மறுநாள் காலை குழலி வந்தபோது கயல்விழி மட்டுமே வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இன்னும் மற்றவர்கள் எழுந்துகொள்ளக் கூட இல்லை.
சனி ஞாயிறுகளில் மட்டும் வீட்டு வேலை செய்யும் பெண் காலை எட்டு மணிக்கே வந்துவிடுவார். அவர் வீடு பெருக்கி துடைத்துப் பாத்திரம் கழுவியதும் கயல்விழி சமையலை ஆரம்பித்தாள்.
பூரி செய்வோம் என நினைத்து உருளை கிழங்கை வேக வைத்துவிட்டு, மாவு பிசைந்து கொண்டு இருந்தாள். குழலி உடை மாற்றிவிட்டு வந்தவர், “நீ போ கயல் நான் பார்த்துகிறேன்.” என்றார்.
“நேத்து சின்ன அத்தையும் மாமாவும் வந்திருந்தாங்க.”
“ஓ... என்ன திடிர்ன்னு வந்திருக்காங்க?”
“சும்மாதான் வந்ததா சொன்னாங்க.”
“சகுந்தலாவோட அம்மா வீடு இந்தப் பக்கம்தான். அங்க வந்திருப்பாங்க. அப்படியே இங்கயும் வந்து தலையைக் காட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சிருக்கலாம்.”
“அவங்களுக்குச் சாப்பிட கொடுக்க எதாவது வீட்ல இருந்துச்சா”
“இல்லை. நான் ரவை புலாவும், வெங்காயப் பச்சடியும் செஞ்சேன்.”
“சாப்பிட்டுதான் போனாங்களா?.” “ஆமாம், ஆனா அவங்க உடனே கிளம்பினதுனால, நான் அவசரத்துக்குக் கொஞ்சமாதான் செஞ்சேன்.”
“ஆமாம் அக்கா. அம்மா வீட்டுக்கு வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தோம்.”
“நீங்களே எப்பவோ ஒரு தடவைதான் வருவீங்க. நான் வீட்ல இல்லாம போயிட்டேனே.”
“பரவாயில்லை அக்கா. அதுதான் உங்களுக்குப் பதில் கயல் எங்களை நல்லா கவனிச்சாளே. சின்னப் பொண்ணா இருந்தா கூட அவ்வளவு பொறுப்பு.”
“ஆமாம் சகுந்தலா.”
“அக்கா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். எதுக்கு ராதிகாவை உங்க வீட்ல தங்க வச்சீங்க?”
“அண்ணி சொல்லும்போது என்ன பண்றது சகுந்தலா?”
“எதாவது காரணம் சொல்லி தடுத்திருக்கணும். அவ நம்ம தாரணியையும் கெடுத்திடுவா. நேத்து கயல் ஓடியாடி வேலை செய்றா, இதுங்க ரெண்டும் நல்லா டிவி முன்னாடி உட்கார்ந்திட்டு கதை பேசுதுங்க.”
“ராதிகா எதோ சொல்ல, அதுக்குத் தாரணி கயலை பார்த்து நக்கலா சிரிக்கிறா. எனக்கு ஒன்னும் சரியாப்படலை. உங்க மருமகள் நல்ல குணமான பொண்ணா தெரியிறா… இவங்க இப்படிப் பண்ணா, நாளைக்கு அவ மாறிட்டா?”
“ராதிகாவுக்கு என்ன வந்தது? அவள் எதாவது கலகம் பண்ணி வச்சிட்டு போயிடுவா. ஆனா தாரணிக்கு என்னைக்கும் அவங்க அண்ணன் வேணுமில்லையா? அவளைப் பார்த்து நடந்துக்கச் சொல்லுங்க.”
“ம்ம்… சரி நான் பார்த்துகிறேன் சகுந்தலா.”
“என் மேல கோபமா அக்கா.”
“இல்லை, நீ எங்க நல்லதுக்குதான் சொல்ற. எனக்குப் புரியுது. நான் பார்த்துகிறேன்.”
தொலைபேசியை வைத்துவிட்டு வந்தவர், பூரிக்கு எண்ணெய் காயவைத்து விட்டு, மாவை எடுத்து தேய்க்க ஆரம்பித்தார். வேலை செய்தாலும், சகுந்தலா சொன்னதை யோசித்தபடியே இருந்தார்.
அப்போதுதான் தாரணி உறக்கத்தில் இருந்தே எழுந்து வந்தாள்.
