மனோரஞ்சனின் போனில் தெரிந்த நித்யா என்ற பெயரை பார்த்ததும் கோபத்தில் முகம் சிவக்க அங்கிருந்து வேகமாக நகன்றாள் மதிவதனி.
மனோரஞ்சன் அவள் பின்னாலேயே அழைத்துக் கொண்டே வந்தது, கேட்காதது போல விறுவிறுவென்று நடந்து வீட்டுக்குள் சென்று விட்டாள்.
உள்ளே ஹாலில் நிலாவும், தாமரையும் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க மதிவதனி வேகமாக உள்ளே போவதையும், பின் தொடர்ந்து மனோரஞ்சன் அவளை கூப்பிட்டுக் கொண்டே வருவதையும் பார்த்து குழம்பி போயினர்.
“என்னாச்சுணா. அண்ணி ஏதோ கோபமா போற மாதிரி இருக்கு! நீ ஏதாவது சொதப்புனியா?”
அவன் எதுவும் சொல்லாமல் தலை குனிய, “போச்சு.போச்சு! எவ்ளோ கஷ்டப்பட்டு உனக்கு, நாங்க எப்படி பேசனும்ன்னு சொல்லிக் குடுத்தோம். ஏதோ சொதப்பிட்டு வந்து நிக்குற! சரியான தத்தி நீ.உன்னை….”அவள் பேசிக்கொண்டே போகவும், தாமரை அவள் கையை கிள்ளினாள்.
“ஏய்! நீ சும்மா இருடி. ஒரு நாலு வார்த்தை திட்டினா தான் என் மனசு ஆறும். நாம ரெண்டு பேரும் மூளையை கசக்கி எவ்வுளோ பிளான் பண்றோம்.கடுப்பாகுமா இல்லையா?”
“ஏய்!நிலா. கொஞ்சம் நிறுத்துடி”என்று தாமரை பின்னால் கண்ணை காட்டவும் என்னவென்று திரும்பி பார்த்த நிலா அங்கே மதிவதனி நிற்பதைக் கண்டு வாயடைத்து போனாள்.
அவர்கள் பக்கத்தில் வந்தவள் மனோரஞ்சன் கையில் அவன் போனை குடுத்துவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்.
“ஏண்டி! இப்படியா எல்லாத்தையும் உளறி கொட்டுவ?அவ என்னை பத்தி என்ன நினைப்பா?! ஏற்கனவே என் மேல கோபமா இருக்கா?போதும் தாயே உன் ஹெல்ப். என் பிரச்சனையை நானே பாத்துகிறேன்” கத்திவிட்டு அவன் சென்றான்.
“என்னடி?இப்படி ஆயிடுச்சு?”
“ம்ம்க்கும்.என்னை கேட்டா?நீ உன் திருவாயை மூடினா தானே?எப்ப பாரு லொடலொடனு பேசி பேசியே எல்லா காரியத்தையும் கெடுத்துடுற”
“நான் இப்படி ஆகும்னு நினைக்கலைடி”
“பேசாம அக்கா கிட்ட, நித்யாவை பத்தின உண்மையை சொல்லிடலாமா?”தாமரை கேட்கவும், நிலா பதறினாள்.
“இல்லடி, அது நித்யாவோட பர்சனல். அவ அனுமதி இல்லாம நாம அதை பத்தி சொல்ல முடியாது”
“அப்போ இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு, நித்யாவே வந்து வாயை திறக்கிறது தான்”
“நானும் இதையே தான் நித்யா கிட்ட சொன்னேன்.அவ பேசுறன்னும் சொல்லலை, முடியாதுனும் சொல்லலை. மௌனமா இருந்துட்டா.அதுக்குமேல என்னால அவளை வற்புறுத்த முடியல”
தோழிகள் இருவரும் இங்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்க,அங்கே மனோரஞ்சன், மதிவதனியின் அறை கதவை தட்டிக் கொண்டிருந்தான்.
“மது, இன்னைக்கு எல்லாத்தையும் பேசி ஒரு முடிவுக்கு வந்துடலாம். கொஞ்சம் வெளிய வறியா?”
“என்ன பேசணும்?” கதவை திறந்துக் கொண்டு வந்து பேசினாள் மதிவதனி.
“எதுக்கு இப்போ கோபமா வந்தே?”
“தெரியாத மாதிரியே கேக்குறீங்க? எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாதா?”
“உண்மையிலேயே எனக்குத் தெரியல. என்னன்னு சொல்லு”
“தெரியாமையே போகட்டும்.ஆளை விடுங்க சாமி”கதவை அவள் அடைக்க போக,ஒற்றை கையால் அதை தடுத்தான் மனோரஞ்சன்.
“இப்போ நீ சொல்ல போறியா, இல்லையா?”
ஒரு வேகபெருமூச்சுடன் இத்தனை நாளாய் தன் மனதில் அடைத்து வைத்திருந்ததை கேட்டு விட்டாள்,”நித்யாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?ஏன் நித்யா பேரை கேட்டாலே நீங்க வேற மாதிரி மாறிடுறீங்க?”
“ஓஹோ….அன்னைக்கு ரித்து கேட்ட அதே கேள்வியை, இப்போ நீ கேக்குறியா?அவன் பேசுனது உனக்கு கஷ்டமா இருக்கானு கேட்டப்போ, இல்லன்னு சொன்ன! ஏன் அப்படி சொன்ன?”
“அது நான் சும்மா சொன்னேன்.அது எப்படி கஷ்டம் இல்லாம இருக்கும். ஏன் நீங்க கூடத்தான் அன்னைக்கு ‘ஆமா ரித்து பேசுனது உண்மை தான்னு சொன்னீங்க’.”
“அது….அது…சும்மா உன் பொறாமையை தூண்டி விடுறதுக்கு சொன்னேன்”
“சரி அதை விடுங்க,வினோ அண்ணன் நித்யாவை லவ் பண்ண கூடாதுன்னு ஏன் சொல்றீங்க?”
“அது…அதை பத்தி என்னால, இப்போ சொல்ல முடியாது”
“சரி,அடிக்கடி நித்யா உங்களுக்கு போன் பண்ணி பேசுறாங்களே?அது ஏன்?”
“அது..அது…”
“இது எதுக்குமே உங்களால பதில் சொல்ல முடியலைல. அப்புறம் ஏன் எனக்கு கோபம் வராது?சரி இது எல்லாத்தையும் விடுங்க,அன்னைக்கு ஆபீஸ்ல வச்சி….”அவள் அதை சொல்ல முடியாமல் திணறினாள்.
“அன்னைக்கு நான் ஆபீஸ் வந்திருந்தேன்….அப்போ..அப்போ…”
“இரு..இரு….நானும் நித்யாவும் பேசிட்டு இருந்ததை பார்த்தியா?”
அவள் பொறுமையை இழந்து,”பேசிட்டு இல்ல,கட்டிபிடிச்சுட்டு நின்னீங்க” என்று கத்தினாள்.
அந்த அறையில் ஒரு பெருத்த அமைதி நிலவியது.ஒரு நிமிடம் மனோரஞ்சன் எதுவும் பேசவில்லை.
“இங்க பாரு மதிவதனி,ஒரு நல்ல கணவன் மனைவிக்கு அடையாளமே, ஒருத்தர் மற்றொருத்தர் மேல வச்சிருக்கிற நம்பிக்கை.அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டுச்சுனா, வாழ்க்கையே ஆடிடும்”
மதிவதனி கை தட்டினாள்,”சூப்பர்…சூப்பர்….தத்துவம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் இந்த தத்துவம் நமக்கு எப்படி பொருந்தும்?நாம இது வரைக்கும் கணவன் மனைவியா வாழ்ந்த மாதிரி எனக்கு நியாபகமே இல்லையே?”
