மூன்று மாதங்கள் கடந்த நிலையில், நந்தா வடிவேலுவின் மகன் நல்லதம்பியை கஞ்சா கடத்தும் வழக்கில் கைது செய்து இருந்தான்.
அன்பரசு, வாசுவுக்கு அவர் பேசி வைத்த இடத்திலேயே திருமணம் நிச்சயம் செய்து இருந்தார். இந்த இரண்டு விஷயமுமே வடிவேலுவை இன்னும் கோபப்படுத்தி இருந்தது.
அன்று வெளிக்கிழமை என்பதால், காலையில் தலைக்குக் குளித்துவிட்டு, நந்தா அலுவலகம் சென்றதும், கயலும் ஷில்பாவும் பக்கத்தில் இருந்த அம்மன் கோவிலுக்குச் சென்றனர்.
இருவரும் சேர்ந்து கடைக்குச் செல்வது, கோவிலுக்குச் செல்வது எல்லாம் அவ்வபோது நடப்பதுதான். அன்றும் அது போல் கோவிலுக்குச் சென்றனர்.
கயல் கோவில் வாசலில் இருந்த கடைகள் முன்பு நின்றவள், எந்தக் கடையில் பூஜைக்குத் தேவையான சாமான்கள் வாங்குவது என்பது போல் பார்க்க, அப்போது அவளுக்கு அருகில் ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
திரும்ப அவள் கோவிலில் இருந்து வெளியே வந்தபோதும், அவன் அவர்களைப் பின் தோடர்ந்து வருவதைப் பார்த்தாள்.
இன்று மட்டும் இல்லை. இதற்கு முன்பும் அவனைப் பார்த்த நியாபகம் இருந்தது. அப்படியென்றால் இவன் நம்மைப் பின் தொடருகிறானா? எதற்காக? என எதுவும் அவளுக்குப் புரியவில்லை.
கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது. ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
“கடைக்குப் போவோமா?” என்ற ஷில்பாவிடம், “இன்னொரு நாள் போவோம்.” என்றவள், நேராக வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அவன் வீடுவரை பின்தொடர்ந்து வருவதைக் கவனித்தாள். சிறிது நேரம் சென்று, சாதாரணமாக வாசல்பக்கம் செல்வது போல் சென்று பார்த்தவள், அவன் இன்னமும் சற்று தள்ளி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
அன்று மதியம் நந்தா சாப்பிட வந்தபோது, கயல் அவனிடம் சொல்ல, கேட்டவன் பதட்டபடவில்லை.
நிதானமாக வாயில் இருந்ததை மென்றபடி, “அவன் உங்க அப்பாவோட ஆளு. உனக்காக உன் அப்பா வச்சிருக்கார். அவன் ஒரு மாசமா இங்கதான் இருக்கான். நைட் நான் வீடு திரும்பியதும் போயிடுவான்.” என்றான்.
“எதுக்கு?” கயல் கேட்க,
“அதை நீ உங்க அப்பாகிட்டதான் கேட்கணும்.” என்றான் நந்தா.
“ஏன் நீங்க கேட்க மாட்டீங்களா?”
“நீயேன் இப்ப கோபப்படுற? நான்தான் கோபப்படனும். உன் அப்பாவுக்கு என் மேல நம்பிக்கை இல்லாமதான் உன் பாதுகாப்புக்கு ஆள் வச்சிருக்கார்.”
“சரி நீங்க ஏன் அவர் மேல கோபப்படல?”
“ஏற்கனவே உன் அப்பா என்னை வில்லனை போலப் பார்த்து வைப்பார். அவர் உனக்குப் பாதுகாப்புன்னு நினைச்சு எதோ பண்றார். நான் எதாவது சொன்னா, இன்னும் என் மேல பாய்வார். அப்புறம் நீ உங்க அப்பாகிட்டதான் கோபத்தைக் காட்டுவ. அதுதான் கண்டுக்காம விட்டுட்டேன்.”
நந்தா என்ன சொன்னபோதும், கயலுக்கு மனம் ஆறவில்லை. அவன் அலுவலகத்துக்குச் சென்றதும், அவள் தன் பிறந்த வீட்டுக்கு கிளம்பினாள்.
நந்தாவின் அலுவலகத்திற்கு அழைத்தவள், அவனிடம் “எனக்குக் கார் வேண்டும்.” என்றாள்.
