அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் விறுவிறுவென நடந்துக்கொண்டிருந்தாள் தன்யா. அவளால் இன்று நடந்ததை ஜீரணிக்கவே இயலவில்லை. தன் இடத்திற்கே வந்து ஒருவன் தன்னை கலங்கடித்து சென்றிருப்பது அவளை வெகுவாய் பாதித்திருந்தது. நடந்ததையே நினைத்து நினைத்து வெம்பிக்கொண்டிருந்தாள்.
இரவு மணி ஒன்பதைக்கடந்து சென்றுக்கொண்டிருந்த போதும் அவளால் அன்று நடந்ததைத்தவிர குறிப்பாய் ‘அவனை’த்தவிர வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை.
எப்போதும் இந்நேரத்திற்கு தன் அண்ணன் சுரேந்தருக்கு அழைத்து நாள் முழுக்க நடந்த கதைகளை பேசிவிட்டு, அவன் வாயையும் பிடுங்கிவிட்டே தூங்கச் செல்பவள், இன்று அவன் நினைவுக்கூட இல்லாமல், ஆதியை பற்றியே எண்ணிக்கொண்டிருக்க, மாலத்தீவில் இருந்து சுரேந்தரே அவளுக்கு அழைத்துவிட்டான்.
அழைப்பு ஒலியில் கலைந்தவள், அழைப்பது யாரென்று கூட பாராது, “ஹலோ, தன்யா ஹியர்” என விறைப்பாய் சொல்ல, மறுப்பக்கம், “மேடம், நான் சுரேந்தர்! என் தங்கச்சி இந்நேரம் எப்பவும் எனக்கிட்ட பேசுவா! இன்னைக்கு போன் ஒன்னும் வரலையேன்னு நானே கூப்பிட்டேன்! அவங்கக்கிட்ட பேசலாங்குளா?” என வெகு பணிவாய் கேட்டான் சுரேன்.
சுரேனின் குரலை கேட்டதுமே வேகமாய் நேரத்தை பார்த்தவள், தன் நெற்றியிலே மெலிதாய் அடித்துக்கொண்டாள்.
“சாரிடா! நேரமே பாக்கலை நான்!” தன்யா சிறுது நேரம் முன்வரை இருந்த எரிச்சல் மனநிலை மாற, சிறு சிணுங்கலுடன் சொன்னாள்.
“அண்ணனை மறக்குற அளவுக்கு மேடம் பிஸியோ இன்னைக்கு?”
“ப்ச்!! பிஸி ஒன்னும் இல்ல…” என சலித்தவள், “வீடியோ கால் வா!!” என அழைத்துவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
அடுத்த நிமிடமே சுரேன் ‘நேர்முக அழைப்பில்’ வந்திருக்க, அண்ணனின் முகம் பார்த்தவள் மலர்ந்து சிரித்தாள்.
சுரேன், “எனக்கு கால் பண்றதை கூட மறக்குற அளவுக்கு என்ன நடந்துச்சு… வரிசையா சொல்லு பாக்கலாம்” என்றான்.
மலர்ந்த முகம் சட்டென மாற, “ஒன்னும் நடக்கலைன்னா விடேன்” என்றாள் எரிச்சலுடன்.
அவளது முகத்திருப்பலை கண்டுக்கொள்ளாதவன், “பிரகாஷ் ரொம்ப வழிஞ்சுட்டானோ?” என சிரிப்பை அடக்கி கேட்க, அவன் கேட்ட பின்னரே, காலையில் பிறந்தநாள் விழாவில் நடந்தது நினைவு வந்தது தன்யாவுக்கு.
“ஐயோ! ஆமா!! நான் அப்பா மேல செம்ம கோவத்துல இருக்கேன்! பார்ட்டிக்கு போயே ஆகணும், அது இதுன்னு சொல்லி என்னை அனுப்பிட்டு… அங்க போனா, அந்த பிரகாஷ் என் பின்னாலயே சுத்துறான்! அப்புறம் தான் தெரிஞ்சுது, இதெல்லாம் அவர் பண்ற வேலைன்னு!” என்றவள், “எத்தனை முறை தான் சொல்றது, எனக்கு மாப்பிளை பார்க்காதீங்க!! கல்யாணம் கன்றாவின்னு ஒன்னும் தேவை இல்லன்னு!!” என கத்தினாள்.
“ப்ச்! டென்ஷன் ஆகாத தன்யா! அப்பா இவ்வளோ நாளும் சும்மா தானே இருந்தாரு! இப்போ திடீர்ன்னு ஒரு வரன் வந்துருக்குன்னு கன்சிடர் பண்றாருன்னா, அவர் பக்கமும் என்ன காரணம் இருக்கும்ன்னு யோசிக்கனும்ல நீ?” என்றான் இரு தரப்புக்கும் மத்தியமாய் நின்று.
“அதானே நீ அப்பா புள்ள தானே? அப்போ அவருக்கு சப்போர்ட்டா தான் பேசுவ!” சுரேனின் முகத்தை பார்க்காது எதிரே இருக்கும் சுவரை கோவமாய் வெறித்தாள் தன்யா.