“என்ன ரொம்ப குத்தலா பேசுறதா நினைப்பா? உனக்கு, என்னை பார்த்தா எப்படி தெரியுது?இல்லை எனக்கு புரியல, இவ்ளோ பேசுறியே, நீ மட்டும் என்னவாம்? ரொம்ப அன்பான மனைவியா தான், நீ என் கிட்ட நடந்துட்டு இருக்கியா?நான் மட்டும் தான் உன் கிட்ட புருஷன் மாதிரி நடந்துக்கலைன்னு சொல்ல வறியா?”
“சும்மா ஒரு ஃபிரெண்டு மாதிரி பேசுற, சிரிக்கிற, அதைத் தவிர ஒரு மனைவியா நீ என் கிட்ட நடந்திருக்கியா?ஒரு கணவனுக்குள்ள உரிமையை நான் எடுத்துக்க எனக்கு எவ்வளோ நேரம் ஆகும்?”
“நீ எனக்கு நல்ல மனைவியா நடந்துக்காதப்போ, நான் மட்டும் உன் கிட்ட நல்ல கணவனா நடந்துக்கணும்னு நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்?”
“இதுக்குமேல இதை பத்தி பேச ஒன்னும் இல்லை. உன் பர்த்டே அன்னைக்கு உன் கிட்ட என்னன்னலாமோ பேசணும்னு நினைச்சிருந்தேன்”
“ச்சே! பாபநாசத்துக்கு போகாமையே இருந்திருக்கலாம்.நிம்மதியாவது இருந்திருப்பேன்” கோபத்தில் கையை மடக்கி ஓங்கி அங்கிருந்த சுவரில் குத்தியவன் வேகமாக வெளியேறினான்.
மறுநாள் நிலா அவளிடம் வந்து பேசினாள்.
“அண்ணி!”
“நிலா, வேண்டாம் போய்டு. இப்போ எதுவும் பேசுற மனநிலைல நான் இல்லை”
அவள் என்ன பேசவென்று தெரியாமல் நிற்கவும்,மதிவதனி தொடர்ந்தாள்,”ஆனால் தயவுசெஞ்சு, இனிமேல் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறதா சொல்லிட்டு, உங்க அண்ணனுக்கு எந்த ஐடியாவும் குடுக்க வேணாம்”
“அய்யோ அண்ணி! நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நாங்க உங்களை வெளிய கூட்டிட்டு போய் மனசு விட்டு பேசுங்கன்னு மட்டும் தான் சொன்னோம்.மத்தபடி எல்லாமே அண்ணன் தான் ஏற்பாடு பன்னுனார்.எங்க கூட்டிட்டு போனாரு,என்ன பேசுனாருன்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது”
இவளிடம் கோபப்பட்டு என்ன ஆகப்போகுது என்று நினைத்து,”சரி, நீ போ”
“என் மேல உங்களுக்கு கோபம் ஒன்னும் இல்லையே?”அழாத குறையாக கேட்டாள் நிலா.
“அவள் முகத்தை பார்த்தும் இளகியவள்,”அதெல்லாம் ஒண்ணுமில்லே பேபி.எனக்கு ஒரு கோபமும் இல்லை”
அவள் பேபி என்று கூப்பிட்டவுடன் சமாதானம் ஆனவள் சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள்.
அதற்கு பிறகு வந்த சில நாட்கள் மனோரஞ்சன் அவளை திரும்பிக் கூட பாராது சென்றுக் கொண்டிருந்தான். மதிவதனியும் கோபத்தை கை விடுவதாக இல்லை.இருவரும் சண்டை கோழிகளை போல சிலுப்பிக் கொண்டு நின்றனர்.
இந்நிலையில் ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் போகவே, சிறிது நேரம் தோட்டத்தில் உலாத்தி விட்டு தூங்கலாம் என்று தோட்டத்திற்கு வந்தவள் அங்கே, அவள் எப்பொழுதும் அமரும் ஊஞ்சலிலே தாமரை அமர்ந்திருப்பதை கண்டு அவள் அருகில் வந்தாள்.
