மறுநாள் அதிகாலையே ராமநாதபுரம் வந்து அடைந்தவர்கள், அங்கிருந்த ஒரு டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
இதற்கு முன் கயல் வந்த வீடு இல்லை. இது வேறு வீடு. கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றால், பாதை எங்கிலும் இருபக்கமும் செடிகள் வைத்து, கொஞ்சம் தூரம் சென்ற பிறகுதான் வீடு வந்தது.
ஒரு வீடு அல்ல… நான்கு வீடுகள் சுற்றிலும் இருந்தது. அந்தக் குடியிருப்பில் இருப்பவர்களும் காவலர்கள்தான் என அங்கிருந்த போலீஸ் வாகனங்களே காட்டிக்கொடுத்தது.
அங்கிருந்த போலீஸ் வாகனங்களைத் துடைத்துக் கொண்டிருந்த ஓட்டுனர்கள், நந்தாவை பார்த்ததும் சல்யூட் வைத்தனர். ஒருவர் வேகமாக வந்து அவனிடம் இருந்த பெட்டியை வாங்கினார்.
“இருக்கட்டும் பரவாயில்லை முருகேசன்.” என்றவன், பெட்டியை அவனே கொண்டு சென்றான்.
வீடு மிகவும் வசதியாக இருந்தது. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு. சில நாட்களுக்கு முன்புதான் பெயிண்ட் அடித்து இருக்க வேண்டும், இன்னும் அதன் வாசம் போகவில்லை.
வீடு மட்டும் மாற்றி இருந்தான். ஆனால் இன்னும் சாமான்களை அடுக்கவில்லை. கயல் ஜன்னல்கள் எல்லாவற்றையும் திறந்து விட்டு, வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
“ஏற்கனவே கழுவின வீடுதான்.”
“அறையும் குறையுமா பண்ணி இருக்காங்க. எனக்கு நான் பண்ணாத்தான் திருப்தியா இருக்கும்.”
“இந்த வீடு இப்பத்தான் காலியாச்சு. நான் திடிர்னு கிளம்பினதுனால என்னால எதுவும் பண்ண முடியலை.” கயல் வேலை பார்த்துக்கொண்டே அவன் பேசுவதைக் கேட்டு இருந்தாள்.
“பக்கத்து வீட்ல வேலை செய்றவங்களை வர சொல்லி இருக்கேன். அம்மா வீட்ல போல.. இங்கயும் பாத்திரம் விளக்க, துணி துவைக்க ஆள் வச்சுக்கோ. அவங்களையே கடைக்கும் போயிட்டு வர சொல்லு. உனக்கும் துணைக்கு ஒரு ஆள் இருந்தது போல இருக்கும்.”
“ரெண்டு பேருக்கு நான் செய்ய மாட்டேனா.”
“புரிஞ்சுக்கோ கயல், இங்க இருக்கிறவங்க எல்லாம் பெரிய ஆபீசர்ஸ். நாமளும் அவங்களுக்கு எத்த மாதிரிதான் இருக்கணும்.”
“சரி, இப்ப காலையில காபி டிபன்னுக்கு என்ன பண்றது?”
“மளிகை சாமான் எல்லாம் இருந்ததே?”
“ஒரு உப்புமா பண்ணனும்னா கூட வெங்காயம் வேணும்.”
“நான் ஏற்பாடு பண்றேன்.” என்றவன், முருகேசனை அழைக்க வெளியே செல்ல, அதற்குள் அவன் உடன்பணிபுரியும் காவலர் வந்தார்.
“இன்னைக்கு எங்க வீட்ல இருந்து உங்க ரெண்டுபேருக்கும் சாப்பாடு வரும். என் மனைவி தான் சொல்ல சொன்னா.”
“இருக்கட்டும் சார் பரவாயில்லை.”
“ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க? நாம பக்கத்துக்குப் பக்கத்தில இருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த உதவி கூடச் செய்யலைனா எப்படி?”
“அப்படியெல்லாம் இல்லை. என் பொண்டாட்டி இருக்கிற ஸ்பீடுக்கு அவளே சமைச்சிடுவான்னு நினைக்கிறேன்.”
“ஓ அப்படியா?”
“ஆமாம் வந்து இறங்கினதுல இருந்து வேலைதான் பார்த்திட்டு இருக்கா.”
