Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 9

கொடுங்கனவு கண்டது போல் துள்ளி விழும் குழந்தையாக கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள் லக்ஷ்மி. எங்கோ வெறித்த போதிலும் தன்னையும் அறியாமல் வாத்சல்யனின் கரம் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டது.

அவனின் வேர்த்து போயிருந்த திருதிருத்த அதிர்ச்சியான முகம்.. அதே கனவு அவனுக்கும் வந்திருக்க கூடும் என்று சொல்லாமலேயே உணர்த்திவிட்டது..

சில கணங்களாய் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

முடிவெடுக்கும் உரிமை உங்கள் கையில் எனும் போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.



Advertisement

மனசாட்சி உள்ளவர்கள்.. மனிதாபிமானம் மிக்கவர்கள் நிச்சயம் அப்படி ஒரு முடிவெடுக்க மாட்டார்கள்.

என்னடா இது தொந்தரவு..! குழந்தை இல்லாத போது கூட நிம்மதியாக வாழ்வதாக தோன்றியது.! தேவையில்லாத கனவு வரம் அசரீரி என்ற பெயரில் உள்ளே நுழைந்து.. தங்கள் சந்தோஷத்தையே குலைத்து விட்டதாக நொந்து போனார்கள்..

“இப்போ என்ன பண்றது வாத்சா..?”

Advertisement

சுருங்கிய புருவங்களோடு அவள் பக்கம் திரும்பினான் வாத்சல்யன்.

Advertisement

“என்ன பண்றதுன்னா..? வாட் யூ மீன்..?” அவன் கேள்வியில் சற்று கடுமை எட்டிப் பார்த்தது.

“நீங்க நினைக்கற மாதிரி நான் மீன் பண்ணல.. ஒரே பதட்டமா இருக்கு..! என்ன பண்றதுன்னு புரியல..”

“ஹேய் அம்மு.. ரிலாக்ஸ்..! நாம எதுவுமே பண்ண போறதில்ல.. எப்பவும் போல நம்ம வேலையை பார்க்க போறோம் புரியுதா..?”

Advertisement

“ஆமா அதுதான் கரெக்ட்.!” என நுரையீரலை அடைத்திருந்த அவ்வளவு சுவாசக் காற்றையும் இதழ்க்குவித்து வெளியேற்றினாள் சந்தான லஷ்மி.

“போ ஆபீஸ் கிளம்பு..!” என அவள் நெற்றியில் முத்தமிட்டான் வாத்சல்யன்.

மௌனமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள் லக்ஷ்மி.

கீழே இறங்கி வந்தபோது.. “என்னக்கா இன்னைக்கு நல்ல தூக்கமோ..! கொடுத்து வச்சவங்க நீங்க.. எந்த கமிட்மென்ட்டும் இல்லை.. குழந்தையா குட்டியா..? எங்களைப் போல அரக்க பறக்க காலையில எழுந்து ஓடி வந்து வேலைகளை வெட்டி முறிக்க..!” என்றபடியே படு வேகமாய் தேங்காயை துருவிக் கொண்டிருந்தாள் புவனா.

பழைய லஷ்மியாய் இருந்திருந்தால் உடனுக்குடன் பதிலடி கொடுத்திருப்பாள். ஆனால் இன்று அவளிருந்த மனநிலையில் அவள் பேசியது காதில் விழுந்ததா என்று கூட தெரியவில்லை.

தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தவளை உற்றுப் பார்த்தாள் புவனா. “ஆச்சரியமா இருக்குது..! இன்னும் வாயை திறக்க காணோமே..!” என உதட்டை பிதுக்கி புருவங்களை உயர்த்தினாள்.

வழக்கமான தினசரி வாழ்க்கை சத்தமில்லாமல் நகர்கிறது.. ஆனால் எதையோ ஒன்றை இழந்தது போல் தோன்றுகிறதே..! என்னவென இருவருக்குமே புரியவில்லை.

சாப்பாட்டு மேஜையில் கூட கையில் இட்லித் துண்டை வைத்துக் கொண்டு யோசனையோடு அமர்ந்திருந்தாள் லஷ்மி..!

“லக்ஷ்மி..!” அவள் இடது கையின் மீது தன் கை வைத்து அழுத்தினான் வாத்சல்யன்

“ஹான்..!” என்று சுய நினைவுக்கு வந்து திருதிருவென விழிக்க.. “சாப்பிடு..! நேரமாச்சுது.!” என்றான் அவன்.

காரில் ஏறி கதவை சாத்தியதும் பார்வை தன்னிச்சையாக அந்த பக்கம் போக..

“அந்த பாக்காதே சந்தா..! மனுசனோட மனசு ரொம்ப மோசமானது.. வேண்டாம் அந்த குழந்தை வாழட்டும்.” சாலையை பார்த்தபடி சொன்னான் வாத்சல்யன்.

“ஏன் வாத்சா..! ஒருவேளை இப்படி இருந்தா..?” அன்றொரு நாள் இப்படித்தான் தன் கேள்வியை ஆரம்பித்தாள் லஷ்மி.

“என்னடி..?”

“விதிப்படி அந்த குழந்தைக்கு என்ன நடக்கணுமோ அது நடக்கத்தான் போகுது. அசரிரி சொன்ன மாதிரி நாம அந்த குழந்தையோட தலை மேல கைய வச்சு அவளை நமக்கு மகளாகிக்கிட்டா..?”

வாத்சல்யனின் கண்கள் அவளை கூர்ந்தன.

“என்ன சொல்ல வர்ற நீ..?”

“உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறது.. இந்த ஆக்ஷன்லாம் (auction) நடக்குமே..! எப்படியும் அந்த பொருளை விற்கத்தான் போறாங்க.. ஆனா யார் அதிக விலை கொடுத்து ஏலத்துல எடுங்கறாங்களோ..! அவங்களுக்குத்தானே அந்த பொருள் சொந்தமாகும்.”

“ஏலத்துல வாங்கற பொருளும் அந்த குழந்தையும் ஒன்னாடி..?”

“ஐயோ நான் ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன்.”

“அந்த குரல் சொன்னதை நல்லா கேட்டியா நீ..! குழந்தையோட தலையில கை வச்சு நாம வரம் கேட்டாத்தான் அது நமக்கு கிடைக்கும்.. ஐ மீன்.. நாம எதுவுமே கேட்கலைனா நம்ம வாழ்க்கையிலையோ இல்ல அந்த பாப்பாவோட ஆயுட்காலத்துலயோ எந்த மாற்றமும் வரப்போறதில்லை.”

“அப்படின்னா..! நமக்கு வேண்டியதை கேட்கலைன்னா நம்ம வாழ்க்கையில எதுவுமே மாறாது அப்படித்தானே வாத்சா.!” சோகமாக கேட்டாள்‌ லஷ்மி.

“அம்மு..! நீ ரொம்ப யோசிக்கற..! கண்டிப்பா நமக்கு நல்லது நடக்கும். நாம யாருக்கும் எந்த தீங்கும் செய்யல. கடவுள் நம்மள சோதிப்பார்.. ஆனா நிச்சயமா கைவிட மாட்டார்.”

“ஹாஹா..! எத்தனை வருஷமா சோதிக்கறார். இன்னுமா போர் அடிக்கலை அவருக்கு.. எனக்குத்தான் சலிச்சு போகுது. முடியல வாத்சா.!” உதட்டில் சிரிப்பும் குரலில் சோகமும்.

“சதா இந்த விஷயத்தைப் பத்தியே யோசிச்சுக்கிட்டே இருந்தா அப்படித்தான்.. நினைக்கவும், செய்யவும் வாழ்க்கையில வேற எதுவுமே இல்லையா உனக்கு..?”

“அதானே! உங்களையும் என்னையும் தவிர உருப்படியா யோசிக்கறதுக்கு நம்ம வாழ்க்கையில வேற என்ன இருக்குது.?” இப்போதும் அந்த கண்களில் விரக்தி.

“இப்படி விட்டேத்தியா பேசாதடி..! நீ அப்செட்டாகி என் மனசையும் உடைக்கற.. பிளீஸ்.. அதிலிருந்து வெளியே வா சந்தா..!”

ஏறெடுத்து கணவனை பார்த்தாள் லஷ்மி.. அவனுக்காகவேனும் தன்னை சந்தோஷமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைக்கிறாள். அது முடியுமா தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன..

