“உனக்கு எதாவது கேட்கணுமா உன் அண்ணனை கேளு. அதைவிட்டுட்டு அவன் பொண்டாட்டியை பத்தி பேசுறது எல்லாம் வேண்டாம்.”
அதற்கு மேல் அங்கு நிற்காமல் கயல் மாடிக்கு விரைய… குழலி தாரணியைத் தனது அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டார். அவர்கள் பின்னாடியே பரணி உள்ளே சென்றான்.
“தாரணி, நீ இவ்வளவு மோசமா? அண்ணியைப் பத்தி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு?”
“அவங்களைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது.”
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். நமக்குத் தெரியனும்னா அண்ணன் அதை நமக்குச் சொல்லி இருப்பார். அண்ணன் சொல்லாத எதையும் எனக்குத் தெரிஞ்சிக்க வேண்டாம்.” பரணி பேச… தாரணி குன்றி போனாள்.
“எனக்குத் தெரியும், நீ இப்படிப் பேச ராதிகாதான் காரணம்.”
“ராதிகா அப்படி எதாவது சொல்லி இருந்தாலும், என் அண்ணியைப் பத்தி என்கிட்டே பேசாதன்னு, நீ அவகிட்ட முகத்தில அடிச்சது போலச் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு அண்ணியைப் பத்தி தப்பா பேசுற?”
“இதெல்லாம் அண்ணனுக்குத் தெரிஞ்சா அவர் எவ்வளவு பீல் பண்ணுவார்.”
“அவர் என்ன சின்னக் குழந்தையா? அவருக்குத் தெரியாதது, உனக்குத் தெரியுமா? அவர் அண்ணி கூட இல்லையே தவிர, ஆனா அண்ணியை எப்படிப் பார்த்துகிறார்.”
“இதுக்கு முன்னாடி எத்தனை நாளுக்கு ஒருமுறை வீட்டுக்கு போன் பண்ணுவார்? ஆனா இப்ப அண்ணி வந்த பிறகு வாரத்தில ஒன்னு ரெண்டு நாள் தவிரத் தினமுமே போன் பண்றார்.”
“அதெல்லாம் உன் கண்ணுல படலையா?” பரணி நன்றாக வைத்து வாங்க, குழலி அவன் நன்றாகக் கேட்கட்டும் என அமைதியாக இருந்தார்.
“அண்ணனே நமம்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லையா… வெளி ஆள் சொல்லி கேட்டா, எனக்கு ஒருமாதிரி இருக்காதா?” தாரணி சொல்ல,
“உனக்கு ஏன் சொல்லணும்? அது அவங்க பெர்சனல் விஷயம். கொஞ்ச வருஷம் முன்னாடி, நான் காதலிச்ச பொண்ணு என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிட்டா. நான் செத்து போயிடலாம்ன்னு கூட நினைச்சேன்.” பரணி சொன்னதும், குழலியும் தாரணியும் அதிர்ந்து போய் விட்டனர்.
“அந்த நிலைமையில இருந்து நான் வெளிய வர, நம்ம அண்ணன்தான் காரணம். அதை அவர் இதுவரை உங்க யார்கிட்டையாவது சொல்லி இருப்பாரா?”
“யாருக்கு என்ன சொல்லனும்ன்னு அவருக்குத் தெரியும். இனி உனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்துல தலையிடாத.”
வீட்டில் செல்லப் பெண் தாரணி. அவளை இதுவரை யாருமே விட்டுக் கொடுத்து பேசியதே இல்லை. ஆனால் இன்று எல்லோரிடமுமே நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
“நான் போய்க் கயலை பார்க்கிறேன்.” என்ற குழலி மருமகளைத் தேடி சென்றார்.
கயல் மெத்தையில் குப்புற படுத்துக்கொண்டு இருந்தாள். அவள் முதுகு குலுங்குவதில் இருந்தே அழுகிறாள் எனப் புரிந்து கொண்டவர், அவள் பக்கத்தில் உட்கார்ந்து, அவள் முதுகை தட்டிக் கொடுத்தார்.
கயல் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கண்ணீரை துடைக்க.
“தாரணி பேசினதை எல்லாம், நீ மனசுல வச்சுக்காத கயல். வயசுக்கு ஏத்த அறிவே அவளுக்கு இல்லை.” என்றார்.
“நந்தா இஷ்ட்டபட்டா செய்யலாம்னு நானும் நினைச்சேன். ஆனா நந்தா பிடிகொடுக்காம இருந்தான். அப்புறம் உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டான். அந்தப் பொறாமையில ராதிகாதான் எதோ சொல்லி கொடுத்திருக்கா போலிருக்கு. அதைக் கேட்டு தாரணியும் ஏதேதோ பேசிட்டா.”
“இனி அவ அப்படிப் பேச மாட்டா கயல். நீ அழாத.” என்றவர், அங்கே அவளைத் தனியே விட்டு செல்ல மனமில்லாமல், “நீயும் என்னோட கீழ வா. அங்க உட்கார்ந்து படி வா.” என்றவர், அவளோடுதான் கீழே வந்தார்.