“எங்கப் போற?” நந்தா கேட்க, அவள் பதில் சொல்லவில்லை.
“உங்க வீட்டுக்கு போறியா? சரி போயிட்டு வா. ஆனா டென்ஷன் ஆகாத. வயித்துல குழந்தை இருக்கு மறந்திடாதா.” என்றவன், அவள் கேட்டபடி காரை அனுப்பி வைத்தான். முருகேசன் தான் ஓட்டுனர். தெரிந்தவர் என்பதால் கயலும் நிம்மதியாகச் சென்றாள்.
வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டு, அன்பரசு எட்டி பார்க்க, கயல் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“பத்மா, கயல் வருது பாரு.” எனக் குரல் கொடுத்தவர், மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
நம்ப முடியாத ஆச்சர்யத்தில் பத்மாவும் வந்து பார்த்தார். “வா கயல், இவ்வளவு வேகமாவா நடக்கிறது? உட்காரு நான் தண்ணி கொண்டு வரேன்.” என்றதும், கயலும் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.
அன்று பார்த்து கீதா வேறு அங்கு இருந்தாள். அவளுக்கு ஏற்கனவே கயல் என்றால் ஆகாது. அதிலும் இப்போது புருஷன் ஜெயிலில் வேறு இருக்க, அதற்குக் காரணம் நந்தா என்பதால், அவள் ஆத்திரமாகக் கயலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கயலுக்கு மேடிட்டு இருந்த வயிறு நன்றாகவே தெரிந்தது. அவளுக்குச் சற்று பெரிய வயிறுதான். தான் மட்டும் கஷ்ட்டப்பட, இவள் திருமணம் செய்து கொண்டு நன்றாக அல்லவா வாழ்கிறாள் எனக் கீதாவுக்கு இன்னும் பொறாமையாக இருந்தது.
பத்மா கொடுத்த தண்ணீரை கயல் குடித்துக் கூட முடிக்கவில்லை. அதற்குள் தொடக்கி விட்டாள்.
“இங்க எதுக்கு வந்த? இன்னும் யாரை ஜெயில்ல போடலாம்னு உன் புருஷன் பார்த்திட்டு வர சொன்னானா?” எனக் கீதா கேட்க, ஏற்கனவே கோபத்தில் வந்த கயலுக்கு நந்தாவை பற்றிப் பேசியதும், தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியவில்லை.
“என் புருஷன் காரணம் இல்லாம யாரையும் ஜெயில்ல போடலை. அவர் அவருடைய வேலையைத்தான் செஞ்சார். சும்மா இருந்த உங்க புருஷனை வேணுமுன்னே ஜெயில்ல போட்ட மாதிரி சொல்றீங்க.”
“என் புருஷன் எப்படியும் இருப்பார். அதுக்காக உன் புருஷன் அவரை ஜெயில்ல போட்டுடுவானா? இருடி அவர் வெளிய வந்ததும், உனக்கு இருக்கு.” கீதா மிரட்ட,
“போதும் நிறுத்துங்க. உங்களாலதான் என் அண்ணன் ஜெயில்ல இருக்கார். பொண்டாட்டியா நீங்க என்ன செஞ்சிருக்கணும்? நீங்க செய்றது தப்புன்னு ஒரு நாளாவது அவருக்குச் சொல்லி இருப்பீங்களா? எப்பவும் அவர் என்ன தப்பு செஞ்சாலும் ஒத்து ஊதுறது.”
“இதுல கடமையைச் செஞ்ச என் புருஷனை குறை சொல்வீங்களா?”
கயல் திரும்பப் பதில் கொடுப்பாள் எனக் கீதா எதிர்பார்க்கவே இல்லை. ஏன் அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.
“என்ன திமிரு டி உனக்கு? முதல்ல வெளியப் போ.” கீதா சொல்ல, அன்பரசுவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“வீட்டுக்கு வந்தவகிட்ட நீதான் சண்டை போடுற. முதல்ல நீ உள்ளப் போ.” என்றார்.
“நான் ஒன்னும் விருந்து சாப்பிட வரலை.” கயல் சொல்ல, எல்லோரும் அவளைப் பார்த்தனர்.
