மறுநாள் மதியம் கயல்விழி மட்டும் வீட்டில் இருக்கும்போது நந்தா போன்னில் அழைத்தான்.
“எப்படி இருக்கக் கயல்?”
“நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”
“உன் அப்பா இந்த ஊர்ல இருக்கும்போது நான் நல்லா இருக்க முடியுமா?”
“ஏன் என்ன ஆச்சு?” கேட்கும் போதே கயல் பதட்டமாக.
“ஹே… பயந்திட்டியா? சும்மா விளையாட்டுக் சொன்னேன். . ஜெயில்ல வச்சு உங்க அண்ணனை யாரோ கொலை பண்ண பார்த்தாங்க. அதனால் அவனை வேற இடத்துக்கு இடம் மாற்றி இருக்கோம்.”
“ஓ…”
“உன் அண்ணனை இப்ப நாங்களே வெளியவிட்டா கூடப் போகமாட்டான். வெளிய போனா என்ன ஆகும்ன்னு அவனுக்கு நல்லா தெரியும்.”
“இதுல காமடி என்ன தெரியுமா?”
“உன் அப்பா அரசியல்வாதி ஆகப்போறார்.” என்றான்.
ஆம் அது உண்மைதான். நவநீத கிருஷ்ணை எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என அன்பரசு எவ்வளவோ முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
தன்னால் எத்தனையோ பேர் தேர்தலில் வெற்றிபெற்று, இன்று அரசியலில் பெரிய ஆளாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும், தனக்கு உதவ யாரும் முன் வரவில்லை என்பதால்… தானே அரசியலில் குதிக்கும் முடிவை எடுத்தார். அவர் ஜாதி ஆட்கள் அவருக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பது அவரது நம்பிக்கை.
“எங்க குடும்பத்தால உங்களுக்கு ரொம்பக் கஷ்ட்டம் இல்ல? அதுவும் என்னாலதான் ரொம்பக் கஷ்ட்டம்.”
கயல்விழி இப்படியெல்லாம் பேசியதே இல்லை. இப்போது என்ன புதிதாக ஆரம்பிக்கிறாள்? நந்தா யோசித்தாலும், பதில் உடனே வந்தது.
“எப்ப நான் உன்னை கஷ்ட்டம்ன்னு சொன்னேன் கயல்?”
“சொன்னது இல்லை… ஆனா அதுதான உண்மை.”
“அடிவாங்கப்போற நீ. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? யாரவது எதாவது சொன்னாங்களா?”
“உன் அப்பாவை போல…. உன் அண்ணனை போல…இங்க ஆயிரம் பேரு இருக்கான். இந்த ஊர்ல மட்டும் இல்லை எல்லா ஊர்லயும் இருக்காங்க.. அவங்களை நான் பார்த்துகிறேன். அதுதான் என் வேலை. ஆனா நீ இதுல ஏன் உன்னை நுழைக்கிற?”
“நான் சும்மா கேட்டேன்.”
அவள் சொல்வது உண்மை இல்லை என நந்தாவுக்குத் தெரியும். ஆனால் அதை நேரில் பேசிக்கொள்ளலாம் என நினைத்தவன், அப்போதைக்கு விட்டு விட்டான்.
“ராதிகா கீழே தாரணி ரூமுக்கு மாறிட்டாளா?”
“இல்லை, சாயங்காலம் வந்து மாருறேன்னு சொன்னாங்க.”
“இன்னும் அவளுக்கு அந்த ரூம்ல என்ன வேலை? அம்மாகிட்ட நேத்தே சொன்னேனே?”
“அதுதான் இன்னைக்குப் போறேன்னு சொன்னாங்களே… ஒருநாள் தான விடுங்க.”
“அவ அப்படிப் பண்ணா? நீயும் சரின்னு விட்டுடுவியா. இது என் இடம்ன்னு அவளுக்குப் புரிய வச்சிருக்க வேண்டாமா?”
