மூன்றாம் ஆண்டு படிக்கும் போது யுவனுடைய புராஜெக்ட் செலக்ட் செய்யப் பட்டு அதை செய்வதற்காக ஒரு மாத காலம் பாரின் செல்லும் வாய்ப்பும் அவனுக்கு கிடைத்தது. அந்த காலேஜே அவனை கொண்டாடியது என்று சொன்னால் அது மிகையில்லை. அவன் திறமை வெளியே பரவியது அப்போது தான். ஆனால் யுக்தா அதை பெரிய விஷயமாக எல்லாம் எடுத்துக் கொள்ளவே இல்லை.
எல்லாரும் பாராட்டும் போது “வாழ்த்துக்கள் யுவன்”, என்று சொன்னாள் அவ்வளவே. மத்த படி அவனுடைய சாதனை மிகப் பெரியது என்றெல்லாம் அவள் மூளையில் பதியவே இல்லை. அவனுக்கும் அவளைப் பற்றி தெரியும் என்பதால் எதையும் எதிர் பார்க்க வில்லை.
ஒரு நாள் மாலை லைப்ரேரியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது “யுக்தா அடுத்த வாரம் நான் பாரின் போகணும். அந்த கம்பெனியே எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டாங்க”, என்றான் யுவன்.
ஒரு நொடி மௌனமாக இருந்தவள் “நீ திரும்பி எப்ப வருவ?”, என்று கேட்டாள்.
“ஒரு மாசம் ஆகலாம், அதுக்கும் மேல கூட ஆகலாம்”, என்றவன் அவள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “நான் போறது உனக்கு பிடிக்கலையா?”, என்று கேட்டான்.
“ம்ம்”
“ஏன்?”
“நீ என் வாழ்க்கைல வந்த பிறகு என் அப்பா என்னை அடிக்கிறதே இல்லை. சூடு கூட வைக்கலை. நீ போயிட்டா அப்பா என்னை அடிப்பாங்க”
“என்னால எதுவும் மாறலை யுக்தா. உங்க அம்மா தைரியமா உங்க அப்பாவை எதுத்து நிக்குறதுனால தான் உங்க அப்பா எதுவும் செய்யலை”, என்று உண்மையை அவளுக்கு புரிய வைக்க முயன்றான். கூடவே இப்படி தன்னை நம்பும் இவளுக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்ற கேள்வியும் அவனுக்குள் எழுந்தது.
“அம்மா மாறினது கூட நீ வந்த பிறகு தானே? நீ தான் அப்பாவை மாத்தினன்னு எனக்கு தெரியும். நீ ஊருக்கு போயிட்டா அப்பா பழைய படி மாறிருவாங்க”, என்று தீர்மானமாக சொன்னாள் யுக்தா.
“அதெல்லாம் இல்லை. உங்க அம்மா உன்னைப் பாத்துப்பாங்க”
“எனக்கு பயமா இருக்கு”, என்று சொன்னவளின் முகம் கூம்பிப் போனது.
அதைத் தாங்க முடியாமல் “சரி அங்க போனாலும் உங்க அப்பாவை நான் போன்ல மிரட்டுறேன் சரியா?”, என்று அவளை சமாதானம் செய்தான்.
“அப்படின்னா சரி தான். நீ என்னைக்கு கிளம்புற? அங்க போய் என்ன வேலை செய்வ? எங்க தங்கி இருப்ப?”, என்று ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.
“ஒவ்வொரு கேள்வியா கேளுங்க யுக்தா மேடம்”, என்று சொல்லி சிரித்தவன் அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தான்.
அந்த வாரம் முழுவதும் வீட்டை பிரிந்து செல்வதை விட அவளைப் பிரிய தான் அதிகம் வருந்தினான். மற்ற நண்பர்களிடம் அவளைப் பார்த்துக் கொள்ள ஆயிரம் முறையாவது சொல்லி அவர்களின் முறைப்பை பெற்றுக் கொண்டான். தினமும் கிளாஸ் முடிந்ததும் முடிந்த அளவு அவளுடன் அதிக நேரம் செலவிட்டான்.
