மூன்றாம் மாதத்தில் தான் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினர். குழலி முன்பே சொல்லிவிட்டார். திருமணத்திற்குதான் யாரையும் அழைக்கவில்லை. அதனால் பெயர் வைப்பதையாவது மண்டபத்தில், எல்லோரையும் அழைத்து விசேஷமாகச் செய்யவேண்டும் என்று.
பெயர் வைக்கும் விழாவுக்கு, தங்கள் பக்க உறவினர்களை ஒரு பஸ் பிடித்து, அன்பரசு அழைத்து வந்திருந்தார். மண்டபத்திலேயே அறைகள் இருந்ததால், அவர்கள் அங்கேயே தங்கிக் கொண்டனர்.
விழா அன்று கயல் ரொம்பவும் பரபரப்பாக இருந்தாள். இரண்டு குழந்தைகளுக்கும் புது ஆடைகள் போட்டு கிளப்பிவிட்டு, மாடியில் இருந்த அவர்கள் அறைக்கு உடைமாற்ற சென்றாள்.
கொஞ்சம் இடைவெளி விட்டு நந்தாவும் சென்றான். அவள் பட்டுப்புடவை உடுத்தி நகைகளை அணிந்து கொண்டு இருந்தால். எல்லாம் நந்தா வாங்கிக் தந்தது.
“இப்ப எதுக்கு இவ்வளவு பெரிய பட்டு புடவை. இதைக் கட்டிக்கிட்டு எப்படி உங்க பசங்களைத் தூக்கிறது.”
கயல் அலுத்துக்கொள்ள, நந்தா அவளை இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.
“ம்ம்... பெரிசா உங்க அப்பாகிட்ட இருந்து எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் நீ சாதரணமா இருந்தா, உங்க அப்பா இதுதான் நீ என் பொண்ணை வச்சுகிற லட்சணமான்னு கேட்க மாட்டார்?”
“நீங்க என்னை வச்சிருக்கீங்களா?” கயல் வேண்டுமென்றே அழுத்தி சொல்ல,
“நைட்டும் நீதான் போடுற? நான் அதைச் சொல்லலை அறிவு, அதுக்குப் பிறகு ஒன்னு இருக்கு. அதைச் சொன்னேன். எப்ப நம்ம ரூமுக்கு வர்றதா இருக்க?” நந்தா என்ன சொல்ல வருகிறான் எனப் புரிந்ததும், கயல் அசடு வழிந்தாள்.
“கீழ யாரோ கூப்பிடுற மாதிரி இல்ல….” அவள் அங்கிருந்து நழுவ பார்க்க,
“இன்னையில இருந்து நீயும், குழந்தைகளும் இந்த ரூம்ல தான் தூங்கணும்.”
“ம்ம்… நான் அத்தைகிட்ட கேட்கிறேன்.”
“நீ வர, அவ்வளவுதான்.”
“சரி போகட்டுமா?”
“கொஞ்ச நேரம் இரு. இன்னைக்குத்தான் தனியா பேசவே டைம் கிடைச்சிருக்கு.”
“உன் கலருக்கு இந்தப் புடவை ரொம்ப எடுப்பா இருக்கு கயல்.”
“அப்படியா?” என்றவள், எழுந்துசென்று அங்கிருந்த முழு நீள கண்ணாடியில் பார்த்தாள்.
குழந்தை பிறந்த பிறகு, கயலின் உடல் சற்று பூசினார் போல இருக்க, நிறமும் கூடி இருந்தது. அதோடு காபி நிறத்தில் தங்க நிற ஜரிகை வைத்த புடவை. காதில் பெரிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் காசு மாலையும், இன்னும் அழகுக்கு அழகு சேர்த்தது.
“என்னடி அப்படிப் பார்க்கிற?” கயலின் பின்னால் வந்து நின்று, நந்தா அவளை அனைத்துக் கொண்டான்.
