“நிலா….ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற? கோயிலுக்கு போறதுனா நீயே போயேன். என்னை எதுக்கு கூப்பிடுற? எனக்கு வேலை இருக்கு மா” மனோரஞ்சன் சிறு எரிச்சலுடன் கூறினான்.
“அண்ணா அண்ணா….ப்ளீஸ் அண்ணா….நாளைக்கு எனக்கு எக்ஸாம் ணா….சாமிக்கு ஐஸ் வைக்கணும் ணா. கோயிலுக்கு போகனும் ணா” நூறு அண்ணா போட்டாள் நிலா.
“ஏய்…ஷாப்பிங்லாம் தனியா தானே போவ. இப்ப மட்டும் எதுக்கு என்னை கூப்பிடுற? ரித்துவ கூட்டிட்டு போயேன்”
“அவனை ஆளையே காணோம். ப்ளீஸ் வாங்கணா.”
“முடியவே முடியாது….கார் எடுத்துட்டு போ. ரங்கன் அண்ணா வருவாரு”
“அண்ணா…நேத்து என்ன ஆச்சுன்னு தெரியுமா?! நேத்து நான் கோயிலுக்கு போனப்போ, கோவில் பக்கத்துல நாலஞ்சு ரவுடி பசங்க உட்கார்ந்துட்டு, என்னை கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? அதுவும் இல்லாம இன்னைக்கு அண்ணி வேற என் கூட வராங்க”
“என்னது….மது உன் கூட வராளா?” ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, “சரி சரி வா கூட்டிட்டு போறேன்”
“ஹ்ம்ம்…அண்ணி பேரை சொன்னா தான் வேலை நடக்குது.” நிலா முனுமுனுத்தாள்.
“ஏய்….இப்போ என்ன சொன்ன?”
“ஒன்னுமில்லையே, வாங்க போலாம்”
மனோரஞ்சன் வருகிறான் என்றவுடன் மதிவதனி வருவதற்கு மறுத்தாள்.”அதான் உங்க அண்ணன் வராரே.நான் வரல” என்றாள்.
“அதெல்லாம் முடியாது. நீங்க வரேன்னு ஒத்துக்கிட்டீங்க. இப்போ பேக் அடிக்கக் கூடாது. வாங்க அண்ணி போகலாம்” அவள் கையை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள்.
அவள் வரவில்லை என்று கூறியதும், மனோரஞ்சனுக்கு மதிவதனி மீது கோபம் வந்தது. அவளை முறைத்து பார்த்து விட்டு, காரை எடுக்கச் சென்றான். ஆனால் கார் டயர் பஞ்சர் ஆயிருந்தது.
“ஓ…ச்சே! எப்படி இப்படி ஆச்சு? நேத்து தானே ஆபீஸ்க்கு எடுத்து போனேன்”
“சரி நிலா. ஆட்டோல போய்டலாம் வா” மதிவதனி அழைத்தாள்.
“என்னது ஆட்டோவா? அதெல்லாம் முடியாது.” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சொல்லி வைத்தார் போல ரிதுநந்தன் அங்கு வந்து சேர்ந்தான்.
“ஹை…..ஒரு நல்ல ஐடியா! நாம பைக்ல போய்டலாம். நான் ரித்து கூட பைக்ல போறேன். நீங்களும் அண்ணியும் உங்க பைக்ல வந்துடுங்க என்ன ஓகே வா?வாங்க…வாங்க, போலாம்.ரித்து வாடா சீக்கிரம்,வண்டியை எடு”
அவர்கள் எதுவும் மறுப்பு சொல்வதற்குள் நிலாவும், ரிதுவும் அங்கிருந்து சென்று விட மதிவதனி இவருடனா பைக்கில் போகணும் என்று முழித்துக்கொண்டு நின்றாள்.
மனோரஞ்சன் எதுவும் சொல்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு அவள் ஏறுவதற்காக அக்சலரேட்டரை முறுக்கிக் கொண்டிருந்தான். வேறு வழி இல்லாததால் அவளும் ஏறினாள். ஒரு நமட்டு சிரிப்புடன் அவன் பைக்கை கிளப்பினான்.