தாரணி அறைக்குள் படுத்திருந்ததால்… கயல் ஹாலில் உட்கார்ந்து கொண்டாள். குழலி மிகவும் களைத்துப் போய் விட்டார். வீட்டில் நடந்தது எல்லாம் அவரைக் கொஞ்சம் உலுக்கிவிட்டது.
“பரணி, எனக்கு முடியலை டா… நான் படுத்துகிறேன். நீ சாப்பாடு வெளிய வாங்கிட்டு வந்திடு.” என்றார்.
அப்படி அவர் ஒருநாளும் சொன்னதே இல்லை… எல்லோரும் அவரைப் பதட்டமாகப் பார்க்க, உள்ளே படுத்திருந்த தாரணி கூட எழுந்து வந்துவிட்டாள்.
“ஒன்னும் இல்லைடா தலைதான் ரொம்ப வலிக்குது. தூங்கி எழுந்தா சரி ஆகிடும்.” என்றார்.
கயல் அவருக்குப் பாலை சூடு செய்து அதில் கொஞ்சம் சக்கரை போட்டுக் கொண்டு வந்தாள். அதைக் குடித்துவிட்டு உள்ளே சென்று படுத்துவிட்டார். பரணி கடைக்குக் கிளம்பினான்.
“நான் சமையல் பண்றேன்.” என்றாள் கயல்.
அவள் அழுதிருக்கிறாள் எனப் பார்த்ததும் தெரிந்தது. வேறு எதிலாவது கவனம் செலுத்தினால்… அவள் கவனம் மாறும் என நினைத்த பரணி, “சரி நீங்களே பண்ணுங்க அண்ணி. ஆனா சிம்பிள்லா பண்ணுங்க போதும்.” என்றான்.
குக்கரில் சாதம் வைத்து விட்டு, கயல் ரசம் வைக்க, “நான் காய் நறுக்கவா?” எனக் கேட்டது தாரணியேதான்.
கயல் திகைத்து போய்த் திரும்பி பார்த்தாள். குழலிக்கு உடம்பு முடியவில்லை என்றதும், தாரணி கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டாள். அவள்தானே காரணம் அந்தக் குற்ற உணர்வு.
“இல்லை நான் ரசம் வச்சு முட்டைத்தான் ஊத்த போறேன்.”
“பரவாயில்லை, நான் முட்டைக்கு வெங்காயம் நறுக்கிறேன்.” என வெங்காயத்தையும் கத்தியையும் எடுத்துக் கொண்டு சென்றாள்.
பாதி வெங்காயம் கூட நறுக்கவில்லை… அதற்குள் எரிச்சல் தாங்காமல், அவள் கண்ணைத் தேய்க்க, அவளிடமிருந்து வாங்கிப் பரணி நறுக்கினான்.
“இந்தாங்க இதையும் நறுக்குங்க.” எனக் கயல் வேறு சில காய்களைக் கொண்டு வந்து வைத்தாள்.
பரணி தாரணியிடம், சாரி சொல்லு என ஜாடை செய்தான். அவள் முடியாது எனத் தலையசைக்க… கொன்னுடுவேன் என அவன் கத்தியை காட்டி மிரட்ட… கயல் இருவரையுமே கவனித்து இருந்தாள்.
சமையல் முடிந்ததும், குழலியை எழுப்பிச் சாப்பிட வைத்தனர். அவர் மிகவும் தளர்ந்தது போல் இருந்தார். எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிடும் போது, ராதிகா வந்தாள்.
“இங்க நடந்தது எதாவது அவகிட்ட சொன்ன கொன்னுடுவேன்.” எனக் குழலி மகளை மிரட்டினார். அதே போல் சாப்பிட்டதும், தாரணியை அவர் அறையிலேயே வைத்துக் கொண்டார். ராதிகா அவளிடம் சொன்னவற்றை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.
“உன் வீட்டுக்காரர் வந்ததும் அவரோட கிளம்பிட்டே இருக்கணும். நீ உன் வீட்டை பாரு. எங்க வீட்டை நாங்க பார்த்துக்கிறோம்.” தன் அம்மா சொன்னதற்கு, தாரணி அமோதிப்பாகத் தலையசைத்தாள்.
கயல் சாப்பிட்டதும், மாடியில் அவள் அறைக்கு வந்துவிட்டாள். தனிமையில் இருக்கும்போது, நடந்த எல்லாவற்றையும் யோசிக்க… தாரணி என்ன சொல்ல வந்தாள் என அவளுக்குப் புரிந்தே இருந்தது. அதை நினைத்தும் மீண்டும் ஒரே அழுகை.
