Skip to content
Post Views: 2,482
“அம்மாச்சி..” என்று அழைத்த படியே உள்ளே வந்தாள் ஐஸ்வர்யா.
முதலில் கொஞ்சம் அதிர்ந்தாலும், ஐஸ்வர்யாவை மட்டுமே ராஜு கூட்டி வந்திருந்ததில் கொஞ்சம் நிம்மதி அடைந்து, “வாம்மா” என்று அழைத்தார் கமலா.
“மகி.. இவ என்னோட பேத்தி. ஐஸ்வர்யா. ப்ரியாவோட பொண்ணு.
உங்க கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடி தான் இவளுக்கு கல்யாணம் ஆச்சு”. என்றார் கமலா.
Advertisement
“ம்ம். தெரியும். அமமாச்சி.. உங்க மகன் சொல்லி இருக்கார்.
நான் இவங்கள எல்லாம் அவர் போனில் இருக்கும் போட்டோக்களில் பார்த்து இருக்கேன்” என்றாள் மகி.
“என்ன.. நீங்க? நீங்களும் என் அம்மாச்சியை அத்தைன்னு கூப்பிடாமல், அம்மாச்சின்னு கூப்பிடறீங்க?” செல்லம் கொஞ்சினாள் அந்த ஐஸ்வர்யா.
Advertisement
“அவளும் எனக்கு பேத்தி மாதிரி தான்!”
Advertisement
“ம்ம்.பேத்தி மாதிரி தான்! நான் தான் உன்னோட ஒரிஜினல் சொந்த பேத்தி!”
“ஓ.. அதுவும் சரி தான். ஆனா இந்த சொந்த பேத்தி, அவளோட அம்மாச்சிய அவ கல்யாணத்துக்கு கூட கூப்பிடவே இல்லை!” என்று சொல்லி அவளுக்கும் ஒரு குட்டு வைத்தார் கமலா.
“அம்மா.. விடுங்களேன்மா. பெரியவங்க செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா!
Advertisement
இவ இப்ப கன்சீவா இருக்கா! நீங்க கொள்ளுப் பாட்டி ஆகப் போறிங்க!
அதான் நீங்க பார்க்கணும்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்தேன்!” என்றான் ராஜு.
“ரொம்ப சந்தோசம் என்ற கமலா, இவள எங்கடா பார்த்த? நீ எதுக்கு இவ வீட்டுக்குப் போன?” என்று கேட்டார்.
“நான் எங்கம்மா அவங்க வீட்டுக்கு எல்லாம் போகப் போறேன்? மாம்பழச்சாலையில ஒரு ஹாஸ்பிட்டலில் நின்னுட்டு இருந்தா தனியா!
நான் அங்க சவாரிய இறக்கி விட போனவன், அப்படியே இவள இங்க கூட்டிட்டு வந்திட்டேன்”.
“அம்மாடி.. நீ எங்கடா அங்க தனியா வந்த? கூட யாரும் வரலையா?”
“நான் என் வீட்டுக்காரர் கூடவும், அம்மா கூடவும் தான் வந்தேன். அவருக்கு ஆபிஸ்க்கு லேட்டாகுதுன்னு போய்ட்டாரு.
அம்மா அவங்களுக்கு டாக்டர் கிட்ட காண்பிக்கணும்.
எனக்கு முடிஞ்சு வர வரை நீ பசியோட காத்திருக்க வேண்டாம் என்று சொல்லி என்னை ஆட்டோவில் முன்னே போக சொல்லிட்டாங்க.
தெரிஞ்ச ஆட்டோ தான்! போன் பண்ணிட்டு இருந்தப்போ தான் மாமா என்னைப் பார்த்துட்டு இங்க கூட்டிட்டு வந்திட்டாங்க!” என்றாள் ஐஸ்வர்யா.
ஆனால் உண்மையில், தூரத்திலேயே ராஜுவை பார்த்து விட்ட ப்ரியா, டக்கென்று ஒரு ஐடியா செய்திருந்தாள்.
நாம இப்போ போய் பேசினா, நம்ம கிட்ட பேச மாட்டான்!