“உங்க அப்பா எது சொன்னாலும் எதுத்து பேசாத யுக்தா. நான் இருக்கும் போது பேசி அவர் ஏதாவது செஞ்சா கூட நான் வந்து பாத்துக்குவேன். ஆனா அங்க போன அப்புறம் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது. எங்கயும் தனியா போகாதே. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் விஷ்ணு அப்புறம் நம்ம பிரண்ட்ஸ் கிட்ட கேளு. எல்லாரோட நம்பரையும் உன் நோட்ல எழுதி வச்சிருக்கேன். அப்புறம் ரேவதி ஏதாவது உன் கிட்ட பேச முயற்சி செஞ்சா கூட நீ பேசாதே”, என்று அவன் அவளுக்கு பல முறை அறிவுரை கூறினான். மற்ற யாரிடமும் அவன் இப்படிக் கூறியிருந்தால் “எத்தனை தடவை இதையே சொல்லுவ?”, என்று எரிந்து விழுந்திருப்பார்கள்.
ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையான அக்கறையை உணர்ந்த யுக்தாவோ அவன் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் சரி சரி என்று தலையாட்டினாள். அதுவே அவன் மனதை பிசைந்தது.
பாரின் செல்வதற்கு முந்தைய நாள் சுந்தரி அவனுக்காக அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது “என்ன டா அமைதியா இருக்க?”, என்று கேட்டாள்.
“யுக்தாவை எப்படி மா ஒரு மாசம் பாக்காம இருக்குறது? நீ அவளை அடிக்கடி போய் பாத்துக்குறியா?”, என்று மகன் கேட்டதும் சுந்தரிக்கு கடுப்பாக இருந்தது.
“முதல் தடவை வீட்டை பிரிஞ்சு இருக்க போறேன்னு உனக்கு வருத்தமா இல்லையா யுவன்? என்னை அப்பாவை சுஜியை எல்லாம் பிரிய உனக்கு கஷ்டமா இல்லையா? எப்ப பாத்தாலும் யுக்தா யுக்தா, அவளைப் பத்தி மட்டும் யோசிக்கிற? முதல் நாள் அவ வீட்டுக்கு நீ போனதே தப்புன்னு இப்ப தோணுது எனக்கு”, என்று சிடுசிடுத்தாள்.
“அவ ரொம்ப பாவம் மா. நான் இல்லாம அவ எப்படி கிளாஸ்ல இருப்பா? ஏதாவது அசைன்மெண்ட் கொடுத்தா கூட எப்படி செய்யன்னு தெரியாம முழிப்பா. மத்தவங்க கிட்டயும் ஹெல்ப் கேக்க மாட்டா. முன்னாடி எல்லாம் அதுக்கே எத்தனை தடவை அவ திட்டு வாங்கிருக்கா தெரியுமா?”
“டேய் நான் இவ்வளவு சொல்றேன், மறுபடியும் அவளைப் பத்தியே பேசுற? ஒரு வேளை நீ அவளை லவ் பண்ணுறியா?”, என்று கண்களில் கூர்மையுடன் கேட்டாள்.
அன்னையை திடுக்கிட்டுப் பார்த்தவன் “சே என்ன மா நீயும் மத்தவங்க மாதிரி கேக்குற? அவ ஒரு குழந்தை மாதிரி மா”, என்றான்.
“அப்படின்னா சரி தான். எங்க ஆமான்னு சொல்லிருவியோன்னு பயந்துட்டேன். அப்படி எல்லாம் சொல்லிறாத டா. அவ எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வர மாட்டா. உன் அண்ணன் கல்யாணத்துல நடந்ததைப் பாத்த தானே?”, என்று சுந்தரி பழைய விஷயங்களை நினைவு படுத்தியதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
“தப்பு எல்லாம் உங்க எல்லார் மேலயும் தான். வெகுளித் தனமா யுக்தா இருக்குறது தான் உனக்கு தப்பா தெரியுதா மா?”
“அவளுக்காக நீ இப்படி சண்டை போடுறது தான் எனக்கு தப்பா தெரியுது யுவன். அவ உனக்கு ஃபிரண்ட் மட்டும் தான். ஆனா நீ இன்னும் அவளுக்காக உன் அண்ணன் கிட்டயும் அண்ணிக் கிட்டயும் பேசாம இருக்குறது எனக்கு பிடிக்கலை. உன் அக்கா கிட்ட கூட நீ சரியா பேசலையாம்”
“நியாயமா பாத்தா நான் உன் கிட்ட கூட பேசிருக்க கூடாது மா. அம்மாவாச்சேன்னு மன்னிச்சு பேசினேன். அது தப்பு தான். மறுபடியும் உன் குணத்தைக் காட்டுற? உன் கிட்ட போய் அவளை பாத்துக்க சொல்லி சொன்னேன் பாரு. என்னைச் சொல்லணும். நான் எல்லாம் எடுத்து வச்சிக்கிறேன். நீ போ முதல்ல”, என்று எரிந்து விழுந்தான் யுவன்.
“கோப படாத டா. அவ பாவம் தான். அதுக்காக எந்த இடத்துல எப்படி நடந்துக்கணும்னு இருக்குல்ல? சரி விடு. அவளைப் பத்தி பேசினா சண்டை தான் வரும். நான் ஊறுகாய் எடுத்து வைக்கவா?”, என்று கேட்டு பேச்சை மாற்றினாள்.
“அதெல்லாம் வேண்டாம். ஒரு மாசம் தானே? வந்துருவேன்”
“அங்கயே உனக்கு வேலை கிடைக்குமா டா?”
“ஏன் மா? நான் பாரின்லே செட்டில் ஆகணும்னு ஆசைப் படுறியா?”
“ஆமா டா”
“நான் பாரின் போயிட்டா என்னைப் பிரிஞ்சு நீ இருந்துருவியா?”
“எனக்கு துணைக்கு தான் உன் அப்பா இருக்காரே. மத்த பிள்ளைங்களும் இருக்காங்க? உனக்கு அங்க வேலை கிடைச்சா நல்லா இருக்கும்ல? என் மகன் பாரீன்ல வேலை செய்றான்னு நாலு பேர் கிட்ட சொல்லி சந்தோஷப் படுவேன் தெரியுமா?”, என்று சுந்தரி சொன்னதும் அவனுக்கு என்னவோ போல இருந்தது. தன்னுடைய பிரிவு இவர்களை ஒண்ணும் செய்யாதா என்ற கேள்வி எழுந்தது. அவனுக்குமே பெரிய பாரின் கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதால் சுந்தரி சொன்னதை பெரிதாக எடுக்க வில்லை.
அடுத்த நாள் காலை ஈஸ்வரன் தான் அவனை ஏர்போர்ட்டுக்கு அழைத்து சென்றார். ஆயிரம் பத்திரம் சொல்லி அவனை அங்கே விட்டுவிட்டு அவர் கிளம்பியதும் பேகை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான். அங்கே அவனுக்காக தாமரையுடன் காத்திருந்தாள் யுக்தா. சத்தியமாக அவர்களை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவளைக் கண்டதும் அவன் முகமும் அகமும் மலர்ந்து போனது. கட்டாயம் அவர்கள் தனக்காக தான் காத்திருக்கிறார்கள் என்று அவனுக்கு தெரியும்.
வேகமாக அவர்களை நெருங்கியவன் “ஆண்ட்டி, யுக்தா நீங்க எப்படி இங்க?”, என்று சந்தோஷமாக கேட்டான்.
“உன்னைப் பாக்கணும்னு நைட் முழுக்க ஒரே அடம் பிடிச்சா யுவன். தூங்கவே இல்லை. ஒரு மாசம் அவன் இங்க இருக்க மாட்டான் மான்னு புலம்பிட்டே இருந்தாப்பா. அதான் கூட்டிட்டு வந்தேன்”, என்றாள் தாமரை.
“அழுதியா அம்மு? ஒரு மாசத்துல வந்துருவேன் சரியா? அதுக்கப்புறம் உன்னை பிரியவே மாட்டேன். அது வரைக்கும் ஆண்ட்டி உன்னை நல்லாப் பாத்துக்குவாங்க”, என்று அவளிடம் சொன்னான் யுவன்.
“நிஜமாவா? உனக்கு அங்கயே வேலை கிடைச்சிரும்னு வருண் சொன்னானே? இப்ப போயிட்டு வருவியா, இல்லை அங்கயே இருந்துருவியா?”, என்று கண்களில் துளிர்த்த நீருடன் கேட்டாள் யுக்தா.