“தாமரை”
“அக்கா….வாங்கக்கா….என்னாச்சுக்கா தூக்கம் வரலையா?”
“ஹ்ம்ம்..ஆமா…உங்களுக்கும் தூக்கம் வரலையா?”
“அய்யோ! அக்கா எதுக்கு என்னை மரியாதையா கூப்பிடுறீங்க? நானும் நிலா மாதிரி தானே, சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க”
“சரி டா”
“அக்கா….அன்னைக்கே உங்க கிட்ட சாரி கேக்கணும்னு நினைச்சேன்க்கா. ரொம்ப சாரி. நானும் நிலாவும் சேர்ந்து ஏதோ உங்களுக்கு நல்லது பண்றதா நினைச்சுகிட்டு…..”
“அதை விடு தாமரை.நீ உன் கதையை சொல்லு.இந்த தாமரை முகம் கூம்பி போய் இருக்கே ஏன்?”
“ச்சு….விடுங்க அக்கா.பேசி என்ன ஆக போகுது?”
“பேசுனா மனசுல உள்ள பாரம் கொஞ்சமாவது குறையுமில்ல.ஹ்ம்ம்…..உன் கவலைக்கு காரணம் ரித்து தானே?”
மௌனமாக அவள் தலையை ஆட்டவும், மதிவதனி,”சரி! இப்போ சந்தோஷமான விஷயம் பத்தி பேசுவோமா?”
“ரித்துவை காதலிக்கிறோம்னு உனக்கு முதன் முதலா எப்ப தோணிச்சு? உங்க லவ் ஸ்டோரியை கொஞ்சம் சொல்லேன்”
ஒரு சின்ன வெட்கச் சிரிப்பு தாமரை முகத்தில் தோன்றியது. காதலில் திளைத்த அந்த நாட்கள் அவள் நினைவுக்கு வந்தது.
தாமரை அப்பொழுது காலேஜ் முதல் வருடத்தில் இருந்தாள். ரித்து இறுதியாண்டில் இருந்தான். சூரியநாராயனனும், தாமரையின் தந்தை லக்ஸ்மணனும் அப்பொழுது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.அப்பொழுதெல்லாம் ரிதுநந்தன் தாமரையை சீண்டிக் கொண்டே இருப்பான். அதனால் தாமரைக்கு அவனை பிடிக்காது. இருவரும் ஏதாவது சண்டை போட்டுக் கொண்டேயிருப்பர்.
“அப்பா….அப்பா….நான் இனிமே இந்த ரித்து கூட காலேஜ் போக மாட்டேன் பா…எப்ப பாரு என்னை கிண்டல் பண்ணிகிட்டே இருக்கான்”
“தாமரை….உன் கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன், ரித்துவை அவன் இவன்னு பேசாதேன்னு. ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு”
“அதெல்லாம் முடியாது போங்க பா”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிதுநந்தன் உள்ளே நுழைந்தான்.
“என்னங்க மாமா? உங்க பொண்ணு என்னை பத்தி தான் ஏதோ கம்ப்ளைன்ட் பண்றா போல இருக்கு! மாமா உங்க பொண்ண கொஞ்சம் கண்டிச்சு வைங்க.பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கிறதில்லை, சரியா படிக்கிறதில்லை. எப்ப பாரு விளையாட்டு தான். எதையாவது தின்னுகிட்டே இருக்கா. இப்படி இன்னும் பல பல. என் கூட இவ வரதுனால என்னையும் எல்லாரும் தப்பா நினைச்சுக்கிறாங்க தெரியுமா?”
“சரிங்க மாப்பிளை நான் அவளை கண்டிச்சு வைக்கிறேன்” லக்ஸ்மணன் கண்களில் குறும்புக் கூத்தாடியது.
தாமரைக் கோபத்துடன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தன் அப்பாவை முறைத்துக் கொண்டு நின்றாள்.
“அப்பா நீங்களும் அவன் கூட சேர்ந்துட்டீங்களா? போங்க பா”
“சரி விடு.சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னோம். நீ முதல கிளம்பு. காலேஜுக்கு நேரமாச்சு.”
“ஆமா..ஆமா,,,,நீ உன் மூஞ்சிக்கு வெள்ளை அடிச்சு ரெடி ஆகுறதுக்குள்ள காலேஜ் முடிஞ்சிடும். சீக்கிரம் சீக்கிரம்…..”
இதற்குமேல் ஏதாவது பேசினாலும் கிண்டலடிப்பான் என்று உணர்ந்து, அவள் உள்ளே சென்று கிளம்பி வந்தாள்.
பைக்கில் செல்லும் போது தாமரை எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள். ரிதுநந்தன் பேச்சை ஆரம்பித்தான்.
“என்னடி லோட்டஸ்? அமைதியா வரே?”
தாமரை வாயை திறக்கவில்லை.
“ஓ…நான் மாமா கிட்ட அப்படி பேசுனதுல கோபமா இருக்கியா?”
அப்போதும் தாமரை மௌனம் சாதித்தாள்.
“ஏய்! என்னடி?நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன், நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது சொல்லுடி….”
தாமரை எதுவும் பேசாமல் மனதிற்குள் நினைத்து கொண்டாள்,”இவனுக்கு வேற வேலை இல்லை. சும்மா எப்ப பாரு என்னை கிண்டல் பண்ணிகிட்டே இருக்கான். இப்படி பேசாம இருந்தா தான் இவன் திருந்துவான்’
காலேஜில் அவள் இறங்கியதும் அவள் வகுப்புக்கு செல்ல எத்தனித்தாள். ரிதுநந்தன் அவளை அழைத்தான்.
“கண்ணம்மா” பல சமயங்களில் இந்த மாதிரி, அவன் அவளை அழைப்பதுன்டு.அப்படி அழைத்தாலே தாமரைக்கு ரொம்பப் பிடிக்கும்.
“என் மேல் ரொம்ப கோபமா? நான் சும்மா உன் கூட விளையாடுனேன். சரி இனிமே நான் இப்படி பண்ணலை சாரி,உனக்கு என் மேல ஏதாவது கோபம் இருந்தா திட்டிடு. ஆனால் இப்படி பேசாம இருக்காத ப்ளீஸ்…”
அவன் குரலில் தெரிந்த ஒரு மாற்றம் அவளுக்குள் ஏதோ செய்ய,“எனக்கு ஒரு கோபமும் இல்ல ரித்து” அவனை பார்த்து புன்னகைக்க அவன் மகிழ்ச்சியுடன் கிளம்பினான்.
தாமரை ஒரு பெருமூச்சுடன் தன் கதையை தொடர்ந்தாள்.
“அன்னைக்கு தான் முதல் தடவையா எங்க உறவுக்குள்ள ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். ஆனால் அது என்னனு எனக்கு அப்போ முழுசா புரியல”
“இப்படியே நாள் போய்டிருந்துச்சு. நானும் ரித்துவும் சண்டை போடுறதை நிறுத்தவே இல்லை. ஒரு நாள் ஒரு நிகழ்ச்சி எங்க வாழ்வை மாத்திடிச்சு…”
“சரிக்கா. என் கதை போதும். இன்னிக்கு ரொம்ப டைம் ஆச்சு. எனக்கு தூக்கம் வந்திடிச்சு. மீதி கதையை நாளைக்குச் சொல்றேன்”
மதிவதனிக்கு முழு கதையையும் கேட்பதற்கு ஆவலாக தான் இருந்தது, இருந்தாலும் அவளுக்கும் தூக்கம் வந்ததால் இருவரும் தூங்கச் சென்றனர்…..
புலரும்