Skip to content
Post Views: 5,186
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 11
விடியற்காலையில் எக்மோர் ரயில் நிலையத்தில் சென்று ரயில் நிற்க… அதை விட்டு இறங்கிய நொடியில் இருந்து கயல்விழி அப்படி ஒரு வேடிக்கை.
இவ்வளவு கூட்டமான இடத்துக்கு எல்லாம் அவள் இதுவரை சென்றதே இல்லை. பலதரப்பட்ட மனிதர்கள், அந்தக் கூட்டத்திலும் கனமான சுமைகளோடு லாவகமாக நடக்கும் கூலிகள், நடைபாதை கடைகள் என வேடிக்கை பார்க்க நிறைய இருந்தது.
Advertisement
மற்றவர்கள் முன்னே செல்வதைக் கூடக் கவனிக்காமல் அவள் பின்தங்க, அவளுக்காக வேகத்தைக் குறைத்துப் பொறுமை இழந்த நந்தா, ஒரு கட்டத்தில் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.
முதலில் திடுகிட்டாலும், அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள். பிறகு இழுப்பது அவள் கணவன் அல்லவா… அவன் வேகத்திற்குக் கயல்விழி ஓட்டமும் நடையுமாகச் செல்ல வேண்டியது இருந்தது.
அவளுக்காக வேகத்தைக் குறைத்த நந்தா, “எனக்கு மூன்னு நாள்தான் லீவ். அதுக்குள்ள நான் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு.” என்றான்.
Advertisement
கயல்விழி எதுவும் சொல்லவில்லை. ஆனால் இன்னும் வேகமாக நடந்தாள். காரில் ஏறி வீட்டிற்கு வந்தவர்களைத், தாரணியை விட்டு முறைப்படி ஆரத்தி எடுக்கவைத்தே குழலி வீட்டிற்குள் அழைத்தார்.
Advertisement
நந்தாவுக்கு அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்ததால், நேராகத் தனது அறைக்கு வந்துவிட்டான்.
குளித்து உடைமாற்றி வந்தவன், தனது அறையில் இருந்த தொலைபேசியை எடுத்து மனநல மருத்துவராக இருக்கும் தன் தோழி உமாவை அழைத்துப் பேசினான்.
“ஹலோ”
Advertisement
“ஹலோ உமா, நான் நந்தா பேசுறேன். எப்படி இருக்க?”
“ஏசிபி. நந்தாவா… ஆச்சர்யமா இருக்கே. உனக்கு என்கிட்டே போன் பேச எல்லாம் நேரம் இருக்கா?”
“ரொம்ப ஒட்டாத. இன்னைக்கு உன்னைப் பார்க்கணும். எப்ப வரட்டும். என் மனைவியோட வரேன்.”
“மனைவியா… அடப்பாவி கல்யாணம் ஆகிடுச்சா? சொல்லவே இல்லை. அந்த வருண் தடியன் கூட ஒண்ணுமே சொல்லலையே?”
“திடிர்ன்னு தான், அதுதான் யார்கிட்டயும் சொல்ல முடியலை.”
புதிதாகத் திருமணம் ஆனவன், தன்னை ஏன் பார்க்க வேண்டும் என்கிறான்? எதோ சரியில்லை என உமாவுக்குப் புரிந்தது.
“ஒரு பதினோரு மணிக்கு வீட்டுக்கு வா… நான் மட்டும்தான் இருப்பேன்.”
“ஓகே?”
“எதாவது பிரச்சனையா?” வினோதினி கேட்க, நந்தா பதில் சொல்ல யோசிக்க…
“சில பெண்களுக்குக் கல்யாணம்னாலே பயம்தான்.” எனப் பொதுவாக அவள் சந்தித்த மற்ற பெண்களை நினைத்து உமா பேச….
“இல்லை இது வேற விஷயம்.” என்ற நந்தா கயல்விழி பற்றிச் சொன்னான்.
“ஓகே நீ நேர்ல கூடிட்டு வா... ரெண்டு மூன்னு கவுன்செல்லிங் கொடுத்தா சரி ஆகிடும்.”
“சரி வரேன்.” என்றவனுக்கு, அப்போதுதான் மற்றவர்களின் நினைவு வந்து கீழே இறங்கி சென்றான்.
தாரணி அறையில் அவளும் வருணும் மீண்டும் உறக்கத்தைத் தொடர… நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பி இருந்த பரணியும் இன்னும் எழுந்து வரவில்லை.