கோபம் தான் படுவான்! ஆனால் ஐஸ்வர்யா மேல கோபப்பட மாட்டான்!
அதுவும் இப்போ அவ வாயும் வயிறுமா இருக்கிறப்போ!
இவள முதல்ல உள்ளே அனுப்பி விட்டு, பின்னாடியே நாமும் போய் ஜாயின்ட் அடிச்சிட வேண்டியது தான்! என்று திட்டம் போட்டே
மகளை ராஜுவின் கண்களில் படும்படி போய் நிற்க சொல்லியிருந்தாள் ப்ரியா!
ஏற்கனவே அவள் மாமியார் மூலம் கமலா அம்மாவிடம் ஒரு தூது அனுப்பி தான் இருந்தாள்!
ஆனால் கமலா அம்மா மசிய வில்லை!
“என்ன அண்ணி? உங்க மகன், மகள் மேல கோபம்னா, அவங்கள கூப்பிட வேண்டாம்!
ஆனா நாங்க என்ன பண்ணினோம்? ராஜு கல்யாணத்துக்கு எங்களுக்கு கூட பத்திரிகை இல்லை” என்று நேரிடையாகவே கேட்க வைத்தாள்!
ஆனால் கமலா அம்மாவோ, “என்ன பண்றது அண்ணி? நியாயத்துக்கு உங்களுக்கு சம்பந்தி மரியாதை பண்ணி பத்திரிக்கை வைக்கணும்!
ஆனா எங்க சூழ்நிலை அப்படி இல்லை!
அடுத்து வர்ற விசேசத்துல ஒண்ணா நின்னு எடுத்து செய்வோம்!” என்று அப்போதும் கூட கொஞ்சம் கூட பிடி கொடுக்கவே இல்லை அவர்!
ப்ரியாவுக்கு அவள் மாமியாரிடம் திட்டு விழுந்தது தான் மிச்சம்!
ஆனால், வகையாக ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு என்று நினைத்தே தான் கொஞ்சம் மறைவாக நின்று கொண்டு மகளை தம்பியுடன் அனுப்பி வைத்திருந்தாள் அவள்!
“சரி.. நீ சாப்பிடும்மா..” என்று அவளுக்கு தட்டை வைத்தார் கமலா. கூட சேர்ந்து அவரும் சாப்பிட்டார்.
ஐஸ்வர்யா சாப்பிட்டு முடித்தவுடன், “மகி அவளுக்கு குங்குமம் கொடும்மா” என்றார் கமலா.
“மகி” என்று ராஜு அழைக்க,
“பணம் தானே இருங்க.. நான் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி அவள் பர்சில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து வந்து கமலா அம்மாவிடம் கொடுத்து ஐஸ்வர்யாவிடம் கொடுக்க சொன்னாள் மகி!
ஐஸ்வர்யாவின் முகம் சின்னதாக போய் விட்டிருந்தது!
பின்னே! அவள் எதிர்பார்த்தது, தான் மாசமாக இருப்பதால்,
ராஜு மாமா அப்படியே மகாராஜா போல தன் பான்ட் பாக்கெட்டில் இருக்கும் பணம் முழுவதையும் எண்ணாமல் கூட அவள் கையில் அள்ளிக்கொண்டு வந்து திணிப்பான் என்றே!
இப்படி அவன் பொண்டாட்டி கிள்ளிக் கொடுப்பாள் என்று அவள் கனவிலும் நினைக்க வில்லை!
“என்ன பார்க்கிற? ஐஸு.. இப்ப இங்க மகி தான் கணக்கு வழக்கு எல்லாம்! உங்க மாமா கிட்ட பர்ஸ் கூட கிடையாது!
கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வாங்கிட்டு போறான்!
அதுக்கும் ராத்திரி வந்து கணக்கு சொல்லணும் அவன்!” என்றார் கமலா சிரித்துக் கொண்டே!
“ஏன் அம்மாச்சி.. நீங்க இத எல்லாம் கேக்கவே மாட்டீங்களா?