“எனக்கு அங்க வேலை கிடைச்சா நான் போக வேண்டாமா?”, என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் அந்த கேள்வியை அவளிடம் கேட்டான் யுவன்.
“ஹிம் வேண்டாமே? அப்புறம் எப்படி நான் உன்னைப் பாப்பேன்?”, என்று அவள் கேட்டதும் அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
“ஆனா எனக்கு அங்க வேலை பாக்க தான் ஆசை”, என்று சொல்லி அவளது முக மாற்றங்களைக் கவனித்தான்.
“அப்படியா? அப்படின்னா என்னையும் அம்மாவையும் அங்க கூட்டிட்டு போறியா?”, என்று குழந்தை தனமாக கேட்டாள் யுக்தா.
அவன் தன்னுடைய கனவை பற்றிச் சொன்னதை அவள் புரிந்து கொள்ள வில்லை. அவன் தன்னுடனே இருக்க வேண்டும் என்று அவள் எண்ணுவதை அவனும் புரிந்து கொள்ள வில்லை.
அவன் பதில் சொல்லாமல் இருக்கவும் அவள் முகம் ஒரு மாதிரி போனது. “சும்மா சொன்னேன் யுக்தா. அங்கே வேலைக்கு எல்லாம் போக மாட்டேன். இப்ப போயிட்டு ஒரு மாசத்துல திரும்பி வந்துருவேன். நான் இன்னும் காலேஜ் கூட முடிக்கலை. அப்புறம் பி.ஜி படிக்கணும். டாக்டரேட் வாங்கணும். நிறைய இருக்கு. அதுக்கப்புறம் தான் வேலை கிடைக்கும். உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன். சரியா?”, என்று யுவன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க இருவரையும் புரிந்து கொள்ள முடியாத மனநிலையில் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரை.
அவர்களுக்குள் இருக்கும் உறவை சத்தியமாக தாமரையால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருவரும் மற்றவரை எந்த கண்ணோட்டத்தில் காண்கிறார்கள் என்று அவளுக்கு புரிய வில்லை. அதே நேரம் தாமரையால் இருவரிடமும் காதலிக்கிறீர்களா என்றும் கேட்க முடியவில்லை. அது போல அண்ணன் தங்கை என்ற உறவையும் அவர்களுக்குள் திணிக்க முடியவில்லை.
பிளைட் கிளம்பும் அறிவிப்பு வந்ததும் யுக்தா கண்கள் கலங்க ஆரம்பித்தது. அவளை சமாதானப் படுத்தி சிரிக்கச் செய்து விட்டுச் சென்றான் யுவன். ஆனால் அவள் கண்ணீர் முகம் அவன் மனதில் ஆழப் பதிந்தது. தாமரையும் மகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள். அதற்கு அடுத்து வந்த நாட்கள் யுவனைப் பற்றி அவள் பேசாத நிமிடங்களே இல்லை எனலாம்.
தன்னுடைய மகள் இந்த அளவுக்கு பேசுவாள் என்று தாமரை உணர்ந்த தருணம் அது. கூடவே அவளது பேச்சு, எண்ணம் அனைத்தும் யுவனைப் பற்றி இருக்கையில் இது எங்கே போய் முடியுமோ என்ற பயமும் வந்தது.
“இப்ப இவ்வளவு யோசிக்கிற நீ, எதுக்கு யுவன் கிட்ட யுக்தாவை பாத்துக்க வேண்டிய பொறுப்பை ஒப்படைச்ச? அவன் எந்த உரிமையில் வாழ் நாள் முழுக்க அவளுடன் வர முடியும்?”, என்று தாமரையின் மனது கேள்வி எழுப்பியது. அந்த கேள்வியின் விளைவு யுவன் யுக்தாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற தீர்வையும் ஆசையையும் தாமரைக்குள் விதைத்தது.
அவன் ஒருவனால் மட்டுமே யுக்தாவை நன்கு பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அவனுடைய திறமையால் மட்டுமே யுக்தாவின் சொத்துக்கள் அனைத்தும் பாதுக்காக்கப் படும் என்றும் தாமரை அந்த நிமிடம் நம்பினாள்.