சமையல் அறையில் குழலியும், கயல்விழியும் நின்று வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். குளித்து விட்டு வந்த கயல்விழி தன் மாமியார் மட்டும் தனியே வேலை பார்ப்பதை பார்த்து அவளாகவே வந்து உதவ ஆரம்பித்தாள்.
மகன் வருவதைக் கவனித்த குழலி அவனைப் பார்த்து புன்னகைத்தவர், “நந்தாவுக்குக் காபி போட்டுக் கொடு. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.” என்று மருமகளிடம் சொன்னவர், அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றார்.
கயல்விழி குனிந்த தலை நிமிரவில்லை… அவளையே பார்த்துக் கொண்டு நந்தா சமையல் மேடையில் ஏறி அமர்ந்தான்.
கயல்விழி அவனுக்குக் காபி போட்டுக் கொடுக்க… “அதை வாங்கிச் சிறிது பருகியவன், “காப்பி நல்லாயிருக்கு. ஆனா அன்னைக்கு உங்க வீட்ல குடிச்ச காபி மாதிரி இல்லையே.” எனச் சந்தேகமாகக் கேட்க….
“அது கருப்பட்டி போட்ட காபி. இது சீனி போட்டது. அதுவும் எங்க வீட்ல அப்ப கறந்த பாலு. இங்க பாக்கெட் பாலுதான. அதனால்தான் இப்படி இருக்கு. எனக்கே இங்க காபி குடிச்ச மாதிரியே இல்லை.”
சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு அதிகம் பேசி விட்டோமோ என்பது போல் கயல்விழி பார்க்க… நந்தா சிரித்து விட்டான்.
“ஓ…. இவ்வளவு பேசுவியா நீ? சரி சீனின்னா என்ன?”
“சீனின்னா தெரியாதா?” என்றவள், அதை எடுத்தே காட்ட…
“இதுவா இது பேர் சர்க்கரை இல்லையா?”
“இதுதான் சக்கரை என வெல்லம் இருந்த டப்பாவை தேடி எடுத்துக் கொடுத்தாள்.
“இதுவா? நாங்க இதை வெல்லம்ன்னு சொல்வோம்.”
“வெல்லம், சர்க்கரை எல்லாம் ஒண்ணுதான். ஆனா இந்த ஷுகரை நாங்க சீனின்னுதான் சொல்வோம்.”
“உங்க ஊர்ல அப்படியோ?”
“எல்லா ஊர்லயும் அப்படித்தான். நீங்கதான் தப்பா சொல்றீங்க.”
“ஓ…எனக்கு யாரோ தப்பா சொல்லி கொடுத்துட்டாங்க போலிருக்கு.”
அவர்கள் இருவரும் பேசும் போதே வருண் வர… கயல்விழி அமைதியாகி விட்டாள்.
“என்ன பெரிய விவாதம் போயிட்டு இருந்தது போல…”
“வருண் இது என்ன சொல்லு?”
“இது தெரியாதா சர்க்கரை.”
“அதுதான் இல்லை. இது பேர் சீனியாம்.”
“ரொம்ப முக்கியம் டா இப்ப? புதுசா கல்யாணம் ஆனவங்க பண்ண வேண்டிய ஆராய்ச்சிதான்.”
“ஏம்மா உங்க ஊர்ல உப்புக்கு பேராவது உப்பா? இல்லைனா அதுக்கும் வேற பேர் இருக்கா?”
“உப்புதான்.” கயல்விழி மெதுவான குரலில் தலையைக் குனிந்தபடி சொல்ல…
“சரி எதையோ போட்டு எனக்கு ஒரு காபி கிடைக்குமா?” வருண் கேட்க… கயல்விழி காபி போட ஆரம்பித்தாள்.
வருண் ஹாலுக்குச் சென்று விட… கயல்விழி காபி பொடி போட்டு விட்டு, சர்க்கரை கையில் எடுக்க…. அவளிடம் இருந்து அதை வாங்கி வைத்த நந்தா, உப்பை எடுத்துக் கொடுத்தான்.
இது எதுக்கு என்பது போல் கயல்விழி பார்க்க… “அவன்தான எதாவது போட்டு கேட்டான். உப்பை போட்டு கொடுத்திடு.”
“ஐயோ நான் மாட்டேன். காபி வீணா போயிடும்.” கயல்விழி மறுக்க… நந்தா அவனே காபியில் உப்பை கலந்து விட்டான்.
