‘ஹும்! அதுக்கு இதே வேலை!’ அவர் சன்னமாய் முனகுவது காதில் விழுந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவள் நிற்க, சில நிமிடங்களிலேயே ஒரு பைக் கல்லூரி உள்ளே நுழைந்தது.
அதை தடுத்து நிறுத்திய வாட்ச்மேன், ‘யாரென?’ விசாரிக்க, “நான் ஷ்யாமளன்! கெஸ்ட்’டா வந்துருக்கேன்!” என்று அவன் சொன்னது இரு பெண்களின் செவிகளிலும் நன்றாய் கேட்க,
‘பைக்’ல வர கெஸ்ட்’ட இப்போதான்ப்பா பாக்குறேன்!’ என்ற நமட்டு சிரிப்போடு நின்றிருந்த ஜனனியின் வாய் தன்னால் பிளந்தது.
பளிச்சென சிரித்தபடி நேராய் நடந்து வந்தவன், “ஹலோ” என கரம் நீட்ட, எச்.ஓ.டி அதை பற்றி குலுக்கினார். இயல்பாய் அவன் கரம் அவளிடம் அடுத்து நீண்டது.
இவள் தான் ‘பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை பார்த்ததை’ போல வாயை பிளந்துக்கொண்டு நிற்கிறாளே!
“ஹலோ?” என்றான் மீண்டும்.
அவள் அப்படியே நிற்க, எச்.ஓ.டி அவள் கரத்தில் இருந்த பொக்கே’வை பிடுங்கினார்.
அதில் சுயம் பெற்ற ஜனனி திருதிருவென விழிக்க, பொக்கே அவன் கைகளில் இருந்தது அப்போது.
“ரொம்ப டயர்டா இருக்கீங்க போல… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமா?” என்றார் எச்.ஓ.டி!
அவனும் மறுக்காமல், “அவசரமா வந்தேன்! கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிட்டு போனா தேவலாம்!” என்றுவிட, ப்ரின்சி அறை நோக்கி இருவரும் போக, நாய்க்குட்டியை போல அவன் பின்னே ஓடினாள் ஜனனி.
அறைக்குள் அவனை அமர வைத்த எச்.ஓ.டி, “டேக் யூர் டைம்… இன்னும் ஸ்பீச் தான் போய்க்கிட்டு இருக்கு!” என்றார்.
அவர் தயங்க, “ஆமா மேம்! நீங்க போங்க!” என்றாள் ஜனனி. இருவரும் ஒரு சேர அவளை நோக்கினர்.
அதில் சுதாரித்தவள், “இல்ல மேம்! ப்ரோக்ராம் எல்லாம் அடுத்து செய்யணும்! நீங்க தானே இன்சார்ஜ்… ஒருமுறை கேர்ள்’ஸ் ட்ட பேசிடலாமே!” என்றவள்,
“நான் கூட இருந்து சார்’ர அழைச்சுட்டு வரேன்!” என்றாள் நல்லப்பிள்ளையாய்.
ஷ்யாமளனுக்கு எந்த மறுப்பும் இல்லை! ஆனாலும் அவர் தயங்க, “வொர்க் இருந்தா பாருங்க மேம்! எனக்காக நிக்காதீங்க!” என்று அவன் திடமாய் சொல்ல, ஜனனியை தனியே அழைத்து ஆயிரம் மரியாதை நடைமுறைகள் சொல்லி, ஒரு காபியோடு அனுப்பி வைத்தார் எச்.ஓ.டி.
அவள் நீட்டியதும், “ஓ! தேங்க்ஸ்!” என பெற்றுக்கொண்டவன் அதன் பின்னே பேசவே இல்லை.
அருகே ஒரு பெண் நிற்கிறாள் என்றுக்கூட அவன் நிமிரவில்லை. அவன் அருகே சற்று தள்ளி நின்று அவன் செய்கைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தாள் ஜனனி. என்னவோ அந்த அறைக்குள் அவன் மட்டுமே இருப்பதை போல இருந்தது அவன் செய்கை.
காபி குடித்து முடித்ததும் கப்பை எங்கே வைப்பது என தடுமாற, ‘குடுங்க!’ என்று அருகே சென்றாள் அவள்.
“தேங்க்ஸ்!” என்றவன், “காஃபி நல்ல இருக்கு!” என்றான்.