“இல்ல இன்னைக்குத்தான் நான் கண்ணாடியே பார்க்கிறேன். எனக்கு எங்க நேரம் இருந்துச்சு சொல்லுங்க.”
கயல் அப்பாவியாகச் சொல்ல, நந்தா சிரித்தவன், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
“சந்தோஷமா இருக்கியா கயல்.”
“சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா இன்னும் முழுச் சந்தோசம் வரலை.”
“ஏன்?”
“தாரணி அண்ணி இன்னும் உண்டாகலையே. வருண் அண்ணா வேற ரொம்ப ஆசைப்படுறாங்க. அவங்களுக்கும் குழந்தை பிறந்திட்டா, நான் ரொம்பச் சந்தோஷமா இருப்பேன்.”
நந்தாவுக்கும் அந்தக் கவலை இருக்கிறது. இருந்தாலும் மனைவியைப் பற்றி நினைக்கும் போது பெருமையாக இருந்தது.
நான் சந்தோஷமா இருக்கேன், மத்தவங்களைப் பத்தி எனக்கு என்ன என்று எண்ணாமல், அவங்க கஷ்ட்டப்படும் போது, நான் எப்படிச் சந்தோஷமா இருப்பது என நினைக்கிறாளே, நிஜமாகவே இது போல் மனைவி அமைவதற்குத் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.
“நாம போன மாதிரி அவங்களையும் ஹனிமூன் அனுப்புவோமா… இங்க இருந்தா ரெண்டு பேரும் டென்ஷன்னாவே இருக்காங்க.”
“நல்ல ஐடியா. சீக்கிரம் அனுப்புவோம். குழந்தைகளுக்கு ஒரு வருஷம் ஆனதும், நாமும் இன்னொரு ஹனிமூன் போயிட்டு வரலாம்.”
நந்தா சொல்ல, கயல் கையெடுத்து கும்பிட்டாள். “போதும் ஒரு தடவை போனதுக்கே. ரெண்டு பெத்திருக்கேன். இதுக்கு மேல பிள்ளை பெத்துக்க எல்லாம் எனக்குத் தெம்பு இல்லை. ஆளை விடுங்க சாமி.”
“நீயே பெத்துகிறேன்னு சொன்னாலும், நான் ஒத்துக்க மாட்டேன். நீ பெத்து எடுக்கிறதுக்குள்ள நான்பட்ட பாடு எனக்குதான் தெரியும்.”
அன்றைய நினைவில் நந்தாவின் முகத்தில் வருத்தம் தெரிய, கயல், அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்து, அருகில் இழுத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“நம்ம வீட்ல விசேஷம் முகத்தை இப்படி வச்சுக்காதீங்க.”
நந்தா சரி என்பதாகத் தலையசைத்தான். ஆனாலும் கயலுக்குத் திருப்தியாக இல்லை. அவனது இதழில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
நந்தாவின் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்க, இத்தனை மாதங்கள் இருந்த தவிப்பையெல்லாம் மொத்தமாக அவளது இதழில் காட்டினான்.
கயல் அவனிடம் இருந்து கஷ்ட்டப்பட்டு விலகியவள், “என் உதடு போச்சு.” என உதட்டை தடவ, நந்தா சிரித்தான்.
“ஏம்ப்பா விசேஷத்துக்கு வர்ற ஐடியா எதுவும் இருக்கா? இல்லையா? நாங்களும் எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது?” என வருண் குரல் கொடுக்க, இருவரும் அடித்துப் பிடித்துக் கீழே சென்றனர்.
விசேஷம் வெகு சிறப்பாக நடந்தது. சமீரா அவள் பெற்றோரோடு வந்திருந்தாள். ராதிகா வீட்டினர் தவிர மற்ற எல்லா உறவினர்களும் வந்திருந்தனர். அவர்கள் வராததே நல்லது என நினைத்ததால்… யாரும் வருத்தபடவில்லை.
