, என்று சிணுங்கினாள் ஜானகி.
“ஏன் டி?”
“எனக்கு வெக்கமா இருக்கு”
“என்னது வெக்கமா? நீ கோபமா இருக்கன்னு அங்க அவன் தவிச்சிட்டு இருக்கான் ஜானகி?”
“அது அப்ப கோபம் இருந்துச்சு பாட்டி. ஆனா இப்ப இல்லை”
“ஜானகி”
“என்ன பாட்டி?”
“என் பேரனை உண்மையிலே உனக்கு பிடிச்சிருக்கா?”
“என்னை நீ நம்பலையா? நிஜமாவே ரொம்ப பிடிச்சிருக்கு… போதுமா”, என்று அவள் சொன்னதும் அம்பிகா முகம் மலர்ந்தது.
அவள் கன்னம் பற்றி தன்னைக் காண வைத்த அம்பிகா “ஸ்ரீ ரொம்ப நல்லவன் ஜானகி. நீயும் அவனும் சந்தோஷமா இருக்கணும் சரியா?”, என்று கேட்டாள்.
“சரி பாட்டி”
“அப்படின்னா மேல போ மா”
“எனக்கு ஒரு மாதிரி இருக்கு பாட்டி”
“உன் புருஷனை பாக்க போக உனக்கு என்ன வெக்கம்? போ டா மா”, என்று சொன்னதும் “சரி பாட்டி”, என்று சொல்லி விட்டு மேலே சென்றாள்.
இன்று தான் திருமணம் நடந்தது போல தயக்கத்துடன் மாடி ஏறினாள் ஜானகி.
அவளுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கியது. அவன் மீது கோபம் இருக்கும் போது அவளால் அவனை ஈசியாக எதிர்க் கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது அவன் மீது அதிக நேசம் இருக்க அவனை எதிர்க் கொள்ள தயக்கமாக இருந்தது. அதே நேரம் இந்த நிமிடமே அவனுடன் வாழ்க்கையை துவங்க அவளுக்கு தயக்கமும் இருந்தது. ரம்யா என்ற ஒருத்தி இடையில் வந்து அவர்கள் வாழ்க்கையில் விளையாடி விட்டுச் சென்றிருக்கிறாள் என்றால் இவர்கள் அப்படி ஒரு கேவலமான வாழ்க்கையை தானே வாழ்ந்திருக்க வேண்டும்.
இதுவே காதலும், நம்பிக்கையும், அன்பும் இவர்களுக்கு இடையே இருந்திருந்தால் இப்படி அவள் வந்து சொன்ன உடனே நம்பியிருப்பாளா?
அப்படி ஒரு புரிதலும் காதலும் வந்த பிறகு தான் அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவு எடுத்தாள். ஆனால் ஏற்கனவே அவன் மீது அதிக காதல் கொண்டதால் தான் அவன் மீது அவ்வளவு கோப பட்டாள் என்பதை அவள் உணரவில்லை.
“இப்படியே போனா அவனே உன் வெக்கத்தை வச்சு உன் மனசை கண்டு பிடிச்சிருவான் டி. முகத்தை சரியா வச்சிக்கோ. அப்ப தான் அவனை லவ் பண்ண அவன் கிட்ட டைம் கேக்க முடியும். இனி யார் என்ன சொன்னாலும் என் ராம் பத்தி எனக்கு தெரியும்னு சொல்லுற அளவுக்கு அவனை லவ் பண்ணின பிறகு தான் அவன் கூட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் வெட்கத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு அறைக்குள்ளே சென்றாள்.
அவள் உள்ளே வந்ததும் அவன் முகம் ஒளிர்ந்தது. “வா ஜானு”, என்று சொல்லி அவளைக் கண்டு புன்னகைத்தான்.
அவளோ அவனிடம் எதுவும் பேசாமல் அவன் முகத்கைக் கூட பார்க்க முடியாமல் வேகமாக எதையோ அந்த அறையில் தேட ஆரம்பித்தாள்.
அவள் செயலில் அவன் முகம் கூம்பிப் போனது. பின் அவள் இங்கே வந்ததே போதும் என்று எண்ணியவன் “என்ன ஜானு தேடுற?”, என்று கேட்டான்.
“பாட்டியோட சேலை இங்க இருக்காம். அதை எடுக்க வந்தேன். எங்க இருக்குன்னு தான் தெரியலை”, என்று பாவம் போல சொன்னாள்.
“என்னது பாட்டி சேலையா? அது எங்க இங்க இருக்கு?”, என்று குழப்பமாக கேட்டான்.
“பாட்டி தான் சொல்லுச்சு. இங்க தான் இருக்காம்”, என்று அவள் சொன்னதும் பாட்டியை மனதுக்குள் தாளித்தவன் “அது சும்மா சொல்லிருக்கு”, என்று சொல்லி அசடு வழிந்தான்.
எதுவும் தெரியாதது போல அவனைப் பார்த்தவள் “உனக்கு எப்படித் தெரியும்?”, என்று கேட்டாள்.
“அது… நான் தான் உன்னை எப்படியாவது மேல வர வைக்க பாட்டி கிட்ட சொல்லிட்டு வந்தேன். அது இப்படி சொல்லிருக்கு”
“அப்படியா? எதுக்கு?”
“உன் கிட்ட பேசணும்னு தான்”
“அதை என் கிட்டயே சொல்லிருக்க வேண்டியது தானே?”
“நீ என் மேல கோபமா இருக்குறல்ல? அதான்”
“இப்ப மட்டும் கோபம் போயிருச்சுன்னு உனக்கு தெரியுமா ராம்?”