மதிவதனிக்கு அந்த பயணம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவன் பக்கத்தில் உட்கார்ந்து பயணிக்கும் போது, அவளுள் எழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.
நிலாவை மனதிற்குள் திட்டிக் கொண்டே இருந்தாள். ஆனால் அதே சமயம் ஒரு பக்கம் இனிமையாகவும் உணர்ந்தாள். இந்த பயணம் அப்படியே தொடரக் கூடாதா என்று ஏங்கினாள்.அந்த ஏக்கம் அவள் மூளைக்கு எட்டியதும்,அவளை நினைத்து அவளுக்கே கோபமாய் வந்தது.
மனோரஞ்சன் வேண்டுமென்றே வேகத்தைக் கூட்டினான். அவள் சரியாக உட்கார முடியாமல் திணறினாள். அவள் அவஸ்தையை புரிந்துக் கொண்டு குறும்பாய் புன்னகைத்தான்.
“மது….கொஞ்சம் என்னை புடிச்சிக்கோ. இதுக்கு மேல தள்ளி உட்கார்ந்த நீ ரோட்டுல தான் உட்காரனும்”
அவள் வேறு வழி இல்லாமல் தயங்கி, தயங்கி அவனை பிடித்துக் கொண்டாள். இருவரும் ஒரு கனவுலகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அதே சமயத்தில் ரித்துவுடன் சென்றுக் கொண்டிருந்த நிலாவுக்கு போன் வந்தது.
“ஏய்! சொல்லு தாமு”
“ஏய்!எத்தனை தடவைடி உனக்கு சொல்றது, என்னை தாமுனு கூப்பிடாதேன்னு! எங்க அப்பா எனக்கு தாமரைனு எவ்வளோ அழகான பேரு வச்சிருக்கார்.அதை போய் இப்படி கேவலப்படுத்துறியே.”
“அதை விடுறி.நீ எதுக்கு கால் பண்ணினே? அதை முதல சொல்லு?”
“நம்ம பிளான் எப்படி போய்ட்டிருக்கு?”
“சூப்பரா போகுதுடி. நம்ம பிளான் படியே காரை பஞ்சர் பண்ணியாச்சு. இப்போ அண்ணனும், அண்ணியும் பைக்ல வந்துட்டு இருக்காங்க.”
இதை கேட்ட ரிதுநந்தன் பைக்கை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். திரும்பி நிலாவை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“ஏய்! அங்க என்னடி சத்தம்?” தாமரை கேட்டாள்.
“அது வேற ஒன்னும் இல்லடி. உன் வுட்பி தான். நாம பேசுறத கேட்டுட்டு ஷாக் ஆயிட்டான்.”
“அய்யோ! நான் வேற அவன் கிட்ட எதுவுமே சொல்லலடி. நம்ம பிளான் எல்லாம் அவன் கிட்ட சொல்லிடு. இல்லேனா கோபிச்சுப்பான்”
“சரி,சரி! அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்”
அவள் போனை வைத்ததும் ரித்துநந்தன் அவளை முறைத்து பார்த்தான்.
“ஏய்! இங்க என்ன நடக்குதுடி?”
நிலா அவளும் தாமரையும் சேர்ந்து போட்ட திட்டத்தை பற்றி சொன்னாள்.
“என்னாமா பிளான் பண்றீங்கடி!பேசாம நீங்கெல்லாம் சினிமால, படம் எடுக்க போய்டுங்க.லவ் சீன்ஸ்லாம் நல்லா எடுப்பீங்க”
“ஓ…தாங்க யு…தாங்க யு….தாங்க யு….என்னை ரொம்ப புகழாத ரித்து.எனக்கு புகழ்ச்சி பிடிக்காது”
“அடச்சி! சரி,சரி! உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு. நான் பண்றேன். ஆனாலும் இது பத்தி அந்த தாமரை, ஒண்ணுமே என் கிட்ட சொல்லலியே. இருக்கட்டும் அவளை வச்சிக்கிறேன்.”
“வச்சிக்கோ….வச்சிக்கோ….யார் வேணாம்னு சொன்னது?”
கோவிலுக்கு சென்று வந்ததும், மனோரஞ்சன் மதிவதனியை வீட்டில் விட்டுவிட்டு கம்பெனிக்கு சென்றான். ரிதுநந்தன் தாமரையை பார்க்க அவள் ஆபிசுக்கு சென்றான்.