இப்பவே இப்படியா? “என்றாள் அடக்கிக் கொண்ட கோபத்துடன் ஐஸ்வர்யா!
“ம்.க்கும்..நீ வேற ஐஸு.. நல்ல ஆளைப் பார்த்து கேட்ட போ..
மகிக்கு இப்படி பண்ண சொல்லி சொல்லிக் கொடுத்ததே உன் அம்மாச்சி தான்!
நீ அவங்க கிட்டவே போய் நியாயம் கேட்டுட்டு இருக்கே?” என்று சிரித்தான் ராஜு!
“ஏன்.. மாமா.. உங்களுக்கும் கோபம் வரலியா?”
“கோபப்பட்டு.. அப்புறம்.. புவாவுக்கு என்ன பண்ணுவான்?
உங்க வீட்டுக்கு வந்தா உன் அம்மா போடுவாளா?
இல்ல உன் பெரிய மாமன் தான் போடுவானா? அவனுக்கு வேற வழியில்ல!” என்றார் கமலா!
அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை ஐஸ்வர்யாவால்.
“சரி.. அம்மாச்சி..நான் கிளம்புறேன். மாமா என்னை வீட்டில் கொண்டு போய் விடறீங்களா?”
“அவர் இன்னுமும் சாப்பிடல ஐஸு. இப்ப தான் மறுபடியும் குக்கர் வச்சுருக்கேன்!
உன்னை சந்துரு அண்ணா கொண்டு போய் விட்டு விட்டு வருவார்” என்று மகி சொல்லி விட,
ராஜுவை எப்படியாவது அவர்கள் வீட்டுக்கு உள்ளே அழைத்து போகும் திட்டத்திலும் மண்!
….
“ம்ம். இப்படி எத்தனை வாட்டிடி, இந்த ஏரியாவை சுத்தி சுத்தி வருவ?” என்றான் ராஜு,
அவனுடன் பின்னால் பைக்கில் உட்கார்ந்து இருக்கும் மகியிடம்!
மகேந்திரனுக்கு அவன் முதலாளி வேறு ஒரு புதிய பைக் வாங்கி தந்திருக்க,
அவனது பழைய ஸ்பெலன்டர் வண்டியை இங்கே கொண்டு வந்து விட்டு விட்டான்!
ராஜு வேறு ஒரு புதிய பைக் வாங்காமல் தடுத்து இருந்தாள் மகி!
“புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி ஒரு லாங் டிரைவ் போனா கூட பரவாயில்ல!
ஆனா சும்மா சும்மா இந்த ஏரியாவ ஏண்டி சுத்தி சுத்தி பார்த்திட்டு இருக்க? எனக்கு போரடிக்குது!
உன் கிட்ட ஏண்டா இந்த பிளாட் இருக்கிற இடத்த காண்பிச்சோம்னு இருக்கு!”
“கொஞ்சம் பொறுமையா இருங்க.. எல்லாம் காரணமா தான்” என்றவள் அடுத்து அழைத்து சென்றது, அந்த பிசினஸ் கன்சல்டிங் ஆபிசுக்கு!
“என்னம்மா.. நான் சொன்ன படி ரிசெர்ச் பண்ணிட்டீங்களா?”
“ம்ம் சார். பண்ணிட்டேன்.
எங்க பிளாட்டை சுத்தி ஒரு அஞ்சு கிலோ மீட்டர் சுற்றளவில் நிறைய அப்பார்ட்மென்ட்கள், கேட்டட் கம்யுனிட்டிஸ், அப்புறம் புதுசா ஒரு டவுன்ஷிப்பே இருக்கு!
நிறைய ஃபிளாட்கள், கார்பரேட் ஆபிஸ்கள்!
முக்காவாசி பேர் சொந்த அப்பார்ட்மென்ட்வாசிகள் தான்!
எல்லோரும் அப்பர் மிடில் கிளாஸ் இல்லன்னா பணக்காரங்களா தான் இருக்காங்க.