“இந்தா இதைப் போய் அவன்கிட்ட கொடு.” நந்தா கொடுக்க… கயல்விழி மறுக்க…. அப்போது அங்கே தாரணி வந்தாள்.
“ரெண்டு பேரும் என்ன பண்றீங்க?”
“இந்தா வருண் காபி கேட்டான். நீயே கொடுத்திடு.” நந்தா அவளிடம் காபியை கொடுக்க… அவளும் அதில் இருக்கும் சூழ்ச்சி அறியாமல் எடுத்து சென்றாள். அவள் பின்னே நந்தாவும் கயல்விழியும் சென்றனர்.
வருண் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான். அவனிடம் சென்று தாரணி காபியை நீட்ட….
“நீ காபி போடலையே?” எனக் கேட்டபடி அவன் காபியை வாங்க, தாரணி அவனை முறைத்தாள்.
வருண் காபியை வாசம் பிடித்து விட்டு குடித்தவன், உடனே தூவென்று துப்ப…. தாரணிக்குக் கோபம் வந்துவிட்டது.
“இப்ப எதுக்குத் துப்புறீங்க?”
“நீ போட்ட காபியா இது?”
“நான் போடலை அண்ணிதான் போட்டாங்க.”
“ஏன் மா தங்கச்சி? நான் உனக்கு அப்படி என்ன மா கொடுமை பண்ணேன்? எதுக்குக் காபியில உப்பு போட்ட?”
“நான் உப்பு போடலை, இவர்தான் போட்டார்.” கயல்விழி நந்தாவை காண்பிக்க…
“டேய் துரோகி, நட்புன்னா என்னன்னு தெரியுமா டா…. நண்பன்னா யாருன்னு தெரியுமா…. உனக்கு இந்த வருண்ணா யாருன்னு தெரியுமா?” அவன் அடுக்க….
“போதும் அடங்கு, இது தளபதி படம் டயலாக்ன்னு எனக்கும் தெரியும். நீதானே டா எதாவது போட்டுக் கொடுன்னு சொன்ன.” என்றான் நந்தா.
“எங்க அம்மா அப்பவே சொன்னாங்க, மாமியார் வீட்டுக்கு அடிக்கடி போகாத மரியாதை இருக்காதுன்னு. நான் அவங்க பேச்சை கேட்டிருக்கணும்.”
வருண் பேசுவதைக் கேட்ட கயல்விழிக்கு, அவன் நிஜமாகக் கோபித்துக் கொண்டானோ எனப் பயமாகப் போய்விட்டது. அவள் வேகமாகச் சென்று வேறு காபி போட்டுக் கொண்டு வந்தாள்.
“இந்தாங்க அண்ணா, இது சீனி போட்ட காபிதான்.” அவள் பயந்தபடி கொடுக்க…
“வேண்டாம்மா… நான் எங்க வீட்டுக்கே போய்க் குடிச்சிக்கிறேன்.” என்றான் வருண்.
அப்போது அங்கே வந்த குழலி, என்ன என்று கேட்க. வீட்டு மருமகனிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக மாமியார் கோபித்துக் கொள்வாரோ என்று கயல்விழிக்குப் பயம்.
“மன்னிச்சுடுங்க அண்ணா, ப்ளீஸ் குடிங்க.” அவள் சொல்ல… அவளின் பயந்த முகத்தைப் பார்த்த வருண் காபியை வாங்கிகொண்டான். கயல்விழி சமையல் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் பின்னே உள்ளே வந்த நந்தா, அவளைத் தன் பக்கம் திருப்பிப் பார்க்க…. கயல்விழியின் கண்கள் கலங்கி இருந்தது.
“இப்போ எதுக்கு அழற?”
“அவங்க கோவிச்சிகிட்டாங்க.”
“யாரு வருணா? அவனுக்குக் கோபமே வராது.”
“அப்ப ஏன் அப்படிப் பேசினாங்க?”
“சும்மா விளையாடுறான். அவங்க அம்மாவே இவன் தொல்லை தாங்காம, உன் மாமியார் வீட்டுக்கு போடான்னு துரத்திதான் விடுவாங்க.”
“நிஜமாவா?”
“நிஜமாதான். நாம காலையில சாப்பிட்டதும், வெளியப் போறோம். சீக்கிரம் ரெடியாகு.”
“புடவை மாத்திட்டு வரவா?”