“அண்ணி, போன்னை எடுங்க அண்ணன் பேசுறார்.” எனப் பரணி குரல் கொடுக்க…
எடுத்ததுமே சொல்லி விட்டான். “அழுதியா என்ன? குரல் ஏன் ஒருமாதிரி இருக்கு.”
“ஆமாம் அழுகிறாங்க. எனக்கு ஜலதோஷம்.”
“ஓ… எப்ப இருந்து?”
“இப்ப ரொம்ப முக்கியமா இது. எப்பவோ வந்திடுச்சு விடுங்க.” பொய் சொல்ல வராமல் எரிந்து விழுந்தாள்.
“ரொம்பக் கஷ்ட்டமா இருக்கா? நான் வேணா அப்புறம் பேசவா?”
அதற்குப் பதில் சொல்லாமல் வேறு கேட்டாள். “உங்களுக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம் பண்றதா இருந்ததா?”
“இதுக்குத்தான் அழுதியா?”
“கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க.”
முதலில் சிறிது விளையாட்டு காட்டுவோமா என நினைத்தவன், ஏற்கனவே அழுதிருக்கிறாள் என நினைத்து விட்டுவிட்டான்.
“அப்படி அவங்களே நினைச்சிகிட்டா நான் பொறுப்பு ஆக முடியாது.”
இந்தப் பதில் கொஞ்சம் கயலுக்கு பிடித்து இருந்தது.
“நீ கேட்டதுக்கு நான் உண்மையான பதில் சொன்னேன் இல்ல. இப்ப நீ சொல்லு எதுக்கு அழுத?”
“நான் ஒன்னும் அழுகலை.”
“சரி விடு நான் அம்மாவை கேட்டுகிறேன்.”
“ஐயோ சும்மா இருக்க மாட்டீங்களா நீங்க. ஏற்கனவே இங்க ஏகப்பட்ட பிரச்சனை, இதுல நீங்க வேற ஆரம்பிக்காதீங்க.”
“என்ன பிரச்சனை?”
தான் உளறிவிட்டது கயலுக்குப் புரிந்து தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஒன்னும் இல்லை அத்தைக்கும் தாரணி அக்காவுக்கும் சண்டை.”
“ஓ… ஆனா அதுக்கு நீ ஏன் அழுத? தாரணி உன்னை எதுவும் சொன்னாளா?”
அவன் சரியாகக் கண்டுபிடித்து விட… இனிமேல் மறைப்பது கடினம் என்று உணர்ந்தவள்,
“ஆமாம், ஆனா நீங்க எதுவும் அவங்களைக் கேட்க கூடாது.” என்றாள்.
“ஏன்?”
“வேண்டாம் விட்டுடுங்க. ஏற்கனவே அத்தை அவங்களை ரொம்பத் திட்டிட்டாங்க.”
“எத்தனை நாள் கயல் என்னை அடக்கி வைப்ப? அவ செய்தது தப்பு தானே?”
“நான் செஞ்ச தப்புக்கு முன்னாடி இதெல்லம் ஒண்ணுமே இல்லை. வேண்டாம் விட்டுங்க.” என்றவளின் குரலில் அழுகையே இருந்தது.
அவளுக்கு அதற்கு மேல் பேசமுடியாமல் போன்னை வைத்து விட… நந்தாவுக்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. என்ன நடந்திருக்கும் என அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
மாலையில் இருந்து வீடு செல்ல, தாரணி தயாராக இருந்தாள். ஆனால் வருண் அவளை அழைக்க வரவே இல்லை. எப்போது இருவருக்கும் சண்டை வந்தாலும், வருண் தான் முதலில் விட்டுக் கொடுப்பான்.
நேற்று அவள் பேசியது அவனை மிகவும் காயப்படுத்தி இருந்தது. அதனால் எப்போதும் இறங்கி வருபவன், இந்தமுறை வீராப்பாக இருந்து கொண்டான். வருணை எதிர்பார்த்து தாரணி ஏமாந்து போனாள்.
இரவு நேரம் ஆனதால்… இன்று இங்கு இருந்துவிட்டு மறுநாள் போ எனக் குழலி சொன்னார். மகளைத் தன்னுடனே படுக்க வைத்துக் கொண்டார். இப்போது எல்லாம் கயல் தனியாகவே படுத்துக் கொள்கிறாள்.
காலை வீட்டின் அழைப்பு மணி அடிக்க… வருண் தானோ எனத் தாரணி அவசரமாக எழுந்து சென்று கதவை திறக்க… வெளியே நந்தா நின்றுகொண்டு இருந்தான்.
“திடிர்னு தான் மா கிளம்பி வந்தேன். இருங்க கயலை பார்த்திட்டு வரேன்.” என மாடிப்படிகளை இரண்டிரண்டாகத் தாவி ஏறினான்.
மனைவியைக் காணப்போகும் உற்சாகம் அவன் முகத்தில் தெரிய…. அண்ணன் வந்திருப்பது எதற்காக என யோசித்த தாரணிக்கு, பதட்டமாக இருந்தது. குழலி அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.