அதுதானே, கயல்விழிக்கும் நந்தா சொல்வது சரிதான் என்று தோன்றியது.
“சரி விடுங்க நான் பார்த்துகிறேன்.”
“என்ன பார்ப்ப?”
“என்னவோ பார்ப்பேன்.”
“நீதானே…. கிழிப்ப. சரி நான் வச்சிடுடவா?”
“இருங்க உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்றவள், கல்லூரியில் எடுக்கும் மற்ற வகுப்புகளைப் பற்றிச் சொன்னாள்.
“முதல்ல ரெண்டு கிளாஸ் மட்டும் போ. அது முடிச்சிட்டு அடுத்தது சேர்ந்துக்கோ.”
“சரி, இங்கிலீஷ் கிளாஸ் போறேன். அது தவிர வேற என்ன போக?”
“டிரைவிங் க்ளாஸ் போ.”
“வண்டி ஓட்டவா? சரி போறேன்.”
“வண்டி இல்லை கார் ஓட்ட கத்துக்கோ.”
“காரா?”
“ஆமாம் அதுதான் பாதுகாப்பா இருக்கும். இதுக்கு முன்னாடி சைக்கிளாவது ஓட்டி இருக்கியா.”
“சைக்கிள் ஓட்ட தெரியாம இருக்குமா என்ன? நான் பெரிய பொண்ணு ஆகிற வரை ஓட்டி இருக்கேன். அதுக்கு பிறகு வீட்டுக்குள்ளயே ஓட்டுவேன்.”
கயல்விழி சொன்னதைக் கேட்டு நந்தாவுக்குப் பெருத்த சந்தேகம் வந்தது.
“நீ சைக்கிள்ன்னு மூன்னு சக்கர வண்டியை சொல்லலையே?”
“உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?” கயல்விழி கோபமாகக் கேட்க….
“எப்படி எப்படியோ இருக்கு. ஏன்?”
“வீட்டுக்குள்ளன்னு சொன்னது எங்க காம்பவுண்ட் சுத்தி.” அவள் சொன்ன தொனியில் நந்தாவுக்குச் சிரிப்பு வந்தது. “ஓ… சாரி.” என்றான்.
“அப்ப உனக்கு ரோட்ல எப்படி வண்டி ஓட்றதுன்னு தெரியும். அதனால நீ கார் ட்ரைவிங்கே கத்துக்கோ. பசங்களை ஸ்கூல்ல கொண்டு போய் விட எல்லாம் யூஸ் ஆகும்.”
“எந்தப் பசங்களை?”
“நம்ம பசங்களை.”
“நம்ம பசங்களா? யாரு?” ஒருவேளை அவன் குழந்தைகள் எனச் சொல்லி இருந்தால்… அவளுக்குப் புரிந்து இருக்கும். உண்மையாகவே அவளுக்குப் புரியவில்லை.
“அது இவ்வளவு தூரத்துல இருந்து சொல்ல முடியாது. நான் அங்க வந்த பிறகு சொல்றேன்.”
“நீங்க இந்த வாரம் வர்ரீங்கன்னு அத்தை சொன்னாங்க.”
அவன் வருவதைப் பற்றிச் சொன்னதும். பேச்சு அப்படியே மாறிவிட்டது. நந்தாவும் தான் தப்பியதாக நினைத்தான்.
“இல்லையே, நான் அப்படி ஒன்னும் சொல்லலையே.”
“அத்தைதான் சொன்னாங்க. அப்ப நீங்க வரலையா?”
கயல்விழியின் குரலில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிய… நந்தா அவளைச் சமாதானம் செய்தான்.
“இந்த வாரம் வர முடியாது கயல். ஆனா கண்டிப்பா சீக்கிரம் வரேன்.”
“எப்ப?”
“நீ நல்லா கார் ஓட்ட கத்துகிட்டதும், வரேன்.”
“அப்ப எப்பவும் நீங்க வரவே போறது இல்லை. அதுதான் உங்க திட்டம் எனக்குத் தெரியும்.”
“உனக்கே உன் மேல நம்பிக்கை இல்லை. நீ கத்துகிறியோ இல்லையோ? டிரைவிங் கிளாஸ் ஒரு மாசத்துல முடிஞ்சிடும்.”
“அப்படியா?”
“என்ன அப்படியா?”
“எனக்கு என்ன அதைப் பத்தி தெரியும்.”
“அப்ப தெரியாம பேசவும் கூடாது.”
“சரி நான் போன்னை வச்சிடவா?” அவள் குரல் மிகவும் சோர்வாக ஒலிக்க… நந்தாவுக்கே கஷ்ட்டமாக இருந்தது.
“எனக்கு இங்க ரொம்ப வேலை கயல். எதாவது கலவரம் பண்ண முடியுமான்னு சிலர் பார்த்திட்டே இருக்காங்க. கொஞ்சம் நாங்க விட்டாலும், திரும்பப் பத்திக்கும். அதுக்குத்தான் நான் ஊருக்கு வராம இருக்கேன்.”
“வெட்டியா சுத்திட்டு இருக்கிறவங்கதான் இந்த மாதிரி கலவரம் நடக்கக் காரணம். அவங்களைத் தூண்டி விடுறது உன் அப்பா மாதிரி ஆளுங்கதான்.”
“இப்பத்தான் ஊர் போலீஸ் கண்ட்ரோலுக்கு வந்திருக்கு. இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போனா… அப்புறம் அவனவன் வேற வேலை பார்க்க போயிடுவானுங்க.”
“சரிங்க, நீங்க வரும்போதே வாங்க.”
“உன் பரீட்சை எப்ப முடியுது கயல்.”
“அடுத்த மாசம் முடியுது.”
“கிளாஸ் சேர பணம் பத்தலைனா அம்மாகிட்ட வாங்கிக்கோ.”
“ம்ம்… சரி.”
கயலின் பரிட்ச்சை முடிந்தால் எப்படியும் அவளுக்கு ஒருமாதமாவது விடுமுறை இருக்கும். ஒன்று அவளை இங்கே அழைத்துக்கொள்ள வேண்டும். அல்லது தான் அங்குச் செல்ல வேண்டும் என நந்தா நினைத்துக் கொண்டான். போன்னிலேயே குடும்பம் நடத்துவது அவனுக்கும் கடுப்பாகவே இருந்தது.
மறுநாளே கயல்விழி வகுப்பில் சேர்ந்து விட்டாள். கல்லூரி முடிந்ததும், அரை மணி நேரம் ஓய்வுக்குப் பிறகு வகுப்புகள் தொடங்கும்.
அந்த இடைவெளியில் கான்டீன் சென்று டீ குடித்து விட்டு வந்து விடுவாள். அதுவரை சமீரா உடன் இருப்பாள். அவள் இன்னும் வீட்டிலேயே இதைப் பற்றிப் பேசவில்லை. கயல் இவ்வளவு வேகமாக இருப்பாள் என அவளே நினைக்கவில்லை.
வீட்டில் சென்று தனியாக இருப்பதற்கு, இது எவ்வளவோ பரவாயில்லை என்று கயலுக்குத் தோன்றியது.
ஆங்கிலம் படிப்பது கூட அவளுக்குச் சிரமமாக இல்லை. கார் ஓட்டுவதுதான் அவளுக்கு வரவே இல்லை. மெதுவாக ஓட்டுவது ஒன்றும் அவளுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் வண்டி சென்று கொண்டிருக்கும் போதே, கியரை மாற்று, வேகத்தை அதிகப் படுத்து என்றால், அவளுக்கு அது வருவதே இல்லை.
அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது ஒரு இளவயது பெண்தான். முதல் ஒருவாரம் வரை கல்லூரி மைதானத்தில் ஓட்டும் போது, நன்றாகவே ஓட்டி அவளிடம் பாராட்டு கூட வாங்கினாள்.