“ம்மாஆஆ.. இஇ..” என மழலையில் ஒரு குரல் எதிர் வீட்டில் கத்தும் போது.. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பி பார்க்காமலிருப்பது முள் பாதையில் நடப்பதை விட கொடுமையாய் இருந்தது.

“பேசாம நாம தனிக் குடித்தனம் போய்டலாமா வாத்சா?”

புருவங்கள் முடிச்சிட அவளை குழப்பமாக பார்த்தான் வாத்சா.. இப்படிப் பேசக்கூடியவள் இல்லையே இவள்.. இந்த பத்து வருட காலத்தில் வராத பிரச்சனைகளா..! ஒரு நாளும் தனியாக போக வேண்டும் என்று சொன்னதில்லை.

“என்னடி ஆச்சு உனக்கு..?”

“பர்மனெண்டா இல்ல..! டெம்ப்ரவரியா கொஞ்ச நாள்.. ஏதாவது ஒரு பிளாட் பார்த்து குடியிருக்கலாம்.. இந்த வீட்டு பக்கம் வரவேண்டாம். அப்புறமா மனசு ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வந்ததும்.”

“நீ அந்த குழந்தைக்கு பயந்து ஓடல சந்தா..! உனக்கு பயந்து ஓடற.. உன் மனசுக்கு பயந்து ஓடற.. உன் எண்ணங்களை மாத்திக்காத வரைக்கும் நீ எங்க போனாலும் அது உன்னை விடாது.”

“நான் என்ன பண்ணட்டும் வாத்சா..?”

“அந்த குழந்தை நல்லபடியா இருக்கா..! அதை நினைச்சு நம்ம சந்தோஷப்படணும். அவ பக்கத்துல போக வேண்டாம்.. நம் ஆசைகள் விபரீதமாக யோசிக்க வைக்கலாம்.”

“என்னால இந்த பிரஷர் தாங்கவே முடியல.! எனக்கு வேற விஷயத்துல கவனம் செலுத்தவே முடியல. மண்டையே உடையற மாதிரி இருக்கு..” லஷ்மி கலங்கினாள்.

“வருத்தப்படாத சந்தா.. நான் ஒன்னு சொல்லுவேன் நீ கேக்கணும்.. மறுக்க கூடாது.!”

“எல்லாம் சரியாகிடும்னு ஃபேக் ஹோப் கொடுக்கறதை தவிர உருப்படியா வேற ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க..!”

“டாக்டர் தான் இன்னொருமுறை முயற்சி பண்ணி பார்க்கலாம்ன்னு சொல்றாங்களே.. நமக்கு எந்த குறையும் இல்லையாம். ரெண்டு பேரும் ஆரோக்கியமா இருக்கோம். மறுபடி ஒருவாட்டி ட்ரை பண்ணி பார்க்கலாமா..?”

“வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கறீங்களா.. திரும்ப ஏமாறனுமா..!”

“நீயே இப்படி நெகட்டிவா பேசினா எப்படி..? நமக்குன்னு ஒரு கடமை வந்துட்டா மத்த விஷயங்கள் மறந்து போகும். இந்த ட்ரீட்மென்ட் குழந்தை.. இதெல்லாம் ஆரம்பிச்சிட்டா அந்தக் கனவு.. பக்கத்து வீட்டு பாப்பா, இதுலருந்து ஈஸியா வெளியே வந்துடலாம். இப்படி யோசிச்சு பாரு..! ஒருவேளை நமக்கு குழந்தை பிறந்துட்டா.. அந்த பாப்பா சேஃப்.. நாமளும் சந்தோஷமா இருக்கலாமே..!”

“ஒரு டவுட் வாத்சா..! ஒருவேளை நான் பிரக்னன்ட் ஆகிட்டா.. இந்த பாப்பா இறந்து போயிடுமா..?”

“ச்சீ..! நாம அந்த குழந்தையோட தலையில கை வச்சு மனசார நமக்கு வேண்டியதை கேட்கற வரைக்கும் அப்படி எதுவும் நடக்காது.. அசரீரி சொல்ற எல்லாமே உண்மையா இருக்கும் பட்சத்துல.. மூணாவதா கனவுல வந்த அந்த வார்த்தைகளும் உண்மையாத்தானே இருக்கணும்.”