“தன்யா!! தன்யா!! இங்க பாரு!!” கையசைத்து அவன் அழைக்க, “கேக்குது!! சொல்றதை சொல்லு” என்றாள் பார்வையை மாற்றாது!
அவள் பிடிவாதம் உணர்ந்தவனாய் அவளை மேலும் வற்ப்புறுத்தாது, “நம்ம கம்பெனிக்கும் வைதீஸ்வரன் அங்கிள் கம்பெனிக்கும் ரொம்ப வருஷமாவே போட்டி இருந்துட்டு இருக்கு, உனக்கு தெரியும் தானே?” என்றான் மென்மையாய்.
அவள் ‘ஆம்’ என தலையசைக்க, “உன்னை அந்த பிரகாஷ் எங்கயோ பார்த்துருப்பான் போல! உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா அவன் சொல்ல, தொழில் போட்டியை கூட மறந்துட்டு அப்பாக்கிட்ட வந்து உன்னை பொண்ணு கேட்டுருக்காரு வைதீஸ்வரன் அங்கிள்” என சொல்ல, அவள் சீற்றம் தான் ஏறியது.
“அதுக்கு? நான் என்ன பொருளா? என்னை குடுத்து இத்தனை வருஷ போட்டியை முடிவுக்கு கொண்டு வர?” என எகிற ஆரம்பித்தவளை சிரமப்பட்டு அடக்கியவன், “முழுசா கேளு தன்யா! வேற யாராவது பொண்ணு கேட்டுருந்தா இப்போதைக்கு கல்யாணம் செய்யுற விருப்பம் இல்லன்னு அப்பா எப்பவும் போல சொல்லி அனுப்பிருப்பாரு! ஆனா, வைதீஸ்வரன் அங்கிள் கேட்கும்போது, இவர் உடனே மறுத்து சொன்னா, தொழில் போட்டியை மனசுல வச்சுட்டு தான் இப்படி சொல்றோம்ன்னு தப்பா நினைப்பாரு… இல்லையா?” என்றான்.
அவன் அடுத்து பேசும் முன்னே, “அதுக்கு?” என ஆரம்பித்தவளை கையமட்டியவன், “அதுக்காக தான், என் பொண்ணுக்கு இஷ்டம்ன்னா மட்டும் மேற்கொண்டு பேசலாம்ன்னு சொல்லிருக்காரு! நீ என்ன சொல்லுவன்னு அவருக்கு தெரியாதா?” என்றான்.
பின், “அதான் உன்னை மீட் பண்ணனும்ன்னு பிரகாஷ் சொல்லவும், இந்த பர்த்டே பார்ட்டிக்கு உன்னை அனுப்பினாரு! பப்ளிக் பிளேஸ்! நூறு பேரு முன்னாடி, அவனால உன்னை சங்கப்படுத்துற மாறி நடந்துக்க முடியாதுன்னு அவருக்கு நம்பிக்கை” என சொல்லி முடிக்க, அப்படியே அமைதியானாள் தன்யா.
அவள் மௌனித்த கணத்தை கையில் எடுத்தவன், “அப்பா செய்யுற எல்லாமே உன் நல்லதுக்கு தான்டா!” என்றான் மென்மையிலும் மென்மையாய்.
அவள் முகம் சற்றே மாற்றம் கொள்ள, “உன்னை இன்சல்ட் பண்ற மாறியோ, இல்ல விட்டுக்கொடுத்தோ அவர் எப்பவும் நடந்துக்க மாட்டாரு” என சொல்ல, இறங்கியிருந்த வேதாளம், ‘சர்ர்ர்’ரென உச்சாணி கொம்புக்கு ஏறிக்கொண்டது.
“உனக்கு தெரியுமா? இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு! ஆபிஸ்க்கு ஒருத்தன் வந்தான் பாரு! ஐயோ ஐயோ ஐயோ!!” என தலையில் அடித்துக்கொண்டு சொல்ல, சட்டென்ற அவள் மாறுதலில் திகைத்து போனான் சுரேன்.
“ஹே! என்னாச்சு? எதுக்கு அடிச்சுக்குற?” என அவன் பதற, “அவனை அடிக்க முடியல! அதான் என்னை நானே அடிச்சுக்குறேன்” என்றவள் மீண்டும் மீண்டும் தலையில் அடித்துக்கொண்டாள்.
“ஏய் லூசு! என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு அப்புறம் அடிச்சுக்கோ” என தீவிரமாய் சுரேன் கேட்டதும், ‘காலையில் அவனை முட்டு சந்தில் சந்தித்தது முதல், நேர்முகத்தேர்வில் அவன் செய்த கலாட்டாவில் இருந்து, தந்தையை கண்டதும், அப்படியே தலைகீழாய் நடித்து அவன் வேலை வாங்கியது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்’.
அதில் விட்டுப்போனது, அவன் சொன்ன, ‘ஐ லைக் யூ’ மட்டுமே! ஏனோ அது நினைவை விட்டு இம்மிக்கூட நகராமல் இருந்தும், அவளால் அதை சுரேனிடம் பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை!