“சரி அப்ப ஓகே. எதாவது வேணும்னா கேளுங்க.”
“ரொம்பத் தேங்க்ஸ் தினேஷ்.”
அவர் சென்றதும் முருகேசனிடம், “இங்க பால் எங்க கிடைக்கும்?” என அவன் கேட்க,
“வீட்டுக்கே ஒருத்தங்க வந்து ஊத்துவாங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்தில வருவாங்க.”
“சரி வந்தா நம்ம வீட்டுக்கும் வர சொல்லுங்க.”
“சரி சார் சொல்றேன். கடைக்குப் போகணும்னா சொல்லுங்க சார் போயிட்டு வரேன்.” என அவரே கேட்டார். அவருக்கு நன்றாகத் தெரியும், தனக்குக் கீழ் வேலை செய்பவர்களை, தன் தனிப்பட்ட வேலைகளுக்கு, நந்தா எப்போதுமே அழைக்க மாட்டான்.
“இல்லை வேண்டாம் நான் பார்த்துகிறேன். இங்க பக்கத்துல கடை எங்க இருக்கு?”
முருகேசன் விவரம் சொல்ல, கேட்டுக் கொண்ட நந்தா உள்ளே சென்றுவிட்டான்.
கயல் அதற்குள் வீட்டை துடைத்துவிட்டு, குளிக்க உடைகள் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.
“குளிக்கப் போறியா?”
“ஆமாம்.”
“வீட்டுக்கே ஒருத்தவங்க பால் கொண்டு வருவாங்களாம். நம்ம வீட்டுக்கும் வர சொல்லி இருக்கேன்.”
“சரி.”
“நான் போய் வெங்காயம் வாங்கிட்டு வரவா?” என்றவனைக் கயல் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
அதற்குள் முருகேசனே அந்தப் பெண்மணியை அழைத்து வந்துவிட்டார். அவர் கூடையில் நிறையக் காய்கறிகள் வைத்திருக்க, கயல் அவளுக்குத் தேவையானது மட்டும் வாங்கிக் கொண்டாள்.
“நாளைக்கு வர வா மா.”
“சரி வாங்க.”
கயல் குளித்து விட்டு வந்த போது, நந்தா பொருட்களை அந்தந்த இடத்தில் அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தான்.
“நான் பண்ண மாட்டேனா, நீங்க ஏன் பண்றீங்க?”
“இருக்கட்டும் நீயே எவ்வளவு வேலை பண்ணுவ? பால் வாங்கி வச்சிருக்கேன் பாரு.”
பால் பாத்திரத்தை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.
“என்ன இவ்வளவு வாங்கி வச்சு இருக்கீங்க?”
“அவங்க ஒரு லிட்டரா, ரெண்டான்னு கேட்டாங்க. எனக்குத் தெரியலை, அதனால நிறையவே வாங்கிட்டேன். உடனே நீங்க எப்படிப் போலீஸ் ஆனீங்கன்னு கேட்காத?”
“என்னையே நீ மிரட்டுற?” என நந்தா செல்லமாக அவளை முறைத்துக் கொண்டு சென்றான்.
இருந்த ஒரு விநாயகர் படத்தைத் துடைத்தவளுக்கு, வெளியே செடியில் செம்பருத்தி பூவை பார்த்த நியாபகம் இருக்க… அதைப் பறிக்கச் சென்றாள்.
“பூ எடுத்துகிட்டுமா?” அங்கிருந்த முருகேசனிடம் அவள் கேட்க,
“எடுத்துக்கோங்க மா…” என்றார்.
சாமிக்கு பூ போட்டு விளக்கு ஏற்றி வைத்தவள், ஊதுபத்தியை தேட, ஒன்றும் கிடைக்கவில்லை. சரி என்று பாலைக் காய்ச்ச சென்றாள்.
பால் காய்ச்சி கொண்டு வந்து சாமி படத்தின் முன்பு வைத்து விட்டு, உப்புமா செய்ய ஆரம்பித்தாள். காய்கறிகள் இருந்ததால் அதையும் சேர்த்துக்கொண்டாள்.
சட்னி செய்ய மிக்ஸியை காணவில்லை. சிறிது நேரம் தேடி பார்த்தவள், வேற எங்கையும் இருக்கா? இல்லைனா இல்லவே இல்லையா? எனச் சந்தேகம் வர, கணவனைத் தேடி சென்றாள்.