“அம்மா, வந்துடீங்களா? ஐ ! பூரியா. எனக்கு ரொம்பப் பசிக்குது. நான் நைட் சரியாவே சாப்பிடலை தெரியுமா?”
தாரணி பாட்டுக்குப் பேசிக்கொண்டு இருக்க… குழலி பதில் சொல்லாமல் பூரி சுட்டு எடுத்தார்.
“நீ போய் முதல்ல குளிச்சிட்டு வா… கயலுக்குப் பசிக்கும் அவ சாப்பிடட்டும் நகரு.” என்றார்.
உடனே தாரணியின் முகம் சுருங்கி விட்டது. “நானும்தான் இன்னும் சாப்பிடலை.”
“நீ இப்பத்தான் தூங்கி எழுந்து வர… அவ காலையிலேயே எழுந்து வேலை பார்த்திட்டு இருந்திருக்கா… வித்யாசம் இருக்கு. இப்ப புரியுதா?” என்றவர், கயலிடம், “நீ பூரி எடுத்திட்டுப் போய்ச் சாப்பிடு கயல்.” என்றார்.
கயல் அவளுக்கு ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு சென்று டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டாள். உண்மையாகவே அவளுக்கு மிகவும் பசித்து விட்டது.
தாரணி அங்கயே நிற்க, அதைக் கவனித்த குழலி, “சீக்கிரம் போய்க் குளிச்சிட்டு வா… அப்படியே ராதிகாவை வர சொல்லு. நேரத்துக்கு வந்து சாப்பிட கூட அழைக்கணும்.” என்றவர், கயல்விழிக்கு பூரி எடுத்துக் கொண்டு சென்றார்.
குளித்து விட்டு வந்து பேசுவோம் என நினைத்தவள், அப்போதைக்கு அமைதியாகச் சென்றாள். ஆனால் குழலி மருமகளைக் கவனிப்பதை பார்த்து,
“ரொம்ப யோக்கியமான மருமகதான்.” என நினைத்தவள், எதிரில் வந்த ராதிகாவை குறிப்பாகப் பார்க்க… அவள் பதிலுக்கு நக்கலாகச் சிரிக்க…இந்த பார்வை பரிமாற்றத்தை குழலி கவனித்து விட்டார்.
இருவரையும் அவர் முறைத்து பார்க்க… இருவரும் வேகமாகப் பார்வையை மாற்றினர்.
ராதிகா நேராகச் சென்று சாப்பிட உட்கார… இவளுக்கு என்ன நாம வேலைக்காரியா என நினைத்த குழலி, “நான் போய்ப் பூரி சுடுறேன். நீயே வந்து எடுத்துக்கோ ராதிகா.” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
ராதிகா அலட்சியமாகத் தோளை குலுக்கிவிட்டு எழுந்து சமையல் அறைக்குச் சென்றாள். கயல் சாப்பிட்டதும், தன் தட்டை கழுவி வைத்து விட்டு, படிக்கச் சென்று விட்டாள்.
ராதிகா சாப்பிடும்போது பரணி வந்துவிட, அவனுக்குப் பரிமாறிய குழலி, தாரணிக்கும் பூரி சுட்டு வைத்து விட்டார். அவள் குளிக்கச் சென்றால், வர ஒரு மணி நேரமாவது ஆகும்.
தாரணி குளித்துவிட்டு வரும்போது, ராதிகா வெளியே செல்ல தயாராகி இருந்தாள்.
“எங்க போற ராதிகா?”
“என் ப்ரண்ட் சினிமாவுக்குக் கூப்பிட்டா. சரி வரேன்னு சொல்லிட்டேன். நீயும் வரியா?” தாரணி பதில் சொல்லும் முன், “அவ வேண்டாம். நீ கிளம்பு.” என்றார் குழலி. ராதிகா சென்றதும், தாரணிக்கு உணவை எடுத்து வைத்தார்.
“அம்மா, நேத்து வீட்ல என்ன நடந்தது தெரியுமா? திரும்ப என் வீட்டுக்காரருக்கும் எனக்கும் சண்டை. யாரால தெரியுமா எல்லாம் உங்க மருமகளால்.”
“நீ வாயை மூடு. நீ இப்படி எதாவது பிரச்சனையை இழுத்து வைப்பேன்னு தான். நான் கல்யாணம் முடிஞ்சதும் ஓடி வந்தேன்.”
“நான்தான் இந்த வாரம் வராத, அடுத்த வாரம் வான்னு தானே சொன்னேன்.”