அவள் ஆவேசமாய் மூச்சு வாங்க கதை மொத்தத்தையும் சொல்லி முடிக்க, ‘யாருடா அவன் நம்ம ஆபிஸ்க்கே வந்து இவ்வளோ மோசமா பீகேவ் பண்ணது?’ என சினம் எழுந்தாலும், மறுபுறம், வெளியாளாய், அந்த நிகழ்வையும், அப்போது தன்யாவின் பாவனை எப்படி இருந்திருக்கும்? என்பதையும் எண்ணியவனுக்கு அவனை மீறி உதடுகள் சிரிப்பில் துடிக்க, அதுவரை ‘கூலர்ஸ்’ கொண்டு கண்களை மட்டும் மறைத்திருந்தவன், இப்போது அவசரமாய் ஒரு கைக்குட்டை எடுத்து மூக்கையும் வாயையும் சேர்த்து மறைத்துக்கொண்டான்.
மூச்சு வாங்க, கடுப்புடன் இருந்தவள், சுரேனின் பாவனையை கவனிக்கவில்லை. பார்த்திருந்தால் சாமியாடி இருப்பாள்!
“இந்த அப்பாக்கூட நான் ஏன் இவ்ளோ தகுதியோட இருக்க அவனை செலெக்ட் பண்ணலன்னு ஒரு வார்த்தை கேட்கல! என்க்கிட்ட பேச மாட்டாரு தான்! அதுக்காக ஆபிஸ்ல ஒரு ப்ரோப்ளம்ன்னா கூட என்னை ஒரு வேலையாளா நினைச்சு அங்க என்ன நடந்துச்சுன்னு விசாரிக்கக்கூடாதா?” என பொருமினாள் தன்யா.
“அவர் எதுவும் தெரியாம அவனுக்கு வேலை குடுத்துருக்க மாட்டாருடா” என தந்தைக்கு ஆதரவாய் சொன்னான் சுரேன்.
அதை கணக்கில் எடுக்காதவள், “நீ வெறும் மேனேஜர் தானான்னு என்ன பார்த்து ஒரு லுக் விட்டான் பாரு! அவன் மூஞ்சிலையே நாலு அடி குடுக்கணும் போல இருந்துச்சு! அதைவிட அப்பா அவனை செலெக்ட் பண்ணினதும், என்னை பார்த்து நக்கலா ஒரு சிரிப்பு! இதுல, ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லுங்க மேடம் ன்னு அவ்வளோ எகத்தாளமா கேக்குறான் என்கிட்ட?” என்றாள் அழுபவள் போல முகத்தை சுருக்கிக்கொண்டு.
“அப்பா சிசிடிவி-ல எல்லாத்தையும் பார்த்துட்டு தான் அங்க வந்துருக்காருடா!!!” என்றான் சுரேன்.
“ஹோ! அப்போ முதல்லையே உன் அப்பாக்கிட்ட எல்லாம் பேசி அவர் பக்க நியாயத்தை கேட்டுட்டு தான் எனக்கு கூப்பிட்டுருக்க, அப்படிதானே?” சுரேனை முறைத்துக்கொண்டு அவள் கேட்டதும், உடனே சரண்டர் ஆனான் அவன்.
“இல்ல தன்யா! நீ கால் பண்ணலன்னதும், அப்பாக்கு பேசலாம்ன்னு கூப்பிட்டேன், அப்போதான் அவர் இதெல்லாம் சும்மா லைட்டா சொன்னாரு” என்றான் மழுப்பலாய்.
அவள் ஒன்றும் பேசாமல் முகத்தை சுளிக்க, “விடுடா, இனி அவன் உன்க்கிட்ட தானே வேலை பாக்கணும்? ஏன்டா வேலைக்கு சேர்ந்தோம்ன்னு அவனே அலறிட்டு ஓடுற வரைக்கும் அவனை சும்மா விடாத!” என ஆறுதலாய் சுரேன் சொல்ல, அவனுக்கு எங்கே ஆதியை பற்றி தெரிய போகிறது? தன்யாவையே ‘எதுக்குடா இந்த ஆபிஸ்க்கு வரோம்?’ என அலற வைப்பானே ஒழிய, அவன் அசர மாட்டான் என சுரேனுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
“எனக்கு அவன் செஞ்சது ஒரு பக்கம் இர்ரிடேட்டிங்ன்னா, அப்பா அவன் முன்னாடி என்னை ஒரு ஆளாவே மதிக்காம நடந்துக்கிட்டது இன்னும் டெம்பர் ஏத்துது!” தலையை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டு புலம்பினாள் தன்யா.
“நீ ‘கல்யாணம் பண்ணிக்க சம்மதம்’ன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு! அப்பா பழையபடி மாறிடுவாரு!” என்றான் எதிர்ப்பார்ப்புடன்.
சட்டென அவள் முகம் இருண்டுப்போக, “அப்படி செஞ்சா தான் எனக்கு என் அப்பா திரும்ப கிடைப்பாருன்னா, எனக்கு அவர் உறவே வேண்டாம்” என்றாள் எஃகின் உறுதியோடு.
