ரெண்டும் ஒரு ஊர்தானே என்று என்கிட்ட கேட்டாங்க ஒருமுறை!
நான் ஜாதக பரிவர்த்தனை விஷயமா ஒரு வாட்டி அவங்க கிட்ட பேசியிருக்கேன்! அதனால அவங்க சொல்றத எல்லாம் எடுத்துக்க வேண்டாம்” என்றார் பாலு பெரியப்பா!
“ஆமா ரொம்ப தான் மாமியார் சொல்ல தட்டாம நடக்கிறவ தான்” என்று ப்ரியாவை மனதுள் திட்டியபடி,
“இப்ப என்ன ராஜுவை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கிடுவான்னு சொல்லுறியா?
அப்படி எம்மவன் எங்க போய் இருந்தாலும் சரி! நல்லாயிருந்தா போதும் எனக்கு!
எனக்கு தேவை அவனுக்கு எப்படியாவது கல்யாணம் ஆகணும்!” என்று சொல்லி அந்த பேச்சுக்கு என்ட் கார்ட் போட்டு விட்டார் கமலா.
“எப்படியாவது அவனுக்கு கல்யாணம்னு ஒண்ணு ஆனா சரிதான்” என்றார் அவர் மேலும்!
இது வேலைக்கு ஆக வில்லை என்பதால், ராமுவே கமலா அம்மாவிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, மகியின் வீட்டு விலாசம் வாங்கிக் கொண்டு மகியை பார்க்க சென்றான்!
நேரே அவள் வீட்டுக்கு போகாமல், கும்பகோணத்தில் அவள் வேலை செய்யும் கடைக்கு தன் நண்பனோடு ஒரு முறை சென்றிருந்தான் ராமு!
அங்கே சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த மகியைப் பார்த்தான்.
அப்போது இருவர், பார்க்க மெக்கானிக் போல இருந்த இருவர் வந்து அவளிடம் ஸ்பேர்ஸ் வாங்கினார்கள்.
வாங்கும் போது ஒருத்தன் சொன்னான்,
“என்ன மகி, உன் அண்ணனோட ஸ்ப்ளண்டர் பைக்கை நீயே கழட்டி சர்வீஸ் பண்ணிட்டியாமே? எங்க பொழப்புல கைய வச்சுடாத தாயி!” என்றான் ஒருவன் கிண்டலாக!
என்ன? பைக் சர்வீசே பண்ணத் தெரியுமா அதிர்ந்த ராமுவை, தன் பதிலால் மேலும் அதிர வைத்தாள் மகி!
“தன் கையே தனக்குதவி!” என்றாள் சிரித்துக் கொண்டே!
“என்னோட இந்த கைக்கு, ஸ்பேனரைப் பிடித்து சர்வீஸ் பண்ணவும் தெரியும், விதவிதமா சிக்கன் சமைக்கவும் தெரியும், சிக்கு கோலம் போடவும் தெரியும்!” என்றாள் பெருமையாக!
என்ன? தன் கையே தனக்குதவியா?
அவள் கை ஸ்பேனரும் பிடிக்கும் சிக்கு கோலமும் போடுமா?
இப்படி ஒரு திறமையான, ஸெல்ப் டிப்பன்டன்ட் ஆன ஆளு, நம்ம ராஜுவுக்கு.. அய்யோ அது ரொம்ப தப்பாச்சே!
ஏற்கனவே, அவன் சொல்லிட்டு இருக்கான்.
கல்யாணம் பண்ணிட்டு விசாவை கேன்சல் பண்ணிட்டு இங்க வந்து ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஆரம்பிக்கணும்னு!
இப்போ பொண்டாட்டி வேற அதே லைனில் ஆர்வமாக திறமையாக இருந்து விட்டால், விசாவை கேன்சல் பண்ணிட்டு உடனேயே ஊரோடு வந்துடுவான்!
இங்க வந்த பின், அதுவும் இது மாதிரி விவரமான பொண்ணை கல்யாணமும் பண்ணி விட்டான் என்றால், நம்ம பொழைப்பு என்னாவது?
அதில் மண் தான் விழும்!
இத்தனை நாளா ஒரு வேலைக்கும் போகாம, நோகாம சலவை சட்டை போட்டுக் கொண்டு, காரில், புல்லட்டில் ராஜா மாதிரி வலம் வந்து விட்டு, இப்போது எல்லாத்தையும் அவன்கிட்ட தூக்கி கொடுக்கனுமா?
இதுல நான் வேற, அவன் அனுப்பின பணத்தில் எல்லாம், பிளாட்கள் வாங்கிப் போட்டுருக்கேன்!
எல்லாமே என் பேர்ல கொஞ்சம், என் பொண்டாட்டி பேர்ல கொஞ்சம்!
இந்த ப்ரியாவுக்கு அப்பப்ப எலும்பு துண்டு மாதிரி சில ஆயிரம் பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி விட்டு!
அவன் திரும்ப ஊருக்கு வந்து ஒரு வேளை கணக்கு கேட்டா?
எல்லாத்தையும் அவன் பேருக்கு மாத்தி கொடுன்னு கேட்டா?
என்ன பண்றது? இந்த அம்மா வேற அவன் பக்கம் தான் நிக்கும்!
வீட்டை மட்டும் அவனிடம் பவர் எழுதி வாங்கி, சேப்டி பண்ணியாச்சு! ஆனா மத்தது எல்லாம்!
முதல்ல என்னால இனி இன்னொருத்தன் கிட்ட கையை கட்டி வேலைக்கு போக முடியுமா?
இல்ல.. இந்த கல்யாணத்தை எப்படியாவது தட்டி விட்டுடனும்!
அப்புறம் அவனை ஊருக்கு அனுப்பிட்டு, நமக்கு தோதா எதாச்சும் பொண்ணு கிடைச்சா பண்ணி வைப்போம்!
அவனுக்கு கல்யாண யோகம் இருந்தா, அப்படி ஒரு பொண்ணு என் கண்ணுல சிக்கி, அவன் கல்யாணம் நடக்கட்டும்!
இல்லைனா.. இல்ல தான்!
நான் என்ன பண்றது?
இப்பவே அவனுக்கு முப்பது வயசாகிடுச்சு.
இன்னும் ரெண்டு வாட்டி ஊருக்கு போய் வந்தான்னா, இன்னும் நாலு வயசு கூடிடும்!
அப்புறம் நான் என்ன பண்ண? வயசு கூட இருக்குன்னு பொண்ணு தர மாட்டேங்கிறாங்கன்னு சொல்லி அம்மா வாயை அடச்சிடலாம்!
அதுக்கப்புறம் என்ன, அண்ணன் குடும்பத்தை, அக்கா குடும்பத்தை அவன் தன் குடும்பமா நினைச்சு மீதி லைபை அவன் ஓட்ட வேண்டியது தான்!
என்று கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், துளியும் பாசம் இல்லாமல், நன்றியும் இல்லாமல், எல்லாவற்றுக்கும் மேலே தன்னை கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவனுக்கு குறைஞ்ச பட்சமாக கூட நேர்மையாக இல்லாமல் யோசித்தான் ராமு!
அம்மாவின் வற்புறுத்தல் மற்றும் ராஜுவின் ஆசைக்காக வேறு வழியின்றி பெண் பார்க்க சென்றான் குடும்பத்துடன்!
வரும் போதே ப்ரியாவிடமும் வனிதாவிடமும் சொல்லி தான் கூட்டி வந்திருந்தான்!
எப்படியாவாது, எதாச்சும் விஷமமாக பேசி, பெண் வீட்டாரைக் கோபப் படுத்த சொல்லியிருந்தான் இருவரிடமும்!
பிரியா எல்லாம் அதில் பிஹெச்டி வாங்கியவள்!
முழுக்க முழுக்க பேட் வைப்ரேசன்களோடு இருந்த குடும்பத்தோடும், வழி முழுக்க பிரார்த்தனை செய்து கொண்டே வந்த அம்மாவுடனும் மகியின் அண்ணன் மகேந்திரன் வீட்டினுள் நுழைந்தான் ராஜு.
வீட்டு முன்புற அறையொன்றின் ஜன்னல் வழியே மகியும் அவனை ஆசையாக பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் கண்களில் மின்னல்!
அவளைப் பார்த்து புன்னகைக்க, அவளிடம் வெட்கப் புன்னகை!
சட்டென்று தலையைக் குனிந்து கொண்டு விட்டாள் மகி!
அதற்கு மேல் எவ்வளவு நேரம் செருப்பு கழற்றுவது போல அங்கேயே நின்று கொண்டிருப்பது என்று உள்ளே நுழைந்தான் ராஜு!
அவர்களை வரவேற்றனர் மகேந்திரனும், பரமேஸ்வரி கங்காவும்!
உள்ளே நுழைந்து அனைவரும் உட்கார்ந்தவுடனேயே “ம்ம்..ஆரம்பியுங்கள்’ என்று மனைவிக்கும் அக்காவிற்கும் சிக்னல் கொடுத்தான் ராமு!