ஆனால் யுவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலும் மகளுக்கு திருமண வாழ்வை பற்றி என்ன தெரியும் என்ற கேள்வியாலும் அவள் நிம்மதி பறிபோனது. பின் அனைத்தும் கடவுள் விட்ட வழி என்று அந்த இறைவன் மீது பாரத்தைப் போட்டாள்.
பாரின் சென்றதும் முதல் நாள் ஓய்விலும் இரண்டாவது நாள் அக்ரீமன்ட் சைன் பண்ணுவதிலும் யுவனுக்கு கழிந்தது. அங்கிருந்த இடம், குளிர், சரளமான ஆங்கிலம் அனைத்திலும் கொஞ்சம் திணறித் தான் போனான். பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லாமல் சில நேரம் கலக்கமாகவும் இருந்தது. யுக்தாவை பற்றிய நினைவுகள் வேறு அவனை அலைக்கழித்தது.
மூன்றாவது நாள் தான் வீட்டினருக்கும் யுக்தாவுக்கும் அவனால் அழைத்து பேச முடிந்தது. அதன் பின் அவன் நேரத்தை அந்த புராஜெக்ட் எடுத்துக் கொண்டது.
மேம்போக்காக அவன் தயாரித்து அனுப்பியதை இப்போது தெள்ளத் தெளிவாக அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதால் அவனுக்கு யோசிக்க அதிக நேரம் தேவைப் பட்டது.
அக்ரீமெண்ட் சைன் பண்ணும் போது அவனுடைய புராஜெக்ட்க்காக லட்சக்கணக்கான பணத்தை தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் அவனோ ராயல்ட்டி தான் வேண்டும் என்று கேட்டான்.
அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி விட்டால் அவனுக்கும் அந்த புராஜெக்ட்டுக்குமான தொடர்பு அப்போதே முடிந்து விடும். ஆனால் அவனோ அந்த புராஜெக்ட் அவன் பெயரில் இருக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டான்.
அவர்களும் அவன் பெயரை அதில் சேர்த்து அவர்களுடைய கம்பெனி பெயரில் அதை தயாரித்து விற்பனை செய்ய முடிவு எடுத்தார்கள். அதற்கு பின் ஒண்ணறை மாதம் அவனுக்கு அங்கே வேலை அதிகம் இருந்தது.
ஊர் திரும்புவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே கிட்ட தட்ட பத்து லட்சம் மதிப்புள்ள அமெரிக்க பணம் அவனுடைய அக்கவுண்டில் சம்பளமாக ஏற்றப் பட்டது. கூடவே அவனுடைய புராடெக்ட் விற்பனை செய்ய செய்ய அதில் நாப்பது சதவீதம் அவனுடைய அக்கவுண்டில் ஏறும் என்றும் சொன்னார்கள்.
அடுத்த இரண்டு நாட்கள் அவனுடன் இருந்தவருடன் ஷாப்பிங் சென்றான். அவனுக்கு அம்மா தங்கைக்கு என்ன வாங்க வேண்டும் என்று தெரிய வில்லை. அதனால் அவனுக்கு தோன்றியதை வாங்கினான். கூடவே யுக்தாவுக்கும் வாங்கி விட்டு நல்ல படியாக ஊர் வந்து சேர்ந்தான். அவன் வருவது யுக்தாவிடம் கூட அவன் சொல்ல வில்லை.
யுவன் வீட்டுக்கு வந்ததும் “என்ன இப்படி இளைச்சிட்ட?”, என்று கேட்டு விட்டு அங்கு நடந்த வேலையைப் பற்றியும் எவ்வளவு பணம் கிடைத்கது என்று பற்றியும் அவன் என்ன வாங்கி வந்தான் என்பதைப் பற்றியும் வீட்டில் உள்ளவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
அவர்கள் கொடுத்த பணத்தை பற்றி சொன்ன யுவன் அதில் இருந்த பணத்தை தந்தையிடம் எடுத்துக் கொள்ளச் சொன்னான். அவரும் சுஜியின் படிப்பு மற்றும் திருமணத்துக்கு தேவைப் பட்டால் வாங்கிக் கொள்வதாக சொல்லி விட்டார். இனியும் அவனுக்கு பணம் வரும் என்பதை பற்றி வீட்டில் யாரிடமும் மூச்சு விட வில்லை. அவர்களும் இதுவே அதிகம் தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.