அவளையே கவலையோடு பார்த்த சுரேன், “பெத்த ரெண்டு புள்ளைல ஒருத்தருக்கு கூட கல்யாணம் பண்ணிப்பார்க்க முடியலன்னு அவர் புலம்பும்போது ரொம்ப வருத்தமா இருக்குடா! எனக்கு தான் எதுவும் அமையாதுன்னு ஆகிடுச்சு! நீயாவது பழசெல்லாம் மறந்துட்டு அப்பா ஆசைக்கு ஓகே சொல்லலாம்ல?” என்றவன் என்ன முயன்றும் வேதனையை முகத்துக்கு வராமல் செய்ய முடியவில்லை.
அவன் முகத்தை இமைக்காது பார்த்தாள் தன்யா. தன் அண்ணனுக்கு என்ன குறைச்சல்? நெடு நெடுவென்ற உயரத்தில் வாட்ட சாட்டமாக, சந்தன நிறத்தில் அழகனாகவே தெரிந்தான். இருப்பினும், அவனுக்கு பெண் பார்க்கும்போதெல்லாம் ‘தடை’ தானாய் வந்து சேர்கிறது.
பலநேரம் பெண் வீட்டிலும், சில நேரம் தங்கள் வீட்டிலும், வெகு சிலதாய் அண்ணன் தரப்பிலும், என ஏதாவது ஒரு தடை!!!
அவனுக்கு குறித்த நேரத்தில் திருமணம் நடந்திருந்தால், இந்நேரம் இரண்டு குழந்தைகள் கூட இருந்திருக்கும்! எல்லாம் அந்த ஒரு நாளால் வீணாய் போனது!! என கடந்த காலத்தில் அவள் சிறிது சிறிதாய் மூழ்க, அதை அறிந்தவன் போல, “ஓய்! என்ன கனவா?” என சிரித்தான் சுரேன்.
“ப்ச்!!” என சலித்தவள், “நீ எப்போ இங்க வர?” என்றாள் எப்போதும் போல!
“இன்னும் கொஞ்ச வேலை தான்டா! அதோட இன்டீரியர் வொர்க்ஸ் கொஞ்சம் இருக்கு! அதையும் முடிச்சுட்டா, திறப்பு விழாவை சிறப்பா நடத்திட்டு, திருப்தியா சென்னை வருவேன்!”
“நீ சென்னைல இருந்து ஒவ்வொரு செங்கல்லா எடுத்துட்டு போயிருந்தாக்கூட இந்நேரம் ஒரு பில்டிங் கட்டிருக்கலாம்டா” என அவனை வாரினாள் தன்யா.
“ஓய்.. என்ன கிண்டலா? இது சாதாரண பில்டிங்கா இருந்தா பரவால்ல… ரெசார்ட்-ம்மா! அதுலையும் ஹனிமூனுக்குன்னே ஸ்பெஷலா ரெடி பண்றோம்! இதுவரைக்கும் யாரும் பண்ணாத ஐடியாஸ் எல்லாம் இம்ப்லீமென்ட் பண்ணணும்! அதும் இல்லாம வெளி நாட்டுல, செய்யுற ஒன்னு ஒண்ணுக்கும் லீகலா பெர்மிஷன் வாங்க வேண்டியதா இருக்கு! வொர்கர்சும் நம்ம ஆளுங்க மாறி நேரம் பாக்காம உழைக்கிறது இல்லை! மணியடிச்சா வீடுன்னு கிளம்பிடுறாங்க!! அப்பா என்னை நம்பி போட்ட காசை நான் பலமடங்கா திருப்பி குடுக்கணும்ல!! சோ, தீயா வேலை செஞ்சுட்டு இருக்கேன்” என அவன் நீட்டமாய் அவன் பேச, வேண்டுமென்றே சத்தமாய் கொட்டாவி விட்டாள் தன்யா.
“ஏன்டா இவ்வளோ பெருசா பேசுற நீ?” என்று வேறு கேட்க, அவளை போலியாய் அடிக்க கை ஓங்கினான் சுரேன். பயப்படுபவள் போல நடித்தவள், “சீக்கிரம் வேலையை முடி” என்றாள் இயல்பாய்.
“இன்னும் அதிகபட்சம் மூணு மாசத்துல முடிச்சுடலாம்” என்றான் சுரேன்.
அடுத்து என்ன பேசலாம் என சுரேன் யோசிக்க, அழைப்பேசியில் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தன்யா, என்ன முயன்றும் முடியாமல் வருத்தமாய் கேட்டே விட்டாள், “என்க்கிட்ட பேசும்போது கூட கூலர்ஸ் போடணுமா?” என்று!!!
அவன் முகம் பாறைப்போல் இறுக, அதை அவளுக்கு காட்டாது குனிந்தவன், “குட் நைட்டா” என்ற சொல்லோடு அழைப்பை வேகமாய் துண்டித்தான்.