“அப்போ மறுபடி ட்ரீட்மென்ட் போகலாம்னு சொல்றீங்களா..?”

“பிளீஸ் சந்தா..! கண்டதையும் யோசிச்சு இப்படி நிம்மதி இல்லாம நீ தவிக்கறதை பார்க்கும்போது.. இன்னும் ஒரே ஒரு வாட்டி முயற்சி பண்ணி பார்க்கலாம்னு தோணுது.!”

சில நிமிடங்களாய் யோசித்துக் கொண்டே இருந்தாள்‌ சந்தான லஷ்மி..

“சரி..! ஆபீஸ்ல மெடிக்கல் லீவ் இப்பவே சொல்லி வச்சுடறேன். இருக்கற வேலையெல்லாம் இந்த ஒரு வாரத்துக்குள்ள முடிக்க பார்க்கறேன்.” நகத்தை கடித்துக் கொண்டு அவள் சொல்ல.. புன்னகையோடு விரலை அவள் வாயிலிருந்து விடுவித்தான் வாத்சா.

“நகத்தை கடிக்காதே..! உன் பழக்கம்தான் உன் குழந்தைக்கு வரும்.!” என்றதும் லேசான புன்முறுவல் அவள் இதழ்களில்.

“அதென்ன ஏன் குழந்தை..? நம்ம குழந்தைன்னு சொல்றது..! இந்த அப்பாக்களே இப்படித்தான்.. பிள்ளைங்க ஏதாவது தப்பு பண்ணினா குறும்பு பண்ணினா.. உன் பிள்ளைன்னு சொல்லி அம்மாவை திட்ட வேண்டியது.. அதே குழந்தைங்க நல்லதா ஏதாவது பண்ணிட்டா.. என் பொண்ணு என் பிள்ளைன்னு பெருமையா மார் தட்டிக்க வேண்டியது..”

“ஹாஹா..!” என சத்தமாக சிரித்து பாரு ட்ரீட்மெண்ட் சொன்னதுமே ஒரு பாசிட்டிவான எண்ணம் மனசுக்குள்ள வந்துடுச்சு.. என்றபடி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் வாத்சல்யன்.

“நீங்க என்னை பொறுமையா ஹேண்டில் பண்றீங்க வாத்சா.. அதுவே சில சமயங்கள்ல எனக்கு கில்ட்டியா ஃபீல் ஆகுது.. நான் உங்களுக்கு சரியான பொண்டாட்டியா இல்லையோன்னு தோணுது.! ஐ திங்க் ஐ டோன்ட் டிஸர்வ் யூ.”

“பைத்தியம்..! வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறிக்கிட்டே இருப்பியா..! இப்பல்லாம் தூங்கும்போது கூட இந்த வாய் மூட மாட்டேங்குது.. என்னென்னவோ பேசிட்டே இருக்க..! எப்படித்தான் உன் வாயை மூடறது.?”

“ஏன் உங்களுக்கு தெரியாதா..?”

“நல்லாத் தெரியுமே..!” என்றவன் கண்கள் குறுகுறுத்து அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.

அடுத்த சில வாரங்களிலேயே செயற்கை கருத்தரிப்புக்கான சிகிச்சை தொடங்கப்பட்டது.

“ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்க வேண்டாம்.. டென்ஷனாக வேண்டாம்.. ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க.. மாடிப்படி ஏறி இறங்காதீங்க..! ஜங்க் ஃபுட் சாப்பிடாதீங்க.. உணவுக் கட்டுப்பாடு இருக்கட்டும்..” என மருத்துவரின் பலவித ஆலோசனைகளுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தாள் லஷ்மி..

“இதுவாச்சும் தங்குமா வாத்சா.?” கண்களில் கலக்கத்தோடு அவள் கேட்க..

“இப்படியெல்லாம் நம்பிக்கை இல்லாம பேசக்கூடாது.. கண்டிப்பா இந்த முறை சக்சஸ் ஆகிடும்.! நீ மனசை போட்டு குழப்பிக்காம ஜாலியா இரு. கொஞ்ச நாளைக்கு நீ கீழே இறங்கி போக வேண்டாம். உனக்கு என்ன வேணுமோ சொல்லு.. நான் கொண்டு வந்து தர்றேன்.
ஆபீஸ் போற சமயங்கள்ல அம்மா கிட்ட சொல்லிட்டு போறேன்..” பொறுமையாக சொன்னான் அவன்.