அன்பரசு சீர்வரிசைகளால் மேடையை நிரப்பி இருந்தார். தன் பிறந்த வீட்டில் குழந்தைகளுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் கயல் அவர்களுக்கு அணிவிக்க, இருவரும் குட்டி இளவரசன், இளவரசி போல் இருந்தனர்.
பெண்ணுக்கு அபிநயா என்றும், பையனுக்கு அஷ்வின் என்றும் பெயரிட்டனர். பெயர் வைத்து முடித்தும், தன் தந்தையிடம் கொண்டு போய், கயல் குழந்தைகளைக் காட்டினாள்.
இன்னமும் தந்தைக்கும் மகளுக்கும் இடையே சரளமான பேச்சு வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் ஒருவரிடம் மற்றவர் கொண்டுள்ள அன்பு, இப்போது இருவருக்கும் தெரியும்.
பத்மாவும் அன்று எல்லோரோடும் ஊருக்குக் கிளம்பிவிட்டார். வாசுவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். நவநீத கிருஷ்ணன் பெயிலில் வந்திருப்பதால், கீதாவும் விசேஷத்திற்கு வரவில்லை.
கடைசியாக மண்டபத்தில் வீட்டினர் மட்டுமே இருந்தனர். வருண் அபிநயாவை வைத்துக் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
“டேய் உன் தங்கச்சி உன்னை இன்னொரு தடவை ஹனிமூன் போகச் சொல்றா டா, போறியா?”
“ம்ம்… போக வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்.” வருண் சந்தோஷமாகச் சொல்ல,
“ஹே நிஜமாவா?” நந்தாவுக்கும் அவனது சந்தோஷம் தொற்றிக்கொண்டது.
“ஆமாம், முப்பத்தஞ்சு நாள் ஆகி இருக்கு. அம்மா நாற்பது நாள் ஆகட்டும், டெஸ்ட் பண்ணலாம்னு சொன்னாங்க.”
“ஓ அதுதான் அண்ணி பொத்தி பொத்தி நடந்தாங்களா?” என்ற கயலுக்கு மிகவும் மகிழ்ச்சி. அன்று இரவு கயல் குழந்தைகளோடு மாடிக்கு இடம்பெயர்ந்தாள். குழந்தைகள் இருவரையும் ஒரு மெத்தையில் படுக்க வைத்து இருவருக்கு நடுவிலும் தலையணையை வைத்து விட்டனர்.
இவர்கள் கணவன் மனைவி இருவரும் இன்னொரு மெத்தையில் படுத்துக் கொண்டனர். நந்தா டேப்பில் பாட்டு போட்டு விட்டான். இரு குழந்தைகளும் அறையில் எரிந்த விளக்கை பார்த்து கையையும், காலையும் ஆட்டிக்கொண்டு இருந்தனர்.
அப்போதே நேரம் பத்து மணி. “ரெண்டு பேரும் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்காங்களே, இப்போதைக்குத் தூங்க மாட்டங்களோ?” நந்தாவின் கவலையைப் பார்த்து, கயலுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நம்மைத் தூக்கி வச்சுக்கச் சொல்லாம இருக்கங்களே, அதுக்கே சந்தோஷப்படணும்.” என்றவள், கணவனின் வயிற்றில் தலை வைத்து, குழந்தைகளைப் பார்க்கும்படி படுத்துக் கொண்டாள். நந்தா இடது கையை அவள் மீது அணைவாக போட்டுக் கொண்டான்.
இதை விடச் சந்தோஷம் வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்? அன்பான கணவன், மனைவி அழகான இரு குழந்தைகள்.
குழந்தைகள் எப்போது உறங்கினார்கள் என இருவருக்கும் தெரியாது. அதற்கு முன்பே இவர்கள் இருவரும் உறங்கி விட்டனர்.
வெளியே மழை சாரளாகப் பொழிந்து கொண்டிருந்தது. டேப்பில் இன்னமும் இளையராஜா பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
“கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்.
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது. மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது.