மகன் முகத்தைக் கண்ட சுந்தரி “விடு யுவன் தெரியாம நடந்துருக்கும். கல்யாண புடவை அழுக்கானதுல வெண்மதி டென்ஷன் ஆகி பேசிருப்பா. யுக்தா பத்தியும் நமக்கு தெரியுமே? வெகுளித் தனமா ஏதாவது செஞ்சு அவளை டென்ஷன் படுத்திருப்பா”, என்று சமாதானம் செய்தாள்.
“ஓஹோ அப்ப நீங்களும் யுக்தாவை லூசுன்னு சொல்ல வறீங்களா மா? உங்க மருமக பண்ணினதை தப்புன்னு கண்டிப்பீங்கன்னு நினைச்சா நீங்களும் இப்படி பேசுறீங்க?”, என்று அடக்கப் பட்ட கோபத்துடன் கேட்டான் யுவன்.
“பெரிய மனுஷன் மாதிரி பேசாத டா. யுக்தா கொஞ்சம் அப்படி தானே இருக்கா? இல்லாததை ஒண்ணும் நானும் வெண்மதியும் சொல்லலை. உன் அக்கா கூட என்ன மா யுவன் ஒரு லூசை போய் பிரண்டுன்னு சொல்லிட்டு அலையுறான்னு சொல்லிட்டு போறா. இதுல வெண்மதியை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?”, என்று சுந்தரி கேட்டதும் யுவனுக்கு கோபம் எல்லை கடந்தது. வாங்க போங்க என்ற மரியாதை கூட அவனை விட்டுப் பறந்தது.
“நீ எப்படி மா இப்படி பேசுற?”, என்று கேட்டான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அண்ணனுக்கு கல்யாணம். நீ இந்த பேச்சை இதோட விடு”
“அப்ப நீ அண்ணியையும் அவங்க பிரண்ட்சையும் எதுவும் சொல்ல மாட்ட அப்படித் தானே?”
“எனக்கு என் மகனும் மருமகளும் தான் முக்கியம் போதுமா?”
“அப்ப உனக்கு உன் மூத்த மகன் தான் முக்கியம். நான் இல்லை அப்படி தானே?”
“இதுல நீ ஏன் டா உன்னை இழுக்குற?”
“யுக்தா என் ஃபிரண்ட். நீ அவளை அசிங்கப் படுத்தினவங்களுக்கு சப்போர்ட் பண்ணினா என்னை வேண்டாம்னு சொல்ற மாதிரி தான்”
“யுவன், இப்ப உன் அண்ணன் கல்யாணம் டா. சம்பந்தி வீட்டுக்காரங்க காதுல விழுந்தா பிரச்சனை வரும் டா. நீ ஒழுங்கா அண்ணன் கூடப் போய் நில்லு”
“உனக்கு இந்த கல்யாணம் தானே முக்கியம்? நானோ என் வலியோ முக்கியம் இல்லைல்ல? இதுக்கு மேல நான் எப்படி இங்க இருப்பேன்னு நினைச்ச?”, என்று கோபமாக கேட்டவன் சுந்தரியும் சுஜியும் தடுக்க தடுக்க கேட்காமல் மண்டபத்தில் இருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்று விட்டான்.
சரவணனும் ஈஸ்வரனும் யுவனைத் தேட சுஜி நடந்ததைச் சொல்லி விட்டாள். “அப்பா வெண்மதி திட்டினதுல என்ன தப்பு இருக்கு? அவ கல்யாண சேலையை கரையாக்கினா அவளுக்கு கோபம் வரத் தான் செய்யும். அவன் யாரோ ஒருத்திக்காக வீட்டுக்கு வரப் போற அண்ணி மேல கோபப் படுவானா?”, என்று சரவணன் கேட்க ஈஸ்வரன் மூத்த மகனுக்கு பதில் எதுவும் சொல்ல வில்லை. ஆனால் அவர் மனதில் மட்டும் எதுவோ தவறாக நடக்க போகிறது என்று பட்டது.
ஒரு வழியாக யுவன் இல்லாமலே திருமணமும் நல்ல படியாக முடிந்தது. குடும்ப புகைப்படத்தில் யுவன் இல்லாதது மட்டும் அனைவருக்கும் குறையாக இருந்தது. இங்கே சடங்கு எல்லாம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும் ஆள் ஆளுக்கு யுவனிடம் “யாரோ ஒருத்திக்காக கல்யாணத்துக்கு நிக்காம வருவியா?”, என்று கேட்டு கேட்டுத் திட்ட யுவனுக்கு அளவில்லாத கோபம் தான் வந்தது.
அவள் யாரோ ஒருத்தி இல்லை என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அதைச் சொன்னால் அவள் யார்? வெறும் ஃபிரண்ட் தானே என்று தான் சொல்வார்கள் என்பதால் அமைதியாக இருந்தான்.
மறுவீட்டுக்கு போய் விட்டு சரவணனும் வெண்மதியும் திரும்பி வந்தார்கள். வந்ததும் வராததுமாக சரவணன் தம்பியைச் சாட அது வரை பொறுமையாக இருந்த யுவனின் பொறுமை காற்றில் பறந்தது. அண்ணனை முறைத்துப் பார்த்தான் யுவன்.
“பட்டு சேலைல கரை பட்டா போகாதுன்னு கோபத்துல தான் லூசுன்னு திட்டிட்டேன். அதுக்கு அவ முகத்தை திருப்பிட்டு போனா நானா காரணம்? நான் ஒண்ணும் இல்லாததைச் சொல்லலையே? அவ நடந்துக்குறது லூசு மாதிரி தான் இருக்கு”, என்று சொன்னாள் வெண்மதி.
“கொஞ்சம் வாயை மூடுறீங்களா? இன்னொரு தடவை யுக்தாவை பத்தி அப்படிச் சொன்னீங்க நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று கத்தினான் யுவன்.
“என்ன டா செய்வ? வெண்மதி உன் அண்ணி. அவ கிட்ட போய் கோபமா பேசுற?”, என்று கேட்டான் சரவணன்.
“அண்ணின்னா அம்மா மாதிரின்னு எனக்கும் தெரியும். ஆனா இவங்க நடந்துக்குறது அப்படி இல்லை. இவங்க ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணைப் பத்தி இப்படி பேசுறதுலே தெரியலையா? இவங்க குணம் எப்படின்னு?”
“பாத்தியாமா உன் பிள்ளை பேசுறதை? எவளோ ஒருத்திக்காக வீட்டுக்கு வந்த மருமகளை எப்படி பேசுறான்னு…?”
“யுவன், நீ பேசினதும் தப்பு தான். அந்த யுக்தா நமக்கு யாரோ. ஆனா வெண்மதி இந்த வீட்டு பொண்ணு. ஒழுங்கா அண்ணிக் கிட்ட மன்னிப்பு கேளு”, என்றாள் சுந்தரி.
“ஓஹோ, இவங்க பண்ணின தப்புக்கு மன்னிப்பு கேக்க மாட்டாங்க. அதை தப்புன்னு கூட ஒத்துக்க மாட்டாங்க. ஆனா நான் மன்னிப்பு கேக்கணுமா?”
“இப்ப இங்க என்ன பஞ்சாயத்து?”, என்று கேட்டார் ஈஸ்வரன். அனைவரும் நடநாததைச் சொல்ல மீனாட்சியும் அவளுடைய கணவனும் கூட யுவனுக்கு எதிராகவே பேசினார்கள்.
