Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedநேற்று பார்த்த நிலா முகம்

நேற்று பார்த்த நிலா முகம் – 5

கல்யாணப்  பேச்சு வார்த்தை, குத்தல் பேச்சில் ஆரம்பித்து, நக்கல் பேச்சில் நடந்து வந்து, வாய் சண்டையில் எண்டு கார்ட் போட்டுக் கொள்ள தயார் ஆனது!

“என்ன தம்பி..எங்க பொண்ணைப் பிடிச்சுருக்கா?” என்றார் அன்னம் அத்தை ராஜுவிடம்.

அவனை முந்திக் கொண்டு பதில் சொன்னார் கமலா!

“பிடிக்காமலா இங்க நிச்சயம் பண்ண வந்திருக்கான்?”



Advertisement

“இல்ல.. அத்தை ராஜு, இப்ப தானே பொண்ணை நேர்ல பார்க்கிறாப்ல!

என்ன தான் போட்டோவில் பார்த்திருந்தாலும், நேர்ல பார்க்கிறப்போ வேற பீல் தானே இருக்கும்!

அதான் அத்தை பொண்ணோட அத்தையும் கேக்குறாங்க” என்றாள் வனிதா.

Advertisement

“அப்படி சொல்லு வனிதா, இப்ப எல்லாம் தான் போன்ல நல்லா பில்டர் போட்டு எடுத்துடறாங்க!

Advertisement

போட்டோல வேற மாதிரி இருக்காங்க. நேர்ல பார்த்தா சுமாரா தான் இருக்காங்க!

நீ சொல்றதும் சரி தான்!” அவளுக்கு ஒத்து ஊதினாள் ப்ரியா.

“அதெல்லாம் ராஜு தம்பி, மகியோட போன்ல வீடியோ காலில் பேசிட்டாப்ல! பொண்ணு கிட்ட பேசி

Advertisement

அவளை பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் தானே எல்லா ஏற்பாடும் பண்ணினது!” என்ற பாலு தாத்தா,

“அப்புறம் என்னப்பா மகேந்திரா, நாம மேற்கொண்டு பேசி விடலாமா?” என்றார் தாத்தா

“மாமா, அது தான் நான் பொண்ணு வீட்டுல பிரியப்பட்டத செய்யட்டும்.

கல்யாணத்தைக் கூட சிம்ப்ளா சுவாமிமலையில் வைத்துக் கொள்ளலாம்னு சொல்லியிருந்தேனே!” என்றார் கமலா இப்பவும் முந்திக் கொண்டு!

எங்கே மூத்தப் பொண்ணும், பையனும் சபையில் வச்சு அதை செய்யுங்க, இத செய்யுங்க என்று சொல்லி பிரச்சினைப் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்!

“உங்கம்மா எவ்வளவு விவரம் பார்த்தீங்களா அண்ணி! எங்க நாம எதாச்சும் கேட்டு வைப்போமோன்னு முந்திக்கிறதை!” என்று ப்ரியா காதில் கிசுகிசுப்பாய் சொன்னாள் வனிதா.

“எனக்கு பொண்ணு என் பையனை நல்லா அனுசரிச்சு நடந்தா போதும்! வேற எதுவும் முக்கியமில்லை!

அவன் சந்தோசம், நிம்மதி தான் எனக்கு முக்கியம்” என்றார் கமலா மேலும்.

“அதெல்லாம் எங்க பொண்ணு சொக்கத் தங்கம்!”

“உங்க பையனை மட்டுமில்ல, உங்க வீட்டுல எல்லாத்தையும் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் இப்படி எல்லோரையும் அனுசரிச்சு நடந்துப்பா” என்றார் அன்னம்.

“ஐஸ் வச்சும் நடந்துப்பான்னு சொல்லுங்க” என்றாள் வனிதா கிண்டலாக சிரித்துக் கொண்டே!

“பாருங்க அவங்களுக்கு கொடுத்த காபி டம்ளரை!

மாப்பிள்ளை, அவங்க அண்ணன், அக்கா எல்லோருக்கும் பெரிய டம்ளர்ல காபி! இதோ எனக்கு பாருங்க சின்ன டம்ளர்ல காபி!” என்று ஜோக்கடிப்பது போல நக்கலடித்தாள் வனிதா!

அவள் தான் வேண்டுமென்றே மகி காபியை நீட்டிய போது, அந்த சிறிய டம்ளரை எடுத்துக் கொண்டதே!

“சரிப்பா. அடுத்து பேச வேண்டியதை பேசிடலாம்” என்றார் பாலு தாத்தா காரியத்தில் கண்ணாக!

“ஆமா தாத்தா, சுவாமிமலையில கல்யாணம் முடிச்சுட்டு, நேரே இங்க கும்பகோணத்தில் ஒரு மினி ஹாலில் ரிசப்சன் மாதிரி வைத்து சாப்பாடு போட்டுடலாம்” என்றான் மகேந்திரன்.

அந்த ஹால், மகியின் கடை ஓனர் குமரேசனின் கண்ட்ரோலில் இருப்பது! அவர்களுக்கு ப்ரீயாக கிடைக்கும் என்ற கால்குலேசனில்!

“இல்லப்பா. எல்லோரும் கல்யாணம் முடிஞ்ச பின்னே அப்படி அப்படியே கிளம்ப தான் பார்ப்பாங்க! சாப்பாட்டுக்குன்னு இங்க வர மாட்டாங்க.

அதனால அங்கேயே ஒரு மினி ஹால் பார்க்கணும். அதெல்லாம் நான் பார்த்துகிறேன். நான் வரும்போதே நாலு தேதிகள் குறிச்சுட்டு வந்திருக்கேன்.

பொண்ணு வீட்டுக்கும் பொண்ணுக்கும் தோதுப் படுற நாளில் முகூர்த்தம் வச்சுக்கலாம்”

“அதுக்கு முன்னாடி, இன்னொரு முக்கியமான விசயம் இருக்கே பெரியப்பா!” என்றாள் ப்ரியா.

“அப்படி என்ன விஷயம் சொல்லும்மா”

“எங்க வீட்டுல நடக்கப் போற கடைசி கல்யாணம். அதுவும் இல்லாம எங்களுக்கு எல்லாமே எங்க தம்பி தான்!

அவன் சந்தோசம் நிம்மதி எங்களுக்கு ரொம்ப முக்கியம்! அதனால..”

“அதனால என்ன? சொல்லும்மா”

“ஜாதகம் நல்லா பொருந்தியிருக்கானு முதல்ல நல்லா பார்க்கணும்!” என்றாள் ப்ரியா.

“என்னாடி இப்படி கேட்டுட்ட? அதுவும் இப்ப வந்து!

அதெல்லாம் முதல்ல ஜாதகம் பார்த்து நல்லா பொருந்தியிருக்கவும் தான் நான் மேற்கொண்டு பேச வந்ததே” என்றார் கமலா அம்மா.

“ஆமாங்க.. உங்கம்மா முதல்லயே அதெல்லாம் பார்த்து நல்லா பொருந்தியிருக்குன்னு சொல்லிட்டுதான் முதல்ல அவங்க வந்து பார்த்துட்டு,

பொண்ணை எனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.

நான் ஊருக்குப் போய் நல்ல நாள் பார்த்துட்டு, என் வீட்டு ஆளுங்களோட வரேன்.

வந்து அன்னிக்கே நிச்சயம் பண்ணிட வேண்டியது தான், நீங்க தயாரா இருங்கன்னு, வீட்டு பெரிய மனுசி அவ்வளவு உறுதி கொடுத்ததால தான் நாங்க இப்ப நிச்சயம் பண்ணவே ரெடியா இருக்கோம்!

இப்ப என்ன நீங்க வந்து இப்படி பேசுறீங்க” என்றார் பரமேஸ்வரி!

“அதெல்லாம் சரிங்க. அவங்க வயசானவங்க. வெள்ளந்தியானவங்க! அம்மாவுக்கு ரொம்ப வெளிநடப்புகள் தெரியாது!

அப்பா இருந்த வரை எல்லாத்தையும் அவர் பார்த்துகிட்டார். அதுக்கப்புறம் எல்லாமே என் பெரிய தம்பி தான் எங்க வீட்டுல!

அதனால அவங்க சம்மதம் சொல்லிட்டதால மட்டும் நாங்க முடிவு எடுக்க முடியாதுங்க.

நாங்களும் எங்க திருப்திக்கு ஜாதகம் பார்க்கணும்!

நீங்க உங்க பொண்ணோட ஜாதகத்தைக் கொடுங்க.

நாங்களும் ஒரு வாட்டிப் பார்த்துட்டு அப்புறம் முடிவு பண்றோம்!” என்றாள் பிரியா.

“என்னது, ஜாதகம் பார்த்துட்டு அப்புறம் தான் முடிவு பண்ணுவீங்களா?

அதுக்கு ஏங்க எங்க கிட்ட நிச்சயதார்த்தமே பண்ணப் போறதா சொன்னீங்க?” மகேந்திரன் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.

“அதான் சொன்னேனே.. எங்கம்மா ரொம்ப வெள்ளந்தி! அவங்க பேச்சு மட்டும் முடிவு இல்லை எங்க வீட்டுலன்னு!

இந்த காலத்துல என்னென்ன கோல்மால் பண்றாங்க தெரியுமா?

எப்படியாவாது கல்யாணம் பண்ணிடணும்னு பையன் ஜாதகத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு ஜாதகத்தையோ,

இல்ல பொண்ணு ஜாதகத்துக்கு ஏத்த மாதிரி பையன் ஜாதகத்தையோ ஜோசியரை கைக்குள்ள போட்டுக்கிட்டு மாத்தி எழுதி கூட கல்யாணங்கள் நடக்குது அங்கங்க!

அதனால் எங்களோட பேமிலி ஜோசியர்கிட்ட காண்பிச்சு அவர் ஓகே பண்ணினா தான் மேற்கொண்டு பேச முடியும்!

உங்க பொண்ணோட பிறந்த நேரம், தேதி சொல்லுங்க!

நாங்களே ஜாதகம் எழுதிக் கொண்டு பொருத்தம் பார்க்கிறோம்” என்றாள் ப்ரியா.

“என்னம்மா.. இப்படி சொல்றீங்க? உங்கம்மா கொடுத்த உறுதியில, எங்க பொண்ணும் உங்க பையனும் போனில் பேசிக்க கூட ஆரம்பிச்சுட்டாங்க!

இப்ப போய் இப்படி சொல்றீங்க?” கங்கா இந்த விஷயத்தையும் சபையில் சொல்லி வைப்போம், எங்கயாச்சும் பத்திக்கிதான்னு பார்ப்போம் என்று நினைத்து சொன்னாள்!

“அதுக்குள்ளயா? என்னங்க இது? இன்னும் நிச்சயம் பண்ணவே இல்லை! அதுக்குள்ள உங்க பொண்ணை ஏன் எங்க பையனோட பேச விட்டீங்க?

என்ன அவசரம்? எனக்கு இப்ப தான் உங்க மேல கொஞ்சம் சந்தேகமே வருது?

டேய்.. ராமு.. நீ பாட்டுக்கு அம்மா சொல்லிடுச்சுனு எதாச்சும் அவசர முடிவு எடுத்திடாதே!

நிதானமா இரு. முதல்ல நாம ஜாதகம் பார்ப்போம். அப்புறம் தான் மேற்கொண்டு பேசணும் சொல்லிட்டேன்!” என்ற பிரியாவிடம்,  கங்கா

“என்னங்க நீங்க? உங்க பேச்சே சரியில்லையே!

என்னமோ நாங்க எங்க பொண்ணை விட்டு பேச சொல்லி, உங்க பையனை வளைச்சுப் பிடிச்சுட்ட மாதிரி இல்ல இருக்கு நீங்க சொல்றது?” கங்கா கோபமாக பேசுவது போல எடுத்துக் கொடுத்தாள்!

“ஏய்.. கங்கா நீ சும்மாயிரு.. தேவையில்லாம பேசாத! அவங்க அப்படியா சொன்னாங்க?” என்றான் மகேந்திரன்!

“ஆமா..நீயா தப்பு அர்த்தம் பண்ணிக்காதே” என்றார் பரமேஸ்வரி! அவருக்கும் கூட மகி அதற்குள் மாப்பிள்ளையுடன் போனில் பேசியது பிடிக்கவில்லை தான்!

அதனால் ப்ரியா சொன்னது கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அவங்க நிலையில நாம இருந்தா அப்படி தானே சந்தேகப் படுவோம்னு நினைத்தார்.

“நீங்க சும்மா இருங்க அத்தை! நானும் அவங்கள வந்ததுலேர்ந்து பார்த்துகிட்டு தான் இருக்கேன்! நம்ம பாப்பாவை கருப்புன்னு சொல்லி கிண்டல் பண்றதும்,

பேனு இருக்கு ஈர் இருக்குன்னு முகம் சுளிக்கறதும், நம்ம வீட்டுல வசதியில்லன்னு குத்தலா பேசுறதும்னு ஓவரா போயிட்டு இருக்காங்க! நீங்க என்னமோ.. “ கங்கா பேச்சை இழுத்தாள்.

“கொஞ்சம் எல்லோரும் சும்மா இருக்கீங்களா?” என்றார் பாலு தாத்தா.

“அம்மாடி ப்ரியா, ஜாதகம் பொருத்தம் அவங்க மட்டும் பார்க்கல, நானும் தான் பார்த்துருக்கேன்! நல்லா பொருந்தியிருக்குன்னு நான்  தான் கமலா கிட்ட சொன்னதே!

அதுவும் இல்லாம முப்பது வயசுக்கு மேல தான் ரொம்ப டீப்பா ஜாதகம் பார்க்க தேவையில்லை!

அதனால நீ கொஞ்சம் பேசாம இரு. நல்ல விசயத்தை தள்ளிப் போடக் கூடாது!

ஏற்கனவே இந்த காலத்துல பொண்ணு கிடைக்கறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு!

இன்னும் பெட்டர், இன்னும் பெட்டர்ன்னு போயிட்டே இருந்தா பிள்ளையார் மாதிரி ஆத்தங்கரையில உக்காந்துக்க வேண்டியது தான்” என்றார்  பாலு தாத்தா.

“அது எப்படிங்க. கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர்!

வாழ்க்கையில ஒரு வாட்டி தான் நடக்கிற விஷயம்!

அதுல எதுக்கு இப்படி காம்ப்ரமைஸ் ஆகணும்?” என்றான் ராமு இப்போது வாயைத்திறந்து!

“இதில காம்ரமைஸ் ஆகுற அளவு எங்க பொண்ணுகிட்ட என்ன குறை?” என்றான் மகேந்திரன்!

“நிறம் தான்! எங்க பையன் கலருக்கு, உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி ஜோடியா கூட்டிட்டு போனா, என்ன இது? ஏன் இப்படி ஒரு பொண்ணைக் கட்டி வச்சுட்டாங்க இந்த பையனுக்கு?

அக்கா, அண்ணன்லாம் இருந்தும் இந்த பையனுக்கு சரியா பொண்ணு தேடல போல!

ஏனோ தானோன்னு பார்த்து வச்சுட்டாங்கன்னு எங்கள தான் குத்தம் சொல்லுவாங்க” என்றாள் ப்ரியா.

“அப்படி உங்க பையன் அரவிந்த சாமின்னா, ஏன் உங்க பொண்ணைக் கொடுக்கல?

 ஏன் உங்க பெரிய தம்பி அவரோட கொழுந்தியாக்கு கட்டல?

உங்க வீட்டு விஷயம் எனக்கும் தெரியும்! நானும் விசாரிச்சுட்டேன்.

உங்க வீட்டுலயே ரெண்டு பொண்ணை வச்சுகிட்டு நீங்க ஏன் வெளில தேடுனீங்க?” என்றாள் கங்கா!

“இப்ப என்ன? எங்கயும் பொண்ணு கிடைக்காம தான் உங்க வீட்டு ரதிய பொண்ணு கேட்டு வந்தோம்னு சொல்ல வரியா?” என்றாள் ப்ரியா காட்டமாக!

“இல்லம்மா.. அவ கிடக்கா.. ஏதோ பேச தெரியாம பேசுறா.. ஏய். கங்கா.. நீ சும்மாயிரு கொஞ்ச நேரம்!” என்று அவளை அடக்கி விட்டு நிலைமையை சரியாக்க நினைத்தார் மகியின் அத்தை அன்னம்!

“என்னங்க பேசத் தெரியாம பேசுறாங்க! அதெல்லாம் நல்லா தெரிஞ்சு தான் பேசுறாங்க!

அதுக்குள்ள எங்க வீட்டு உள் விவகாரம் வரை தோண்டியெடுத்து மூக்கை நுழைக்கிறாங்க இப்பவே!

டேய்.. ராமு. ஆகுறதுக்கு இல்ல..” என்று அவள் ஆரம்பிக்குமுன்னே,

“என்ன இது சரியா வராது சரியா வராதுன்னு நீங்களே சொல்லிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை பையன் சொல்லட்டும்! அவர் என்ன சின்னப் பிள்ளையா?

நீங்க சொல்லுங்க தம்பி” என்று ராஜுவையும் வம்புக்கு இழுத்தாள் கங்கா.

“எங்க சொல்லுங்க தம்பி. உங்களுக்கு எங்க மகிய பிடிக்கலன்னு அவ முகத்தைப் பார்த்து சொல்லுங்க” என்றாள் கங்கா.

அவன் மட்டும் பிடிச்சிருக்குன்னு சொன்னால் அந்த பிரியா, மகியையும் அவள் குடும்பத்தையும் இன்னும் அசிங்கமாக தான் பேசுவாள்!

ப்ரியாவை சரியாக ஊகித்து தான் கங்கா இதை சொன்னாள்!

மகியைப் பிடிக்கவில்லை, என்று சொன்னாலும் மகி, இனி அவன் முகத்தில் கூட முழிக்க மாட்டாள்.

இனி கொஞ்ச நாட்களுக்கு வேறு கல்யாணப் பேச்சையும் எடுக்க விட மாட்டாள்!

ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க நினைத்தாள் கங்கா!

ராஜு என்ன சொல்லுவான்?

அவன் மகியின் முகத்தை பார்த்தான்!

தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தவள், பேச்சிழந்து அவன் முகத்தையே அவனும் பார்த்தாள்!

அவன் ஒருமுறை மகியின் முகத்தைப் பார்த்து விட்டு மவுனமாக தலை குனிந்து கொண்டு விட்டான்!

ப்ரியாவும், ஒருவேளை அவன் அப்படி பெண்ணைப் பிடித்து இருக்கு என்று சொல்லி விட்டால்,

அடுத்த அவச்சொல்லை பேச தயாராக தான் இருந்தாள். எனவே அவன் மவுனமாக இருக்கவும்,

“என்னடா பேசாம இருக்க? ஓ. பிடிச்சுருக்கா?

நான் நினைச்சேன்! என்னடா இது நிச்சயம் ஆகுறதுக்குள்ள இந்த பொண்ணு இவன் கிட்ட பேச ஆரம்பிச்சுடுச்சே! இது சரியில்லையேன்னு!

இன்னிக்கு வரும்போது கூட போனில் சாட்டிங்கில் பேசிக் கொண்டு தான் வந்திருக்கே இந்த பொண்ணோட! இப்ப தான் வனிதா சொன்னா.

இன்னிக்கு தான் முத முத நேர்ல பார்க்க போறா!

ஆனா அதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உங்க பொண்ணுக்கு, எங்க பையன் கிட்ட பேச?

எங்க நாங்க எதாச்சும் தடை சொல்லிடுவோம்னு, அப்படி சொன்னா கூட பையனை உங்க பக்கம் வளைச்சுக்கலாம்னு தானே உங்க பொண்ண அவனோட பேச விட்டீங்க!

அது சரியா வேலை செஞ்சுடுச்சு! இது வரை ராம லட்சுமணன் மாதிரி அண்ணன் சொல்லைத் தட்டாத என்னோட தம்பி, இன்னிக்கு அண்ணன் கிட்ட கலந்துக்காம பெரிய முடிவை எடுக்குற அளவு கொண்டு வந்துட்டீங்க!

கழுத்துல இன்னும் தாலி ஏறல! அதுக்குள்ள பையனை வளைச்சுப் போட்டுட்டாங்க!

டேய் ராமு! எழுந்திருடா! இனி அவனுக்கு அண்ணன் அக்கா எல்லாம் தேவையில்ல!

அவனே பார்த்துப்பான்! அது தான் மச்சான் இருக்கான்!

அவன் பார்த்துப்பான்! நீ கிளம்பு என்றாள் ராமுவைப் பார்த்து!”

“கொஞ்சம் நில்லுங்க. எங்கள் இவ்வளவு தூரம் கேவலமா நினைக்கிற உங்க குடும்பத்துல இனியும் எங்க பொண்ணைக் கட்டிக் கொடுத்தா, அப்புறம் நீங்க சொன்ன இந்த அபாண்டம் எல்லாம் நிஜமாகிடும்!

அதனால ப்ளீஸ் கிளம்புங்க எல்லோரும்” என்றான் மகேந்திரன்.

“டேய்..மகேந்திரா? என்னடா சொல்ற?” என்ற பரமேஸ்வரியிடம்,

“அம்மா.. நீ சும்மா இரு. நம்ம மகியை இவங்க வீட்டுல கட்டிக் கொடுத்துட்டு, மாப்பிள்ளை பாட்டுக்கு வேலைக்கு வெளிநாட்டுக்கு கிளம்பி போய்டுவான்.

இங்க மகி இவங்க கிட்ட தினம் போராடிட்டு இருக்க வேண்டியிருக்கும்!

அதனால வேண்டாம்மா, நமக்கு இந்த சம்பந்தம்” என்றான் மகேந்திரன் முடிவாக!

“ஆமா. பெரிய உலக அழகி பெத்து வச்சுருக்காங்க! இவங்க வீட்டுல வந்து  அப்படியே லைன் கட்டி நிக்கப் போறாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க!

டேய்.. ராஜு விடுடா.  என்ன இப்போ? நீ போன்ல தானே பேசின? விடு.

இந்த கருப்பிக்கே வேற மாப்பிள்ளை கிடைக்கும் போது உனக்கென்னடா குறைச்சல்!

வா. நான் பார்க்கிறேன் நல்ல பொண்ணா!” என்று ராஜுவைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்றாள் ப்ரியா.

அவன் திரும்பி திரும்பி மகி முகத்தையே பார்த்துக் கொண்டு வெளியேறினான்!

போகும் அவனை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மகி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!