எல்லோர் வீட்டுலயும் கார்கள் இருக்கு! பைக்கும் இருக்கு! அதுவும் எல்லாமே லக்சரி மாடல் வண்டிகள்!
நிச்சயமா எங்க இடத்தில் கார் ஸ்பா ஆரம்பிச்சா நல்லா ஓடும் சார்!
அப்புறம் நீங்க பார்க்க சொன்ன வாட்டர் சோரசும், டிரைனேஜ் வசதிகளும் இருக்கான்னு செக் பண்ணிட்டேன்!
நமக்கு அங்க வாட்டர் இன்லெட் அவுட்லெட் வசதி எல்லாம் பக்கவா கிடைக்கும் சார்!” என்றாள் மகி!
இத தான் சுத்தி சுத்தி வந்து பார்த்தாளா என்று மனதுள் என்னை வியந்தான் ராஜு!
“பிளாட் உங்க ஹஸ்பன்ட் பேர்ல தானே இருக்கு! எந்த வில்லங்கமும் இல்லையே?”
“இல்ல சார்! பக்காவா இருக்கு அதுவும்!”
“ஏன் கேக்குறேன்னா, அத தான் கொலாட்ரலா காண்பிச்சு லோன் வாங்க போறோம்!
அப்புறம் ப்ராஜெக்ட் வேல்யூல ஒரு டென் பர்சன்ட் நாம ரெடி பண்ணனும்!
ரெடி பண்ணிட்டீங்களா?”
“பண்ணிட்டோம் சார். அப்படியே பத்தலன்னாலும் ஜுவல்ஸ் இருக்கு! மேனேஜ் பண்ணிக்கலாம்!” என்றாள் மகி.
“உங்களுக்கு புரியுதா சார்? நான் மகி கிட்ட கேட்ட தகவலுக்கு பேர் கஸ்டமர் டெமோகிராஃபிக் அனாலிசிஸ்!(Customer Demographic Analysis).
நீங்க உங்க கார் ஆரம்பிக்க போற இடத்துல வசிக்கும் மக்களின் வாங்கும் திறன், பண வசதி, அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொழில், இப்படியான தகவல்கள்!
கூடவே உங்க இடம் இருக்கிற இடத்தில் தண்ணீர் வசதி டிரைனேஜ் வசதி எல்லாம் எப்படி இருக்குன்னு தான் பார்த்திட்டு வர சொல்லி இருந்தேன்!
நீங்க உங்க கார் ஸ்பா ஆரம்பிக்க நினைக்கிற உங்களோட அந்த இடம்
ரொம்ப ஆப்டான இடம்! கஸ்டமர் டெமோகிராஃபி ப்ரோஃபலும் நல்லா இருக்கு!
லொக்கேசன் அட்வான்டேஜும் இருக்கு! நீங்க தாராளமா அந்த இடத்தில உங்க கார் ஸபாவை ஆரம்பிக்கலாம்!
அடுத்து உங்க பிசினெஸ்க்கு தேவையான ரெஜிஸ்ரேசன்ஸ், அப்ரூவல்ஸ், அப்புறம் பாங்க் லோனுக்கு தேவையான ப்ராஜெக்ட் ரிப்போர்ட் எல்லாம் நாங்க ரெடி பண்ணி தந்திடுவோம்!” என்றார் அவர்.
அவரிடம் நன்றி சொல்லி விடைப் பெற்றனர் இருவரும்!
“ஏன் மகி.. பேசாம.. அந்த இன்னொரு பிளாட்டை வித்துட்டு நம்ம காசுலேயே லோன் எதுவும் போடாம ஆரம்பிக்கலாமே?” என்றான் ராஜு.
“இல்லங்க. லோன் போட்டு பிசினெஸ் பண்ணினா தான் நமக்கு கமிட்மென்ட் இருக்கும்.
அதோட நிறைய அரசாங்க சலுகைகள் கிடைக்கும்!
அதுவும் அவர் சொன்னாருல்ல.. விமன் லெட் பிசினஸ்களுக்கு(Women Lead Business) அரசாங்க சலுகைகள் நிறைய!