“ஹாய் ரித்து. இன்னிக்கு ஆபீஸ் போகலையா?”
“என் கூட கொஞ்சம் வெளில வா. உன் கிட்ட பேசணும்.”
“என்ன ரித்து?! என் மேல ஏதாவது கோபமா?”
“முதல வெளிய வா”
“ரித்து.வேலை இருக்கு டா.சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சதும் வரேன்.”
“இப்போ நீ வரலேனா நான் உன்னை பாக்க வரது இது தான் கடைசியா இருக்கும்.”சொல்லிவிட்டு அவன் வேகமாக வெளியே சென்றான்.
அவன் ஏதோ கோபமாக இருப்பது புரிந்தது. என்ன பூதம் காத்திருக்கோ என்று பயந்தபடி அவனுடன் சென்றாள்.
ஒரு காபி ஷாப் சென்று உட்கார்ந்தும், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, “தாமரை! நான் யாரு?”
“அச்சச்சோ! உனக்கு ஏதாவது அம்னிசியா வந்துடுச்சா. உன் பேரு ரிதுநந்தன். இப்ப ஞாபகம் வருதா?”
அவன் கடுப்புடன் கண்ணை மூடிக் கொண்டு,”உனக்கு நான் யாரு?” என்று கேட்டான்.
“எனக்கு நீ அன்பு அத்தான். பெஸ்ட் ஃப்ரென்ட். என்னோட பெட்டர் ஹாஃப். என் உலகமே நீ தான் போதுமா? இப்ப என்ன திடீருன்னு இந்த டவுட்? என்னாச்சு உனக்கு?
“அப்போ ஏன் நீ என் கிட்ட சொல்லல?”
“நீ எதை சொல்ற? ஓ! அட, நானும் நிலாவும் சேர்ந்து பிளான் பண்ணினோமே அதை சொல்றியா? இதெல்லாம் ஒரு விஷயமா ரித்து! உன் கிட்ட அப்புறமா சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.இதுக்கு இப்படி ஒரு கோபமா?”
“நான் அதை சொல்லல. இன்னொரு முக்கியமான விஷயத்தை என் கிட்ட நீ மறச்சுட்ட!”
என்னவென்று புரியாமல் அவள் முழிக்கவும்,“உங்க அப்பா உனக்கு மாப்பிளை பார்த்துட்டாங்கனு நீ ஏன் என் கிட்ட சொல்லல?”
அவன் கேட்பதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தாமரை முழித்துக் கொண்டிருந்தாள்.
“அது….வந்து….ரித்து….அது….”
“சொல்லு, ஏன் தயங்குற?மாப்பிளை பேரு என்ன?என்ன பண்றாரு?”
“அது…..பேரு கௌதம். பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட் போல.”
ஓ!தெரியுமே! ஒன் ஆப் த டாப் இன்டஸ்ட்ரியலிஸ்ட். பிக் ஷாட் மேகனாதனோட, ஒரே பையன். சரி கல்யாணம் எப்போ?”
“ரித்து…நிறுத்து….ஏன் இப்படியெல்லாம் பேசுற?”
“ஹேய்,இப்போ எதுக்கு நீ கோபப்படுற? எப்போ கல்யாணம் தானே கேட்டேன்! நல்ல விஷயம் தானே?! பின்ன என்ன? மாப்பிளை கிட்ட பேசியாச்சா? டெய்லி போனில் பேசுறீங்களா?”
தாமரையின் கண்களில் நீர் நிறைந்தது.”ரித்து,ப்ளீஸ்.இந்த விஷயத்துல விளையாடதே.”சொல்லிக்கொண்டே கோபமாக எழுந்து போனாள்.
ரிதுநந்தன் அவள் பின்னே ஓடி வந்தான்.”ஏய்?! நீ எதுக்கு கோபப்படுற?கோபப்பட வேண்டியது நானு! இவ்வளோ விஷயம் நடந்துருக்கு, என் கிட்ட நீ ஒன்னுமே சொல்லல. அப்ப என்ன அர்த்தம்? உனக்கு இந்த கல்யாணத்துல இண்டரஸ்ட் இருக்குனு தானே?”