அவன் படும் வேதனைக்கு சற்றும் குறையாத வேதனையை சுமந்தபடி, மனதில் வேறு சில அழுத்தங்களும் அவள் அனுமதியின்றி நுழைந்துக்கொள்ள, எப்போதும் போல, அவள் வைத்திருக்கும் ‘மெல்லிசை சிடி’யை இயக்கிவிட்டு அமைதியாய் கண் மூடினாள் தன்யா.
அதில் இருந்து வந்த ‘அக்குரல்’ அவளை அமைதியாய் தாலாட்டி உறக்கத்திற்கு இழுத்துச் சென்றது.
ஆதி அன்று முதல் நாள் வேலைக்கு செல்வதால் கோகுல் சற்று டென்ஷனாக இருந்தான். ஆம்! கோகுல் தான் டென்ஷனாக இருந்தான்! ஆதி எப்போதும் போல அலட்டிக்கொள்ளவில்லை.
நேர்முகத்தேர்வில் இவன் செய்த கலாட்டாவை கோகுல் கேட்டு தெரிந்துக்கொண்டதில் இருந்தே அவனுக்கு பீதியாகி போனது. கிளம்பியதில் இருந்தே ஆதிக்கு அட்வைஸ் மழையை பொழிந்துக்கொண்டிருந்தான் அவன்.
பைக்கில் அவன் பின்னே அமர்ந்திருந்த ஆதி, கோகுல் பேச பேச அதை கேட்டுக்கொண்டு(!?) அமைதியாய் வந்துக்கொண்டிருந்தான். பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திய கோகுல், ஆதி இறங்கியதும், “நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுது தானேடா? நேத்து ஏதோ ஆர்வக்கோளாருல நடந்துக்கிட்டாலும் இன்னைக்கு மேடமை பார்க்குறப்போ ஒரு ‘சாரி’ சொல்லிடு! ஏன்னா, இங்க அவங்க தான் நமக்கு பாஸ்! அவங்களை பகைச்சுக்குறது நமக்கு நல்லது இல்லை!! புரிஞ்சுதா?” என்றான்.
ஆதி பதில் பேசாது உடன்வர, “சாரி சொல்றதால நம்ம கிரீடம் ஒன்னும் இறங்கிடாது ஆதி! நேத்தே பார்த்தல்ல, தன் மேல தப்புன்னதும் மேடம் அத்தனை பேரு முன்னாடியும் சாரி கேட்டாங்க! தட்ஸ் ஹர் குட் குவாலிட்டி! நீயும் மறக்காம, இன்னைக்கு அவங்களை பார்க்குறப்போ ‘சாரி’ சொல்லு! என்னடா?” என்றான் கோகுல்.
அப்போதும் ஆதி பதில் சொல்லாது இருக்க, “ஏய்!! நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பதிலே சொல்லலன்னா எப்படிடா?” என்றான் ஆயாசமாய்.
ஆதி மின்தூக்கிக்குள் நுழைந்துக்கொள்ள, “இவன் என்ன பேச பேச போய்க்கிட்டே இருக்கான்?” என ஜெர்க்கான கோகுல், “ஏய்!” என அழைத்தபடி அவன் கரத்தை பற்ற, அவனோ, “ஹான் சொல்லு மச்சான்?” என்றான் கூலாய்.
“என்னத்த சொல்லு மச்சான்? இவ்வளோ நேரம் கதையா சொல்லிட்டு இருந்தேன்?” கோகுல் கடுப்படிக்க, “என்னடா? என்ன சொல்ற?” என கேட்டபடி காதில் இருந்த wirelessairpodஐ கழட்டினான் ஆதி!!!
கோகுலுக்கு சுறுசுறுவென கோவம் ஏறியது. ‘அப்போ வீட்டில இருந்து ஆபிஸ் வரைக்கும் நான் பேசிக்கொண்டு வந்ததெல்லாம் வீணா?’ என்ற கடுப்பில், “எப்போ இருந்துடா இதை மாட்டிருக்க?” என்றான்.
“வீட்டில கிளம்புறப்போவே மாட்டிட்டேன்டா!! கேக்குறியா? பிலீவர் சாங் ஓடுது!” என்றவன், பாட்டோடு சேர்ந்து, ‘பிலீவார் பிலீவார்’ என கத்திக்கொண்டே, airpodஐ கோகுலை நோக்கி ஆதி நீட்ட,
“பிலீவர் தான்! உன்னை பிழிய போறாங்களோ இல்லையோ, என்னை நல்லா பிழிய போறாங்க! அது மட்டும் என் கண்ணுக்கு இப்போவே தெரியுது!!” என்றான் கோகுல்.
“அட போடா!” என ஆதி மீண்டும் அதை காதில் மாட்டிக்கொள்ளப்போக, அவன் கரம் பிடித்து நிறுத்திய கோகுல், “மேடம்மை பார்க்குறப்போ சும்மா ஒரு மரியாதைக்காக ‘சாரி’ சொல்லுடா, ப்ளீஸ்டா” என்றான்.
அவன் முரண்டு பிடிப்பானோ என நினைத்து கோகுல் ‘ப்ளீஸ்’ போட, “ஒரு சாரி போதுமா, இல்ல ரெண்டு மூணு சேர்த்து கேக்கவா?” என்றான் ஆதி!