“உன் சித்தி சகுந்தலா உன்னைப் பத்தி என்கிட்டையே குறை சொல்றா? அவ சொல்ற மாதிரிதான் நீ நடந்துகிட்ட.”
“இப்படித்தான் பெரியவங்களை மரியாதை இல்லாம பேசுவியா? இப்பத்தான் எனக்குப் புரியுது, நீ வருணையும் இப்படித்தான் பேசுற, அதுதான் அவருக்கு அவ்வளவு கோபம் வருது.”
எப்போதும் குழலி மகளுக்குத்தான் பரிந்து பேசுவார். ஏற்கனவே வருண் சொன்னது, இப்போது சகுந்தலா சொன்னது எல்லாம் கேட்டதும், இனியும் மகளைக் கண்டிக்கவில்லை என்றால்… தாரணி தன் வாழ்க்கையைத் தானே பாழாக்கி கொள்வாள் எனப் புரிந்து கொண்டார்.
“நீங்க ஏன் என்னைத் திட்றீங்க?”
“நீ ஏன் உன் புருஷனுக்கும், உனக்கும் நடுவுல கயலை கொண்டு வர?”
“நான் கொண்டு வரலை, உங்க மருமகன்தான் அவளுக்குப் பரிஞ்சு பேசுறார்.”
“அதுக்குக் கயல் என்ன பண்ணுவா? நீ அவளைப் பார்த்து முறைக்கிறது, நக்கலா சிரிக்கிறது, இதெல்லாம் இன்னையோட விட்டுட்டு.”
“நீங்க உங்க மருமகளுக்குச் சப்போர்ட் பண்ணி பேசுற அளவுக்கு அவங்க யோக்கியமானவங்க இல்லை.”
“வாயை மூடு தாரணி.”
“ஏன் வாயை மூட சொல்றீங்க? வீட்டை விட்டு ஓடிப்போய்” அதற்கு மேல் தாரணியைப் பேச விடாமல், பட்டென்று அவள் கன்னத்தில் குழலி அடித்து விட்டார்.
ஏற்கனவே நேற்றில் இருந்து புகைந்து கொண்டிருந்த தாரணியின் மனது, அவள் அம்மா கயலுக்குப் பரிந்து பேசியதும், எறியவே ஆரம்பித்து விட்டது.
தாரணியின் குணம் தெரிந்துதான் குழலி, அவள் போக்கிலேயே போவார்.
அவளுக்கு ஒன்று என்றால், மற்றவர்களுக்குப் பத்தாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவள். ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்பதே அவளுக்குக் கிடையாது.
பரணியும் அவன் அறை வாயிலில் நின்று கேட்டுக் கொண்டு இருந்தவன், தாரணியைத் திட்டுவதற்காக ஒரு எட்டு வைத்தவன், கயல்விழி நிற்பதை பார்த்ததும், திரும்பி அறைக்குள் சென்றுவிட்டான்.
தன்னைப் பார்த்தால் கயல்விழி மேலும் சங்கடப்பட்டுப் போவாள் என்பதே காரணம். தன் மாமியாருக்கு மதிய சமையலுக்கு உதவுவதற்காக வந்தவள், எல்லாவற்றையும் கேட்டு இருந்தாள்.
கயல்விழியின் முகம் ரத்தமாகச் சிவந்து கண்ணெலாம் கலங்கி விட்டது. குழலி எதோ சொல்ல வந்தவர், அவளைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினார்.
அவள் நின்ற கோலமே அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டாள் என உணர்த்தியது. அவருக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை.
தன் அம்மா அடித்த அதிர்ச்சியில் தாரணிக்கு பேச்சு நின்று போய்விட்டது. ஆனால் குழலி அப்போதும் அவளை விடவில்லை.
“இங்க பாரு இது எங்க குடும்ப விஷயம். இதுல நீ தலையிடாதே.”
“எங்க வீட்ல எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்க நல்லாத்தான் இருக்கோம். நீ ஏன் தேவையில்லாம பிரச்சனை பண்ற?”
“எப்படி மா இதை இவ்வளவு ஈஸியா எடுத்துக்றீங்க? ஆனா என்னால எடுத்துக்க முடியாது.”
“உன்னை யாராவது கேட்டாங்களா? அப்படி எடுத்துக்க முடியாதுன்னா, இனிமே இங்க வாராத. உன் வீட்லயே இருந்துக்கோ.” பட்டென்று குழலி சொல்லிவிட… தாரணி அதிர்த்துப் போய்ப் பார்த்தாள்.