வெறுத்து போன யுவன் “அப்பா எனக்கு இதுக்கு மேல இதைப் பத்தி பேச விருப்பம் இல்லை. எப்ப அண்ணனும் அவங்க மனைவியும் பேசினது சரி, நான் பண்ணினது தப்புன்னு எல்லாரும் பேசினாங்களோ இனி நான் எதுக்கு குடும்பத்தை பத்தி யோசிக்கணும்? இனி எனக்கு யாரும் வேண்டாம். இனி இவங்க யாரும் என் கிட்ட பேசக் கூடாது. நானும் பேச மாட்டேன்”, என்றான்.
“என்ன டா பேசுற? இது தப்பு யுவன். அந்த அளவுக்கு அந்த யுக்தா பேய் உன்னை பிடிச்சு ஆட்டுதா?”, என்று சுந்தரி கேட்க அவளை முறைத்து விட்டு தன்னுடைய அறைக்குச் சென்ற யுவன் இரண்டு பேகை எடுத்து தன்னுடைய உடை மற்றும் பொருள்களை எடுத்து வைத்து வெளியே வந்தான்.
அவனை அனைவரும் குழப்பமாக பார்க்க “நான் இனி மாடில தங்கிக்கிறேன் பா. நீங்களோ சுஜியோ எனக்கு சாப்பாடு கொண்டு வாங்க. இல்லை அதையும் கொடுக்க பிடிக்கலைன்னா அப்படியே பட்டினியா என்னை விட்டுருங்க. இவங்க எல்லாரும் புழங்குற இடத்துல நான் இருக்க விரும்பலை. வேற யாரும் மாடிக்கு வரக் கூடாது. இல்லை இது உங்க வீடுன்னு நினைச்சீங்கன்னா சொல்லுங்க. நான் மாசம் மாசம் வாடகை தந்துறேன். பார்ட் டைம் வேலை பார்த்து நான் படிச்சுக்குவேன்”, என்று தெளிவாக சொன்னான் யுவன்.
“யுவன் நீ என் பையன் டா. உன்னைப் படிக்க வைக்கவும் உனக்கு சோறு போடவும் எனக்கு தெம்பு இருக்கு. நீ மாடிக்கே போ. யாரும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டாங்க. உனக்கு சரின்னு பட்டதைச் செய்”, என்று ஈஸ்வரன் சொன்னதும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் மாடிக்கு சென்று விட்டான். மாடியில் ஒரு அரை அட்டாச் பாத்ரூமுடன் இருந்தது அவனுக்கு வசதியாகப் போனது.
“என்னங்க நீங்க, அவன் தான் புரியாம பண்ணுறான்னா நீங்களும் அவன் பக்கமே பேசுறீங்க?”, என்று கேட்டாள் சுந்தரி.
“எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான் பா அவன் இப்படி ஆடுறான்”, என்றான் சரவணன்.
“அவனை இப்படியே விடக் கூடாதுப்பா. இந்த சின்ன வயசுல எவ்வளவு வீம்பு பாருங்க?”, என்றாள் மீனாட்சி.
“யாருக்கும் நான் செல்லம் கொடுக்கவும் இல்லை. கண்டிப்பு காட்டவும் இல்லை. எல்லாரையும் எப்படி வளத்தேனோ அப்படி தான் அவனையும் வளத்தேன். இன்னும் சொல்லப் போனா உங்களை எல்லாம் விட அவன் அறிவாளி. அதை நீங்களும் ஒத்துக்க தான் செய்யணும். மீனு உன்னையும் சரவணனையும் படிக்க வைக்க ஆனதுல கால் வாசி பணம் கூட அவனுக்கு ஆகலை. அவனோட திறமை அப்படி”, என்றார் ஈஸ்வரன்.
“இப்ப ஏன் தேவையில்லாததை பேசுறீங்கப்பா?”, என்று கேட்டான் சரவணன்.
“பேச வைக்கிறது நீங்க தான். வெண்மதி பண்ணினது தப்பு தானே? அதை ஏன் உன்னால ஒத்துக்க முடியலை? உன் மனைவிக்காக உன் தம்பிக் கிட்டயே சண்டைக்கு நிப்பியா?”, என்று ஈஸ்வரன் கேட்டதும் சரவணன் திகைத்துப் போனான்.