“நீ ஒரே ஒரு சாரி மட்டும் சொன்னா போதும் என் தெய்வமே!!” என கோகுல் சொல்லவும் அவன் கேபின் வரவும் சரியாக இருந்தது.
“முதல் நாள் மேடம்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு வந்து வேலையை ஆரம்பி” என்ற கோகுலின் சொல்லை கேட்டு, தன்யாவின் அறைக்கதவை மெலிதாய் தட்டினான் ஆதி.
காலையில் ஆபிஸ் கிளம்பியதில் இருந்தே தன்யா தலைக்குள் ஆதி வட்டமடிக்க ஆரம்பித்து விட்டான். அவனையே நினைத்துக்கொண்டிருந்ததில், ராஜகோபால் மீது இருந்த கோவம் கூட அவளுக்கு மறந்து போனது. தன்யா பிரகாஷை பற்றி ஏதேனும் பேசுவாள் என அவர் காத்திருக்க, அமைதியாய் உண்டவள், ஆபிஸுக்கு கிளம்பிவிட்டாள்.
தன் அறைக்குள் அமர்ந்திருந்தவளுக்கு கதவு தட்டப்படும் ஓசை கேட்டதுமே, அது ‘ஆதி’யாக தான் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு.
‘இன்னைக்கு வரட்டும், அவனை நான் டென்ஷன் ஆக்குறேன்’ என கருவிக்கொண்டவள் ‘எஸ்’ என சொல்லிவிட்டு கோப்புகளுக்குள் கவனத்தை வைத்த வண்ணம் குனிந்துக்கொண்டாள்.
உள்ளிருந்து ‘எஸ்’ என்ற அனுமதி வர, கதவை திறந்தவன், பல்வரிசை தெரிய சிரித்துக்கொண்டு, “குட் மார்னிங் மேடாம்! மே ஐ கம் இன்” என்றான் ஆர்ப்பாட்டமாய்.
அவனது பளிச்சென்ற சிரித்த முகம் அவளுக்கு கடுகடுப்பை தாராளமாய் அள்ளிக்கொடுக்க அவனுக்கு பதிலே சொல்லாமல் கண்களை கையில் இருந்த கோப்புகளில் நுழைத்துக்கொண்டாள் தன்யா.
“மேடாம்!! மேடாம்!!!” என வாயிலில் நின்றே அவன் ஏலம் போட்டும்க்கூட அவள் நிமிரவே இல்லை.
பொறுத்து நின்றிருந்தால் அது ஆதி இல்லையே! விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவன் அவள் எதிரே இந்த கதிரையில் சௌகர்யமா அமர, “ஏய்!! யூ இடியட்! என் பெர்மிஷன் இல்லாம, உள்ள வந்ததும் இல்லாம, நான் சொல்லாமையே எதுக்கு என் முன்னால உட்காந்த?” என எழுந்து நின்று அலறினாள் தன்யா.
எப்படியோ எதற்கோ அவனை திட்டிவிட வேண்டும் போல அவளுக்குள் ஒரு உத்வேகம்.
“எதுக்கு நிக்குறீங்க மேடாம்! மரியாதை மனசுல இருந்தா போதும்… உட்காருங்க” என்றான் கூலாய்.
அப்போது தான் அவளே உணர்ந்தாள், தன் அறையில் அவன் அமர்ந்திருக்க, தான் நிற்ப்பதை. இருப்பினும் அவன் சொல்லி தான் அமர்வதா என்ற வெட்டி வீம்பில், “நான் உன்னையே உட்கார சொல்லல! ப்ர்ஸ்ட் மேன்னர்ஸ் கத்துக்கோ!” என்றாள் கடுகடுவென.
“சூர் மேடாம்! ஆபிஸ் முடிஞ்சதும் எவனிங் கோச்சிங் கிளாஸ்ல சேர்ந்து கத்துக்குறேன்” என்றான் ஆதி சீரியசாய்.
அவன் பதிலில் கொதிப்படைந்தவள், “தட்ஸ் நாட் மே’டாம்’… தட்ஸ் மேடம்!!” என எரிச்சலாய் சொல்லி, “பர்மிஷன் கேட்காம எதுக்கு உள்ள வந்த?” என பல்லைக்கடிக்க,
“நான் வாசல்லையே நின்னு வாய் கிழிய கத்துனேன். நீங்க ஒன்னும் சொல்லாம இருக்கவும், சரி மேடம்க்கு காது கொஞ்சம் கேக்காது போலன்னு நினைச்சு, உள்ள வந்தேன்! இது தப்பா மேடம்?” என்றான் அப்பாவியாய்.
அதோடு விடாமல், “நேத்துக்கூட உங்க காது நல்லா தானே இருந்துச்சு! இந்த ‘மாலைக்கண் நோய்’ மாறி, உங்களுக்கு எதுவும் ‘காலைக்காது நோய்’ இருக்கோ?” என்று வேறு அவன் கேட்க,
‘இவன்க்கிட்ட நீ கேள்வி கேப்பியா கேப்பியா?’ என தன்யாவின் மனசாட்சி தன்னைத்தானே குட்டிக்கொண்டது.