தாமரை திரும்பி அவனை முறைத்து பார்த்தாள், பின்பு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
“போ….போயேன்….நான் உன் பின்னால வர மாட்டேன். தப்பு உன் மேல தான். என் கிட்ட இந்த விஷயத்தை முதலயே சொல்லிருந்தேனா நான் ஏன் சந்தேகப்பட போறேன்? போடி” அவன் கத்திவிட்டு பைக்கை எடுக்கச் சென்றான்.
அவள் வெளியே காத்திருப்பாள் என்று நினைத்தான், ஆனால் அவள் ஒரு ஆட்டோ பிடித்து சென்று விட்டாள். கோபத்துடன் பைக்கை கிளப்பிக் கொண்டுச் சென்றான்.
அதே நேரம் வீட்டில் போன் அடிக்க மதிவதனி அதை சென்று எடுத்தாள். மனோரஞ்சன் தான் பேசினான்.
“ஹலோ”
“மது நான் தான்”
மதிவதனி அவனிடம் பேச தயங்கினாள்.
“மது….”அவன் இரண்டாவது முறையாக கூப்பிட்டான்.
“ஹ்ம்ம்…மாமா வெளிய போயிருக்கார். அத்தை கிட்ட குடுக்கட்டுமா?”
“நான் போனை யார்கிட்டயாவது குடுன்னு உன் கிட்ட சொன்னேனா?” அவன் எரிச்சலுடன் கேட்டான்.
“நான் உன் கிட்ட பேச தான் கூப்பிட்டேன்”
“ஹ்ம்ம்….சொல்லுங்க”
“இப்பதான் அசோக் சொன்னாரு, நம்ம கிளையன்ட் கேட்ட ஒரு டிசைன் செஞ்சு குடுக்க முடியாதுன்னு சொன்னியாமே?ஏன் அப்படி சொன்னே?”
மீண்டும் அவளிடம் மௌனம்.
“மதிவதனி,நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். பதில் சொல்லு”
“எனக்கு பிடிக்கலை”
“என்ன பிடிக்கலை?”
“எல்லாமே தான்.ஒரு வேலையை செய்யனும்னா அதுல முழு ஈடுபாடு இருக்கணும். இப்போ என்னால அந்த மாதிரி ஈடுபாடோட வேலையை பாக்க முடியுமான்னு தெரியல”
“ஏன்?இப்ப என்ன நட…..?சரி,அதை விடு.இங்க பாரு மது,அவரு நமக்கு ரொம்ப முக்கியமான கிளையன்ட்.நீ சொல்ற இந்த பதில், நம்ம பிஸினசை எவ்ளோ பாதிக்கும் தெரியுமா?இது நம்ம கம்பெனிக்கு ஒரு பிளாக் மார்க்”
“சாரி,சாரி ரஞ்சன்.நான் இதை யோசிக்கவே இல்லை.நீங்க கவலைப்படாதீங்க.நான் பாத்துக்கிறேன்”
தான் நினைத்ததை சாதித்த திருப்தியுடன், போனை வைத்தான் மனோரஞ்சன்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், தாமரை ரிதுநந்தனிடம் கோபப்பட்டு கிளம்பிய அதே நேரம், நிலா, நித்யாவின் ஹாஸ்டல் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். நிலா ஒரு முடிவுடன் தான் நித்யாவை பார்க்க சென்றுக் கொண்டிருந்தாள்.
அவள் அங்கு சென்று நித்யாவை பார்த்து ஒரு மணி நேரம் பேசினாள்.அவள் வெளியே வரும்போது அவள் முகம் மிகவும் வாடியிருந்தது.கண்கள் கலங்கியிருந்தது.
தாமரைக்கு போன் பண்ணினாள்.
“ஹலோ. சொல்லு நிலா”
“ஏய் தாமு?! என்னடி வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? ஏதாவது பிரச்சனையா?”
“நீ என்னை கேக்குற? உன் வாய்ஸ் கூட டல்லா தான் இருக்கு.”
இரண்டு பேரும் தங்கள் கதையை பகிர்ந்துக் கொண்டனர். இருவருமே அதற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர்….
புலரும்