“மாமா நான் என்ன தப்பு பண்னினேன்?”, என்று கேட்டாள் வெண்மதி.
“நீ பண்ணினது தான் மா தப்பு. எங்க யுக்தா உன் சேலைல ஏற்படுத்தின கரையை காட்டு பாப்போம்”, என்று அவர் சொன்னதும் ஒரு நொடி திகைத்துப் போனவள் அந்த இடத்தைக் கட்டினாள். அங்கே அந்த கரை இருந்ததுக்கான அடையாளமே இல்லை. ஒரு சின்ன பொட்டு அளவு தான் பட்டிருந்தது. அதையும் உடனே துடைத்து விட்டதால் போயிருந்தது.
“எங்க மா? அந்த யுக்தா பொண்ணு ஏற்படுத்தின பெரிய கரை எங்க?”, என்று நக்கலாக கேட்டார் ஈஸ்வரன்.
“அது… அது வந்து… போயிருச்சு மாமா”
“இவ்வளவு பெரிய சண்டைக்கு காரணமா இருந்த உன் சேலை கரை ஈஸியா போயிருச்சு. ஆனா உன்னால ஒரு பொண்ணு அழுதுட்டு போயிருக்கு. என் மகன் உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு தனியா போய்ட்டான். இதுக்கெல்லாம் காரணம் நீ தானே? ஒரு சின்ன பொண்ணு கிட்ட அன்பா பேச பொறுமை இல்லாத நீ எப்படி இந்த குடும்பத்தை தாங்கி நிறுத்துவ?”, என்று அவர் கேட்டதும் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் வெண்மதி.
“பாத்து மூணு மாசமே ஆன உன் மனைவியை குறை சொன்னா உனக்கு கோபம் வருது. ஆனா யுவனுக்கு யுக்தாவை ரெண்டு வருஷமா தெரியும். அப்படின்னா அவனுக்கு எவ்வளவு கோவம் வரும்?”
“அவங்க பிரண்ட்ஸ் பா. நாங்க அப்படி இல்லை”
“உறவுல அந்த உறவு பெருசு, இந்த உறவு பெருசுன்னு எதுவும் இல்லை சரவணா. இன்னைக்கு அந்த யுக்தா கிட்ட பேசினது மாதிரி தானே நாளைக்கு நம்ம சுஜி கிட்டயும் உன் பொண்டாட்டி பேசுவா? அப்படி உன் தங்கச்சியை உன் பொண்டாட்டி பேசினாலும் நீ வாயை மூடிட்டு தான் இருப்பியா?”, என்று கேட்டதும் அவனால் எதுவும் பேச முடியவில்லை.
“சரி விடுங்க. நடந்தது நடந்து போச்சு. யுவன் நம்ம வீட்ல தானே இருக்கான். அவனை சரி பண்ணிறலாம்”, என்றாள் சுந்தரி.
“முதல்ல உன்னை நாலு சாத்திருந்தா எல்லாம் சரியாகிருக்கும். எல்லாத்துக்கும் காரணம் நீ தான் சுந்தரி”
“நான் என்னங்க செஞ்சேன்?”
“இப்படி யுவன் வந்து சொன்னா நீ உன் மருமகளை கண்டிச்சிருக்கணும். அது தான் பெரிய மனுசிக்கு அழகு. வெண்மதி பண்ணின தப்பை கண்டிக்க தெரியாத நீ எப்படி நல்ல மாமியாரா இருப்ப? அப்ப வாயை மூடிட்டு இருந்தள்ள. இனி அவ உன் தலைலே ஏறி உக்காந்தாலும் நீ வாங்கிக் கட்டித் தான் ஆகணும். அப்புறம் என்ன சொன்ன? யுவனை சரி பண்ணிறலாமா? எங்க பண்ணிப்பாரு பாப்போம். அவன் மனசுல விழுந்த காயத்தை உன்னால சரி பண்ண முடியுமா? அவனை யாருன்னு நினைச்ச? ஒரு அம்மாவா அவனுக்கு உன் மேல இருக்குற பாசத்தை நீ தக்க வச்சிக்கிறியான்னு பாப்போம்? எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணு தான். உன்னை மாதிரி என்னால ஒரு தலை பட்சமா நடந்துக்க முடியாது. இனி என் மகனை நான் பாத்துக்குவேன். யாரும் அவனை தொந்தரவு பண்ணக் கூடாது. மீனாட்சி நைட் உனக்கு டிரைன் தானே? எல்லாம் எடுத்து வை போ”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். மீனாட்சியும் தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். சுஜியும் அப்பா பின்னேயே சென்று விட்டாள்.