“இன்னும் கோபம் போகலையா? கோபத்தோட தான் இங்க வந்தியா ஜானு? எனக்காக நீ இங்க வரலையா?”, என்று தவிப்புடன் கேட்டான்.
“நீ மட்டும் எனக்காக எங்க வீட்ல இருந்தியா? என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்ட தானே? அந்த கோபம் நிறைய இருக்கு”
“ஏய் நான் எங்க டி அப்படிச் சொன்னேன்?”, என்று கேட்டவன் அவள் சொன்னது புரிந்து “ஜானு?”, என்று ஆர்வமாக அழைத்தான்.
“பொண்டாட்டி கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனா நீ என்னை சமாதானம் பண்ணி, நான் சமாதானம் ஆகுற வரைக்கும் அங்கயே இருந்து கூட்டிட்டு வந்துருக்கணும்? பெரிய இவன் மாதிரி வந்தா வான்னு விட்டுட்டு வந்துட்ட? இங்க வந்ததுக்கு அப்புறம் ஒரு போனாவது பண்ணுனியா? இல்லை இன்னைக்கு காலைல என்னைத் தேடி தான் வந்தியா? நானே தான் போனேன், நானே தான் வந்திருக்கேன்”, என்று அவனுக்கான தேடலைப் பற்றி அவள் சொன்னதும் அவன் கண்கள் மின்னியது.
“ஜானு”, என்று சந்தோஷமாக அழைத்த படி அவள் அருகில் வந்தவன் அவள் கையைப் பற்றிய படி “என்னை நம்புறியா ஜானு?”, என்று கேட்டான்.
“ம்ம், அவ இப்படி பொய் சொல்லுவான்னு எனக்கு தெரியாது ராம். நமக்குள்ள நடந்ததை அவ சொன்னதும் அவ உனக்கு குளோஸ்னு தப்பா நினைச்சிட்டேன். அதனால தான் எல்லாத்தையும் நம்பிட்டேன். என் மேலயும் தப்பிருக்கு. நான் அன்னைக்கே எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிருக்கணும். சாரி ராம்”
“சரி விடு. இனி அவ நம்ம வாழ்க்கைல வர மாட்டா. நிஜமாவே நான் விரும்பின முதல் பொண்ணும் நீ தான், கடைசி பொண்ணும் நீ தான் ஜானு. நம்பு ஜானு”, என்று அவளுடைய கரத்தைப் பற்றி தன்னுடைய கைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு பேசினான்.
“ஹிம் சரி. இந்தா உன்னோட போன்”, என்று சொல்லி நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்டவன் “உண்மையிலே என்னை நம்புறியா?”, என்று கேட்டான்.
“ஹிம், நம்பாமலா போனைக் கொடுக்குறேன்”, என்று அவள் கேட்டதும் தன்னுடைய கரத்துக்குள் அடங்கி இருந்த அவள் கரத்தை எடுத்து தன்னுடைய உதட்டுக்கு அருகே எடுத்துச் சென்றவன் அதில் தன்னுடைய இதழைப் புதைத்தான்.
உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு ஓடியது அவளுக்கு. அவனுடைய கரங்களுக்குள் இருந்த தன்னுடைய கரத்தை உருவிக் கொண்டவள் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ராம்”, என்றாள்.
“சொல்லு ஜானு”
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ஆனா எப்படிச் சொல்லன்னு தான் தெரியலை”
“என்ன ஜானு?”
“நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்”
“ஜானு, அப்படின்னா நீ என்னை இன்னும் நம்பலை அப்படி தானே? இந்த சந்தேகம் அப்படிங்குற பேய் நம்மளை விட்டு போகவே செய்யாதா? நமக்கு இந்த பேர் வச்சதுனால தான் நம்மளை சந்தேகப் பேய் பிடிச்சு ஆட்டுதா? எனக்கு என்ன செஞ்சு என்னை நிரூபிக்கன்னு தெரியலை ஜானு”, என்று வேதனையாக சொன்னான்.
“உன்னை நான் நம்பலைன்னு சொன்னேனா?”
“அப்படின்னா என்னைப் பிடிக்கலையா?”
“முன்னாடியே உன்னைப் பிடிக்கும். அதுவும் அந்த ரம்யாவை அடிச்சது தெரிஞ்சு ரொம்ப பிடிச்சிருக்கு”
“அவ பேசினாளா?”, என்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான். “அவளைப் பத்தி ஏன் கேக்குறன்னு தப்பா நினைச்சிக்குவாளோ?”, என்று எண்ணி பயந்து போய் அவளைப் பார்த்தான்.
“உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ராம். உன் மேல சந்தேகமும் இல்லை. ஆனா நமக்குள்ள நடந்த சண்டை தான் பிரச்சனை. நாம ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருந்தா அன்னைக்கு அவ அப்படி வந்து பேசிருப்பாளா? அதனால நாம ஒருத்தொருக்கொருத்தர் நல்லா புரிஞ்சிக்கணும். அந்த புரிதல் இல்லாததுனால தான் இவ்வளவு பிரச்சனை ஆகிருச்சு. இனி இப்படி நடக்க கூடாது. அதுக்கு நாம கொஞ்சம் நல்லா நம்மளைப் பத்தி தெரிஞ்சிக்கணும். நாம கொஞ்ச நாள் லவ் பண்ணுவோமா?”, என்று கேட்டாள் ஜானகி.
இதற்கு அவனால் எப்படி மறுப்பு சொல்ல முடியும்? அதனால் சந்தோஷமாக “சரி”, என்று சொன்னான். ஆனால் அதன் பின் நடந்த அவனுடைய சேட்டைகளால் ஏண்டா அப்படிச் சொன்னோம் என்று நொந்து போனாள் ஜானகி.