“என்னைப் பாதுகாக்க என் புருஷனுக்குத் தெரியும். நாங்க யாருக்கும் பயந்து வாழ, அவர் எந்தத் தவறான வேலையும் செய்யலை. தப்புச் செஞ்சவங்கதான் பயப்படனும். நாங்க ஏன் பயப்படனும்? அதனால் காவலுக்கு வச்ச ஆளை எடுத்திடுங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்.” என்றவள், திரும்பி வாசலை நோக்கி சென்றாள்.
“என்ன கயல் இப்படி வந்ததும் கிளம்புற?” பத்மா கேட்க,
அவர் சொன்னதைக் கேட்டு நின்ற கயல், “ஆமாம் அப்படித்தான். உங்களுக்கு அதுல என்ன வருத்தம்?” எனக் கேட்டாள்.
அன்பரசு பதில் சொல்லாமல் மெளனமாக நிற்க, அவரிடம் வந்தவள்,
“நான் என்ன தப்புச் செஞ்சிருந்தாலும், நீங்க என்னை விட்டுடலாமா? நீங்க என்னை விட்டுடீங்கப்பா. ஆனா அவர் என்னை எப்பவும் விடமாட்டார்.” என்றவள், வேகமாகத் திரும்பி சென்றாள்.
“கயல் நில்லு.” அன்பரசு சொல்ல, கயல் நிற்காமல் சென்றாள். அவளுக்குத் தான் காரில் வந்தது எல்லாம் நினைவில் இல்லை. அழுதுகொண்டே ரோட்டில் நடந்து சென்றாள். அன்பரசு அவள் பின்னே சென்றார்.
இவ்வளவு சீக்கிரம் அவள் அம்மா வீட்டில் இருந்து வருவாள் என எதிர்ப்பார்க்காத முருகேசனும், காரை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்று இருந்தார். அன்பரசுவின் வீட்டு வேலை ஆட்கள், அப்பாவும் மகளும் செல்வதை நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.
“கயல்.”
அந்தத் தெருவை தாண்டி வந்ததும், தன் தந்தை குரல் கேட்டு கயல் திரும்பி அவரிடம் சென்றாள்..
“எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்பா. ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்காது. அதுவும் எனக்குத் தெரியும். அதானலதான் அவன் கூப்பிட்டதும் போனேன்.”
“நான் செஞ்ச தப்பு இப்பவரை என்னை நிம்மதியா இருக்க விடலை. எனக்கு என் புருஷனை ரொம்பப் பிடிக்கும். ஆனா அதை அவர்கிட்ட என்னால சொல்ல கூட முடியலை. அதைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கு சொல்லுங்க?” என்றவள், திரும்பி செல்ல, அன்பரசு திகைத்து போய் அங்கேயே நின்றுவிட்டார்.
மகள் மனதிற்குள் எவ்வளவு மருகிக்கொண்டு இருக்கிறாள் என இப்போதுதான் அவருக்குப் புரிந்தது. ஐயோ, இப்படிக் கஷ்ட்டப்படுகிறாளே என்று இருந்தது. அதற்குள் கயல் சற்றுத் தூரம் சென்று இருந்தாள்.
“இரும்மா, நீ நடந்தே உன் வீட்டுக்கு போக முடியாது. நான் கார்ல கொண்டு போய் விடுறேன்.” அன்பரசு அழைக்க, கயலுக்கும் அது புரிந்ததால், முன்பு இருந்த வேகம் அவளிடம் இல்லை.
அதற்குள் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, முருகேசன்தான் வந்துவிட்டார் என நினைத்து கயல் திரும்பி பார்க்க, வேறு யாரோ சிலபேர் காரில் இருந்து இறங்கினர்.
அவர்கள் கையில் இருந்த ஆயுதத்தைப் பார்த்ததும், கயலுக்குச் சர்வமும் நடுங்கி விட்டது. ஆனால் அவர்கள் அவளை நோக்கி வரவில்லை, அன்பரசுவை நோக்கி சென்றனர்.
கயல் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், தன் தந்தையை நோக்கி ஓடினாள்.
“கயல் இங்க வராத, நீ வீட்டுக்கு போ.” என்றார் அன்பரசு.
வேகமாக அவர்களைத் தாண்டி சென்று தன் தந்தையை மறித்து நின்றவள், “வேண்டாம் போயிடுங்க.” என்றாள்.