“வேண்டாம் இதே ஓகே.”
சொன்னது போல் காலை உணவு முடிந்ததும், நந்தா கயல்விழியை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான்.
முதல் தடவையாக வெளியே கிளம்புவதால்…. முதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.
சின்னப் பிள்ளையார் கோவில்தான். சாமி கும்பிட்டு விட்டு திருநீறும், குங்குமமும் கொடுத்து விட்டு அய்யர் சென்று விட. கயல்விழி நெற்றியில் முதலில் திருநீறும் அடுத்து குங்குமமும் வைத்துக் கொண்டாள்.
“வகிட்டில் குங்குமம் வச்சுக்கலை?” எனக் கேட்ட நந்தா, அவனே அவளுக்கு வகிட்டில் குங்குமம் வைத்து விட்டான்.
கயல்விழி சராசரி உயரம். நந்தாவோ மிகவும் உயரம். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க… அவள் கன்னத்தைத் தட்டியவன், “சரி வா போகலாம்.” எனக் காருக்கு அழைத்துச் சென்றான்.
“இப்ப எங்க போறோம்?”
“என்னோட ப்ரண்ட் உமா வீட்டுக்கு. அவ ஒரு டாக்டர் அவளைத்தான் பார்க்க போறோம்.”
டாக்டர் என்றதும் கயல்விழியின் முகம் மாறிவிட்டது. அவர் என்ன கேட்பார்? அன்று விக்னேஷ் பேசியது வேறு நியாபகம் வந்து கலக்கமாக இருந்தது.
“என்னை டெஸ்ட் பண்ணப் போறோமா?” கயல்விழி தயங்கித்தயங்கி ஒரு வழியாகக் கேட்டே விட…
அப்போதுதான் அவளின் முகத்தைப் பார்த்த நந்தா, “ஹே… என்னடா? டெஸ்ட் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா பேசிட்டு வரப்போறோம். அவ்வளவுதான்.”
“என்ன பேசணும்?”
“நீ நைட் திடிர்ன்னு பயத்துல முழிச்சிகிற இல்லையா? அதைப் பத்திதான் கேட்க போறோம். வேற ஒன்னும் இல்லை.”
நந்தா சொன்னதைக் கேட்ட பிறகுதான் கயல்விழி சற்று அமைதியானாள். அதற்குள் உமாவின் வீடும் வந்துவிட்டது. உமா அவர்களை வாயிலுக்கே வந்து வரவேற்றாள்.
“உன் மனைவி ரொம்ப அழகு.” உமா சொல்ல… நந்தா சிரித்தான்.
உமா அவர்களுக்குக் குடிக்கப் பழரசம் கொண்டு வந்தாள். மூவருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“இவனை ரொம்ப நல்லவன்னு நினைச்சுக்காத. நாங்க ஸ்கூல் படிக்கும் போது என்னவெல்லாம் கலாட்டா பண்ணி இருக்கான் தெரியுமா?” உமா சொல்ல, கயல்விழி நந்தாவை அப்படியா எனப் பார்த்தாள். அவன் புன்னகைத்தான்.
“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் பக்கத்தில ஒருத்தரை பார்க்கணும். அவரைப் பார்த்திட்டு வந்திடுறேன்.” என்ற நந்தா சென்று விட்டான்.
“கயல், நான் உன்னோட ப்ரண்ட் ஓகே வா…. நீ என்கிட்டே உன் மனசு விட்டு பேசலாம்.”
“நான் அதை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஏன் நந்தாகிட்ட கூட, எது தேவையோ அது மட்டும் தான் சொல்வேன்.”
“நீ உன் மனசுல இருக்கிறது எல்லாத்தையும் சொல்லிடு. அப்பத்தான் உனக்கு இருக்கிற அழுத்தமெல்லாம் போய் ப்ரீ ஆகிடுவ.”
உமா பேசப் பேச கயல்விழி அழுது விட்டாள்.
“இங்க பாரு அழகக் கூடாது.”
“நான் ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன். நடக்காதுன்னு தெரிஞ்சும் ஒருத்தர் மனசுல ஆசையை வளர்த்து, அவர் சாகவும் நான் காரணமாகிட்டேன்.”
“என்ன நடந்துச்சு முதல்ல இருந்து சொல்லு.” உமா கேட்க… கயல்விழி கடந்த காலத்தை நினைத்து பார்த்தாள்.
error: Content is protected !!