அதற்குமேல் நிற்காமல் இருக்கையில் கோவத்துடன் வேகமாய் அமர்ந்தவள், அலுவலகத்தை பற்றியும், அவன் வேலையையும் பற்றியும் தெரிவிக்கும் சிறு குறிப்பேட்டை எடுத்து அவன் முன்னே வைத்து, “கோ த்ரூ இட்” என்றாள் கடுப்பு குறையாமல்.
எப்போதும் புதியதாய் வேலைக்கு வருபவருக்கு முதல் நாளே பயம் காட்ட கூடாதென அவர்களின் வேலை பற்றிய விவரங்களை அவளே நின்று எடுத்து சொல்வது தான் அவளது வழக்கம்.
ஆனால், இந்த ஆதி செய்யும் வேலையில், அவனோடு மேலும் சில நொடிகளேனும் கூட பேச அவளுக்கு விருப்பமில்லை.
“ம்ம்ம் ஓகே! அப்போ நான் என் வேலையை பார்க்கவா?” என அவன் கேட்க, வாய் பேசாமல், கையெடுத்து கும்பிட்டு வாயிலை நோக்கி கை காட்டினாள் தன்யா.
அவனுக்கு ஒரே சிரிப்பாய் வந்தது. கோகுலை வெறுப்பேற்றி பார்ப்பதை விட தன்யாவை வெறுப்பேற்றி பார்ப்பது அவனுக்கு அதிக கிக்கை கொடுக்க, “மேடாம்! பர்ஸ்ட் டே வொர்க்! ஒரு ஆல் தி பெஸ்ட்?” என்றான் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவன் புன்னகையை மறைப்பது அவளுக்கு தெள்ளத்தெளிவாய் தெரிய, கடுமை பரவிய விழிகளுடன், “என் அப்பா உன்னை செலெக்ட் பண்ணிட்டாருன்னு ரொம்ப ஆடாத! இந்த வேலைல நீ ரொம்ப நாள் இருக்க மாட்ட!!” என்றாள்.
“ஏன் ப்ரோமோஷன் எதுவும் குடுக்க போறீங்களா?” என அவன் புன்னகை தவிழ கேட்க,
“ஹும்! ஒரேயடியா இங்கிருந்து உன்னை அனுப்பாம நான் விட மாட்டேன்! எத்தனை நாள் இங்க நீ இருக்க போறன்னு நானும் பாக்க தானே போறேன்?” என தனக்கு துளியும் சம்பந்தமே இல்லாத அடிக்குரலில் தன்யா மிரட்டலாய் சொல்ல,
அவனோ, “எத்தனை நாள் இருக்கேனோ, அதுக்கேத்த மாறி கணக்கு பண்ணி சம்பளத்தை குடுத்துடுங்க மேடாம்! அதுல ஏதும் கை வச்சுடாதீங்க!” என்றான் தீவிரமான குரலில்.
அவன் சொன்ன விதத்தையும், தீவிரத்தையும் கண்டவளுக்கு, ‘உண்மையிலேயே நான் மிரட்ட தானே செஞ்சேன்!? நான் சரியா தான் பேசுறேனா?’ என்ற சந்தேகம் விருட்சமாய் ஆடியது.
குழம்பிப்போன முகத்துடன் அவள் இருப்பதை கண்டவன், “வேலை நேரத்துல இப்படி பேசிட்டு இருக்கிறது எனக்கு பிடிக்காது மேடாம்! எதுவா இருந்தாலும் லஞ்ச் ப்ரேக்ல கேண்டீன் பக்கம் வாங்க, ஆற அமர பேசிக்குவோம்… என்ன?” என்றவன், “வரட்டா?” என ஸ்டைலாய் கேட்டுவிட்டு வெளி நோக்கி சென்றான்.
அவனிடம் மீண்டும் வார்த்தைகளற்று தோற்றுப்போவதை கண்டு கொத்தித்தவள், போனவனை நிறுத்தி, “உன்னை யாரு இங்க ரெபர் பண்ணது?” என்றாள்.
“என் ஆருயிர் தோழன், என் தலைவன், என்னோட ரோல் மாடல்… கோகுல் தான்!!!” என்றான் சிலாகிப்புடன்…
அவன் சொன்ன விதத்தில் மேலும் வெகுண்டவள், “அவனை மொதோ வர சொல்லு” என்றாள் ஒரு முடிவோடு…!
தன்யா அறையை விட்டு ஆதி எப்போது வெளிவருவான் என எதிர்ப்பார்த்து காத்திருந்த கோகுல், அவன் வருவதை கண்டதும் ஆவலாய் அருகே ஓடி, “சாரி கேட்டியாடா?” என்றான்.
ஆதி, “அதெல்லாம் எக்கச்சக்கமா கேட்டுருக்கேன்! உன்னைத்தான் உடனே பாக்கணும்ன்னு வர சொன்னாங்க! போய் என்னனு கேட்டுக்கோ” என அசுவாரஸ்யமாய் சொல்ல, கோகுலுக்கு மண்டைக்குள் மணியடித்தது.