அவன் இன்னும் குளித்து விட்டு வரவில்லை. “இவ்வளவு நேரமா குளிப்பாங்க?” என நினைத்தவள், வெளியே இருந்தே கேட்டாள்.
“என்னங்க மிக்ஸி இருக்கா?”
அப்போதுதான் குளித்து விட்டு துடைத்துக் கொண்டு இருந்தான். கயலின் குரல் கேட்டதும், அவனுக்குக் குதுகுலமாகிவிட்டது. துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு வெளியில் வந்தான்.
கணவனை அந்தக் கோலத்தில் எதிர்பார்க்காத கயல் திகைத்து விழிக்க…
“என்ன கேட்ட?” என அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அறையில் இருந்த ஜன்னலை மூடினான்.
உடை மாற்றுவதற்காக ஜன்னலை மூடுகிறான் என நினைத்தவள், வெளியே செல்ல திரும்ப, அவள் கைபிடித்து இழுத்தவன், அவளை இறுக்க அனைத்துக் கொண்டான்.
கயல் எதோ மறுப்பாகச் சொல்ல வர, அவளைப் பேச விடாமல் அவள் இதழ்களைச் சிறை செய்தவன், நீண்ட நேரம் சென்று விட்டபோது, அவளின் இதழ்கள் சிவந்து இருந்தது.
கயலின் முகத்தை மென்மையாக வருடியவன், “கோபமா…” எனக் கேட்க, இல்லை என்று தலையசைத்தவள், அவன் வெற்று மார்பில் சாய்ந்துகொள்ள… நந்தாவுக்கு அவனைக் கட்டுபடுத்திக் கொள்வது, பெரிய பாடாக இருந்தது.
இருவரும் சிறிது நேரம் அப்படியே இருக்க, வெளியே வாகனம் கிளம்பும் சத்தம் கேட்டு விலகினர்.
கயல் கேட்க வந்ததை மறந்து செல்ல, “அலமாரியில கீழ் தட்டில இருக்கு. என்ன செய்யப் போற?” எனக் கேட்டான்.
“சட்னி அரைக்கணும்.” என்ற போதுதான் தேங்காய் இல்லை என்பது நியாபகத்துக்கு வர…. அவசரமாகத் தக்காளி சட்னி செய்தாள்.
நந்தா வந்ததும் இருவரும் சாமி கும்பிட்டு விட்டு சாப்பிட்டனர்.
“ரொம்ப நல்லா இருக்கு. வந்ததுல இருந்து வேலை பார்க்கிற. சாப்பிட்டு ரெஸ்ட் எடு. மதியம் சிம்பிள்லா எதாவது பண்ணு போதும். நான் வர ரெண்டு மணி ஆகும்.”
“ம்ம்...”
“இந்த இடம் ரொம்பப் பாதுகாப்பானதுதான். இருந்தாலும், கவனமா இரு. யாராவது வந்தா கதவை திறக்காம ஜன்னல் வழியாவே பேசு.”
“சரிங்க.”
நந்தா அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருதபோது, வேலை செய்யும் பெண் வர, “இவங்கதான் நான் சொன்னவங்க.” என நந்தா அறிமுகம் செய்து வைத்தான்.
கயல் அவரை வாங்க எனச் சமையல் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“பாத்திரம் கழுவிட்டு, துணி துவைச்சிடுங்க.”
“சரிங்க மா… ஆனா மத்த வீட்ல வேலை முடிச்சிட்டு வரட்டுமா.”
“சரி போயிட்டு வாங்க.”
“அய்யா இருக்கும்போதே உங்களைப் பார்த்திட்டுப் போகத்தான் வந்தேன். அங்க வேலை முடிச்சிட்டு வரேன்.”
“சரி ஒன்னும் அவசரம் இல்லை. உங்க பேர் என்ன?”
“புஷ்பா.”
அவர் சென்றதும், நந்தாவும் விடைபெற்று செல்ல, எடுத்து வந்த துணிகளை அலமாரியில் அடுக்கி வைத்தாள். சுமார் பதினோரு மணி அளவில் வேலை செய்யும் பெண் வர, முதலில் துணியைக் கொடுத்து ஊற வைக்கச் சொன்னாள்.