“உங்கம்மாகிட்டயா..?”

“ஏய்..! குழந்தை வரப்போகுதுன்னு தெரிஞ்சா அவங்க உனக்காக என்ன வேணாலும் செய்வாங்க..! எங்கம்மா ஒன்னும் கெட்டவங்க இல்ல..‌ ஏதோ நமக்கு பிள்ளை இல்லாத ஆதங்கம் அப்படியெல்லாம் பேச வைக்குது அவங்களை..!”

வாத்சாவின் இந்த குணம்தான் சந்தான லஷ்மியை அதிகமாக ஈர்த்த ஒன்று. பெற்ற தாயை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டான். அதே நேரத்தில் தன் மனைவியையும் அவர்கள் முன்னிலையில் கீழிறங்க விடமாட்டான்.

“என்னடி அப்படி பாக்கற..! வேணும்னா உங்க வீட்ல போய் கொஞ்ச நாள் தங்கிட்டு வர்றியா..? மனசு ரிலாக்ஸா இருக்கும். உங்க அம்மா பாத்துப்பாங்களா..?”

“அதெல்லாம் பாத்துப்பாங்க.. ஆனா அங்க வேண்டாம். சக்ஸஸ் ஆகறதுக்குள்ள.. கேள்வி கேட்டு புலம்பித் தள்ளியே என்னை கொன்னுடுவாங்க..!”

“அப்போ அங்க போகவே வேண்டாம்..! என் கூடவே இரு.”

“கிட்ட வாங்க..!”

“என்னடா?” என்றபடியே முகத்தை அவளிடம் கொண்டு வந்தான்‌ வாத்சல்யன்.

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள்‌ சந்தான லஷ்மி.

தொடரும்.

6 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 9

  • Rameeza Sait

    கடவுளே சிகிச்சை முலமா வர்ர இந்த குழந்தையே அவுங்களுக்கு கிடைக்கட்டும்..ஒரு குழந்தைய இறக்க வச்சு அத திருப்பி வாங்கிக்கிற வாழ்க்கை வேண்டாம்…🤧🤧🤧

    Reply
  • Krishnaveni

    வாத்சா சாந்தா ரெண்டு பேரோட இந்த மனபோராட்டம் பார்க்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு 🤧🤧🤧
    இதுல இவங்களுக்குள்ள என்ன ஆக போகுது ன்னு யூகிக்கவே முடியல ஆர்வம் அதிகமாகிட்டே போகுது ரைட்டரே 😍😍😍
    கடவுளே ரெண்டு பேரோட இந்த நம்பிக்கை பொய்த்து போகாம இருக்கனும் 🙏🏼🙏🏼🙏🏼

    Reply
  • Shilaja sankaran

    இப்படியே இவங்களுக்கு குழந்தை தங்கிடனும் சாமி🙏🙏, இன்னொரு குழந்தை இறந்து மறு ஜென்மத்துல வர்ற குழந்தை என்று நினைக்கும் போது அவங்களுக்கு எப்படி வலிக்குதோ அது போல தான் எங்களுக்கும் கஷ்டமாக இருக்கு😢😢🤧
    அருமையான கனவன், மனைவி இவங்க ஆனால், கடவுள் இவங்கள இப்படி சோதிக்கறாரே 😒😒😒

    Reply
  • Divyalakshmi Sugumar

    Nalla padiya ah santha and vatsa ku kuzhandhai pirakkanum 🙏🙏🙏🙏🙏
    Deepthiyum naeed ah aayuloda irukanum ❤️❤️❤️❤️❤️

    Reply
  • Revathy Dhanda

    ஒரு குழந்தை இறந்துபோய் மறுஜென்மம் எடுத்து வருவது வேண்டாம், தீப்தி நீண்ட ஆயுளுடன் நலமா இருக்கனும். ட்ரீட்மெண்ட் மூலமா அவங்களுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கனும் 🙏🙏.
    அடுத்து என்ன நடக்கும் னு ரொம்ப ஆர்வமா இருக்கு writer Ji 😍😍

    Reply
  • Jothi vel

    கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார்….
    நல்லது நடக்கும் வாத்சா சந்தா… ❤️❤️❤️

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!