“எ…ன்..னையா? எதுக்குடா?”
“எனக்கு எல்லாமே நீதான்னு ஒரு வார்த்தை சொன்னேன்! உன்னை உடனே பார்க்கனும்ன்னு சொல்லிட்டாங்க!! ப்ரோமோஷன் எதுவும் குடுப்பாங்களா இருக்கும்! சீக்கிரம் போ” என ஆதி சொல்ல, “ப்ரோமோஷனா? இப்போதானே டீம் மெம்பெர்ல இருந்து டீம் லீடர் ஆனேன்? அதுக்குள்ள அடுத்ததா?” என புலம்பிக்கொண்டே திகிலோடு அவள் அறைக்குள் சென்றான்.
சீனியர் ஆபிசர் ஒருவர் வந்து ஆதிக்கு அவனது கேபினை காட்டியவர், ஆபீஸ் மற்றும் அவர்களின் முக்கியமான வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் தற்போதைய ப்ரோஜெக்டுகள் பற்றிய சுருக்கமாய் விளக்கினார்.
வெகு பொறுப்புடன் அவர் சொன்னதை எல்லாம் கிரகித்துக்கொண்டவன், வேண்டிய இடத்தில் அவனது சந்தேகங்களையும் கேட்டு தெளிந்துக்கொண்டான்.
நேரம் கடந்து போக, நண்பனை பற்றிய நினைவு வந்ததும், வேகமாய் அவனை தேடி ஓடி வந்தான் ஆதித்யா.
தொங்கிப்போன முகத்தோடு கம்ப்யூட்டரை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த கோகுலை கண்டதும், “மச்சீ….!! ஒரே குஷியா இருக்க போல?” என்றான் ஆதி.
வெடுக்கென அவனைப்பார்த்த கோகுலின் அழகிய வதங்கிப்போன வதனம் கேட்டது, ‘எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படிடா இப்படி எதுவுமே தெரியாத மாறி வந்து பேசுற?’ என்று!!!
“என்ன மச்சி!! ப்ரோமோஷன் தானே?”
கோகுல், “ப்ரோமோஷன் தான்!” என்றான் ஒரு மாதிரி குரலில்.
ஆதி, “அப்படி போடு! ட்ரீட் எப்போடா?” என குதிக்க, அவனை ஏற இறங்க பார்த்த கோகுல், “ப்ரோமோஷன் தான்… ஆனா, “டி-ப்ரோமோஷன்” என்றான் அழுகையை அடக்கும் குரலில்.
ஆதியோ, “அட, ‘டி’யா இருந்தா என்ன, ‘ஈ’யா இருந்தா என்ன? ப்ரோமோஷன் தானே? எனக்கு ட்ரீட் வேணும் அவ்வளோதான்” என்றான்.
பொறுமை கரைக்கடந்ததை போல சட்டென இருக்கையில் இருந்து எழுந்த கோகுல், “அடேய் கிராதகா, உன்னை இந்த கம்பெனிக்கு ரெபர் பண்ண பாவத்துக்கு, கஷ்டப்பட்டு நான் வாங்குன ப்ரோமோஷன் காலிடா… டீம் லீடரா இருந்த என்னை, மறுபடி டீம் மெம்பரா ஆக்கிட்டாங்க” என மூக்கை உறிஞ்ச,
“என்…..ன????” என அதிர்ந்தவன் போல கேட்ட ஆதி, “இதுக்கு நியாயம் கிடைக்காம விடக்கூடாதுடா! புரட்சி போராட்டம் பண்ணியே ஆகணும்! வா” என கோகுலின் கையை பிடித்து இழுத்தான்.
“புரட்சி போராட்டமா? அடேய்! வந்த மொதோ நாளே, டி-ப்ரோமோஷன் வாங்கி குடுத்துட்ட! இப்ப மறுபடி நீ போய் பேசினன்னா எனக்கு இருக்குற இந்த வேலையும் போய்டும்! தயவுசெஞ்சு ஆளை விடு” என கையெடுத்து கும்பிட்டான்.
அடுத்த சில கணங்கள் இருவருக்கும் அமைதியாய் போக, தலையில் கை வைத்து அமர்ந்திருந்த கோகுலிடம், “சரி… ட்ரீட் எப்போ?” என்றான் ஆதி.
அதற்க்கு கோகுல் பார்த்த பார்வையில் ஆயிரம் கெட்ட வார்த்தைகள் பொதிந்து கிடந்தன. ஆனாலும் சலிக்காத ஆதி, “வெல்வெட்டா… வெல்வெட்டா… ட்ரீட்டு எங்க சொல்லுடா?” என பாட்டு பாட,
கோகுலோ, “வெல்வெட்டா வெல்வெட்டா வெளக்கமாத்த எடுக்கட்டா?” என எசப்பாட்டு பாடியதும், ‘கப்சிப்’ என்று ஓடியேவிட்டான் ஆதித்யதேவ்.