“ஏமா, நான் கூட பெரிய கரையா இருக்கும்னு நினைச்சேன். இதுக்கா அந்த பொண்ணை அப்படி திட்டின? இனி பாத்து நடந்துக்கோ. உங்க மாமாக்கு இதெல்லாம் பிடிக்காது”, என்று தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் வெண்மதியை சாடி விட்டு உள்ளே சென்று விட்டாள் சுந்தரி.
“என்னங்க இது உங்க அம்மாவும் அப்பாவும் இப்படி சொல்லிட்டு போறாங்க? கடைசில நான் பண்ணினது தான் தப்புன்னு சொல்றாங்க?”, என்று சரவணனிடம் கேட்டாள் வெண்மதி.
“அது என்ன உங்க அம்மா அப்பான்னு சொல்ற? ஒழுங்கா அத்தை மாமான்னு சொல்லிப் பழகு. ஆமா ஒரு சின்னக் கரை கூட உன் புடவைல இல்லை. இதுக்கா இவ்வளவு பெரிய போராட்டம்? முதல் நாளே எவ்வளவு சண்டை? பாத்து நடந்துக்கோ வெண்மதி. அவ்வளவு தான் சொல்லுவேன்”, என்று சொல்லி விட்டு சரவணனும் உள்ளே சென்று விட்டான்.
இதுக்கெல்லாம் காரணமான யுக்தா மேல் அப்போதே வெண்மதிக்கு கோபம் வந்தது. “யாரு டி நீ, முதல் நாளே எனக்கு எல்லார்க் கிட்டயும் கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துட்ட? என் கையில சிக்காமலா போயிருவ? அப்ப உனக்கு இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்து வந்த நாட்களில் ஈஸ்வரன் சொன்னது போல யுவனை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. சரவணன் வந்து அவனிடம் பேசினான். அதைக் கேட்டுக் கொண்டானே தவிர ஒரு வார்த்தை கூட திருப்பி பேச வில்லை. வெண்மதியும் பேசினாள். அவளது பேச்சை யுவன் காது கொடுத்துக் கூட கேட்க வில்லை.
சுந்தரி மட்டும் மகனைத் தாங்கிக் கொண்டே திரிந்ததால் அவளிடம் பேசினான். ஆனால் சுந்தரியிடம் எரிந்து எரிந்து தான் விழுந்தான். மற்ற படி அவன் உண்டு அவன் படிப்பு உண்டு என்று இருந்தான். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான யுக்தாவோ இந்த பிரச்சனையை மறந்தே போயிருந்தாள். அன்று இங்கிருந்து கிளம்பியதும் தாமரை அவளை ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு தான் அழைத்துச் சென்றாள். அப்போதே யுக்தா அதை மறந்தே விட்டாள்.
காலேஜ் வந்ததும் யுக்தாவிடம் யுவன் மன்னிப்பு கேட்க அவளோ எதுக்கு என்று கேட்டு அவனையே திகைக்க வைத்தாள். நாட்கள் இப்படியே கழிந்தது. சரவணனுக்கு டிரான்ஸ்பரும் கிடைத்தது. மனைவியை விட்டு விட்டு அவன் மட்டும் சென்றான்.