இப்போ நீங்களும் நானும் இந்த தொழிலில் பார்ட்னர்ஸ்!
என்னோடது அதிக சதவீதம் அறுபது பர்சன்ட்!
உங்களோடது நாப்பது! பெண்கள் தொழில்முனைவோருக்கு கிடைக்கும் அதிக சலுகைகள பெற!
அதுவும் இல்லாம இது அம்மாச்சியோட ஆசையும் கூட!
தனியா உங்க பேர்ல மட்டும் இருந்தா, உங்க உடன் பிறப்புகளால உங்களுக்கு தொல்லைகள் ஏற்படும் என்று!”
“அதுவும் சரிதான்” என்று ஒத்துக் கொண்டான் ராஜு.
—–
வனிதா அறிந்தவரை, மகி லோனுக்காக அலைந்து கொண்டிருப்பதாக தெரிந்தாள்!
ஆனால் என்றைக்கோ ஒரு நாள் மகி கை மாறு எதிர்பார்க்காமல் செய்த உதவி, இன்று திரும்பி வந்து உதவியது!
அவளின் பிரன்ட் மாமியின் கணவர், பாங்க் ஆபிசர்! அவர் சம்மந்தியும் கூட பாங்கில் நல்ல போஸ்டிங்கில் இருந்தவர் தான்!
மகி லோனுக்கு அலைந்து கொண்டிருப்பதைப் பற்றி மாமி கணவரிடம் சொல்ல, அவர் சம்மந்தியிடம் சொல்ல,
என்றைக்கும் எந்த உதவியும் சிபாரிசும் கேட்டு வாங்காத மனிதன் கேட்டு விட்டதால்,
அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த வனிதா வேலை செய்யும் பாங்கில் லோன் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது!
மேனேஜர் வருகைக்காக, மகி காலையிலேயே போய் காத்திருக்க, உள்ளே வந்த வனிதா அவளை இகழ்ச்சியுடன் பார்த்து சென்றாள்.
“ஓ.. நீ எங்க பாங்க்குக்கு லோன் கேட்டு வந்திருக்கியா?
இரு.. உனக்கு எப்படி கிடைக்குதுன்னு பார்க்கிறேன்!” என்று கருவியபடி அவளையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.
மேனேஜர் உள்ளே வந்தவர், வனிதாவை அழைத்து,
“வெளியே ஒரு மகிழினின்னு ஒரு மேடம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.
அவங்கள் உள்ளே வர சொல்லுங்க. அப்படியே பொன்னி அம்மா கிட்ட ரெண்டு காபி கொடுத்து விடுங்க”. என்றார்.
“சார். பொன்னி லீவு.” வனிதா இழுக்க..
“சரி.. எப்படியாவது அரேன்ஜ் பண்ணுங்க” என்று சொல்லி விட்டார் அவர்.
வனிதா பார்த்தாள். எல்லோரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க,
இவள் இருக்கும் அந்த என்கொயரி டேபிளில் தான் ஆட்கள் இல்லை!
எனவே வேறு ஆள் இல்லாததால் அவளே பக்கத்து கடைக்கு போன் போட்டு காபி ஆர்டர் பண்ணி, மகிக்கு எடுத்து செல்ல வேண்டியது ஆகி விட்டது!
கொடுத்து விட்டு அங்கேயே நின்றாள் வனிதா.
“ரொம்ப தாங்க்ஸ் வனிதா.
நீங்க உங்க ஒர்க்கை கணிடின்யு பண்ணுங்க”. என்று சொல்லி அவளை வெளியே அனுப்பி விட்டார் அவர்.
“காபி எடுத்துக்கங்க மகிழினி” என்றவர்,
“ம்ம் அப்ப்புறம் சொல்லுங்க . உங்களுக்கு எப்படி கிருஷ்ணன் சாரை தெரியும்?
அவரே சொன்ன பின்னே, உங்களுக்கு நாங்க லோன் கொடுக்காம இருக்க முடியுமா?
எங்க ஃபுல் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் இருக்கும்!” என்றார் அவர் மேலும்!
error: Content is protected !!