மகளுக்கு எதுவும் ஆகி விடுமோ எனப் பயந்த அன்பரசு, அவளைத் தனக்குப் பின்னே மறைக்க முயன்றார்.
அவருக்கு அப்போது இருந்தது எல்லாம் கயலுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்பதுதான்.
“பாப்பா நகரு. உன்னை எதுவும் பண்ண மாட்டோம்.” என்றவர்கள், தங்களிடம் இருந்த பெரிய கத்தியை வைத்து, அன்பரசுவின் உடலில் அங்கங்கே கோடு கிழித்தனர்.
“வேண்டாம் விட்டுடுங்க.” கயல் அலறி துடிக்க, வலி ஒருபுறம் என்றால், மகள் அழுவது ஒருபுறம் என்று அன்பரசுவுக்கு இருபக்கமும் வேதனை.
“நீ அம்மாகிட்ட போம்மா.” என்றார்.
கடைசியாக ஒருவன் தன் கையில் இருந்த, பெரிய தடியால், அன்பரசுவின் தலையில் ஓங்கி அடித்து விட்டுச் சென்றான்.
அன்பரசு தரையில் சரிய, கயல் அலறியபடி அவரைத் தாங்கி பிடிக்க முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை.
அன்பரசுவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்ட, கயலுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அவள் மயங்கிவிட்டால், அன்பரசுவின் நிலை?
“கடவுளே எனக்கு மயக்கம் வரக் கூடாது.” என வேண்டியபடி முகத்தை முந்தானையில் துடைத்தாள்.
“நீ வீட்டுக்கு போய் அண்ணனை கூடிட்டு வா.” அன்பரசு சொல்ல, அவரை எப்படித் தனியே விட்டு செல்வது எனத் தெரியாமல் தவித்தாள்.
அதற்குள் அந்தப் பக்கம் சைக்கிளில் ஒருவர் வர, அவர் அன்பரசுவுக்குத் தெரிந்தவர்தான்.
“ஐயா என்னங்க ஆச்சு?”
“முத்து, நீ நம்ம வீட்டுக்குப் போய்த் தகவல் சொல்லு. பையன் வீட்லதான் இருக்கான்.” என்றதும், அவர் வேகமாகச் சைக்கிளில் செல்ல. கயல் தன் புடவை முந்தானையை அன்பரசுவின் தலையில் வைத்து ரத்தம் வராமல் அழுத்தி பிடித்தாள்.
அன்பரசு மகளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்குத் தனக்குக் காயம்பட்டது எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. மகளுக்கு எதுவும் ஆகவில்லை என்பதே நிம்மதியாக இருந்தது.
இவளைப் போய் நாம் எப்படிக் கொல்லச் சொன்னோம் என நினைத்தார். எதோ ஆத்திரத்தில் சொல்லிவிட்டாரே தவிர, தன்னால் அதை ஒரு போதும் செய்திருக்க முடியாது என இப்போது புரிந்தது.
செய்தி கேட்டதும் வாசலில் நின்றிருந்த வாசுவும், பத்மாவும் அலறி அடித்து ஓடி வந்தனர். பின்னாலே அவர்கள் ஆட்களும் வர, முருகேசன்தான் யோசித்து வண்டி கொண்டு வந்தார்.
அன்பரசுவை வண்டியில் ஏற்ற, கயலை செல்ல வேண்டாம் என மற்றவர்கள் தடுக்க, அவள் கேட்கவில்லை. காரில் செல்லும்போதுதான், கயல் நடந்ததை எல்லோரிடமும் சொன்னாள்.
அதற்குள் இன்னொரு காரில், கீதாவும் மற்றவர்களும் மருத்துவமனை வந்தனர்.
அன்பரசுவை ஆஸ்பத்திரியில் அனுமத்தித்த பின்னர், அவரை அறுவை சிகிச்சை செய்யும் அறைக்குக் கொண்டு சென்றனர். முருகேசன் நந்தாவை போன்னில் அழைத்து விவரம் சொன்னார்.
“கயல் நல்லாத்தானே இருக்கா?” என மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டான்.
கயல் வேறு உடன் இருந்திருக்கிறாள் என்றதும், நந்தாவுக்கு அவளை நினைத்துப் பயமாக இருந்தது. எப்படித் தவித்தாளோ எனக் கவலையாக இருந்தது. நந்தா உடனே மருத்துவமனை புறப்பட்டான்.